Monday, August 30, 2010

பதிவுலக நண்பர்களுக்கு.........


"ஆரண்ய நிவாஸ"த்துக்கு வருகை தரும் என் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய,
ரிஷபன், வை.கோபால கிருஷ்ணன் ஸார்,வசந்த முல்லை ரவி, சித்ராமேடம், ராகவன் நைஜீரியா,வாசன், வெங்கட் நாகராஜ், தேனம்மை மேடம், வானம்பாடிகள், பா.ராஜாராம், பூங்குன்றன், ராமலக்ஷ்மி மேடம்,
K.B.JANARTHANAN, மோகன் குமார், பத்மாமேடம்,முனவர் இரா. குணசீலன், சீதா சாம்பசிவம் மேடம், மனோ சாமினாதன் மேடம், வித்யா சுப்ரமணியம் மேடம், டாக்டர் கந்தசாமி ஸார்,டாக்டர் முனியப்பன் ஸார், ரேகா ராகவன் ஸார், ஸ்ட்ராஜன் மற்றும் நம் அனத்து தள நண்பர்களுக்கும்..

இதோ என் ஆசை...........


கண் பாவை விரிய கவினுறும் இடுகை தரும்,
என்பால் பிரியமுள்ள எழுத்துலக நண்பர்களே!
முன்போலில்லாமல் மறு மொழி நான் தரவே,
வெண்பாவில் வரவா இனி!

- அன்பன் ஆர்.ராமமூர்த்தி.

Saturday, August 28, 2010

பறவையும்....மனிதனும்.....


என்னால் அல்லவா...
உங்களின் அபரிமிதமான
வளர்ச்சி...
மனிதனைப்
பார்த்துக் கொண்டு,
விண்ணோக்கிப்
பரவசமாய்
பறந்து சென்றன
பறவைகள்..
அவை போட்ட
எச்சத்தில் விழுந்த
விதைகளல்லவா..
விருட்சங்களாகி..
மில்லியனும்..
பில்லியனுமாய்
பெருகிய
நம் குலத்தைக்
காக்கின்றன..
மனிதனுக்கு
அது
தெரிவதில்லை..
அதனால்.....
அவன்
பறவைகளைப் பார்ப்பதில்லை!!!

Tuesday, August 24, 2010

ஆவணி அவிட்டமும்..ஆங்கரை தாத்தாவும்...

ஆங்கரை என்பது திருச்சியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறிய அழகிய கிராமம். லால்குடிக்கு முன்னாலே வந்து விடுகிறது. ஐயன் வாய்க்கால்..கரை ஓரமாய் ஷண்முகா பாடசாலை... பக்கத்தில் கோயில் நந்தவனம்...அரசரடி..அங்கு ஒரு பிள்ளையார்...

ஆடி பதினெட்டுக்கு புளியோதரை..தேங்காய்சாதம்..கருவடாம்...தயிர்சாதம் என்று கலவை சாதங்களுடன் நான், கிரி,சகுந்தலா அத்தை.பாலு சித்தப்பாஎல்லாரும் கும்பலாய் ஆற்றுக்குச் சென்று அங்கு படித்துறையில் சாப்பிட்டு விட்டு வருவோம். அந்த ஆற்றுத் தண்ணீர் ஸ்படிகமாக இருந்த காலம் அது!

ஷண்முகா ஸ்கூலில் துளசி டீச்சர்..கந்த சார் இவர்களையெல்லாம் மறக்க முடியுமா ? எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பது ஒரு ஐ.ஐ.எம். ப்ரொஃபெஸர் கிடையாது. ஹரி ஓம் என்று நெல்லில் நம் விரலில் வைத்து எழுதக் கற்றுக் கொடுத்தார்களே அவர்கள் தான் இறைவன்! அவர்களை அவ்வளவு சுலபத்தில்
மறக்க முடியுமா, என்ன?

ஆடிப் பெருக்கிற்கு பிறகு வருவது ஆவணி அவிட்டம்! அன்று தாத்தாவை பிடிக்க முடியாது. ஏக பிசி தாத்தா..

எங்கள் எல்லாருக்கும் ஸ்கூல் லீவ். ஜாலி. மெள்ள எழுந்திருப்போம்..காஃபி குடிச்சுட்டு கொஞ்ச நேரம் வாசல்ல போய் நிப்போம்.
இன்னிக்கு ஆவணி அவிட்டம் சாப்பாடு கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னவுடனே எங்களுக்கெல்லாம் குஷி கிளம்பிடும். ஹைய்யா..ஹோட்டல்னு..
" ... அதெல்லாம் கூடாது. இதோ இட்லி வார்க்கப் போறேன்"னு அம்மா சொன்னதும் எங்களுக்கு தலை தொங்கிடும்.
இந்த ஆவணி அவிட்டம் ஒன்று தான் நாங்க எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிடாத ஃபங்க்ஷன்.
பாக்கி எல்லாத்துக்கும் சிகா சித்தப்பா எங்களை கூட்டிண்டு போயிடுவார். பாலு சித்தப்பா அங்க சத்தம் போடாம சாப்பிட்டுண்டு இருப்பார்!
அதுக்கு பனிஷ்மெண்ட் நாங்க எல்லாரும் பாலு சித்தப்பா தலையில் பில்ல கட்டிடுவோம்!
தாத்தாக்கு ஏக டிமாண்ட். கிழக்கால போய்ட்டு வருவார். வந்தவுடனே பெரிய ஆத்துக்கு கிளம்பிடுவார்.நடுவுல ஒரு டோஸ் காஃபிக்கு மட்டும் இங்க வருவார். எல்லாரும் ஆத்தங்கரைக்கு வந்துடுங்கோன்னு எங்களை எல்லாம் உஷார் படுத்தி விட்டுப் போவார்.
நாங்கள்ளாம் கிண்டலா சொல்லுவோம் அன்னிக்கு தாத்தாக்கு போனஸ்னு. தாத்தாவும் ரொம்ப பெருமையா சொல்வார்: ' என்னடா, இப்பல்லாம் ஆவணி அவிட்டத்துக்கு தஷிணையை அள்ளி தராங்களே'ன்னு!
ஒரு தடவை நாங்கள்ளாம் சிறுவாச்சூர் போயிருந்தோம். எங்கள் குலதெய்வம் அது. அபிஷேக ஆராதனை எல்லாம் முடிந்து பஸ்ஸுக்கு காத்துக் கொண்டு நிற்கிறோம். ஆங்கரை பெரிய மனிதர் ஒருத்தர் ஒருத்தருக்கு காரில் இடம் இருக்கு என்று சொல்ல,நாங்கள் வயதான தாத்தாவை அனுப்பினோம். நாங்கள் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்தால் தாத்தா எல்லாருக்கும் சமைத்து வைத்திருந்தார்! தாத்தாக்கு சமையல் தெரியும் என்பது குழந்தைகள் எங்களுக்கெல்லாம் தெரியாது!

தாத்தா நிறைய வேத புஸ்தகங்கள்ளாம் படிப்பார். புஸ்தகப் பிரியர். அது போல ஆனந்த விகடன் வாசிப்பார். 1950 வாக்கில் ஆனந்த விகடனில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டியில் பரிசு கிடைத்தது, அவருக்கு! பாட்டிக்கு அப்படியே அந்த பணத்தில் காஃபிக் கொட்டை செயின் வாங்கிப் போட்டார்!
எனக்கு நினைவு தெரிந்து தாத்தா படித்த புஸ்தகம் என்ன தெரியுமா?
சாண்டில்யனின் கடல் புறா!
சிறு வயதில் தாத்தா பண்ணிய குறும்புகள் ஜாஸ்தி! சாம்ப்பிளுக்கு இரண்டு.
1. சிறு வயதில் தாத்தா வேத பாடசாலையில் படிக்கும் போது அவருடைய பொடி மட்டை காணாமல் போய் விடும். இதை அவர் எப்படி கண்டு பிடித்தார் தெரியுமா? ராத்திரி பன்னிரெண்டு மணி சுமாருக்கு ஒரு நாள் தாத்தா பக்கத்தில ஒருத்தர் லபோ..திபோன்னு அலறல்! யாருன்னு பார்த்தா பாடசாலை சமையல் கார சுப்பண்ணா! கண்ணு..மூக்கெல்லாம் ஜிவுஜிவுன்னு.. என்னடான்னு பார்த்தா தாத்தா திருடனை பிடிக்க பொடிமட்டையில மிளகாய் பொடி போட்டு வைக்க...' என்ன ராமையா இப்படி பண்ணிட்டியேன்னு அவர் கத்த...
நல்லெண்ணைய பாதாதி கேசம் அபிஷேகம் பண்ணிண்டும் அந்த எரிச்சல் லேசில போகலே சுப்பண்ணாவுக்கு!
( ஸாரி...கொஞ்சம் ஓவர் இல்ல..)
2. தாத்தா பாடசாலையிலிருந்து லீவுக்கு ஊருக்கு வரும் போது நடந்து தான் வருவார்.அப்பல்லாம் பஸ் கிடையாது. 1920 வாக்கில். திருப்பராய்த்துறையிலிருந்து அரியூர் வரை நடை. அப்பொழுதெல்லாம் வீட்டு வாசலில் பூசணிக் காய் சூடம் ஏற்று வைத்திருப்பார்களாம். அதை தொட்டாலே நமக்கு பாபம் வந்து விடும் என்று ஒரு பயம் அந்த காலத்தில்! சூன்யம் வைத்திருப்பார்கள் என்று பயம் வேறு!
தாத்தா என்ன செய்வார் தெரியுமா?
அதில் புதைத்து வைத்துள்ள காலணாவை இடுப்பில் முடிந்து கொண்டு பூசணிக்காயை காலால் எட்டி உதைப்பாராம். அவ்வளவு அசாத்ய தைர்யம்!
பாட்டி,தாத்தாவுக்கு சதாபிஷேகம் பண்ணினோம். எனக்கு இன்று FAMILY TREE போட வேண்டும் என்ற ஆர்வத்தின் வித்து அந்த சதாபிஷேகம். எங்கிருந்தோ முகம் தெரியாத உறவினர்கள் எல்லாம் வந்து தாத்தாவிடம் ஆசி வாங்கினார்கள், அன்று!
இந்த சமயத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.FAMILY TREE யில் நம் உறவுகள் இணைவோமா?
நாங்கள்.........
-----------------------------------
ஆணி வேர் : அனந்த ராம ஐயர்.
தெரிந்த பெயர்: மோட்டார் ராமையா.
( TVS பஸ் டிரைவர் ஆக இருந்ததால் அந்த பெயர்)
பூர்வீகம் : அரியூர்
வகுப்பு : வடமர்
கோத்ரம் : விஸ்வாமித்ர
ஆபஸ்தம்பம்
மூன்று ரிஷி : வைஸ்வாமித்ர
தேவராத,
ஓளதல
தொடர்புக்கு : sridar57@gmail.com
------------------------------------
தாத்தா போய் கிட்டதட்ட இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும் ஒவ்வொரு ஆவணி அவிட்டம் வரும்போதும் தாத்தா ஞாபகம் வந்து விடும் எங்களுக்கு!!!

Saturday, August 21, 2010

இரயில் பயணங்களில்......


இப்பொழுதெல்லாம் யார் ரயிலில் ஃபர்ஸ்ட்
க்ளாசில் பயணம் செய்கிறார்கள். ஆஃபீஸ் டூர் என்றால் செகண்ட் ஏ.ஸி. பர்ஸனல் என்றால் செகண்ட் க்ளாஸ்.. நான் சொல்லப் போவது ஒரு இருபது இருபத்தைந்து வருடம் முன்பு....

ஒரு பெரிய மனிதர் (அந்தஸ்து+வயது+உருவம்)(எல்லாவற்றிலும்)(இப்போது மேத்தமடிக்ஸ் ஃபெஸ்டிவல் என்பதால் இந்த பிராக்கெட்டுகள்..நம்ம அல்ஜிப்ரா கணக்குபோலவே..) சரி..சரி..கதைக்கு வருவோம்.மெட்றாசிலிருந்து கும்பகோணத்துக்கு பிரயாணப்பட்டு இருந்தார். அவர் பூர்வாஸ்ரமத்தில் ரயில்வேயில் உத்யோகம் என்பதால் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் பாஸ்.
வழக்கமாய் சென்னை சென்றார் என்றால்..அந்த இரவு நேர ரயிலைத் தான் பிடிப்பார், எப்போதும். சென்னையில் வேலையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு ரயிலில் படுத்தாரானால், மறு நாள் காலை எட்டு மணிக்கு டாணென்று முழிப்பு வந்து விடும். அப்போது ரயிலும் கும்பகோணம் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டு இருக்கும்!
ஒரு டிகிரி காஃபி குடித்து விட்டு வீட்டுக்கு நடை கட்ட வேண்டியது தான். ரயில்வே ஜங்க்ஷன் பக்கத்திலேயே வீடு என்பதால் பரம சௌகர்யம்!
அப்படித் தான் அன்றும் மெட்றாஸில் வேலையை முடித்து விட்டு வந்து சேர்ந்தார், எக்மோருக்கு. ரயிலிலும் படுத்தார். வழக்கம் போல் தான் எல்லாமுமே ! ஆனால் வழக்கம் போல் வரும் தூக்கம் தான் வரவில்லை !!
காரணம்!
(மூட்டைபூச்சிகள்+கொசுக்கள்)!!
பாவம் அவை இரண்டும் அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டன.
கும்பகோணத்து கொசு கடித்தால் தான் ஸார்வாளுக்குத் தூக்கமே வரும். அப்படி ஒரு பழக்கம்!
ஆனால் இந்த ரயில் கொசுக்கள் கும்பகோணத்து கொசுக்கள் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமாய் இருந்தன. ஆளை அலாக்காக அப்படியே தூக்கி கொண்டுபோய் ப்ளாட்ஃபாரத்தில் போட்டு விடும் போல இருந்தது!
ஆனால் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்க விடாமல் மூட்டைபூச்சிகள் அவரை படுக்கையுடன் இழுத்துப் பிடித்துக் கொண்டு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன அந்த இரவு முழுவதும்!
அப்பாடா..ஒரு வழியாய்...
கும்பகோணமும் வந்தது!
எரிச்சலுடன் எழுந்தார்.
டிகிரி காஃபியை மறந்தார்.
வீட்டிற்குப் போனவுடன் பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு ஒரு முழ நீளத்திற்கு ஆங்கிலத்தில் காரசாரமாக லெட்டர் எழுதினார், ரயில்வே நிர்வாகத்திற்கு.
ரயில்வே காரர்களுக்கு இங்க்லீஷில் லெட்டர் எழுத சொல்லித் தர வேணுமா என்ன?
அது அவர்கள் பரம்பரை சொத்து அல்லவா?

' .. ஒன்றுக்கு மூன்று மடங்கு காசு வாங்குவதில் குறைச்சல் இல்லை. ஆனால் சௌகர்யம் என்பது துளிக்கூட இல்லை. உங்கள் மேல் நான் ஏன் கன்ஸூமர் கவுன்சிலில் புகார் செய்யக் கூடாது ..' என்று விளாசித் தள்ளி விட்டார், விளாசி!
அது இங்கு விசேஷமில்லை!
ஆனால் அவருடைய ஸ்கட் ஏவுகணைத் தாக்குதலுக்கு 'பேட்ரியாட்' போல ரயில்வேயிலிருந்து ஒரு கடிதம்!
' .. MY DEAR FIRST CLASS PASSENGER..' என்று ஆரம்பமே வெகு ஜோராய் .... அசௌகர்யத்திற்கு மன்னிக்கவும்.இது போல ஒரு அசம்பாவிதம் இனி தங்களுக்கு ஏற்படாது என்று உறுதி கூறுகிறேன்.. கடிதத்தின் கீழ் ஆச்சர்யம்!
ரயில்வே ஜெனரல் மேனேஜரே கையெழுத்துப் போட்டிருந்தார்!
மனிதருக்கு சந்தோஷத்தில் தலை..கால்..புரியவில்லை!!
அவரை மதித்து ஒரு ஜெனரல் மேனேஜர் லெட்டர் எழுதுகிறாரென்றால்.....
அது கூட ஆச்சர்யமில்லை.
அந்த கவரில் இன்னும் ஒரு கடிதம்!
அவர் எழுதியது அது.
ஆனால் கடிதத்தின் ஒரு ஓரத்தில்
' send the idiot the usual bugs letter' என்று GM ஸ்டெனோ அட்டெண்டருக்கு மார்க் பண்ணியதும் இருந்து தொலைத்தது!
..மனிதருக்கு முகத்தில் ...ஈ ..சாரி..கொசு ஆடவில்லை...
பாவம்!!!

Tuesday, August 17, 2010

ஒளவை சொன்னது!


ஸ்வாமிஜி வருகிறாராம்!
ஊர் பூராவும் இதே பேச்சு!!
ஸ்வாமிஜி ஒரு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அரசாங்க உத்யோகத்தை..அருமை மனைவியை..அழகுக் குழந்தைகளை.. ஒரு நொடியில்...ஒரே நொடியில் ... துறந்து... துறவியானவர்!
அவர் சொன்னது சொன்னபடி நடக்கிறது.எதையும் யூகமாய் சொல்வது அவர் வழக்கம்!
' சாமி குழந்தை இல்லை' என்று ஒருவன் வந்தான். 'தெற்கே போ' என்றார். ராமேஸ்வரம் சென்று விட்டு வந்தான். அடுத்த வருடம் குழந்தை பிறந்தது!
இன்னொருவன் ' சாமி என்ன தொழில் செய்வது' என்று அவரிடம் ஆலோசனைக் கேட்க, 'மண்ணிலே போடு காசை' என்றார். இன்று அவன் ஒரு பிரபல REAL ESTATE BUSINESS MAN!
நல்ல நிறம்... மழுங்க மொட்டை அடித்து..பளபளவென்றிருக்கும் தலை..தீட்சண்யமாய் அருளைப் பொழியும் கண்கள்...ஒற்றை நாடியான உடம்பு...துவராடை...எல்லாவற்றுக்கும் மேல், அவரைப் பார்த்தவுடனே எழுந்து நின்று கை கூப்ப வைக்கும் கம்பீரம்..!
பழங்கள்..கல்கண்டு என்று கார் கொள்ளாமல், வாங்கிக் கொண்டு..அவர் பாதங்களில் வைத்து விட்டுப் போவார்கள்.. பக்தர்கள்..!
ஏறெடுத்தும் பார்க்காமல் அத்தனையையும் பக்கத்திலுள்ள குடிசைகளுக்கு விநியோகம் செய்து விடுவார்,அவர்!
பிரதி சாயந்திரம் அவருடைய சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளாக வருவார்கள். தமிழ்..ஆங்கிலம்..சமஸ்க்ருதம் என்று மூன்று மொழிகளிலும் சரளமாய் பேச வல்லவர்!
அவருடைய பேச்சு சாதாரண மனிதனுக்கும் புரியும் அளவில் எளிமையாக இருக்கும். அதற்குப் பிறகு தீர்த்தம் கொடுப்பார்.
அவரிடம் தீர்த்தம் வாங்குவதற்கு மக்கள் 'க்யூ' வில் வருவார்கள். தீர்த்தம் வாங்கிக் கொண்டு குறைகளைச் சொல்வது வழக்கம்.
அவரும், அவரவர்களுக்குத் தகுந்த யோசனைகளைச் சொல்லி ஆறுதல் அளிப்பார்.
அப்படித் தான் ஒரு நாள் தீர்த்தம் கொடுக்கும் போது.....
" சாமி...வூட்ல சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குது..எதுக்கெடுத்தாலும் சண்டை...ரொம்பவும் கஷ்டமாயிருக்கு..நீங்க தான் ஒரு வழி சொல்லணும்...."
காலில் விழுந்து குலுங்கி...குலுங்கி..அழுதான் ஒருவன்..
அவனவன் பெண்ணுக்கு வரன் குதிரவில்லை...பையனுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை..என்று தான் வருவான்.
இப்படியும் ஒரு குறையா?
அங்குள்ள அனைவருக்கும் ஆச்சர்யமான ஆச்சர்யம்!
சரெலன்று கால்களை இழுத்துக் கொண்ட ஸ்வாமிஜி...
' பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்,
எத்தாலும் கூடி வாழலாம்..சற்றே
ஏறுக்கு மாறாக நடப்பாளாகில்..
கூறாமல் சன்யாசம் கொள்..'
என்று கணீரென்று ஒளவை பாடிய பாடலை, கேட்பவர்கள் உள்ளம் உருகுமாறு பாடத் தொடங்கினார்.
அந்த கூட்டத்தில் அவர் ஒருவருக்கு மட்டும் தான் அவனுடைய வேதனை புரிந்தது.
பூர்வாஸ்ரமத்தில் பெண்டாட்டியின் தொல்லை தாங்க முடியாமல் தானே புஜங்க ராவ் என்கிற சாதாரண மனிதர்
புருஷோத்தம ஸ்வாமிஜியாக மாறினார்!!!

Friday, August 13, 2010

கடவுளும்...மனிதனும்...


கடவுள் படைத்தான்..
எல்லாரையும்.....
அரசனாய்...ஆண்டியாய்..
வீரனாய்...கோழையாய்..
ஆணாய்..பெண்ணாய்..அலியாய்..
எறும்பாய்..ஒட்டகச் சிவிங்கியாய்
விதம்..விதமாய்..
சோர்வேயில்லாமல்..
படைத்தான்.
அத்தனையையும்...
கிழித்துப் போட்டான்,
காலன்!
பிறந்து வந்த மனிதன்..
படைத்தான்...
சாகுந்தலம்..
ரோமியோ ஜுலியட்..
வில்லி பாரதம்..
போன்ற எண்ணற்ற
இலக்கியங்கள்...
காலன் என்ற
அந்த கொம்பினால்,
கை கூட
வைக்க முடியவில்லை!!!!

Tuesday, August 10, 2010

அந்தக ஓவியம்


விதம்விதமாய்
பூங்கொத்துக்களை
விற்றவள் தலை
மொட்டை..
கேட்டால்,
நேர்த்திக் கடனாம்!

**************

ஒருவனின் கீழ்
வேலைப் பார்க்க
மாட்டேன்,
என்று கித்தாய்ப்பாய்
சொல்லிவிட்டு,
மளிகைக் கடை
வைத்தான்...
போகிறவன்..வருகிறவன்
எல்லாம்
அவனை
விரட்ட ஆரம்பித்தான்..
உப்பு கொடு...
பருப்பு கொடு ..
என்று!!

*
கண்கள் விரிய..
பிரமாதமாய்..
அந்த ஓவியம்!
பாராட்டத்
திரும்பினால்...
கம்பியால்,
டக்டக்கென்று
தட்டி
நடந்து போய்க்
கொண்டிருந்தான்,
அவன் !!!

Friday, August 6, 2010

உன்னை அறிந்தால்......


அந்த காலத்தில் இவ்வளவு கோவில்கள் இருந்தாலும், கோவில்களில் இவ்வளவு கூட்டம் கிடையாது. விச்ராந்தியாய் கோவிலுக்குப் போவோம், தரிசனம் முடிந்து வருவோம் என்றிருக்கும். இப்போது கோவிலுக்குப் போனால், குறைந்தது சினிமா பார்க்கும் நேரம் ஆகி விடுகிறது. செலவும் அப்படித் தான்!
பிரதோஷ காலம் இருக்கிறதே..எங்கிருந்து தான் மக்கள் புற்றீசல் போல வருவார்களோ தெரியவில்லை. வெறிச்சோடிக் கொண்டிருக்கும் கிராமத்து சிவன் கோவில் கூட அன்று சற்று சுறுசுறுப்பாய் காணப்படும்!
பௌணர்மி அன்று இன்னும் மோசம். கையில் ஊதுபத்தி ஏந்திக் கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டு நம்மை குத்தி விடுவது போல அன்பர்கள் வருவார்கள். நாம் தான் ஜாக்கிரதையாய் ஊதுபத்தியின் தாக்குதலுக்குத் தப்பித்துக் கொண்டு போகவேண்டும்.
விசேஷ காலங்களில் தரிசனம் பண்ண ஸ்பெஷல் கட்டணம்.நாம் நூறு ரூபாய் கொடுத்து கட்டண சேவைக்குச் சென்றால், நம் அதிர்ஷ்டமும் நம் கூட வரும். தர்ம சேவைக் கும்பல் விறுவிறு என்று போய்க் கொண்டிருக்கும் அப்போது !
இப்படித் தான் ஒரு ஆடி வெள்ளியன்று நானும் கோவிலுக்குக் கிளம்புவோமென்று கிளம்பினேன். சரியான கூட்டம். எங்கெங்கெல்லாமோ தடுப்பு போட்டு வைத்திருந்தார்கள். ஆர்டினரி கட்டண சேவை..ஸ்பெஷல் கட்டண சேவை..தர்ம சேவை.. என்று அது பாட்டுக்கு ஜரூராய் போய்க் கொண்டிருந்தது.
எப்படியடா போய் தரிசனம் பண்ணப் போகிறோம் என்று நாம் மலைத்த போது, நண்பர் இரண்டு பத்து ரூபாய் டிக்கெட்டுகளுடன் வந்தார். ஆனால் பத்து ரூபாய் க்யூ மலைப் பாம்பு வால் போல் செம நீளம்! நண்பர் செயற்கரிய காரியம் ஒன்று செய்தார். 'பேசாம என்னோட வாங்க' என்று அன்பு கட்டளை இட, அகத்திக் கீரைக் கட்டைக் கண்ட பசு மாடு போல் நானும் ஆசையுடன் தொடர்ந்தேன் !
வடக்கு வாசல் குறுக்கே அவர் செல்ல, நானும் தொடர, 'சார், பத்து ரூபாய் க்யூ அங்கே' என்று ஒரு போலீஸ்காரர் கை காட்ட 'நாங்க இந்த தெருக்காரங்க' என்று சொல்லிவிட்டு நண்பர் நுழைய நானும் நுழைந்து அடுத்த அரை மணி நேரத்தில் வெகு சுலபமாய் திவ்ய தரிசனம்!
ஆனால் என்ன பிரயோசனம்! 'பிளாக்'கில் சினிமா பார்த்தது போன்ற உணர்வு என்னுள்! 'ஒரு ஸ்வாமி தரிசனம் கூட உன்னால் ஸ்ரத்தையாய் செய்ய முடியவில்லை பார்' என்று மனம் வேறு குத்திக் காண்பித்தது!
ஏன் இவ்வளவு கூட்டம்?
ஆன்மீகத்தில் நம் மக்களுக்கு இவ்வளவு ஈடுபாடா என்றால் ...ஊஹூம்....பிறகு கோவிலில் அப்படி என்ன தான் நடந்து கொண்டு இருக்கிறது என்கிறீர்களா?
' என் பையனுக்கு எஞ்சினீயரிங்க் சீட் கிடைத்தால் நூறு தேங்காய் உடைக்கிறேன்..அந்த ஆஸ்பத்திரி அவ்வளவு ராசியானதாய் இல்லை என்று தான் அங்கு அட்மிட் பண்ணினோம். போகிற போக்கைப் பார்த்தாள் பிழைத்து விடுவாள் போல இருக்கிறதே, மாமியார் மண்டையை போட்டால், இரு நூறு தேங்காய் உடைக்கிறேன் என்று பேரம் நடந்து கொண்டிருக்கும்.

இதைப் பார்க்கும் போது கோவிலுக்கு வந்திருக்கிறோமா இல்லை , மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறோமா என்று நமக்குள் ஒரு சம்சயம்!

தானாக வந்தது...நாம் இழுத்துக் கொண்டு வந்தது என்று பலவித பிரச்னைகள் மனிதனை சூழ்ந்து கொள்ள அவன் என்ன தான் செய்வான், பாவம்!
இன்றைய காலக் கட்டத்தில் எளிமையாய் வாழ்வதே ஒரு தவம் தான்! யார் எளிமையாய் வாழ்கிறார்கள்...யார் எளிமையாய் வாழ ஆசைப் படுகிறார்கள்?
ஆடம்பரமாய் வாழ வேண்டியது..அதனால் வரும் அடுக்கடுக்கான தொல்லைகளை சமாளிக்க முடியாமல் திணறி, அதனை இறக்கி வைக்க ஒன்று சாமியார்களை நாடுகிறார்கள். இல்லாவிட்டால் கோவில்களுக்குப் படையெடுக்கிறார்கள். இப்போது மீடியாக்கள் சாமியார்களைத் தோலுரித்துக் காட்ட, மனத்துள் பயம் வர கோவில்களில் கூட்டம் அதிகப் படியாய்!
இந்த கண்றாவிகளைக் காணச் சகியாமல் தான் ஆண்டவனும் கல்லாய் போய் விட்டான், போலும்!

இந்த கூத்துக்கு என்ன தான் முடிவு?

1. எளிமையாய் வாழ எண்ணுவோம். எண்ணமே செயலுக்கு ஆதாரம்.(உதாரணம்: அறம் செய் என்று ஒளவை சொல்லவில்லை. அறம் செய விரும்பு என்று தான் சொல்கிறாள்)

2. பேதமின்றி அனைத்து உயிர்க்கும் அன்பு செய்வோம்!

3. மனதில் உள்ள அழுக்குகளை அகற்றுவோம். தூய்மை ஆக்குவோம்.

4. தூய்மையான ஆழ்மனத்துள் முங்கிக் குளிப்போம்.தெய்வீகமெனும் முத்துக்களை அள்ளுவோம்......உள்ளுக்குள் ஆனந்திப்போம்...........

5. ஒவ்வொரு செங்கல்லாய் மனம் என்னும் பீடத்தில் பதிய வைப்போம்! சிறுக..சிறுக ..கல் சேர்த்து, பூசலார் நாயனார் போல, மனத்துள் பிரம்மாண்டமானதொரு கோவில் கட்டுவோம்! இறைவனை அதில் ப்ரதிருஷ்டை செய்வோம்!!

இன்று நாம் படும் பாடு அன்றே திருமூலருக்குத் தெரிந்திருக்கிறது. இல்லாவிட்டால் அவர் தான் இப்படி ஒரு பாடல் பாடியிருப்பாரா?

" நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றியே,
சுற்றி வந்து
மொணமொணவெமன்று,
சொல்லும் மந்திரம் ஏனடா?
நட்ட கல்லும் பேசுமோ,
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்,
கறிச்சுவை அறியுமோ???.."

ஆம்...
வெளியே கஷ்டப்பட்டு தேடுவதை விட்டு விட்டு நம்முள்ளே சுலபமாய் இறைமையைத் தேட இன்று முதல் ஆரம்பிப்போமா??

Wednesday, August 4, 2010

மனிதம்...!!!



இங்கு எல்லாமே
வியாபாரமாகி
விட்டது...
இவருடன் பேசினால்,
நமக்கு என்ன லாபம்..
என்று சாதாரண மனிதன்
கூட யோசிக்க,
ஆரம்பித்து விட்டான்..
எல்லாமே ஒரு
எதிர்பார்ப்புடன்..
இயங்கிக் கொண்டிருக்கிறது..
எளிமையும், இனிமையும்
தூய்மையும் நிறைந்த
கிராமங்கள் நகர்ந்து,
நகரங்கள் ஆகி விட்டன....
மனிதமே இல்லாத
மனிதன் ஆகி விட்டோம்..
நாம்
எல்லாரும்!!!!!!!!!!