Friday, June 30, 2017

போன வருட தியாகராஜ ஆராதனை விழாவில்....

"சார்..ஒங்களுக்கு, ஒரு பையன், இரண்டு பொண்ணுங்க!" என்றார் பக்கத்தில் இருந்தவர்..
"ம்"
"கையை திறக்காதீங்க..நல்ல செல்வாக்கான கை இது!"
"ம்"
கிண்டல் பண்ணுகிறேனோ என்ற சம்சயத்தோடு பார்த்தார்.என் பேஸ்து அடித்த முகத்தை வைத்து அவரால் ஒரு மண்ணும் கண்டு பிடிக்க முடியவில்லை..
"நீங்க எஜுகேஷன் லைன்"
கால்களை நன்றாக நீட்டிக்கொண்டேன்..ஆற்று மணலில் கைகளை பின்னால் விஸ்ராந்தியாக வைத்துக் கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு இருப்பது பரம சுகம்..
"நான் திண்டுக்கல்,நீங்க?"
 "திருக்கோடிக்காவல்"
"திருவானைக்காவலா?"
'ஐயோ'என்று வாய் வரை வந்த வார்த்தையை ஒரு பயத்துடன் கொட்டாவியாய்  கன்வர்ட் பண்ணினேன்...
பக்கத்தில் உள்ள ஒரு பாகவத சிரோன்மணி 'தரன்னா' என்று இழுத்தார்..
நான் அந்த பக்கம் திரும்பி 'ஹம்ஸத்வனி தானே!' என்றேன்...
"ஆமாம்..அதுல தான் நிஷாதம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.."
இந்த பக்கம் திண்டுக்கல் என்னை விடுகிறார் போல இல்லை.
எல்லா பக்கமும் மக்கள் தப்பு தப்பாய் தாளம் போட்டுக் கொண்டு இருந்தார்கள்...
" சார்..நீங்க கோபக்காரர்...இப்ப கையை விரிங்கோ..இந்த சாலமன் ரேகை இருந்தா நீங்க எஜுகேஷன் லைன்...அதோ அந்த ரேகை ஒங்க குழந்தைகளைப் பற்றிய டிடேய்ல்ஸ் சொல்லும்."
தரன்னா தன் பங்கிற்கு யாரும் கேட்காமலேயே ஶ்ரீ யை மத்யமாவதி என்றும் மத்யமாவதியை ஶ்ரீ என்றும்  சொல்லிக் கொண்டிருந்தார்..
"சார்..ஒவ்வொருத்தர் கச்சேரி சோபிக்கறதுன்னா,அவர் அதுல அசுர சாதகம் பண்ணியிருக்கார்னு அர்த்தம்...ஒரு வர்ணம் சூப்பரா வரணும்னா, அதை பாடறவர் அதை லட்சம் தடவை சாதகம் பண்ணியிருக்காராக்கும்..........நாம அதை லட்சத்து ஒண்ணாம் தடவை கேட்கிறோம்...ஆஹா....இந்த எடுப்புக்கு பத்மஶ்ரீயே குடுக்கலாம்!"
"பக்கத்து வீட்டுகாரருக்கு பத்மபூஷனே குடுக்கலாம்" என்றேன் நான் 'ஏதோ நாங்கள் இரண்டு பேர் மட்டும் அந்த பத்ம விருதுகளை டிஸைட் பண்ணுகிற கமிட்டியில் இருக்கிறார் போல்!'
"எதுக்கு?"
"அந்த மஹானுபவர் தானே இந்த கண்றாவியை லட்சம் தடவை கேட்டது!"
திண்டுக்கல் டர்ன் இப்ப..
"அதென்ன....பேரு கத்ரின்னு"
"கத்ரிங்கறது பேர் இல்ல.....மங்களூர் பக்கத்தில் இருக்கற ஒரு ஊர்" 
"சார்...2001ல திண்டுக்கல் போர்ட் ஹைஸ்கூல் ஹெச் எம் மா இருந்து ரிடையர்ட் ஆனேன்..ப்ரானிக் ஹீலிங் ப்ராக்டீஸ் பண்றேன்..வாஸ்துவும் தெரியும்..." என்றார், திண்டுக்கல் மறுபடியும்.
"ம்"
"ரெய்கி வேற....ப்ரானிக் ஹீலிங் வேற....தெரியுமா?"
"தெரியும்,"
நடு நடுவே, கச்சேரிகளும் கேட்டுக் கொண்டிருந்தோம்..
ஓ.....சொல்ல மறந்துட்டேனே...இந்த சம்பாஷணைகள் எல்லாம் நடந்த இடம், தியாகையர் ஆராதனை மண்டபம் ....சுகமான காவேரி  ஆற்று மணல் படுகை, திருவையாறு!

Monday, June 5, 2017

விமர்சனம்...

விமர்சனம்...
----------
விமர்சனம் என்று தலைப்பிட்டாலும்,இது விமர்சனமல்ல...ஒரு அறிமுகம்...
அறிமுகம் என்றாலும் அது நமது நண்பர் திரு மோகன்ஜிக்கான அறிமுகம்
அல்ல..அவர் எழுதிய 'பொன் வீதி' என்கிற இந்த சிறுகதை தொகுப்பிற்கு!
சரி விமர்சனத்துக்கு வருவோமா?
ஒரு சிறுகதையின் பலமே,அது முடிந்தது என்று தெரிந்தும் இந்த
மடமனது,ஆவலுடன் அடுத்த பக்கத்தில் ஏதோ ஒரு ஆர்வத்தில் தேடும்,ஏதாவது
பாக்கி இருக்கிறதா,என்று?
இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அப்படிப் பட்டவை..
'சமர்ப்பணம் ஜெயகாந்தனுக்கு' என்று போடும் போதே நினைத்தேன்.
ஆசிரியர்,என்னை ஏமாற்றவில்லை!
அவருடைய 'வானவில் மனிதன்' என்கிற ப்லாக்கில் வந்த சிறுகதைகள் தான் இவை!
இருந்தாலும் படிக்க படிக்க வாசிப்பவனை தூண்டுமாறு அமைந்த சிறுகதைகள்..
காதல் என்பது ஒரு மெல்லிய, நுண்ணிய சிக்கல் சிறிதுமிலா ஒரு
உணர்விழை...அந்த இழை அறுந்து விடாமல் வெகு ஜாக்கிரதையாக
கையாளப்பட்டிருக்கிறது, இவர் கதைகளில்.
எல்லா உறவுகளும் நீர்த்துப் போய் விட்ட பரபரப்பான இந்நாளில் பவித்தரமான
காதலும் தேய்ந்து கட்டெறும்பாகத் தான் போய் விட்டது..உணர்வுகளின்
சங்கமமாய் இருந்த காதல் கடிமணமானது, தேவைகள் என்று அளவிற்கு
சுருங்கி,இப்போது பேராசை எனும் மாய சிலந்தி வலைக்குள் சிக்கி, Usha of
HCL weds Ramesh of TCS என்று ஒரு business merger என்கிற அளவிற்கு
விகாரப்பட்டுத் தான் போய். விட்டது.இருந்தாலும், நல்ல வேளையாக இந்த
தொகுதியில் உள்ள சிறுகதைகள் எல்லாமே இக்காலகட்டத்திற்கு முற்பட்டவை
என்பது ஒரு ஆறுதலான விஷயம்...
இருபத்தொன்று சிறுகதைகள் ஒவ்வொன்றையும் விமர்சிக்க ஆரம்பித்தால்,
வாசகனின் சிரத்தை குறைந்து விடும்,என்பது என் பயம்..அதனால் தான் இந்த
பொதுவான விமர்சனம்..
திரு மோகன்ஜியிடம் ஒரு விண்ணப்பம்..இந்த சிறுகதை தொகுதியின் தலைப்பு
கதையான இந்த 'பொன் வீதியை' ஒரு கதை சொல்லியாக என் வீடியோ க்ளிப்பிங்கில்
கொண்டு செல்ல ஆசை...அனுமதி தருவீர்களா ஜீ?
'நம்மிடம் பிரிந்து செல்லும் பணத்தை விட கிடைக்கும் பொருளின் மதிப்பு
அதிகமாக இருக்க வேண்டும்' என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு வாசகனையும்
,நாம் செலவு செய்யும் 125 ரூபாய்க்கு இந்த சிறுகதை தொகுதி ஏமாற்றவில்லை
என்று அடித்து சொல்லுமாறு மனிதர் வெகு அழகாக கையாண்டிருக்கிறார்!
அந்த ஒரு 'ரிச்னஸ்'காகவே,என் இலக்கிய நண்பர்களுக்கு இதை பரிசாக
அளிக்கலாமென்றிருக்கிறேன்..
எழுதியவர் வேறு எங்கும் இல்லை..
உங்கள் விரல் நுனி mohanji.ab@gmail.com என்று அடிக்கும் தூரத்தில் தான்
இருக்கிறார்...
கடைசியாக ஒன்று..
கமாஸ் என்றொரு ராகம்..ஆலாபனைக்கு முன் உங்களை 'சுகமா..சுகமா' என்று
கேட்டு கொண்டு தான் ஆரம்பிக்குமாம்..அது போல, இந்த புத்தகத்தை தொடுவதற்கு
முன், ஏதாவது வேலை இருந்தால், அதை முடித்து விட்டு மனதை ரிலாக்ஸ்டா ஆக
வைத்து விட்டு படிக்க ஆரம்பியுங்கள்,ப்ளீஸ்.
ஏனென்றால்,பாதியிலேயே நிர்கதியாய் இதை விட்டு விட்டு வேறு வேலை பார்க்க
உங்களால் இயலாது...படிக்க ஆரம்பித்து விட்டால் இதை முடித்து விட்டு தான்
மறு வேலை பார்க்கும்படியாக இருக்கும்..
ஆம்,

என் அனுபவம் அப்படி!