Saturday, October 29, 2011

மழை....


இப்பொழுதெல்லாம்,
எந்த குழந்தையும்,
RAIN RAIN GO AWAY
COME AGAIN ANOTHER DAY,
LITTLE TOMMY WANTS TO PLAY,
RAIN RAIN GO AWAY...
என்று பாடுவதில்லை,
மழையும் எதிர்ப்பு
இல்லாத நிலையில்,
வஞ்சனையின்றி,
பெய்கிறது!
*
யார் காட்டிலோ மழை!
*
கத்திக் கப்பல் செய்யக்
கற்றுக் கொண்ட நாளில்,
வானம் பார்த்தது பூமி!
இப்போது ஊரே,
வெள்ளக் காடு - ஆனால்,
கப்பல் செய்வது
மட்டும்,
மறந்து விட்டது!
*
மழை நீரும்,
சாக்கடையும்,
ஒன்றாகக் கலந்தன,
‘சமத்துவபுர’த்தில்!
*

Tuesday, October 25, 2011

தீபாவளி அகராதி!


அழைப்பு: தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போகத் திட்டம் போட்டிருக்கும் மாப்பிள்ளைகள் இதை எதிர்பார்த்துத் தபால் காரனைத் தேடி தினம் வேட்டையாடுவது சகஜம்.
அமாவாசை: இருட்டுக்குப் பெயர் போனது.இது தீபாவளியைச் சூழ்ந்து கொள்வதால் தான் நாம் வாணங்கள்,மத்தாப்புக்கள் எல்லாவற்றையும் கொளுத்தி அதை விரட்டுகிறோம்.
ஆடம்பரம்: மாப்பிள்ளைகள் மாமனார்,மாமியாரைப் பம்பரம் மாதிரி சுற்றி வைக்க உபயோகிக்கும் தந்திரம்.
ஆகாச வாணம்: ஆகாயத்துக்கு அஞ்சி அடுப்பங்கரையிலேயே தன் கை வரிசையைக் காட்டும் ஒரு வித வாணம்.
ஊசிவெடி: சமயம் தெரியாமல் வந்து எட்டிப் பார்க்கும் மச்சினனை ‘நைசாக’ வெளியே அனுப்ப மாப்பிள்ளை இதில் ஒரு கட்டை உதிர்த்து அவன் கையில் கொடுத்துப் பார்க்கலாம்.
எண்ணெய்: தீபாவளியன்று எல்லார் முகத்திலும் வழியும் ஒரு திரவப் பதார்த்தம்.
ஏமாற்றம்: எவ்வளவு கட்டிக் கொண்டு வந்தாலும்,மாப்பிள்ளையின் தாயாருக்கு ஏற்படும் ஒரு உணர்ச்சி.
கங்காஸ்னானம்: தீபாவளி அன்று எல்லாராலும் சொல்லப் படும் ஒரு பொய் வார்த்தை.
காப்பி: ஒரு வகை ‘டானிக்’ தலைதீபாவளிக்குப் போகும் மாப்பிள்ளைக்கு அவர் மனைவியைத் தவிர வேறு யாரும் கொடுக்கக் கூடாது.
சம்பந்தி: பெண்வீட்டாருக்கும்,பிள்ளை வீட்டாருக்கும் பெயர் விஷயத்தில் இருக்கும் ஒரு மகத்தான ஒற்றுமை.
தலைதீபாவளி: இது வந்து விட்டால்,பெண் வீட்டாரின் தலைகள் பிள்ளை வீட்டில் கிடந்து உருளத் தான் வேண்டி இருக்கும்.
தீபாவளி: காசியிலிருக்கும் கங்கையை ஒரு பைசா செலவில்லாமல் நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சுபதினம்.
தூற்றல் : 1. தீபாவளிக் குழப்பம்.
2. பட்டாசின் பரம விரோதி.
பட்சணங்கள் : மங்கள ஸ்னானம் முடிந்ததும்,சாப்பிடப் படும் லேகியத்திற்கு சரியான வேலை கொடுக்க இவை அவசியமாகின்றன.
புஸ்வாணம் : மாப்பிள்ளையின் கோபம்!
மச்சினன்: மாப்பிள்ளைகளின் தலைதீபாவளி நாடகத்தின் சூத்ரதாரி.
மாப்பிள்ளை: இந்த பெயரைச் சொல்லி ஒரு துரும்பை கீழே போட்டாலும் அது துள்ளிக் குதிக்கும்.
மாமனார்: சதா மாப்பிளை எதிரில் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கும் ஒரு ஆத்மா.இவரை மாப்பிள்ளைகளின் கஜானா என்றும் சொல்லலாம்.
மோதிரம்: தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்குப் போய் வந்ததற்கு அடையாளமாய்ப் போடப் படும் ஒரு முத்திரை.
லேகியம்: பட்சணத்தை ஒரு ‘பார்வை’ பார்க்கவும்.
வில் வண்டி: மாப்பிள்ளையை சட்புட்டென்று ஊருக்கு அனுப்ப மாமனார் அடிக்கடி வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு சாதனம்.
(பின்குறிப்பு: இதை எழுதி கிட்டத் தட்ட அறுபத்தியேழு வருடங்கள் ஆகி விட்டன. இன்னமும் அப்படியே அச்சு, அச்சாகப் பொருந்துகிறது பாருங்கள்.
எழுதியவர் : “கோபு”
பிரசுரம் : 1944 ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலர்.
தலை தீபாவளிக்கு பம்பரம் போல் ஆட்டி வைக்கும் மாப்பிள்ளை வீட்டார்களும், நொந்து நூடில்ஸாகிப் போன பெண் வீட்டுக் காரர்களும் அடியேனை மன்னிப்பார்களாக...)

Friday, October 21, 2011

செய்வினையும்,செயப்பாட்டு வினையும்...

எலுமிச்சை வியாபாரி ஏழுமலைக்கு கோபம் வந்தது.
”...எவனெவனோ, எதுஎதுவோ வாங்கறானுவ...எவனும் எளுமிச்சம் பளத்தை ஏறெடுத்தும் பாக்க மாட்டேங்கிறானே...”
எல்லாவற்றுக்கும்
எல்லார் மீதும்..எரிச்சலாய் வந்தது..
திடீரென ஒரு ஐடியா!
செயலாக்க, சைக்கிளை ஓங்கி மிதித்தார்.
”...என்னங்க, கேள்வி பட்டீயளா, சேதியை.. நம்ம செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணில
ரத்தம் வருதாம்..”
செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணில ரத்தம்!!!
காட்டுத் தீயாய் செய்தி பரவியது..
“ என்ன குத்தம் செஞ்சோமோ?”
” நா அப்பவே சொன்னேன்..தெய்வத்துக்கே அடுக்கல..”
“ எதனாலயாம்?”
“ கலி முத்திப் போச்சு”
ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.
“ வூட்ல, தலைச்சன் புள்ள இருந்தா, அவனுக்கு ஆகாதாமே இது?”
“ அப்படியா?”
“ என்ன செய்யறது...”
“ ஒண்ணும் கவலைப் பட வேண்டாம் மாமா..வெள்ளிக் கிழமை துர்க்கைக்கு ராகு கால அர்ச்சனை செய்து, ஒரு எலுமிச்சம் பள மாலை ஒண்ணு சாத்துங்க..வந்த துன்பம்..வர துன்பமெல்லாம்
ஓடியே போயிடும்”
எலுமிச்சம்பழ வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போக, ஏழுமலைக்கு ஏக குஷி!
சீட்டியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
“என்னாங்க, உங்களத் தானே?”
“ சொல்லு கண்ணு?”
“ கேள்விபட்டீயளா, நம்ம செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணுல ரத்தம் வருதாம்..அதனால, தலைச்சன் புள்ளைக்கு ஆகாதாமில்ல.. நீங்க தலைச்சன் புள்ள தானே..பரிகாரம் செஞ்சேன்..”
“ என்ன புள்ள பரிகாரம்?” ஏதும் தெரியாதது போல் கேட்டார், ஏழுமலை..
” வூட்டு சொந்தக்கார பொண்டு புள்ள சனஙகளுக்கு, சேப்பு புடவையும், சேப்பு லவிக்கையும் வாங்கித் தரணுமாமில்ல.. நம்ம குடும்பத்துல தான் உங்க சொந்தம்..எங்க வூட்டு சொந்தம்னு ஒரு பதினைந்து டிக்கட் இருக்கே..அத்தனைக்கும் புடவை வாங்கிட்டேன்..”
ஹா..........ஹா.............
எலுமிச்சம் பழம் ஒன்று தடுக்கி விடவே, எக்கச் சக்கமாய் விழுந்த ஏழுமலை, அதன் பிறகு எழுந்திருக்கவேயில்லை!

Monday, October 17, 2011

மறுபடியும்.......


இன்று ஒரு தேர்தல்!
நாம் நம் உள்ளாட்சி
கவுன்சிலர்களையும்,
மேயர்களையும்..
தேர்ந்தெடுக்கப் போகும்,
நன்னாள்...
இவ்வளவு சதவீதம்
வாக்குப் பதிவு..
வன்முறை இல்லை..
கள்ள ஓட் இல்லை..
சகஜ நிலை..
என்று,
ஊடகங்கள் மார் தட்ட,
நம் கையில் ஊற்றிய,
மை நம் கண்ணை
மறைப்பது தெரியாமலேயே,
மறுபடியும்...
நாம்
ஏமாறப் போகிறோம்!?!?!?

Thursday, October 13, 2011

ரேஷன் கடை துரைக்கண்ணு!!


இப்ப எல்லாம் நம்ம துரைக்கண்ணு அனாவசியமான ஏன்..அவசியமான வம்பு தும்புக்கும் போறதுல்ல..தான் உண்டு..தம் வேலை உண்டு என்று கம்முனு இருக்கிறான்.
“ஏல... துரைக்கண்ணு என்னம்மா கண்ணு ஆச்சு?” என்று மேலத்தெரு சம்முகம் கேட்கும் போதும் ஒரு நமட்டு சிரிப்பு தான் அவனிடமிருந்து பதிலாக வரும்..
முன்னல்லாம் இவன் பேரே அடாவடி துரைக்கண்ணு தான்..
பய புள்ளக்கி கல்யாணம் ஆச்சு..அடாவடித் தனம் அடங்கிப் போய் ஒளுங்கா வேலைக்குப் போக ஆரம்பித்தான்...
ஆனா இப்ப ரொம்பல்ல அடங்கி போயிட்டான்..
ரேஷன் கடையில ஆளாளுக்குப் புலம்பும் போது சிரித்துக் கொண்டான், துரைக்கண்ணு.
அவன் அவஸ்தை அவனுக்கல்லவா தெரியும்?
இப்பத் தான் கம்சலை உண்டாயிருக்கா...இத்தனை நா களிச்சு..
வம்சம் தளைக்க வேணாமா?
இந்த சமயத்தில போயி எவன் வாயிலும் விள வேண்டாமே!
..ஏற்கனவே அந்த புதுக் கவித வேற அடிக்கடி வந்து பயமுறுத்துது!
அதனாலேயே, இப்பல்லாம் ரொம்ப ஜாக்ரதையாவே..ரேஷன் சாமானெல்லாம் கரீட்டா எடை போட்டு தரான், துரைக்கண்ணு!
நாள் நெருங்க..நெருங்க..ரொம்ப டென்ஷனாயிட்டான்...
மூலத் தெரு புள்ளாருக்கு, முழுசா மூணு தோப்புக்கரணம் போடறான், ரேஷன் கடைக்கு போறதுக்கு முன்னால...
யார் சிரிச்சாலும் கவலைப் படாமல்!
புள்ள நல்லா பொறக்கணுமே...
புள்ள நல்லா பொறக்கணுமே...
எவனெவன் வயிற்றெறிச்சலைக் கொட்டி கொண்டானோ..அத்தனை பயலுவலும் மனசுக்குள்ளாற வந்து மிரட்டித் தொலையாறுங்க..துரைக்கண்ணுவ..
அந்த நாளும் வந்தது!
”... இங்க யாருங்க துரைக்கண்ணு?”
“ நாந்தானுங்க..”
“ கங்கிராஜுலேஷன்ஸ்...உங்களுக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்கு..”
“ பார்க்கலாமுங்களா...சிஸ்டர்?”- தவிப்புடன் கேட்டான், துரைக்கண்ணு...
” சாரிங்க..குழந்தையை பெட்டியில வைச்சிருக்கு..இப்ப பார்க்க முடியாதுங்க?”
“ஏனுங்க?”
“ ஓவர் வெயிட்!”

Tuesday, October 4, 2011

நவராத்திரி கொலு !!!!!!!



நவராத்திரி கொலு !!!!!!!
எல்லா பொம்மைகளையும் வை(த்)து விட்டு, சற்று நிமிர்ந்தேன்!
பெண்டு வாங்கி விட்டது, வேலை!
ஒரு கற்பனை..
எல்லா பொம்மைகளுக்கும் உயிர் இருந்தால் எப்படி இருக்கும்?
முதல்ல நம்ம உயிர் போகாது!
“...தா ஃபெரெண்ட்ஸ்..ஜம்னு வந்து உட்கார்ந்துக்கங்க...” என்று சொன்னால் போதும்,
பாதிக்கு மேல் நம் வேலை மிச்சம்!
அதுங்களாக வந்து அவரவர் இடத்தில் அமர்ந்தால், எவ்வளவு செளகர்யம்!
அது அப்படி இல்லாமல்...
பீக் அவரில் நாம் பஸ் பிடிக்க ப்ரயத்தனப்படுவது போல, பொம்மைகளும் சீட் பிடிக்க
ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?
செட்டியார், பிள்ளையார் சுண்டெலியை எட்டி ஒரு உதை உதைக்க..
பிள்ளையார் கையில் கிடைத்ததை எடுத்து செட்டியார் மேல் போட...
கடையில் உள்ள துவரம்பருப்பு, கடலை பருப்புகளை
ஆடு,மாடுகள் வாய் வைக்க..
செட்டியார் பாரியாள் மீது,
புலி ஒன்று பாய..
பரசுராமன் அதை தடுக்க.......
பக்கத்தில் இருந்த நரசிம்மம் ஹிரண்யனை விட்டு விட்டு,
விவசாயியை ஹதம் செய்ய முயல...
லபக்கென்று பூனை ஒன்று எலிக்குட்டியை பிடிக்க...
சோல்ஜர் ஒருவன் தன் .303 ரைபிள் ’பட்’டால், பூனை கழுத்தில் ஒன்று போட,
கல்யாண செட்டில் ஏக களேபரம்..தூரத்து மாமா ஒருவர் ராத்திரி படுக்க தலைகாணி
தரவில்லை என்கிற சொத்தை காரணத்தால், மாப்பிள்ளை பையனை உசுப்பேற்ற..
அஷ்ட லட்சுமிகளுக்குள் புடவை விஷயத்தில் தகராறு வர..
நாயனம் வாசிப்பவரை கடம் விதவான் தவுல் கம்பால அடிக்க....
நல்ல வேளை ...
அத்தனைக்கும் உயிர் இல்லை...
பொம்மைகள் தான்!
சமர்த்தாக அதனதன் இடத்தில் அமர்ந்து கொண்டு...
அத்தனையும் அப்படி இருப்பதால்...
பூஜனைக்குரிய மரியாதையுடன்..
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சுண்டலுடன்...
இப்படி பொம்மைகள் போல..
நமக்கு இருக்கத் தெரியாமல் தானே...
பேசத்தெரியாமல் பேசிக்கொண்டு...
ஏட்டிக்குப் போட்டியாய்..
ஏதாவது செய்து தொலைத்து..
வாங்கி கட்டிக் கொள்கிறோம்!
அத்தனை பூஜையும் நமக்கு!!
ஒரு பொமமையை பார்த்தேன்...
சிரித்தது..
சிரிக்க முயன்றேன்...
முடியவில்லை!
காரணம்..
முதுகு வலி!!!!