Thursday, November 19, 2009

மேனகா..



"அம்மா, மேனகாவுக்கு என்ன ஆச்சு....?"
ஆபிசிலிருந்து, ஸ்ரீதர் கேட்டான்.
" கொஞ்சம் முன்னாடி நீ தான் போன் பண்ணினியா ?"
"ஆமாம்மா.. இன்னிக்கு ஒரு மீட்டிங்..வர கொஞ்சம் லேட்டாகும்.நீங்க சாப்பிடுங்க . அது சரி...
மேனகாவுக்கு என்ன ஆச்சு , ஏதோ ஆக்சிடெண்ட்டாமே ?"
" அதுக்குள்ளே உனக்கு யார் சொன்னா?"
" ஜானா தான். நீ சமையல் ரூமில் இருந்தியா அப்ப....."
"ஆமாம்..ஏதோ வேலையா இருந்தேன்"
" அது சரி..உன் கதை இருக்கட்டும்..மேனகாக்கு ஒண்ணும் ஆகலையே..?"
" பூனாவிலிருந்து அவளும், அவ பிரண்டும் 'ஆம்னி'யில் வந்திருக்கா. ஒரு கடன்காரன் சுமோவில் எதிர்த்தாற்போல வர,ரெண்டு வண்டியும் நேருக்கு நேர் மோதிண்டு..."
"ஐயைய்யோ...அப்புறம்...?"
" நல்ல வேளை அவ பின்சீட்டில இருந்தாளோ..பொழைச்சாளோ...அவ போன ஆம்னி
அப்பளமா ஆயிடுத்து. டிரைவருக்கு தலையில பலமாஅடி பட்டிருக்கு..உசிருக்கு
ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்.ஆக்சிடெண்ட் நடந்த இடம் ஏதோ
கிராமம் போல இருக்கு... எல்லா ஜனங்களும் உடனே கூடிட்டாங்க..ஆம்புலன்ஸ்க்கு,
போன் பண்ணி, அதுவும் வந்து, உடனே டிரைவரை அட்மிட் பண்ணினதாலே..அவர்
உசிருக்கு ஆபத்தில்லாம போச்சு.."
" சுமோ என்ன ஆச்சு?"
" சுமோக்கு என்ன, அது கல்லு மாதிரி இருக்கு...
" சுமோ டிரைவர்?"
" அங்க நிக்கறதுக்கு அவனுக்கு என்ன பைத்தியமா? ஓடியே போய்ட்டான்."
"சரிம்மா போனை வைச்சுடறேன்"
"சரி"
போன் இங்கும் வைக்கப் பட்டது.
ஸ்ரீதருக்கும், ஜானாவுக்கும் நடுவில் பிறந்தவள்தான் மேனகா. அவள் அதிர்ஷ்டம்
'இஞ்சீனியரிங்க்' படித்தவுடன் ஒரு நல்ல 'கோர்' கம்பெனியில் வேலை கிடைத்து
ஆறு மாதமும் ஆகி விட்டது. பூனாவில் 'போஸ்டிங்'. தினமும் இரவு எட்டு முப்பதுக்கு போன் செய்வாள். இரண்டு நாட்களாக அவளிடமிருந்து ஒரு போன் கூட வரவில்லை.
ஆனால், இவர்கள் இப்போது பேசுவது, அவர்கள் வீட்டுப் பெண் மேனகா அல்ல..பிரபல
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் "மேனகா" என்று ஒரு சீரியல் வருகிறது. அதில் வரும்
கதாநாயகியின் பெயரும் மேனகா தான். இவர்கள் பேசியது அந்த மேனகாவைப் பற்றி!
ஜானா,ஸ்ரீதர்,பார்வதி அம்மாள் மூவரும் டி.வி.யில் 'மேனகா' சீரியல் பார்த்துக் கொண்டு
ஒன்றாக சாப்பிடுவது வழக்கம். எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுக் கடை, முடிய ஒன்பது
ஆகி விடும்! கரெக்டாக எட்டரைக்கு 'அட்வர்டைஸ்மெண்ட்' அப்போது பூனாவிலிருந்து
போன் வரும். ஒரு பத்து நிமிஷம் பேச்சு. அங்கிருந்து அவள் போனை வைக்கவும்..இங்கு 'அட்வர்டைஸ்மெண்ட்' முடிந்து சீரியல் ஆரம்பிக்கவும் ரொம்பவே சரியாக இருக்கும்!
இரண்டு நாள் என்பது மூன்று நாள் ஆகியது.
மூன்று நாள் என்பது..ஐந்து நாள் ஆகி கிட்டத் தட்ட ஒரு வாரமும் ஆகி விட்டது!
மேனகாவிடமிருந்து போன் வரவில்லை!
இதை முதலில் கண்டு பிடித்தவன், ஸ்ரீதர்.
ஒரு எட்டரை மணி 'கேப்'பில் அவன் அம்மாவிடம் சொன்னான்.
உடனே அவள் 'செல்'லுக்கு அடித்துப் பார்த்தார்கள்.
'நோ ரெஸ்பான்ஸ்'
ஒரே கவலையாகப் போய் விட்டது, எல்லாருக்கும்!
' அவ பிரண்டோட போன் நம்பர் ஆபீசில இருக்கு. நாளைக்குப் பண்றேன்!'
மறு நாள் ஸ்ரீதர் மேனகா பிரண்டுக்கு போன் செய்தான். மேனகாக்கு ஜுரம்.
ஆஸ்ப்த்திரியில் அட்மிட் செய்திருக்கிறார்கள். கவலைப் படுவார்கள் என்பதால்
வீட்டில் சொல்ல வேண்டாம் என்று மேனகா சொன்னதால், அவர்கள் சொல்லவில்லை.
'என்ன உடம்புக்கு?'
" 'ஸ்வைன் ப்ளு' ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டதால் கவலைப்
பட வேண்டாம்"
ஸ்ரீதருக்கு மனசு கேட்கவில்லை. பூனா சென்று மேனகாவைப் பார்த்தான்.
ஆஸ்பத்திரியிலிருந்து 'டிஸ்சார்ஜ்' பண்ணி விட்டார்கள்.
ரெஸ்டில் இருந்தாள்.
நாட்கள் வெகுவேகமாய் ஓடியது.
திடுமென்று, ஒரு விடியற்காலை, சனிக்கிழமை வாக்கில்...பூனாவிலிருந்து அந்த
குடும்பத்தின் மீது இடி ஒன்று இறங்கியது!
மேனகாபோய் விட்டாள்!
அம்மா வாயிலும்,வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்!
எல்லாம் முடிந்து விட்டது! எல்லாமே......! ப்ச...!
* * * * * * * * * * * *
ஆறு மாதம் ஆகிவிட்டது. ரணம் முழுதுமாக ஆறவில்லை, அந்த குடும்பத்
தில். இருந்தாலும்...
இன்று தான் எட்டு மணிக்கு அந்த மூன்று பேரும் ஒன்றாக ...
டைனிங் டேபிளில்....அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
எதிர்த்தாற் போல் தொலைக் காட்சிப் பெட்டி!
அதில் அந்த 'மேனகா' சீரியல் !!
எதையோ நினைத்துக் கொண்டு அம்மா அழுதாள்.
"என்னம்மா..."
" என்னம்மா.."
பதறினார்கள் ஸ்ரீதரும்,ஜானுவும்..
'ஒண்ணுமில்லடா...' கண்களைத் துடைத்துக் கொண்டாலும் 'குபுக்'கென்று அழுகை
வந்து விட்டது,அம்மாவிற்கு.
ஒருவாறு, சமாளித்துக் கொண்டு சொன்னாள்:
' இனிமே நாம மேனகாவை டி.வி. சீரயல்ல தான் பார்க்க முடியும் !'
குலுங்கி குலுங்கி அழுதாள், அம்மா !
குடும்பமே குலுங்கியது!!!!

------ 0 --------

2 comments:

Menaga Sathia said...

டச்சிங்கான கதை!!நல்லாயிருக்கு..

என் பெயரில் கதை தலைப்பு போட்டிருக்கிங்க ஹி ..ஹி...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் வருகைக்கு நன்றி!