Monday, December 24, 2012

எனக்கிணையாக தர்பாரில்......

லாலாக்கடை பூந்தியை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல் மொய்த்துக் கொண்டிருந்தார்கள், ஸபா காரர்கள் ..
   எல்லார் முகத்திலும் ஏமாற்றம் அப்பிக் கிடந்தது ..
  " கொஞ்சம் CONSIDER பண்ணுங்கோ சார்.."
 " அடுத்த வருஷம் அந்த முடிவை எடுங்கோ !"
 " உங்க ரஸிகாளை இப்படி ஏமாத்தக் கூடாது !"
 "அவா அவா மதுரை, திருநெல்வேலிலேர்ந்தெல்லாம் வரா .."
 " அவங்கவங்க ஆயிரம், ரெண்டாயிரம் செலவழிச்சுண்டு உங்க கச்சேரி கேட்க
வராங்க .."
  “க்ளீவ் லேண்டிலிருந்து ரசிகாள்ளாம் வராளாம் ஒங்க கச்சேரி கேட்க”
  எதற்கும் மசியவில்லை தண்டபாணி !
 அவன் சொன்னால் சொன்னது தான் ..யாருக்காகவும் எதையும் மாற்றிக் கொள்ள மாட்டான் ! அவனுடைய இந்த முரட்டு பிடிவாதத்தை,  அவனுடைய வித்வத் ஒன்றுக்காகவே எல்லாரும் சகித்துக் கொண்டிருந்தனர். 
   "அப்ப இந்த ’சீஸன்’ ல அண்ணாவோட தர்பாரைக் கேட்க முடியாது ..இப்படியே போனா, OUT OF SIGHT OUT OF MIND  னு ஆயிடப் போறது ...
அவ்ளவ் தான் சொல்லிட்டேன் ."
   " போனாப் போகட்டும் "
     தலையை சிலுப்பிக் கொண்டு சொன்னான் தண்டபாணி அலட்சியமாய் !.  
     "... உன்னோட சங்கீதம் அப்படி எல்லாரையும் கட்டிப் போட்டிருக்குங்கிற
மமதையில்  பேசறே ..எப்பேர்பட்ட ஆளெல்லாம் எங்கேயோ போய்ட்டான் ...நீ
 சுண்டைக்காய் ..சான்ஸ் கிடைச்சா ஒன்னை நசுக்கிப் போட்டுட மாட்டேன் நசுக்கி " என்று அவனிடம் கச்சேரி சான்சுக்காக வந்த அத்தனை சபா செகரட்டரிகளும் மனத்துள்  கறுவியபடி சென்றனர் .
    " அப்ப நாங்க "
    " உங்களுக்கும் அதே பதில் தான் ..நீங்க மற்ற வித்வான்களுக்கு வாசியுங்கோளேன் ."
    "என்ன இருந்தாலும்   தண்டபாணிக்கு வாசிக்கிறா மாதிரி ஆகுமா" என்று இழுத்தார் வயலின்  வித்வான்.
     வேணு வீணா வயலின் கான்சர்டுகளுக்கு ஒரு ரெண்டு வருஷமாக இவர் தான் அவனுக்கு வயலின் ஜோடி ...அந்த ரெண்டு வருஷங்களும் அவர் காலட்சேபம் நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது.அந்த விசுவாசம்!
     சுபாவத்தில் முரடனாகத் தோன்றினாலும் பக்க வாத்தியக் காரர்களுக்கு மிகவும் பிடித்த வித்வான் தண்டபாணி ..'தனி'க்கு சான்ஸ் தருவான் ..அவர்களை அரவணைத்துச் செல்வான் ..முக்கிய தருணங்களில் இவர்கள் வாசிப்பிற்கு ஆடியன்சை அப்ளாஸ் செய்யச் சொல்வான் ..சம்பாவனைகளையும் மனசுக்குத் திருப்தியாய் வாங்கித் தருவான். ஆகவே பக்க வாத்தியக் காரர்களுக்கு இவனை ரொம்பவே பிடிக்கும் .
      அவனுடைய நவரசக் கன்னடாவில் அமைந்த "நானொரு விளையாட்டுப் பொம்மையா" வும், ஹிந்தோளத்தில் அமைந்த " மா ரமண" வும், கேட்க கேட்க திகட்டாது .அவனுடைய  ககன குதூகலத்தையும் , ரவிச்சந்திரிகாவையும்
அவ்வளவு  லேசில் மறக்க முடியாது ..
      மதுரை மணி ஐயரே மறுபடியும் பிறந்து  வந்து 'மா ஜானகி'யை  ப்ளூட்டில் வாசிக்கிறாரோ என்று நினைக்கும் படி இருக்கிறது என்று எல்லா வித்வான்களையும் கிழி கிழியெனக்    கிழிக்கும் பிரபல சங்கீத விமர்சகர் போன வார ஜன ரஞ்சக பத்திரிகை ஒன்றில் விமர்சனம் எழுதினார்.      
       ராகம் தானம் பல்லவியை யார் இப்போதெல்லாம்  விஸ்தாரமாய் பாடுகிறார்கள், தண்டபாணியைத் தவிர!
        அதுவும் ‘யோஜனா” என்று ஆரம்பித்தானென்றால் ஒத்தை கொட்டு அப்ளாஸ் .... .மூன்று நொடி சைலன்ஸ்..அதற்கு  அப்புறம் ஆரம்பித்தானால்  முழுசாய் ஒரு மணி நேரம் ஓடி விடும். தர்பார் தண்டபாணி என்று அவனுக்கு பெயரைக் கொடுத்த கீர்த்தனை அல்லவா அது!  
      எல்லாவற்றையும் விட அவன் செய்த காரியம் ‘கிளாசிக்கல் ம்யூசிக்’ என்பது ‘எலைட்’ மனிதர்களுக்கு மட்டும் தான் என்கிற சித்தாந்தத்தை உடைத்து, பாமரனும் அந்த சங்கீதத்தை ரசிக்கும் படியாக கொண்டு செல்லும்  ரசவாதம் தெரிந்தவன் இன்றைய கால கட்டத்தில் அவன் ஒருவனாகத் தான் இருக்க முடியும்!
       அவன் கச்சேரி கேட்க வந்தவர்கள் நடுவில் எழுந்து போக முடியாது.  ஆட்டோவைக் கூப்பிட்டால் ‘என்ன அவசரம், தண்டபாணி ஃப்ளூட் முடிச்சுட்டு
வரேன்’ என்பார்கள் அத்தனை ஆட்டோக் காரர்களும் சொல்லி வைத்தாற் போல்!
     ( இதன் தொடர்ச்சி வருகிற ஞாயிறு 06.01.13 அன்று வெளி வரும்)  
 

Wednesday, December 5, 2012

ப்ளஸ் டூ பைங்கிளியும் நானும் !

              ரிடய்ர்டான பிறகு என்ன பண்ணப் போகிறோமோ   என்று பயந்து
கொண்டிருந்தேன். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால்
ரிடயர்ட் ஆவதற்கு ஆறு மாதம் முன்னாலிருந்து ரிடயர்ட் ஆகும் மாதம் வரை தொடர்ச்சியாக மாதம் இருமுறை லேடீஸ் காலேஜ்களில் GUEST
LECTURES  என்று அழைப்புகள் வந்து அது வேறு ஒரு விதமான சோகத்தால்  என்னைப்  பிழிந்து எடுத்துக்  கொண்டு இருந்தது.
          நான் பயந்து கொண்டிருந்த அந்த ரிடயர்ட்மென்ட் நாளும்  வந்தே விட்டது ஒரு நாள் !
        இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் எனக்குத் தான் ரிடயர்ட்மென்ட்டே  தவிர , என் சகதர்மிணிக்கு அல்ல !
     அவளுக்கு   இன்னும் ஐந்து வருடம் சர்வீஸ் இருக்கிறது .  வீட்டு வாசல்
வரை வரும் வேனில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து ஆபிஸ் போய் விடுவாள் .
பத்து மணிக்கு கிளம்பினால், மாலை ஆறு மணிக்குத்  தான் வருவாள். அது வரை இந்த வீட்டை புதையலைக் காக்கும் பூதம் போல் நான்  தான்
பாதுகாக்க வேண்டும் !
     அந்த எரிச்சல் வேறு !
     எப்படித் தான் பொழுதுப் போகப் போகிறதோ !     ஆனால் நடந்ததென்னவோ நான் பயந்ததிற்கு 'உல்டாவா'கப் போய் விட்டது!
இப்போதெல்லாம் மனது அவங்களுக்கு இன்னும் அஞ்சு வருடம்  EXTENSION
கிடைத்தால் கூடத்  தேவலை என்று எண்ண ஆரம்பித்து விட்டது என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள் !    
   
ஆபீஸ் போவது போல குளித்து விட்டு  சக தர்மிணியுடன் டைனிங் டேபிளில் டிபன்
சாப்பிட வேண்டியது ..பிறகு வாசல் வரை வந்து டாடா காண்பித்து
வழி அனுப்பி விட்டு கிடுகிடுவென
மாடிக்கு ஓட வேண்டியது ..அங்கு இருக்கும் சிஸ்டத்தில், 'நெட்' டை மேய
வேண்டியது..
     இது தான் என் நித்ய கர்மானுஷ்டகம்!
      காலையில் ட்விட்டர் .....நடுப்பகல் பேஸ் புக் ...மாலையில் ..பிளாக் ..
என்று மண்டலம் மண்டலமாக பொழுதும்   ஜாலியாகப் போய்க்
கொண்டிருந்தது.
      அப்படித் தான்  ஒரு நாள் நான் நெட்டில்  மேய்ந்து கொண்டிருக்கும் போது கீழே, வீட்டு வாசல் கதவை பூனை ஒன்று பிறாண்டுகிறார்  போல ஒரு சத்தம் !
      கதவைத் திறந்தால் .....      ஒரு அழகான பெண் .....   எதிர்த்த வீடு ...
     "அங்க்கிள் ...நான் ஷகிலா  ..ப்ளஸ் டூ போகப் போறேன் ..நீங்க CHEMISTRY PROFESSOR னு எங்கம்மா சொன்னா .. நான்   CHEMISTRYல வீக் ...இப்ப இந்த ANNUAL LEAVE ல எனக்கு கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா ... "
 "  அதுக்கென்ன பேஷா சொல்லித் தரேனே .. சும்மாத் தான்  இருக்கேன்..பத்தரைக்கு   DAILY
வந்துடு...ஒரு மணி வரை சொல்லித் தரேன் "
       இப்படியாகத் தானே எங்கள் நட்பு தொடர்ந்தது ..
        அந்த ஷகிலாவின்  அப்பாவும் அம்மாவும் OFFICE GOERS.
அதைத்  தவிர என்னுடைய ஏழரை கழுதை வயசு எனக்கு ஒரு பெரிய
ப்ளஸ் பாயிண்ட் !   
வயதானால் என்ன ஒரு செளகர்யம்!
      
அந்த பெண் என்னிடம்  CHEMISRTY கற்றுக்கொள்ளத் தான் வந்து
கொண்டிருக்கிறாள் என்று நான் சொன்னால்  அதை அப்படியே  நம்பி விட நீங்கள் என்ன  சின்ன பாப்பாவா ?.

"பாவை உந்தன்
கடைக் கண்
 பார்வையில்,
சாவை  எதிர் 
கொள்பவனும்,
சட்டென எழுவான் !'

   என்று புதுக்கவிதை ஒன்றை ஒரு நாள் நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது  யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டது .
    ஆத்திரத்துடன் கதவை     படாரென்று திறந்தால் ... ....
    சாட்சாத் என் சகதர்மிணி !
    "என்ன நடக்கிறது இங்கே ?"
    பயத்தில் என்னுடைய ....பல் செட் கழண்டு விழ, ஷகிலாவிற்குத்   தெரியாமல் அதை எடுக்க நான் முயல , படபடப்பில்  தலையில் இருந்த 'விக்'கும்  திடீரென  கீழே விழுந்து தொலைக்க, அந்த
குழந்தை திக்ப்ரமையுடன் என்னைப் பார்த்து லுக் விட..விக்...திக்...லுக்...மிக்ஸ் ஆகி, சட்டென்று  அந்த ஷகிலா  சிரித்து வைக்க,
ஆண்களுக்கு விக்கும், பல்செட்டும் பறி போனால், பெண்களுக்கு 'வஸ்த்ராபரணம்' என்கிற  அவமானத்தை விட, எத்தகைய   அவமானம் ?
     அதுவும் வேன் ரிப்பேர் ஆனதால் ஆபீசுக்கு லீவ் போட்டு விட்டு, வீட்டுக்கு வந்து   பத்ரகாளி போஸில் சகதர்மிணி எதிர்த்தாற்  போல் வேறு நிற்கும் போது   ! 
இது நாள் வரை அந்த ப்ளஸ் டூ பைங்கிளியிடம்  நான் பில்டப் பண்ணி வைத்திருந்த  CHEMISTRY போய் விட  ....
       அதாவது தேவலை என்றாகி விட்டது .....
       அதற்குப் பின் நடந்த
       அடுக்கடுக்கான துயரச் சம்பவங்கள் ... .
       எனக்கும், சகதர்மிணிக்கும் நடந்த உரையாடல்களும் ..
அதனைத்  தொடர்ந்து நடந்த விஷயங்களும்  அவ்வளவு சுவாரஸ்யமாய்   எழுத்தில் வடிக்க இயலாமல் போய் விட   ................
      வேண்டாம் பாஸ்   கிளறாதீங்க ....
      அதற்குப் பிறகு என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
      1.  வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு வந்து விட்டாள், என் சகதர்மிணி !
      2.  வீட்டிலிருந்த  இன்டர்நெட் கனெக்ஷனும் போய் விட்டது !!

Friday, November 23, 2012

பிறப்பும் ...இறப்பும்.... !


பிறப்பு எப்படி இன்றியமையாததோ அது போல் தான் இறப்பும்.
பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இறப்பு துக்கத்தைக்
கொடுக்கிறது.
ஆசைக்கு ஒரு பெண் ..ஆஸ்திக்கு ஒரு பிள்ளை ...என்று ஒரு புதிய வரவை எல்லாரும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.நம் எல்லா மக்களுக்கும் தம் பாரம்பர்யத்தைப் பற்றி ஒருபெருமை இருக்கத் தான் செய்கிறது. எனது நண்பன் ஒருவன் ரொம்ப பெருமையாகச் சொல்வான்.'..அப்பைய்ய
தீக்ஷ்தர் பரம்பரையில் வந்தவனாக்கும் நான் !' என்று !
   அதைப் போல 'எங்கள் வம்சத்தின் காய்ந்த தீக்கட்டை நான் அல்ல...வம்சம் துளிர்த்து விட்டது .எனக்கு ஒரு வாரிசு உருவாகி விட்டது .. எங்கள் பாரம்பர்யம் என்னுடன்  முடிந்து விடவில்லை ..என்கிற சந்தோஷம் மனிதனுக்கு மட்டுமல்ல ..எல்லா ஜீவராசிகளுக்கும்
இருக்கிறது..  
அதனைப் போல் மூத்த குழந்தை தாய்க்கும், கடைசி குழந்தை தந்தைக்கும் ப்ரிதியானவர்கள் என்பதும்  மறுக்க முடியாத உண்மை. தன்னை மலடி என்ற அவச்சொல்லிலிருந்து மீட்டவன் இவன் என்கிற சந்தோஷம் தாய்க்கும்,இன்னமும் தன்னால்  வம்ச விருத்தி செய்ய முடியும் என்கிற சந்தோஷத்தை..நம்பிக்கையை .. கொடுத்தவன் இவன் என்பது
தந்தைக்கும் இருக்கும். 103 வயதில் குழந்தையைப பெற்ற தந்தை நம் பஞ்சாபில் இருக்கிறார் !    
அடுத்து  இறப்பினைப் பார்ப்போம் !
     நம் சமுதாயத்தில் இறப்பு பெரும்பாலும் பணத்தினைச் சார்ந்து தான் இருக்கிறது .இழப்பின் வலி பெரிதாகத் தெரியாத வீட்டில் இறப்பு அவ்வளவாய் தாக்கம் ஏற்படுத்துவதில்லை. ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில்   ஒரு
SEND OFF PARTY போல் தான்   இருக்கிறது .  அந்த மின் மயானத்தில்
அந்த   DEAD BODY TURN வரும் வரை சிகரெட் குடித்துக் கொண்டும், காபி
குடித்துக் கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள். BODY TAKE OFF ஆனதும்
அந்த இடத்தை காலி செய்கிறார்கள். இதற்காகவே காத்துக் கொண்டு இருப்பது போல் அந்த இடத்தை அடுத்துவருபவர்கள் OCCUPY செய்கிறார்கள். இதற்கும் AIR PORT TAKE OFF க்கும் உள்ள ஒரே வித்யாசம் என்னவென்றால், இதில் யாருக்கும் SAFELY REACHED என்று செல்லில் மெசேஜ் வருவதில்லை !

     ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாத 'அரிஸ்டோக்ராட்' வீட்டில் இறப்பு
என்பது  டிஷ்யூ பேப்பரால் கன்னத்தில் வழியும் கண்ணீரை  நாசுக்காக 
துடைப்பது போல் நாகரீகமாய்   வெளியேச்  செல்ல, வறியவர்கள் வீட்டில், அதுவே  மாரில் அடித்துக் கொண்டு அழுகையாய்..ஒப்பாரியாய்...சங்கு ஊதி இருப்பைக் காட்டிக் கொண்டு... டம் டமார் என்று பட்டாசு சத்தங்களோடு... குடியோடு ....பாசங்களும், உரிமைகளும்  தம்தம் முகத் திரையை கிழிக்கும்  சண்டை சச்சரவுகளோடு ..சகலவிதமான ஆர்ப்பாட்டங்களோடு வெளியே
செல்கிறது !
   இன்றைய கால கட்டத்தில் இறப்பு, பிறப்பு என்கிற இயற்கை நிகழ்வுகள்
இரண்டுமே  பொருளாதாரச் சூழலில் சிக்கித் திணறிக் கொண்டு தான் இருக்கின்றன போலும்  !!  
   
  

        

Saturday, November 17, 2012

வேறேன்னக் கேட்பேன் நிறைவுப் பகுதி

இது மோகன் ஜி !
சரிடா! நான் மதியம் கிளம்பறேன்.. கலியபெருமாள் கோயிலுக்கு  போயிட்டு அப்படியே ஊருக்குத் திரும்பணும்... சாவகாசமா இன்னொரு முறை வறேன்.. சரிதானே?” என்றார் ஆராமுது.

சிவபாதம் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டார். துருத்தியின் உறுமலாய் பெருமூச்சு வாங்கியது.. ஆராவமுதன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்... கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது..

‘”ஆராமுது.. என்னை நாலு அறை அறைய மாட்டியா? தோளில் போட்டிருக்கும் சவுக்கத்தால் என் கழுத்தை இறுக்கி கொன்னு போடுடா.. இங்கே நீ வந்தது முதல் எதுவுமே கேட்டுக்காம எதுக்கு வதைக்கிறே?”

ஆராமுது எழுந்து வந்து சிவபாதத்தின் கைகளைப் பற்றிக் கொண்டார். 

வேண்டாம்டா. எதுவுமே நீ சொல்ல வேண்டாம். சொல்லி என்ன ஆகப் போகிறது.. எதை மாற்ற முடியும்.?. வேறென்னடா கேட்பேன்? நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம் இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள் இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு.. உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு போறேன்.. கலங்காம இருடா.

பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில் அவர்களின்   சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,ேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..

நீ.. ரொம்ப பெரியவண்டா.. உனக்கு நல்லது செய்வதாய்த்தான் அதையெல்லாம் செய்ய சட்டென்று சிவபாதத்தின் வாயைப் பொத்தினார் ஆராமுது..
போறும்.. இப்பத்தானே சொன்னேன்.. விடுன்னா விட்டுடணும்.. பொழச்சிக் கிடந்தா இன்னொரு சமயம் பேசிக்கலாம்.. எல்லாத்தையும் மறந்துட்டு பழைய சிவபாதமா மீசைய முறுக்கிக்கிட்டு முண்டாவைத் தட்டிக்கிட்டு நில்லுடா.. நீ நிப்பே.. உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ எட்டூருக்கு நிப்பே.. ஒரு வார்த்தை பேசாதே

அம்மாடி.! சமயல்கட்டைப் பார்த்து கூவினார் ஆராமுது.உன் சம்சாரம் பேரு என்ன.?”

கற்பகம்

அம்மாடி கற்பகம்! சமையல் ஆயிடுச்சுன்னா இலைய போடு தாயி.. எனக்கு கிளம்ப நாழி ஆச்சு.

கற்பகத்துக்கு தூக்கிவாரிப் போட்டது.. தன் பெயரை சொல்லி கூப்பிட்ட ஆராமுதன் குரலில் இருந்த வாத்ஸல்யம் அவளை உருக்கியது.. அவள் ஏதோ ஒரு பழைய கணக்கு நண்பர்கள் இடையில் சரிசெய்யப் படுவதாய் உணர்ந்தாள். என்ன கணக்கானால் என்ன? இந்த சந்திப்பில் தன் புருஷனுக்கு பல சுமைகள் இறங்கிப் போகும் என உணர்ந்தாள்.தன்னை பேர் சொல்லி அழைப்பவன் எனக்கு பந்தப் பட்டவன்..அவயாம்பிகை அனுப்பின தேவதூதன்

இதோ.. பத்து நிமிஷத்துல ஆயிடும் அண்ணா!

என்னை.. என்னை அண்ணாங்குறாடா! ஆராமுது நெகிழ்ந்தார்.

உன்னை குலசாமின்னு சொல்லணும்டா வெறும் அண்ணாங்குறா போக்கத்தவ!

மேலே ஏதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

ஆராமுது ரசித்து சாப்பிட்டார். கற்பகம் ! தெளிவா ரெண்டு கரண்டி ரசத்தை கையில விடும்மா

இரண்டுகை ரசம் ஆறு ஏழு என நீண்டது.

கற்பகத்துக்கு கண்ணீர் தளும்பியது. மெல்ல குடிங்கண்ணா. புரையேறப் போகுது..

என்னை யாரும்மா நினைச்சுப்பா? புரையேறுறதுக்கு?

இனி நான் நினைப்பேனண்ணா கற்பகத்தின் மனசு அலறியது..பிள்ளை சுமக்காமல் பாழாய்க் கிடந்த அவள் வயிற்றில் தாய்மை சுருண்டது.

சரிடா.. கிளம்பறேன். இன்னைக்கு ரொம்ப உடம்பை அலட்டிக்கிட்டே.. படுத்துக்கோ 

எப்படா திரும்ப வருவே?

எப்ப வேணும்னாலும்

அண்ணா! இது உங்க வீடு.

ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார் ஆராமுது..எனக்கொரு நமஸ்காரம் பண்ணேன் கற்பகம்

ஓடிவந்து ஆராமுதன் காலில் விழுந்தாள்..சட்டைப் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவள் கையில் திணித்தார்.

தீர்க்காயுசா இரும்மா. இந்த கிருக்கனை நல்லா பார்த்துக்கோ

சரிண்ணா. சீக்கிரமா திரும்பி வாங்க.

உன் ரசத்துக்காகவாவது திரும்ப வருவேன். வாசலை நோக்கி நடந்தார் ஆராமுது. விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு கையில் ஒரு ரெக்ஸின் பையுடன் சிவபாதத்தின் கண்முன்னே போனபடி......

நீ ரொம்ப பெரியவண்டா... அவர் கைகள் தானாய்க் குவிந்தன.  போவது தன் பழைய அப்பாவி ஆராமுது இல்லை.  புத்தனிவன்.. ஏசுப்பிரபு..

மெல்ல கட்டிலில் சரிந்தார். கற்பகம் தலையணைகளை சரி செய்தபடி  சிவபாதத்திடம் சொன்னாள், மனசுக்கு ஆறுதலா இருக்குங்க.. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. இவர் நம்மகூட நாலு நாள் இருந்தா நீங்க எழுந்து ஒடுவீங்க.” என்று எழுந்தாள்.

எழுந்து ஓடுவேனா?”

அவனை ஊரைவிட்டு ஓட வைடா.. இல்ல உலகத்தை விட்டே ஓட வைப்பேன்.. அப்பாவின் இரைச்சல் சிவபாதம் காதில் ஒலித்தது. சிவபாதத்தின் ஒரே தங்கை ஜமுனா ஆராமுதுக்கு தன் காதலைத் தெரிவித்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி எழுதின கடிதம் அவன் அப்பாவின் கையில் சிக்க ருத்ர தாண்டவம் ஆடினார்.

ஜாதி கெட்டநாயி! உன் சினேகிதன்னு வீட்டுக்குள்ள வளைய வரவிட்டது எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியாடா?’

இல்லப்பா. அவன் அப்படி இல்லை. இந்த சிறுக்கிய வெட்டுங்க,, ஆராமுதுவை ஏதும் சொல்லாதீங்க..  இப்பத்தான் அடுத்தடுத்து அப்பாவும் அம்மாவும் செத்துப் போயி ஆளில்லாத அனாதையா நிக்கிறான்பா

அவன் இல்லேன்னா செத்துபொய்யிடுவேங்கிறாளே கடுதாசில.. அவனை இருக்க விட்டாத்தானே?’

அப்பாவும் பிள்ளையும் ஆலோசித்தார்கள். அப்பாவின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த அந்த அலுவலகத்தில் ஆராமுதன் பொறுப்பிலிருந்த பணம் இருபதாயிரம் மாயமானது. பொறுப்பாளர் போலீசுக்கு போவதாயும், எழட்டு வருடம் சிறைவாசம் உறுதியென்றும் மிரட்டவைக்கப் பட்டார். கலங்கி நின்ற ஆராமுதனை ஊரைவிட்டே கண்காணாமல் போய்விடும்படி தன் பங்கு வசனத்தை சிவபாதம் சொல்லி கொஞ்சம் பணமும் கொடுத்தனுப்பினான்

.மறந்தும் இந்தப் பக்கம் வந்து விடாதே. எந்தக் கடிதமும் போட்டுவிடாதே. வடக்கே எங்காவது போய் பொழச்சிக்கோ. இங்க உனக்கும்தான் யாரிருக்கா? கொஞ்ச வருஷம் போனபிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதும் வண்டி பிடிச்சி மதராஸ் போய் வடக்கே போற ரயிலைப் பிடிச்சியானா
தப்பிச்சிக்கலாம். இங்கே மேற்கொண்டு நான் ஏதும் சமாளித்துக் கொள்கிறேன்.”

ஆராவமுதன் விலகியவுடன் ஆபீஸ்கணக்கு சரி செய்யப்பட்டது. ஆராவமுதனின் இந்த கதிக்கு காரணமான ஜமுனாவுக்கு நடந்த நாடகம் அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொண்டபோது தெரியவந்தது. வீட்டின் கிணற்றின் ஆழத்தில் நியாயம்தேடி தஞ்சம் புகுந்தாள். எதற்குமே அர்த்தமில்லாமல் போய்விட்டது.

அப்பா! என்ன சாதித்தீர்கள்.? உனக்கேன் பாழும்காதல் வந்தது ஜமுனா? உயிரான சினேகிதத்திற்கு துரோகம் செய்தேன்.. அது உன்னைக் காக்கவென என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன் ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும். தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று  ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன். அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.. மாடிவிட்டு கீழே இறங்கினார்..

மெல்ல மெல்ல கற்பகம் கைலாகு கொடுத்தபடி உடன்வந்தாள்

என்ன அண்ணனையே நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?”

அண்ணன்!முனகிக் கொண்டே தோட்டத்தில் தரையைப் பார்த்தார் சிவபாதம்.

தரையோடு ஒட்ட வெட்டபட்ட முருங்கை மரத்தின் வேர்த்தட்டில் பொன்பசுமையில் சிறிதாய் துளிர்விட்டிருந்தது.  

                                                 (முற்றும்)

Friday, November 9, 2012

வேறென்ன கேட்பேன் .....(3)

மோகன்ஜி யின் கை வண்ணத்தில் முதல் சுற்று காண இங்கே சொடுக்கவும் :
http://vanavilmanithan.blogspot.in/2012/11/blog-post.html
ரிஷபனின் கை வண்ணத்தில் இரண்டாம் சுற்றுக்கு இங்கே சொடுக்கவும் :
http://rishaban57.blogspot.com/2012/11/2.html
இனி அடியேன் ............................................................
**********************************************
ஒடினார்.. ஓடிக் கொண்டே இருந்தார்..காலில் வலு இருக்கும் வரை ஓடினார்.


ஒடுகாலி என்று பெயர் கிடைத்தது..அது மட்டுமா? அத்துடன்….

அதை எப்படி சொல்வது?

முப்பது வருடம் ரணம் முள்கிரீடமாய் இவரை அழுத்த..

ஆராமுது என்றாலே………..

…………………………………………………………………………..



ஆகி விட்டது..எல்லாமே போச்சு…யாரிடம் போய் என்ன கேட்பது? அப்படிக் கேட்டாலும் அந்த ஞானஸ்னானம் இவர் மீது

முப்பது வருடங்களாகப் படிந்த அந்த கறையை போக்கி விடுமா?

இங்கு வரவேண்டும் என்ற ஆவல் மனிதனை சுனாமியாக அலைக் கழித்தது..வந்தார்…இப்போது அதே மனமே ஏன் வந்தாய் என்று அவரைக் கேட்கிறது..

மேலும் பழைய புண்ணைக் கிளறிப் பார்ப்பதால் என்ன பயன் வந்து விடப் போகிறது? காலம் தான் காயத்தை ஆற்றும் என்று சொல்வது பொய் தானா?..

இல்லாவிட்டால் சீழ் பிடித்தது ரணமாகி இப்படி ஆகியிருக்குமா என்ன?

“ என்னப்பா... கனவா ?”

“ஒன்றுமில்லை” – இயலாமை ஒரு வெற்று சிரிப்பாய் வெளிப்பட்டது.

யார் பண்ணின தப்புக்கோ யாரோ ஒருவர் சிலுவை சுமப்பது இன்று நேற்றா நடக்கிறது?

எதற்காக இங்கு வந்தோம்?

ஏன் வந்தோம்?

ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும் என்கிற ஆவலுடன் வந்தவருக்கு, வாய் ஏன் இப்படி மெளடீகம் பூண்டது?

ஒரு குற்றம் தெரிந்தோ தெரியாமலோ நடந்து விட்டது..



குற்றம் நடந்தது முப்பது வருடங்கள் முன்பு…குற்றம் செய்தவரும், செய்யாத குற்றத்தை சூழ்நிலையால் ஏற்றுக் கொண்டவருமே இந்த முப்பது வருட முடிவின் எச்சம்!

தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட நீதி யன்றோ?

நான் தான் குற்றம் செய்தேன் என்று யாரிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வீண் பழியாய் என் மீது குற்றம் சுமத்தப் பட்டது என்று யாரிடம் நிரூபிக்க வேண்டும்?

இந்த முப்பது வருடங்கள் எல்லாவற்றையுமே முழுங்கி விட்டது..

எல்லாவற்றையுமே!

சிவபாதத்துடன் பேச வேண்டும் போல இருந்தது.

ஒன்றை கவனித்தார் ஆராமுதன்..சிவபாதத்திடம் பேசும் போது அவர் கண்கள் கொஞ்சம் குறுகிப் போய் தாழ்ந்திருந்தன.. இவர் கண்களை நேருக்கு நேராய் பார்க்க ஒரு கூச்சம்! அச்சம்!!

கட்டிலிலிருந்து எழுந்தார்.

“என்னப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்..”

“அதுக்கா அவ்ளவ் தூரத்திலிருந்து வந்தேன்..”

“அப்ப பேசு..” – சிவபாதம் எழுந்து உட்கார்ந்தார்..

“ பால்ய சினேகிதரைப் பார்த்ததும் இப்ப தாங்க எழுந்து உட்கார ஆரம்பித்திருக்கார்..” – சிவபாதம் மனைவி.

“அப்படியா “ – புன்னகைத்தார் ஆராமுதன்.

அந்த அம்மையார் முகத்திலும் முதலில் இருந்த கடுமை மறைந்து இதழ்க்கடையோரம் லேசாக புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

.” அந்த காலத்துல தமிழ் சொல்லித் தந்தாங்களே அந்த டீச்சர் பேர் என்ன?”

”துளசி டீச்சர்”

” இருக்காங்களா இன்னும்?”

“ உனக்கு ரொம்பவும் பேராசைப்பா..அவங்க நம்ம ஒண்ணாப்பு டீச்சர்..இன்னமும் உசிரோட இருப்பாங்களா என்ன?

நாமளே எப்படா போவோம்னு இருக்கோம்..அவங்க நம்மள விட இருபது வயசு ஜாஸ்தி..”

“ அந்த இங்க்லீஷ் வாத்தியார்..”

“ அடேங்கப்பா இன்னமும் ஞாபகம் இருக்கா உனக்கு?”

”இருக்காதா..அவரு சொன்னது இன்னமும் பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சிகிட்டு இல்ல இருக்கு..க்ளாஸ் ரூம்ல பசங்கள க்ரூப்பா பிரிச்சி..”

“பிரிச்சி?”

“ஒருத்தன் சொல்லணும் RAMU IS A GOOD BOY னு. உடனே அடுத்தவன் ராமு NOUN ங்கணும்..உடனே டீச்சர் நெக்ஸ்ட் என்று சொல்ல அடுத்தவன் IS VERB என்று சொல்லணும்.அவன் முழிச்சா உடனே அடுத்தவன் அதை சொல்லணும்..அப்புறம் முழிச்சவன் சுவற்றோட சுவரா நாற்காலி மாதிரி நிற்க, சரியா சொன்னவன் அவன் தொடையில உட்காரணும்..ஒரு தடவை நீ தப்பா சொல்ல, நான் கூட உன் தொடைல உட்கார்ந்திருக்கேன்”

“அப்பவுமா?” – தன்னை மீறி வந்து விட்டது வார்த்தை  ஆராமுதனுக்கு.

கனத்த மெளனம்.

வார்த்தைகள் வீச்சரிவாளாகக் கிளம்பி இதயத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும்.

சிவபாதத்திற்கு முகம் செத்து விட்டது ஒரு கணம்.

ஒரு கணம் தான்..

அடுத்த கணம் ஆராமுதன் சூழ் நிலையை மாற்றி விட்டார்..

“ அத்த வுடுப்பா…அந்த ஜோக் ஞாபகம் இருக்கா..பாத்ரூம் போன ஹெச்.எம் ஐ ரூமைப் பூட்டி நாம ’கேரா’ பண்ணினோமே .

அன்னிக்கு கூடஸ்கூல் லீவ் விட்டாங்களே…”

சின்னஞ்சிறு குழந்தை போல விழுந்து,விழுந்து சிரிக்க ஆரம்பித்தார், சிவபாதம்.

சிரிப்பலைகள் பெருகி, சூழ் நிலை மிகமிக லேசாக, இப்போது ஆராமுதனும் விழுந்து, விழுந்து சிரிக்க…

”….இப்ப தாங்க இவரு முகத்துல முப்பது வருஷத்துக்குப்பறமா இப்படி ஒரு சிரிப்பு பார்க்கறேன்.. ”

கண்களில் நன்றியுடன் சிவபாதம் மனைவி..

அதற்கும் சிரித்தார் ஆராமுதன்…

தொடர்ந்து சிரித்தார் சிவபாதம்..

அந்த சிரிப்பு, கடந்த முப்பது வருடங்களாக அரித்துக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சியையும், அதற்கு பரிகாரம் தேட வந்தவரின் குற்றமற்ற உணர்ச்சியையும் ஒரு கணம் அந்த ஒரே கணத்தில் கரைத்து விட,

“ ஐயா, அடிக்கடி வாங்க… நீங்க வந்தா இவரு இன்னும் கொஞ்ச நா உயிரோட இருப்பாரு..’

கையெடுத்துக் கும்பிட்டார், சிவபாதம் மனைவி..

“ அட நீங்க வேற.. நாங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் இருப்போமாக்கும்…அதுவும் ஆரோக்யமா…”

சொல்லும் போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது ஆராமுதனுக்கு…அதன் தொடர்ச்சியாய் சிவபாதத்திற்கும் ஒட்டிக் கொள்ள…இப்போது சிரிப்பு என்ற ஒன்றை இத்தனை நாளும் மறந்திருந்த அவர் மனைவியும் லேசாய் சிரிக்க ஆரம்பிக்க..

நெடுங்காலமாய் நெஞ்சிலே கர்ப்பத்தை சுமந்தவர்களின்

அவஸ்தை நீங்கி, ஒரே நேர்க் கோட்டுப் பாதையில் இருவர் கண்களும் நேருக்கு நேராய் பாசத்துடன் பார்க்க ஆரம்பித்தன, அப்போது!

                                                                                                                       (தொடரும்)  

அடுத்துத் தொடர்பவர் திரு மோகன் ஜி ...... 

Tuesday, November 6, 2012

வேறென்ன கேட்பேன் - (2)

சுழல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை.......

கல்லி ......மிட் ஆப் ....மிட் ஆன் பாயின்ட்களில்
பிரபல பிலாக்கர்கள் பீல்ட் செய்ய....
இதோ.......
மோகன்ஜி  அந்த பக்கமிருந்து பந்தை வீச ...
இப்போது  பேட் செய்ய வருபவர் .....
பிரபல எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் .
 http://rishaban57.blogspot.com/2012/11/2.html
இதன் முதல் பகுதியைப் படிக்க


இனி இரண்டாம் பகுதி இதோ..


ஆராமுதின் பக்கம் வந்து சிவபாதம் உட்கார்ந்ததை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
'எழுந்துப்பாரான்னு கிடந்த மனுசனா இவுரு..'

அப்படி ஒன்றும் உடம்பு சொல் பேச்சு கேட்கவில்லைதான். கால் ஒரு பக்கம் இழுக்க கை ஒரு பக்கம் இழுத்தது. பிடிவாதம் ஜெயித்தது. பால்ய நண்பனைப் பார்த்த வேகமோ.. அல்லது மனதின் குதியாட்டமோ. பதறிப் போய் பற்றிக் கொள்ள வந்தால் உதறியதில் வீம்பு தெரிந்தது. ஆராமுது பிடித்துக் கொண்ட போது உடன்பட்டதில் லேசாய் பொறாமையும் கோபமும் வந்தது.

"தட்டு போதும்டா"

ஆராமுது சொன்னதைக் கேட்காமல் வாழை இலை. புது எவர்சில்வர் டம்ளர். சுடச் சுட இட்லி. சட்னி.

ஆராமுதுக்கு உள்ளே ஏதோ தளும்பியது. அவமானம் பின்னுக்குப் போய் ஆதி நாட்களின் பிரியம் மேலோங்கியது. எது கிடைத்தாலும் பகிர்ந்து கொண்ட நட்பு.

"ரொம்ப காரமா.. எண்ணை ஊத்துடி.. " சிவபாதம் இரைந்ததில் குரலில் கணீர்.
"அதெல்லாம் இல்லை.."
"இன்னும் ரெண்டு வைக்கட்டுமா"

அம்மா.. அம்மாவின் ஞாபகம் வந்தது. கேட்கக் கூட மாட்டாள். போட்டு விட்டு போவாள். வயிற்றைப் பார்க்காமல் மனசைப் பார்த்து ஊட்டிய காலம்.

சுடச் சுட காப்பி. சிவபாதம் மீண்டும் கட்டிலுக்கு வர.. பக்கத்தில் ஆராமுது. வயிறு நிறைந்து, மனம் மட்டும் குமுறிக் கொண்டு. எங்கிருந்து ஆரம்பிப்பது.. சுவர் காலண்டர் பின்னோக்கி போன பிரமை.

மகன், மருமகள், மனைவி பற்றிய விசாரிப்புகளுக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மனம் ஒட்டவில்லை. அதை சிவபாதமும் புரிந்து கொண்டதாலோ என்னவோ டக்கென்று பேச்சை நிறுத்தி ஏதோ கேட்டார்.

"ஆராமுது.. டேய் ஆராமுது"
"ஆங்க்.. என்ன"
"உன் கவனம் இங்கே இல்லைதானே"

ஆராமுது அவனையே வெறிக்கப் பார்த்தார். மனசுக்குள் ஒரு உக்கிரம் கிளம்பிவிட்டது. உன்னால் தானே.. உன்னால் தானே..

"என்னடா.. ஏதாச்சும் பண்ணுதா.. கொஞ்சம் படுக்கறியா.. பிரயாணம் ஒத்துக்கலியா"
சிவபாதம் குரலில் அக்கறை பீரிட்டது.

ஆராமுது தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். உன் பேச்சைத் தானே இத்தனை நாள் கேட்டேன்.
"வெளியே போயிட்டு வரேன்.."
"ஏண்டா.. இப்பதானே வந்த.. இரு.. அப்புறமா போகலாம்.." சிவபாதம் கெஞ்சிய குரலில் சொன்னார்.

ஆராமுது அதற்குள் எழுந்து விட்டார். சிவபாதம் முகத்தைப் பார்க்கவில்லை. கோபம் தெரிந்து விடும்.
"பத்து நிமிஷம்.. வந்துருவேன்"

படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டார்.
"அவன் போறான்டி.. கூப்பிடேன்"
சிவபாதம் மனைவியிடம் சொல்லியது கேட்டது.

"பச்சைப்புள்ளையா அவரு.. போயிட்டு வந்துருவாரு.."
ஆராமுது சிவபாதம் அருகில் அந்த நிமிஷம் இருக்கப் பிடிக்காமல் இறங்கி வந்து விட்டாரே ஒழிய.. தெருவுக்கு வந்ததும் எங்கே போவதென்று புரியவில்லை. தன்னிச்சையாய் கால்கள் நடந்தன. பண்டாபீஸ் இங்கேதானே.. எங்கே காணோம்.. முப்பது வருஷத்துக்குப் பிறகு தேடுவதில் ஒரு அபத்தம் புரிந்தது மனசுக்கு. தெருவின் முகம் மாறிப் போயிருந்தது. யாரோ கூப்பிடுவது போல.. இல்லை.. விரட்டுவது போல.. காலகள் வேகமாய் நடக்க பின்னாலேயே வந்து கையைப் பிடித்து இழுத்தார் ஒருத்தர்.

"அது நான் இல்லை.. நான் இல்லை" அலறினார் ஆராமுது.
"ஸார்.. பர்ஸை கீழே போட்டு போறீங்க.."
பர்ஸ். முகத்துக்கு எதிரே காட்டினார். ஆமாம். என் பர்ஸ். என் பணம்.

"தொலைச்சவுங்களுக்குத் தான் அந்த அருமை தெரியும் ஸார்..பிடிங்க.. பத்திரமா வைங்க"
தொலைச்சவங்க.. எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் வார்த்தைகள் உயிரோடு நின்று மிரட்டுகின்றன.

 'பாவி.. வெளங்குவியாடா நீ.. நல்லா இருப்பியா..'
'நான் இல்ல.. நான் இல்ல'
ஆராமுது வாய் விட்டு அலறி இருக்க வேண்டும். எதிரே இரண்டு மூன்று பேர் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

'புத்தி சரியில்லையா'

ஆராமுது திரும்பி நடக்க ஆரம்பித்தார். வேணாம், சிவபாதம்கிட்ட போயிரலாம்.. படியேறியபோது மீண்டும் நாயின் குரைப்பு.

"வந்துட்டாரு உங்க நண்பர்"
சிவபாதம் உடம்பு நடுங்கியது இவரைப் பார்த்து.

"நீ திரும்பப் போயிடுவியோன்னு பயந்துட்டேன்.."
"இல்ல" முனகினார் ஆராமுது.

"உன் கிட்ட பேசணும்டா"
"ம்ம்.."
"அவர் கொஞ்சம் படுக்கட்டுமே.."
"ஓய்வு எடுக்கறியாடா"
"ம்ம்"

பூக்குழி மிதித்த மாதிரி உடம்பு எங்கும் அனலடித்தது. தலைக்கு உசர கட்டை வைத்து மின் விசிறியின் அடியில் படுத்தார்.
இறந்த காலம் உயிர் பெற்று எழுந்து இரைச்சல்கள் கேட்டன.

"டேய்.. ஆராமுது.. நல்லா இருப்பியாடா.. '

'அவனை என்ன கேள்வி.. பிடிங்கடா'

'இரு கொஞ்சம் விசர்ரிக்கலாம்..'

'விசாரிக்க என்ன இருக்கு.. கையும் களவுமா பிடிச்சாச்சு'

'சிவபாதம் நீ இதுல தலையிடாதே..'

சிவபாதம் சட்டென்று ஒதுங்கியதைப் பார்த்து ஆராமுது அரண்டு போனார்.

டேய் சிவபாதம்..”
கூட்டம் மெல்ல மெல்ல முன்னேறியது. சிவபாதம் நகர்ந்து கொண்டே பின்னுக்கு போவது தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த மிரட்சி.. கெஞ்சல்.. பயம்..

ஆராமுதுவுக்கு இன்னது செய்வதென்ற நிதானம் தொலைந்தது.



                                                                                                       (தொடரும்)

 இதன் 3ம் பகுதியை ஆரண்யநிவாஸ் - மூவார் முத்து தொடர்கிறார்...




Friday, November 2, 2012

வேறென்ன கேட்பேன் ?

திருமோகன்ஜியும்,ரிஷபனும் என்னிடம் சொல்லும் போது
என்னுள் சின்னதாய் ஒரு அதிர்வு .
நம்மால் இது முடியுமா என்று வழக்கம்  போல ஒரு தயக்கம்
 என்னை  நீலம் போல்  தாக்க,நிலைகுலைந்தேன்.
பிறகு ஒரு வாறு சமாளித்துக் கொண்டு ஒத்துக் கொண்டேன்.
நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள கூப்பிடும் போது
ஒத்துழைப்பது தானே மரியாதை !)    
    
    சரி ... படிக்க ஆரம்பியுங்கள்...பிறகு தொடர்கிறேன் !
   ( இது திரு மோகன்ஜி பிலாக்கில் பிரசுரமான முதல் பகுதி .)
     http://vanavilmanithan.blogspot.in/2012/11/blog-post.html

உத்திஉத்தி கம்மங்கட்டு வூட்டப் பிரிச்சி கட்டு

காசுக்கு ரெண்டுகட்டு கருணைக் கிழங்குடா
தோல உரியடா தொண்டையில வையடா
வையடா வையடா வையடா....

சிவபாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு உத்திஉத்தின்னு இறங்கினாப் போதும்..
நாலு பேரையாவது ஏறக் கட்டிட்டுத் தான் லைனையே தாண்டுவான். சடுகுடு ஆட்டந்தான்னு இல்லை, வாலிபால், கோக்கோ எதுவானாலும் அதில் அவன் சூரன் தான் சந்தேகமேயில்லை.
ஆனாலும் அவன் சகவாசம் கூடாது என ரொம்பவே ஆராமுது வீட்டில் கண்டிப்பு காண்பிப்பார்கள் .அவனும் அவன் மூஞ்சியும்..
மேலக் கவரைத் தெருவில் இன்று ஆராமுதுக்கு தெரிந்தவன் அவன் ஒருவன் தான். தெரிந்த மீதி பேரெல்லாம் எங்கெங்கோ.. அந்த விவரமெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தெரியத்தானே போகிறது? சிவபாதத்தையே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

முப்பது வருஷம் தெரிஞ்சுக்காம இருந்தது ரெண்டு மணி நேரத்திலயா குடிமுழுகிப் போகும்.? ஏதோ கண்ணை மூடுமுன் தான் திரிந்த மண்ணை ஒரு தரம் பார்த்துடணும்னு ஒரு வெறி. அதுக்காக அதைப் பார்த்தப்பபின்னே ஆராமுது கண்ணை மூடிடுவான்னு நினைக்க வேண்டாம். ‘கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறு’ன்னு பங்கஜமே சர்டிபிகேட் இல்லே குடுத்திருக்கா? நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும்.

ஆச்சு அணைக்கரை வந்தாச்சு.. பல்லாங்குழியாய் ரோடு எல்லாபுறமுமாய் பஸ்ஸோ ஆட்டி எடுத்தது.. செய்யறதையெல்லாம் செஞ்சி போட்டு தெகிரியமாய் இந்த ஊருக்கே வரையா படவான்னு உலுக்கிஉலுக்கிப் போட்டது ஆராமுதை..

என்னைப் பார்த்தா யாருக்கும் அடையாளம் தெரியுமா? ஆராமுதுக்கு வழியெங்கும் இந்தக் கேள்வி மாளாத யோசனையாய் நீண்டபடி வந்தது. இருபத்தினாலு வயசிருக்குமா அப்போ? தன் வயசுக்காரர்கள் ஆறேழு பேர் இருப்பமா? மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா. அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!

அப்படி யாரும் தன்னை தெரிஞ்சிண்டா தான் என்ன? அவமானப் படும்படி ஏதும் சொன்னாத்தான் என்ன? ஆம்படையாளும்,பிள்ளையும்,சொச்சத்துக்கு மருமகளும் செய்யாத அவமானமா? செத்திருக்கணும் அப்பவே செத்திருக்கணும்.. உசிரில்லே வெல்லக் கட்டி?

பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. புழுதி பறக்க இருந்த பழைய பொட்டவெளியா? கட்டடமும், கடைகளும்,ஏ.டி.எம்முமா எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இல்லையின்னா அந்த இடம் பஸ் ஸ்டாண்டுன்னு தெரியாம போயிருக்கும். ஆராமுது ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்.

“மேலக் கவரைத் தெருவுக்கு விடப்பா”.

ஏற இறங்க பார்த்த ஆட்டோக்காரன். ~அது என்னாதுங்க எனக்கு தெரியாத தெருவு. இந்த வெளங்காத ஊருல?

“பண்டாபீஸ் பக்கத்துல”.

“பண்டாபீஸா. அப்படின்னா?”

அங்கே போய்க் கொண்டிருந்த இன்னொரு பாம்புக் காதுக்கு இந்த சம்பாஷணம் விழுந்தது. “நம்ப மந்திரி தெருவத்தான் அப்போ மேலக் கவரைத் தெருன்னு சொல்லுவாங்க. சாரு அங்க யாரைப் பார்க்கணும்?” அருகில் வந்து நெற்றியில் உள்ளங்கையை சார்பாக்கி ஆட்டோவினுள் பார்த்தார்.

இவரண்டை சொல்லலாமா?..”சிவபாதம் சிவபாதம்னு’

அவருக்கு நீங்க என்னவாகனும்..

“கிட்டின சொந்தம்”

“நீங்க பார்த்தா பிராம்மணா போலிருக்கேளே?”

“அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”

“அது சரி! நீ போப்பா” என்றவர் முனகிக்கொண்டே போனார்..’நல்ல கொண்டான் கொடுத்தான்’

தெருமுக்கிலேயே ஆராமுது இறங்கிக் கொண்டார். எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒண்ணைத் தவிர

ஓட்டு வீடுகள், தாயம்மாவின் குடிசை, தெருவின் ரெண்டு பக்கமும் இருந்த முனிகிபாலிட்டி தண்ணீர் குழாய்கள், வீடுகளை ஒட்டிக் கறுத்து தேங்கி நின்ற சாக்கடைகள் எதையும் காணோம். பிளாட்டுகள் வந்திருந்தன. சோடா பவுண்டன்.. நிலா பியூட்டி பார்லர்...

வந்தாச்சு . ரெண்டு மாடி வீடு . இதுவாய்த்தான் இருக்கணும். “சிவபாதம்!”

“யாருங்க அது.?” அவன் மனைவியாகத்தான் இருக்க வேணும்..

உள்ளே பேச்சுக் குரல்.. மீண்டும் பால்கனிக்கு அவள் வந்தாள். “மேல வாங்க. தைரியமா வாங்க.. இது கடிக்காது” என்றாள் நாயை வாஞ்சையோடு பார்த்தபடி.

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே என்று நினைத்துக் கொண்டார் ஆராமுது.

படுக்கையில் சாய்ந்திருந்த சிவபாதம் கண்களை சுருக்கிக் கொண்டார்.

“தெரியுதா?”

“வா ஆராமுது..” குரல் கம்மி கண்கள் கலங்கின சிவபாதத்துக்கு.

“எப்படி இவ்வளவு தூரம்?”

“அடடா! இவ்வளவு வருஷத்துக்கப்புறமும் என்னை அடையாளம் தெரிஞ்சுதா?”

“தெரியாம பின்னே? ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.. அதுல நீ ஒண்ணு.. நீ வருவே நீ வருவேன்னு தாண்டா அந்தராத்மா அலறிக்கிட்டு கிடந்தது..” இருமலும் இரைப்புமாய் திணறியது சிவபாதத்தின் குரல். “இனிமே கவலை இல்லே. இன்னொருவன் தன்னால வந்துடுவான்”

“இன்னொருத்தானா? யாரது?” இளைத்த அவர் கரம்தொட நீண்டது ஆராமுதின் வலக்கை.

“தர்மராஜன்.. யம தர்மராஜன்..”

((தொடரும்)

இதன் அடுத்த பகுதியை பிரபல பதிவர் ரிஷபன்  வரும் புதனன்று அதாவது 07.11.2012 அன்று தொடர்வார்)

Wednesday, October 31, 2012

எழுத்து ஒரு தவம்



   
. எழுத்து ஒரு வலிமையான ஆயுதம். அதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் .கூரிய வாளிற்காவது இரண்டு பக்க முனைகளில் தான் ஆபத்து ..
ஆனால் எழுதுகின்ற எழுத்துக்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரும்...வரலாம். 
       நகைச்சுவையாக பேசுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம் ..நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று யார் மனத்தையும் காயப் படுத்தி விடக் கூடாது.அதற்கு அந்த மாதிரி பேசுகிறவனுக்கு எந்த வித மான தார்மீக
உரிமையும் கிடையாது . .அது போலத் தான் எழுதுவதும். இது ஒரு வேள்வி .
இதனால் பயன் தான் கிடைக்க வேண்டும் எல்லாருக்கும்.
      எழுதுவதில் ஒரு  சிரத்தை இருக்க வேண்டும் எழுதுகிறவனிடத்தில்!
இங்கு நாம் எழுதுவது யாராவது ஒருவருக்காவது  பலன் அளிக்க வேண்டும் ..ஆயிரத்தில் ஒருவராவது நம் எழுத்தில் பலனடைந்தால் அந்த எழுத்தாளனுக்கு அதை விட வேறு மகிழ்ச்சி கிடையாது . உதாரணமாக,
குடியினால், தன் குடும்பத்தையே வீதிக்குக் கொண்டு வந்த ஒருவன் ஒரு எழுத்தாளனிடம் " சார் உங்க எழுத்து என் கண்ணத் திறந்து விட்டது . நானும் பாழும் கிணற்றிலிருந்து மீண்டு விட்டேன் ..இனி என் மனைவி, மக்கள் தான் என் உலகம் ..இனி ஒழுங்காய் இருப்பேன் சார் " என்று சொன்னால் அந்த எழுத்தாளனுக்கு ஞான பீட விருதினை விட ..ஒரு சாகித்ய அகாடமி விருதை விட ..இதுவன்றோ ஒரு பெரிய விருதாக இருக்க  முடியும்!
     எல்லா ப்ரோபஷனல்களையும் விட எழுத்தை தொழிலாக வைத்துக் கொள் பவனுக்கு  ETHICS அதிகமாக இருந்தால் தான் அந்த எழுத்தாளன் வாழ்கின்ற சமுதாயம் ஒரு மேன்பட்ட ..ஒரு நாகரீகமான சமுதாயமாக இருக்க முடியும்
என்பதை நம்புகிறவன் நான் ..
    கடைசியாக  ஒரு வார்த்தை ..
    உங்கள் எழுத்தினை உங்கள் மனைவி மற்றும் உங்கள் பெண்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும் ..
உங்கள் எழுத்தில் மெருகு தானாக் கூடி விடும் !
    நீங்களும் உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு சமுதாய சிற்பி ஆகி விடுவீர்கள் !!
     வாஸ்தவமாகவே !!!    
              

Monday, October 15, 2012

ஹல்லோ..................

அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

நான் 15.10.2012 முதல் ஒரு வாரத்திற்கு வலைச்சரம் மின் இதழிற்கு ஆசிரியர்
பொறுப்பு ஏற்றுக் கொண்டதால், நம் பிலாக்கிற்கு ஒரு வாரம் விடுப்பு கொடுக்கப் பட்டுள்ளது..
      இந்த வாரம் அனைவரும் என் தொல்லையிலிருந்து விடுபட்டு
சந்தோஷமாய் இருக்கவும்..
       மறுபடியும் கூறுகிறேன்...
        உங்களின்
       இந்த சந்தோஷம்
       ஒ
       ரு
     வா
         ர
        ம்
        தா..........................................................................................................................ன்!
     

Saturday, October 13, 2012

வெண்பா அல்ல மின் பா!



’இருட்டில் வருவது யாரென’க் கேட்டேன்,
’திருட்டுப் பயல்’ எனத் திமிராய் சொன்னான்.
’திரட்டுப் பால் தினம் ஏதெ’னக் கேட்டேன்,
’திரிந்து போன பாலிது’ என்றாள்.
ஓரெட்டு மணித் துளி அரசு அறிவிப்பு..
ஈரெட்டு நேரமும் இருட்டிலே வாழ்க்கை!
’மாண்டவன் திடலில் காத்திருக்கும் கோரம்..
ஆண்டவனே ஏனிந்த அவலம்?’ என்றேன்
ஆண்டவன் சற்று அருகில் வரவே,
ஆயிரம் மெகா வாட் பவர் தனைக் கேட்டேன்.
’ஐம்பது பர்செண்ட் பவர் கட் எனக்கும்!’
அர்த்த நாரியான ஈஸ்வரன் சொன்னான்!!

Wednesday, October 10, 2012

கோவில் இல்லா ஊரில்.....

ரிடையர்ட்மெண்ட் பணம் லம்ப்பாக வந்திருந்தது ராமாமிர்தத்திற்கு...
அவரின் கனவு நனவாகும் நாள் இது..
ரொம்ப நாட்களாகவே அவருக்கு ஒரு  ஆசை .....பிள்ளைகள் வளர்ப்பு..படிப்பு..என்று அவருடைய முப்பது வருட சர்வீஸும் அதில்  போய் விட, இப்போது தான் அந்த ஆசை மறுபடியும் துளிர் விட ஆரம்பித்தது..
பிள்ளைகள் எல்லாம் தலையெடுத்து நல்ல வேலைகளுக்குப் போய் விட்டார்கள்..’உன் பணத்தை நீயே வைத்துக் கொள் ’என்று பச்சைக் கொடியும் காட்டி விட,தன் மனைவி சிவகாமியிடம் தன் ஆசையை தயங்கி..தயங்கித் தெரிவித்தார்.
    அவளுக்கும் தன்னைப் போல அப்படி ஒரு  ஆசை இருந்திருக்கிறது என்பது இத்தனை வருட தாம்பத்யத்தில் இப்போது தான் தெரிந்து கொண்டது அவருள்
உறங்கிக் கிடந்த மனசாட்சியை  உறுத்த, அவள் ஆசைப் படியே செயல் பட தீர்மானித்தார்.
    மொத்தம் முப்பதைந்து லட்சம் வந்திருக்கிறது.இதைத் தவிர மாசம் சுளையாக இருபதாயிரம் ரூபாய் பென்ஷன் !
     இரண்டு பேர்களுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும்? மருத்துவ வசதி வேறு அவர் வேலை செய்த ஆஃபீசிலேயே கொடுத்து விட்டார்கள்..அதனால்
தைர்யமாய் முடிவெடுக்கலாம் என்று மனத்துள் எக்கச் சக்கமாய் உற்சாகம் கரை புரள ......
   விளம்பரங்களை பார்த்தார்...புரோக்கர்களைப் பார்த்தார்....
சிவகாமி பிடிவாதமாய் சொல்லி விட்டாள்..அவளுக்கு டபுள் பெட் ரூம்ஃப்ளாட் தான் வேண்டுமாம்..அதுவும் கோவிலுக்கு பக்கத்தில்!
   இந்த கண்டிஷன்கள் தான் பயங்கரமாய் இடித்தது..
   டபுள் பெட்ரூம் பிளாட் அதுவும் கோவிலுக்கு அருகில் என்பது எட்டாக் கனியாக இருந்தது...
   எல்லாம் சேர்த்து ஐம்பதுக்கு மேல் ஆகிறது...
   சிவகாமியிடம் சொல்லிப் பார்த்தார்...
   “இதோ பாரும்மா.. நல்லா விசாரிச்சுட்டேன்...ஐம்பத்தைந்துக்கு  ஒரு பைசா கூட யாரும் குறைக்க மாட்டேங்கிறாங்க.. நம்ம கிட்ட எல்லாம் சேர்த்தாலும் ....  முப்பது...முப்பத்தைந்து ... தானே இருக்கு..
என்ன பண்றது?”
   “அதுக்கும் ஒரு  வழி இருக்குங்க.. நம்ம பக்கத்து வீட்டு பார்வதி மாமியோட வீட்டுக் காரர் பேங்க்ல தானே இருக்கார்..”
   “ ஆமா..அதுக்கென்ன?”
   “ அவர் கடன் தரேன்னார்”
   “பென்ஷனருக்கு யாரும்மா கடன் தருவாங்க..’
   “அந்த கவலை உங்களுக்கு எதுக்கு?”
   “அதை எப்படி அடைக்கிறது?”
   “ இருபது லட்சம் பத்து வருட கடனாத் தராங்க..மாசாமாசம் இருபதாயிரம் கட்டினா போறுமாம்..’
   “ அப்ப புவ்வாவுக்கு..?”
   “ அதான் கோவில் இருக்கே..காஃபி,டிஃபன், சாப்பாடுன்னு மூணு வேளையும் அங்கேயே சாப்பிடலாமாம்...ப்ளாட்ல இருக்கிறவங்க எல்லாரும் அப்படித் தான் பண்றாங்களாம்..பிளாட் விக்கிறவங்களும் சாப்பாட்டு செலவு இவங்களுக்கு மிச்சப் படறதுன்னு தான் இந்த விலை ஏத்திட்டாங்களாம் இங்க  இருக்கிற பிளாட்டுங்களுக்கு!”
         அந்த கோவிலில் உள்ள யானை தலை ஆட்டுவதைப் போல் சரியென்று    தலை ஆட்டினார் ராமாமிர்தம்!
           வேறு வழி ?..        .
      

Saturday, September 29, 2012

என் விகடனில் நான் !



  ஒரு வாரம் முன்பு .......
  ஆபிசிலிருந்து வீடு வந்து கொண்டிருந்த போது ....
  "சார்....ராம மூர்த்தி  ..."
   எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம் ...என் செல்லில் அடிக்கடி WRONG CALL வரும் ..ஒரு நாளைக்கு குறைஞ்சது நாலு தடவையாவது WRONG NUMBER     சொல்லாம நான் தூங்கினது கிடையாது.முன்ன பின்ன தெரியாத
நம்பரிலிருந்து எனக்கு ஒரு கால் ....
   ஒருக்கால் வேற ஏதாவது  ராங் ராமமூர்த்தியோ ?
  " ஆமாம் ..நீங்க ?"
  " சார் ...நான் ஆனந்த விகடனிலிருந்து பேசுகிறேன் ..நீங்க என் விகடனுக்கு
அப்ளை பண்ணி இருக்கீங்க .. அதுல உங்க 'பிலாக்'கை  போடப் போறோம் ..
உங்க போட்டோவை என்னோட  email ID க்கு நாளைக்குள்ள அனுப்புங்க சார் "
    ஒரு நொடி ஆகாயத்தில் பறந்தேன் நான் ...
    நானா.... என் பிளாக் ... என் விகடனிலா .... 
   இப்போது கொஞ்ச நாட்களாக முற்றிலும் புதிதாய் வந்த விகடனில் அந்த
பழைய என் விகடன் காணாமல் போக .. அதை நெட்டில் தான் பார்க்க முடியும் என்பதை நண்பன் சொல்ல...
   அன்று சாயந்திரமே எனக்கு விகடனிலிருந்து போன் !
   என்ன ஒரு ஆச்சர்யம் ?
   ஒரு வாரத்தில் பப்ளிஷ் ஆகும் என்று மனதிலிருந்து ஒரு குரல் !
  அந்த ஏழு நாட்கள் .........
   பத்து மாத கர்ப்பிணி போல் பதைப்புடன் காத்திருந்தேன்
   இதோ ..என் பிலாக் பற்றிய அறிமுகம் ..........பாரம்பர்யமான
  ஆனந்த விகடனிலிருந்து.....
  அந்த லிங்க் இதோ .............
   http://en.vikatan.com/article.php?aid=24367&sid=686&mid=33
   ......
   விகடனுக்கு நன்றி !
   என் விகடன் 
  இனி
  'என்' விகடன்  !!!
   .
   

Wednesday, September 19, 2012

விளக்குகள் அணையும் போது....(மீள் பதிவு)

கைகளும், கால்களும் கட்டப் பட்ட 
நிலையில் தனது அகன்ற மார்புடன் படுத்துக்
கிடந்தார், உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் அவர்கள். அறுபது வருடங்கள் 
அவருக்காக உழைத்த அந்த உடம்பு ஓய்வு
எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. இராமநாத
புரம் மாவட்ட மண் போல, கடினமான அவருடைய முகம் இறுகிப் போய்க் கிடந்தது. வாய் ஓரங்களில், ஈக்கள் குளிர்
கால பார்லிமெண்ட் கூட்டத்தொடரை 
நடத்திக் கொண்டிருந்தன. நான்கு நாட்கள்
வயதான தாடி,அந்த முகத்திற்கு கம்பீரத்தையே கொடுத்தது. 
' இதோ பாருய்யா, பேப்பர்காரன் உனக்கு 
மருவாதி கொடுத்துப் போட்டிருக்கான்" என்று செல்லி அவர் மீது தினசரியை வீசினாள்.அதில் " குத்து சண்டை வீரர் ஷாஹுல் ஹமீது மாரடைப்பினால் காலமானார்.அன்னாருக்கு வயது அறுபத்து மூன்று" என்ற விளம்பரம் வந்திருந்தது. இன்னமும், அவர் மீது விசுவாசமுள்ள, யாராவது சிஷ்யப் பிள்ளை, பத்திரிகைக்கு
அனுப்பி இருப்பான்.இருக்கும் வரை கவனிக்காமல், இறந்த பிறகு கூப்பாடு போடும் உலகம் தானே இது!
'மௌத்தாகி' தன்னுடைய கடைசி காரியத்துக்குக் கூட ஏழை செல்லியை எதிர்பார்க்கும் நிலயில் இருந்த போதும்,
அந்த முகம் தெளிவாகவே இருந்தது. அவருக்குத் தெரியும், செல்லி எந்த குறையும் 
வைக்க மாட்டாளென்று! 
ராத்திரி முழுக்க செல்லி, அந்த கட்டில் 
காலையேப் பிடித்துக் கொண்டு, கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.எந்த வித பயமும், அருவருப்பும் இல்லாமல் !
'உம்... காலம்' என்று அலுப்புடன் எழுந்தவள்,
தன்னுடைய குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தாள். வானம் பொல பொலவென்று விடிந்திருந்தது.
அவர் வந்து எத்தனை நாட்கள் இருக்கும்? கணக்குப் போட்டுப் பார்த்தாள்,செல்லி. நேற்றைய தினத்தை சேர்த்து, நாற்பது நாட்கள் ஆகியிருந்தது. செல்லிக்கு அவரை
ஆரம்பத்தில் அடையாளம் தெரியவில்லை. மேட்டுத்தெருவில், கட்டிட வேலை முடிந்து, திரும்பிக் கொண்டிருந்தாள் அவள். கையில் ஒரு கிழிந்துப் போன சூட்கேஸுடன் அவர் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.
என்னமோ, அவரைப் பார்த்தவுடனே,கேட்கவேண்டும் போலத் 
தோன்றியது, அவளுக்கு. 
'எங்கே போகணும், பெரீவரே' என்று அவள் கேட்டவுடன்,'எங்கேன்னு தெரியலே,
தாயி' என்று பரிதாபமாக அவர் பதில் சொன்னதை நினைத்துக் கொண்டாள்.
தினமும் இரண்டு ரூபாய்க்கு குறைவாகவே
சம்பாதிக்கும் சித்தாள் செல்லி, அவருடைய
பதிலைக் கேட்டதும், தன்னுடைய வீட்டிலேயே அவருக்கு தங்க இடம் கொடுத்தாள். அப்போது கூட அவளுக்குத் 
தெரியவில்லை.
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து, அவளுக்கு லேசாக சந்தேகம் வர, அவரைக்
கேட்டாள்.' ஆமா தாயி, நான் தான் அது' என்று சொல்லும்போதே, அவருக்கு கையும், காலும் நடுங்கின. 'எப்படி இருந்த உடம்பு,
இப்படி ஆயிடுச்சேய்யா' என்று சொல்லி கண் கலங்கும் போதும், அவருடைய வரண்ட கண்களிலிருந்து, பொட்டுக் கூடக் கண்ணீர் வராது.
" உம்...நுப்பது வருஷம் வாள்ந்தவங்களும் இல்லே. நுப்பது வருஷம் தாள்ந்தவங்களும் இல்லேன்னு தெரியாமலா சொன்னாங்க..."
என்று குடிசைக்குள்ளே, திரும்பியவள், அந்த சிம்னி விளக்கைப் பற்ற வைத்தாள்.'குபுக்'கென்று எரிந்த விளக்கு, சிறிது நேரத்திலேயே, உஸ்தாது போலவே உயிரை விட்டது. 'அடச்சீ...' என்று கெட்ட
வார்த்தை சொல்லி விளக்கைத் திட்டியவள்,
அவருக்குக் கேட்டிருக்குமோ என்று பயந்து
கொண்டு கட்டிலைப் பார்த்தாள்.'நீ தான் செத்துப் பூட்டியே, உனக்கு எப்படி கேக்கும். நா ஒரு மடச்சி' என்று தனக்குள், அலுத்துக் கொண்டாள். 'இந்த நாப்பது நாளா, ஏதாவது,வாய் தவறிசொல்லிவிட்டு, கட்டிலப் பார்க்கறது பளக்கமா இல்லே போயிடுச்சு'
என்றாள். 
'யாருக்காவது சொல்லி அனுப்பனுமா' என்று யோசித்துப் பார்த்தாள், செல்லி. அவருக்கு நெருங்கிய சொந்தமென்று யாரும் கிடையாது என்று அவரே சொல்லியிருக்கிறார். 'ஏன்யா, உனக்கு புள்ள குட்டி எதாவது இருக்கா' என்று அவள் கேட்டதற்கு, 'பொண்டாட்டியே இல்ல தாயி''
என்று தன் பொக்கை வாய் தெரியச் சிரித்திரிக்கிறார், அவர். 
'பேச்சிமுத்து பயகிட்ட சொல்லியாகணும்' என்று நினத்தவளுக்கு உடனே 'பேச்சிமுத்து
என்ன செய்வான் என்பதுமில்லை தெரிஞ்சு 
கிடக்கு' என்று இழுத்தாள்.ரெண்டு ரூபா காசைக் கொடுத்து,'ஏதாவது பண்ணிக்கோ, ஆயா, ஆள விடு' என்று கூசாமசொல்லிடுவானே அந்த பாவிப் பய.
உஸ்தாது வந்த புதிதில், பேச்சிமுத்துக்கு அவரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று ஆவலோடு அவன் குடிசைக்குள் ஓடினாள் செல்லி. 'தோ பாரு நீ ஏதாவது வெவரம் கெட்டத்தனமா அந்தாள் கிட்ட சொல்லிடாதே' என்று அவளுடைய உற்சாகத்துக்கு 'ஃபுல் ஸ்டாப்' வைத்தவன்,
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து அவரைப் பார்க்க வந்தான். வந்தவன் சாதரணமாக வரவில்லை. ஏகக் கூச்சலுடன் வந்தான்.'பாயி, எனக்கு நல்ல பொளப்பை குடுத்தே. உனக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியாத நிலையில் இருக்கேனேன்னு ஏக அழுகை அழுதான். அத்தனையும் நடிப்பு. சொந்தமாக சைக்கிள் ரிக் ஷா. பொண்டாட்டியத் தவிர இரண்டு கூத்தியாரு வேற. அவனாலயா முடியாது...விசுவாசம் கெட்ட பய !
செல்லி, பேச்சிமுத்து போன்றவர்கள் தயவை நாடிக் கொண்டிருக்கும் உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்தவர் தான். சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரம் மேலே இருப்பவரை கீழே தள்ளி விட்டது! 
ஒரு இருபது,இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு குத்துச்சண்டை 
உலகில் கொடி கட்டிப் பறந்தவர் இந்த உஸ்தாத். உடல் பயிற்சி சாலை ஒன்று வைத்திருந்தார். இவரிடம் குஸ்தி பயின்ற பையன்கள் ஒருவரும் சோடைப் போகவில்லை. 
போட்டி, பந்தயம் என்று கலந்து கொண்டு,
எல்லாரையும் வெற்றி வாகைசூடி கொண்டு வருவார் உஸ்தாத். கலந்து கொண்டால், வெற்றி இவருக்குத் தான் என்ற நிலை இருந்தது. அந்த காலத்தில் பரிசுப் பணத்தை
ஏகமாகக் குவித்த அவர், அத்தனையும் தனக்காகச் செலவழித்து விடவில்லை. எத்தனையோ பிள்ளைகளுக்கு, ஸ்கூல் பீஸ் கட்டியிருக்கிறார். எத்தனையோ ஏழைகளுக் க்குச் சாப்பாடு போட்டிருக்கிறார். வெறும் சோற்றாளாகத் திரிந்து கொண்டிருந்த இந்த பேச்சிமுத்துவை, அதட்டி,உருட்டிப் பணிய
வைத்து, சைக்கிள் ரிக் ஷா வாங்கிக் கொடுத்து, அவன் வீட்டில் விளக்கெரியச் செய்திருக்கிறார்.
' நாம சாப்பிடற சாப்பாடு, நம்ம சாப்பாடு இல்ல தாயி, குர்பானி கொடுக்கிறதைத் தான்
பிறகால, நாமே சாப்பிடறோம்'னு வாய் ஓயாம சொல்லுவியே அந்த சொல்லு, உன் வாழ்க்கையிலே பொய்யாப் போச்சேய்யா என்று கட்டில் காலில் ' மொடேர் மொடேர்'
என்று அடித்துக் கொண்டாள், செல்லி. உஸ்தாதிடம் கை நீட்டிய ஒருவரும் அவருக்குக் கை கொடுக்கவில்லையே. வாஸ்தவம் தானே! 
இந்த நாற்பது நாள் பழக்கத்தில செல்லியும்
உஸ்தாதும் ரொம்பவும் அன்னியோன்யமாகப் போய்விட்டார்கள்.
இருவருக்கும் மனுஷ ஆதரவு தேவை. ஆண்டவன் சேர்த்து வைத்தான்.
உஸ்தாது சொல்லுவார்,' நாம ஒதவி செஞ்சவங்ககிட்ட, ஒதவியை எதிர்பார்க்கக்
கூடாது. அந்த மாதிரி பிறகால உதவும்னு நினைச்சுக்கிட்டே உதவி எதுக்குச் செய்யணும்? அதுக்கு தென்ன மரத்த வளர்க்கலாமே'ன்னு.
'இப்பக் கூடப் பாரு தாயி, உஸ்தாது இந்த
மாதிரி ஒரு குடிசையில கஷ்டப் படறான்னு பேப்பரில ஒரு வார்த்தை போட்டாப் போறும். அத்தனை பயலுவளும் கதறிண்டு வந்துடுவானுங்க. பேச்சி முத்துவைப் பாத்தியா, தன்னால உதவ முடியல்லேன்னு எப்படி அழுதான்'னு அவர் சொல்ல கேட்கும் போது, செல்லி மனதுக்குள், குமைந்து கொண்டிருப்பாள்.
'அதெல்லாம் அந்த காலம்யா. இப்பல்லாம் 
ஏற வைச்ச ஏணியை எட்டி உதைக்கிற காலத்தில இல்ல நாம பொழப்பை நடத்திக் கிட்டு இருக்கோம்....'
உஸ்தாது ஒவ்வொருத்தர்போல பழைய காலத்தை நினைத்து குமைந்து கொண்டிருக்க 
மாட்டார். போன பொருளைப் பற்றி அவர் துளிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் புகழ் என்னும் போதைக்கு அவரும் அடிமை ஆனார்.
'இதோ பாரு தாயி, அந்த சூட்கேசை எடு, தொள்ளாயிரத்து அறுபதில தினமணிலே என் போட்டோவைப் போட்டிருக்கான் பாத்தியா
அறுபத்தி அஞ்சிலே தந்தில, என்னைப் பத்தி எழுதியிருக்கான் என்று அந்த 'பேப்பர் கட்டிங்'கை யெல்லாம் எடுத்து செல்லிக்கு காட்டுவார். செல்லியும் ஒவ்வொரு எழுத்தாக, எழுத்துக் கூட்டி அவருடைய பெருமைகளைப் படிப்பாள். 
' அந்த காலத்துல நான் பெரிய ஆளு. நம்ம சந்தில, நான் வந்தேன்னா..ஒரு பயலும் பேச மாட்டானுங்க. அவ்வளவு மரியாதி. நான் என்ன சொல்லப் போறேன்னுட்டு அத்தனை
ஜனங்களும், காத்துக் கிட்டு இருக்கும் தெரியுமா' என்று அவர் ஆரம்பித்தால், செல்லி திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பாள். செல்லிக்கு உஸ்தாது சீரும், சிறப்புமாக வாழ்ந்த விதம் தெரியாமலா இருக்கும். இருந்தாலும், அவர் சொல்லி, அதைக் கேட்பதில் ஒரு ஆனந்தம்.
நேற்று மதியத்திலிருந்து சாப்பிடவில்லை. ஆதலால் ஏகமாக பசி எடுத்தது செல்லிக்கு.இரண்டு பொறைக்கும், ஒரு டீ க்கும் அவளிடம் காசு இருக்கிறது.இருந்தாலும், 'அவரை' வைத்துக் கொண்டு சாப்பிடத் தோன்றவில்லை. வயிற்றை புரட்டுகிறார்போன்ற பசியை அடித்துத் துரத்தியது துக்கம்.
'ஏதாவது சில்லறை தேறுமா' என்று உஸ்தாதைப் புரட்டினாள் செல்லி. குற்ற உணர்வு நெஞ்சை அமுக்க,' எல்லாம் உன் காரியத்துக்குத் தான்யா' என்று உதட்டைப்
பற்களால் கடித்துக் கொண்டு, புரட்டினாள்.தலை மாட்டிலிருந்து நாலு ஐந்து ரூபாய் நோட்டுகள் விழுந்தன.பேச்சிமுத்துக்கு விவரத்தைத் தெரிவிக்க ஓடினாள். அவனுடைய இரண்டு ரூபாயும் அப்போது தேவையாக இருந்தது. 

நன்றி : 11.5.1986 தினமணிகதிர்
0likes