Sunday, November 15, 2009

ரெளத்ரம் பழகு...


1965ம் வருட வாக்கில், நாங்கள் கோதையாறு என்ற ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ராஜக்டில் இருந்தோம். நாங்கள் என்றால் நான்,ஸ்ரீதர், கிரி,அண்ணா,அம்மா. அப்பாவை, நாங்கள்
அண்ணா என்று அழைப்போம். அம்மா அம்மா தான். அப்போது குரு,வாசு, ஹரி யாரும் பிறக்கவில்லை.
கோதையாறு என்கிற இடம் கன்யாகுமரி மாவட்டத்தில்.. நாகர்கோவிலிலிருந்து
பத்து, இருபது கி.மி. தொலைவில் இருக்கிறது. அம்பாடி எஸ்டேட் வழியாக போக
வேண்டும் என்று ஞாபகம்.அதை லோயர் கேம்ப் என்று அழைப்பார்கள். அண்ணா
இ.பி.யில் ஹெட் க்ளார்க். ஐந்து வீடுகள் கொண்டது ஒரு பிளாக். அப்புறம் கொஞ்சம்
மரம்,செடி கொடிகள்... அப்புறம் இன்னொரு பிளாக். இது போல் ஒரு வரிசைக்கு
இரண்டு அல்லது மூன்று பிளாக்குகள். அடுத்த வரிசைப் போக வேண்டு
மென்றால் பதினைந்து படிக்கட்டுகள் ஏறிப்போக வேண்டும்.
எங்கள் பள்ளிக்கூடம் எல்லா வரிசைக்கும் கீழே இருந்தது. எங்களுக்கெல்லாம் ஸ்கூல் போவது ஜாலி . ஏன் தெரியுமா? படிக் கட்டுகளுக்கு பக்கத்திலேயே 'ஸ்லொப்'பாக
இருக்கும். கோதையாறில் நிறைய 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும். ஆளுக்கு ஒரு குட்டிஷீட் எடுத்துக் கொள்வோம். ஸ்கூல் விட்டு வந்தவுடன், ஸ்கூல் பேக்குடன், அந்த ஷீட்டையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நான்,ஸ்ரீதர்,நோட்டன், அவன் தம்பி
நெல்சன், ராஜாராமன், அவனோட தம்பி சீத்தாராமன் எல்லாரும் படிக்கட்டுகள் வழியே,
வந்து, அவரவர் வீட்டு வாசல் அருகே, அந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டைக் கயிற்றால்,
கட்டி வைப்போம்.
அடுத்த நாள் காலை, அந்த ஷீட்டில் உட்கார்ந்து கொண்டு, சர்ரென்று,
சறுக்கி அடித்து, கீழேப் போவதில் ஒரு ஜாலி. அந்த ஷீட்டில் ஒரு ஓட்டைப் போட்டு,
அதில் குச்சி ஒன்றையும் செருகி விடுவோம். அது தான் எங்கள் பிரேக். சறுக்கி அடித்துக்
கொண்டு வரும்போது, திடீரென்று, பிரேக் போட்டு, தலைக் குப்புற விழுவது செம ஜாலி!
எங்கள் சார் பேரு ராசு. அஞ்சாம் க்ளாஸ் பூராத்துக்கும் அவர் தான். ஸ்ரீதர் மூணாம்
க்ளாஸ். அவங்களுக்கு டீச்சர். அவங்க பேரு கமலா. அண்ணாஆபீசில் வேலைப்
பார்த்த தெய்வ சிகாமணி அங்க்கிளின் பொண்ணு அவங்க.
மாலதியும், ஸ்ரீதரும் மூணாங்க்ளாஸ். நான், ராஜாராமன், நோட்டன் எல்லாரும் அஞ்சாம் க்ளாஸ். எங்கள் மூணு பேர்ல, ராஜாராமன் சாது. நான் ஒல்லி பிச்சான். நோட்டன் பலசாலி..
குண்டன். நான்னா அவனுக்கு தொக்கு!
ஒரு நாள் நோட்டன் என்னைக் கூப்பிட்டான்.
" டே..இங்க வாடா?"
" என்ன.."
" ஒம் பென்சிலைத் தா?"
" உம்ம்.. தர மாட்டேன்..."
அண்ணா புதுசா வாங்கித் தந்த பென்சில். எனக்குப் புடிச்ச 'நேவி ப்ளூ' கலர்.
" மரியாதையாய் தாடான்னா தர மாட்டே.. ரெண்டு வச்சா தான் சாரு தருவாரு.."
கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தான்.
" இந்தா எடுத்துக்கோ.."
அழுது கொண்டே தந்தேன்.
ஸ்கூல்ல.. சார்ட்ட சொல்ல பயம். அண்ணாட்ட சொல்லவும் பயம். அம்மாட்ட மட்டும்
'நைசா' சொன்னேன்.
"புது பென்சில் தொலைஞ்சுடுத்து"
அம்மா நல்ல மூடில் இருந்தாள்.
" பீரோல இருக்கு.. எடுத்துக்கோ..."
பீரோவை நோண்டினேன். பச்சை,மஞ்சள்,சிகப்பு என்று மூணு கலர்லேயும்
பென்சில்கள்.
எனக்கு சந்தோஷமாய் போச்சு.'லபக்'கென்று சட்டைப் பையில் சிகப்பையும்,
பச்சையையும் சொருகிக் கொண்டேன். அப்படியே, ஸ்கூலுக்கு கிளம்பி விட்டேன்.
மத்யானம் எதேச்சையாய் சட்டைப் பையில் கை விட்டால், பென்சில்களைக்
காணோம்.
நோட்டன் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.
" டேய்.. என்னோட பென்சிலைத்தாடா... "
"என்ன... விளையாடறியா?...."
கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தான்.
உடனே என் சுருதி மாறியது.
"டேய்...டேய்.. என் பென்சிலை எடுத்தா.. தாடா...ப்ளீஸ்..எங்க அப்பாக்குத்
தெரிஞ்சா அடிப்பாரு..."
" வாங்கிக்கோ..."
ரொம்பவும் தெனாவட்டாக சொன்னான்.
நான் சாரிடம்...அப்பாவிடம் ....சொல்ல மாட்டேன் என்பதை தெரிந்து கொண்டு
விட்டான், ராஸ்கல்..
சரி...வீட்டில் இன்னும் ஒரு பென்சில் இருக்கிறதே.. அதை வைத்துக் கொண்டு
சமாளித்து விடலாம் என்று நான் எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.
வீட்டுக்கு போனவுடன் பீரோவைத் தான் பார்த்தேன்.
அந்த பென்சிலும் காணோம்!
பேஸ்து அடித்தால் போச்சு என் முகம். தம்பி எடுத்துக் கொண்டு விட்டானோ!
அவனிடம் கேட்கலாமென்றால்..குட்டையை மேலும் குழப்பி, என்னை அடி
வாங்க வைத்து விடுவான்.
அண்ணா ஆபீஸ் விட்டு வந்தவுடன் கேட்ட முதல் கேள்வியே அது தான்..
"பென்சில் எங்கேடா?"
வழக்கமான பல்லவியையே பாடினேன்.
"மூணு பென்சிலையா ஒருத்தன் தொலைப்பான் ? அவ்வளவு என்ன கவனமில்லாம.."
விட்டார் ஒன்று செவுனியில்.......
கொஞ்ச நேரத்துக்கு 'ங்கொய்' என்றது, காது!
மறு நாள்...
ராசு சார் இல்லாத போது, நோட்டன் பெஞ்ச்க்குப் போனேன்.
"என் பென்சில கொடுடா..."
சிரித்தான்.
எப்படி செய்தேனோ, எனக்கே தெரியவில்லை..
விட்டேன் ஒரு 'ப்ஞ்ச்' அவன் தொப்பையில்...
நிலை குலைந்து போனான், நோட்டன்!
"என் பென்சிலை கொடுக்கிறயா.. இல்லையா..."
"என் பென்சிலை கொடுக்கிறயா.. இல்லையா..."
வெறி பிடித்தார் போல அடுத்தடுத்து மூன்று 'பஞ்ச்' கள்..
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை...
எதிர்ப்பே இல்லை அவனிடம் !
அழுது கொண்டே அஞ்சு பென்சில்கள் கொடுத்தான்...
பெருந்தன்மையாக என் பென்சில்களை மட்டும் எடுத்துக் கொண்டு,
என் 'பெஞ்ச்'சுக்கு சென்றேன்....
அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவன் என்னிடம் வாலாட்டவேயில்லை!
இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் ரெண்டு..
1. பயந்து..பயந்து...நாம் தான் குண்டு பசங்களை பெரிய ஆளாக ஆக்குகிறோம்.!
2. குண்டு பசங்க ஒல்லிப்பிச்சாங்களை விட பயந்தாங்கொள்ளி..!

-------

2 comments:

ரிஷபன் said...

இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் வெரி குட் கீப் இட் அப்

வை.கோபாலகிருஷ்ணன் said...

patikka nallaave irunthuchchu. kuzhanthaip paruvaththiRkku kondu sendru vitteerkaL. nandri.