Sunday, March 16, 2014

புழுவும்,நானும்!



ஒரு சாவகாசமான மாலைப் பொழுது....
புழு ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆமாம் ....நீ யார்?"
"நான் மனிதன்..."
"இன்னும் சொல்லலாமே..."
"நானா....வடமன்...திருச்சி ஜில்லா...பூர்வீகம் லால்குடி பக்கமுள்ள அரியூர்....வைஸ்வாமித்ர,
தேவராத,ஔதல என்கிற மூன்று ரிஷிகளின் வழி வந்தவன்..ஆனால்..."
"என்ன ஆனால்?"
"கொஞ்ச நாள் முன்னால் கண்டம் விட்டு கண்டம் போய் வந்தேன்...அதனால்....."
"என்ன அதனால்?"
"தினுசு,தினுசாய் மனிதர்கள்.....பிரிட்டன்,சைனா,ஜப்பான்,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து,
 வந்த வெவ்வேறு இன, மத,கலாச்சார மனிதர்கள்.....அவர்களை எல்லாம் பார்த்த போது,,,"
"பார்த்த போது?"
"என்னை அரியூர்,ஆங்கரை,திருச்சி,இந்தியா என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அறிமுகப் படுத்திக்
  கொள்ள விரும்பவில்லை....என்னை ஒரு International citizen என்று சொல்லிக் கொள்ள ஆசை!"
"நான் கூட இந்த பிரபஞ்சத்தில் ஒரு பிரஜை!....அது சரி...உனக்கு சொந்த பந்தம்?"
"பெற்றோர்....உற்றார்.....உறவினர் ...என்று ஏகப்பட்ட பேர் எனக்கு,உனக்கு?"
" இப்பூமியில் உள்ள அத்தனை ஜீவன்களும்..."
விஷமக் கார புழுவாக இருக்கும் போல இருக்கிறதே....நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும்...
மௌனத்தை கலைத்தது புழு.
"வீடு,வாசல்?"
"ஆரண்ய நிவாஸ் என்று பெயர் என் வீட்டிற்கு....நிஜமாகவே ஆரண்யம் தான்...எக்க சக்க
பழ மரங்கள்..."
"போதும்....நிறுத்து.....ஒரே அருவருப்பாக இருக்கிறது..."
சட்டென ஒரு மின்னல் என்னுள்....இந்த பிரபஞ்சத்தில் எனக்குள்ள அத்தனை உரிமைகளும்
அதற்கும் இருக்கிறது..உயிர்களுக்குள் என்ன பேதம்? அவரவர்  கர்ம வினைப்படி நான் மனிதனாக,
அது புழுவாக பிறந்திருக்கிறோம்...அவ்வளவு தான்...
தெளிவு பிறந்தது என்னுள்....என்னை நானே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்...
"புழுவே....உன்னிலும் தாழ்ந்தவன் நான்..." என்றேன் நாத் தழுதழுக்க..
"அட மனுஷா...இன்னுமா அந்த 'உன்னிலும்' மை விட வில்லை நீ?"
குலுங்கி..குலுங்கி சிரித்தது அந்த பொல்லாத புழு!







Thursday, March 13, 2014

என் சகோதரி ஜெயந்தி சிவகுமாரின் கவிதைகள்....


1. இனப் பெருக்கம் 

    செய்துகொண்டேயிருக்கிறது...

     மொழி,

     அம்மா என்ற வார்த்தையை,

     தாயில்லாத

     குழந்தைகளுக்கு!

  2. கரப்புகளின்

      இறுதி யாத்திரையில்,

      எறும்புகளின் 

      ஊர்வலம்!

   3. வயல்களில்,

       அபார்ட்மெண்டுகள்....

        பசுமரத்தாணியாய்,

       வயல்கள்!

   4. குடங்களில்,

        வழிந்து,

        ததும்புகிறது,

        நிலா! 

     5. சொத்துக்களை,

          பிரித்துக்

          கொண்டிருந்தனர்...

          அண்ணன்,தம்பிகள்!

          வேர்களை படர

           விட்டுக் கொண்டிருந்தது,

           கொய்யா!

        6.சண்டைபோட்டுக்கொண்டு

           சாப்பிட்டனர்,

           கூட்டாஞ்சோறு!

         7.காதலுக்காக,

             கயிற்றை சுருக்கும்

             போது,

              கான்க்ரீட்

              போட்டுக்கொண்டு 

              இருந்தது,

              உனக்கான,

              வார்த்தைகள்!

           8.வயலை 

              விற்று, 

               fees

              கட்டினார்,

               விவசாயக் கல்லூரி,

               அட்மிஷனுக்கு!

            9.இஸ்திரி போடுபவரின்

                சுருக்கம் விழுந்த,

                வயிறு!

                எதிரில்,

                கஞ்சி போடப்பட்டு,

                 துணிகள்!

இவை அனைத்தும் முரண் என்கிற தலைப்பில்!

அவர் பத்திரிகைகளுக்கு கவிதைகள் அனுப்பிக் கொண்டிருந்தவர்....ஒரு குடும்ப சந்திப்பில் " ஏதாவது இப்ப எழுதுகிறாயா?" என்று நான் கேட்ட கேள்விக்கு, சடசடவென 

வாயிலிருந்து, விழுந்த வார்த்தைகள் ஒரு நொடிப்பொழுதில் 

கவிதைகளாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு விட்டன!Hats off to Smt. ஜெயந்தி சிவகுமார்!

Saturday, March 8, 2014

கல்யாண சாதனை!



அவ்ளவ் தூரம் நாக்கில் நுரை தள்ளி, ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் ஓடினவனுக்கு, தண்ணீர் குடிக்கக் கூட உபயோகப்படாத கோப்பை பரிசாகத் தருகிறார் போல்,இப்பொழுதெல்லாம் கல்யாணங்கள் ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.நகரின் மையம் பகுதியில் பிரமாதமான மஹால்....

பொதுவாக கச்சேரி கேட்பவனுக்குத் தான் அஸாத்ய சகிப்புத் தன்மையும்,அபாரமான பொறுமையும் வேண்டும்...ஆனால், கல்யாண மண்டபத்தில் பாடுகிறவனுக்குத் தான் இது வேண்டும்.....ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தேன்...ஒரு பிரபல கச்சேரி வித்வான் அபூர்வமான ராகங்களில் உயிரைக் கொடுத்து பாடிக் கொண்டிருக்க, ஒருவரும் அதை கேட்காமல் அங்கும்,இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்....

 அப்படியும், பக்கத்தில் இருந்த ஒருவர் "ஸார், இது பைரவி தானே" என்று சங்கீத்த்தைப் பற்றி தன்னுடைய மேதா விலாஸத்தை என்னிடம் காண்பிக்க முயற்சிக்க, நானும் பதிலுக்கு "பைரவியே தான்" என்று சொல்ல, சட்டென்று ஒரு நடுத்தர வயது மாது திரும்பி, "நான் தான் பைரவி...சேஷ ஐயங்காரின் பெண் வயிற்று பேத்தி...எம் புள்ள ரெண்டும், அமெரிக்கால......நியூ ஜெர்ஸில இருக்கறவனுக்கு, இப்ப பார்த்துண்டு இருக்கோம்....யாராவது வடகலைல பொண்ணு இருந்தா சொல்லுங்கோ"ன்னு instantஆ அப்ளிகேஷன் போட, இந்த பைரவி பேச்சுனால, அந்த பைரவியைக் கேட்க முடியாமப் போச்சு!

சரி.....சாப்பிடவாவதுப் போகலாமென்றால், அது இதை விட கொடுமை! 

தொகுதி உடன்பாடு ஏற்பட்டு,தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு சீட்டாவது கிடைச்சுடும்....ஆனா,கல்யாண பந்தியில் சீட்டு கிடைக்கிறது அவ்வளவு கஷ்டம்!

அப்பாடா.......பந்தியில் ஒரு வழியாக இடம் கிடைத்து, உட்கார்ந்தோமானால், சுவையான பதார்த்தங்களை கரண்டி காம்பால் பரிமாறுகிறான் காண்ட்ராக்டர்....இதுல ஒருத்தன் 'வெந்த வெங்காயத்துல விளக்கெண்ணெய் ஊற்றுகிறார்' போல, " ஸார், சாதிக்கட்டுமா?" என்று கேட்க, "சாதிச்சது போதும்!" என்று எரிச்சலுடன் எழுந்து கொண்டேன்!

Tuesday, March 4, 2014

காதல்

காதலித்துப் பார்!
புரியும்....
காதலித்தால்
Bar!!!!