Thursday, August 14, 2014

இதம் தரும் சுதந்திரம்!

(ஒரு சின்ன Portrait)
ஆடுவோமே....பள்ளு பாடுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லால்குடி புது தெரு அக்ரஹாரம்...1947 ம் வருஷம்..ஆகஸ்ட் 15..
கீழக்கோடியிலிருந்து உப்பிலி ஓடி வந்து கொண்டிருந்தான்...
அவனுக்கு தபால் ஆபீசில் 'ரன்னர்' உத்யோகம்!
109 ஆம் நெ. அஹம் ராம சர்மா தன் வலது கையை புருவங்களுக்கு
மேல் வைத்துக் கொண்டு கேட்டார்.சாளேஸ்வரம் அவருக்கு!
"என்னடா உப்பிலி, எதையோ பறி கொடுத்தவன் மாதிரி ஓடி வரே?"
"பறி கொடுக்கலை தாத்தா, கிடைச்சாச்சு"
"எது?"
"சுதந்திரம்....நமக்கெல்லாம் விடுதலை"
அரை குறையாக கேட்டுக் கொண்டே வந்தாள் காமாக்ஷி
"அந்த கட்டேல போறவன்ட்டேர்ந்து அலமுக்கு விடுதலை கிடைச்சாச்சா?"
"அலமுக்கு மட்டும் இல்லே...நம்ம எல்லார்க்கும் விடுதலை"
"என்னடா உப்பிலி சொல்றே?"
அப்போது கிட்டாவையர் வந்தார்..
"பட்டணம் திமிலோகப் படறதாமே"
"நம்ம திருச்சிராப்பள்ளி கோட்டையை எடுத்துக்கும்.....போலீஸ்காராளும்....உத்யோக
காராளும், அங்க இங்க ஓடிண்டு..."
"ஓய் பஞ்சுவையரே வாரும்...இந்த அம்பி சொல்றதை கேட்டேளா?"
"ஆமாண்ணா..நிஜம்மாவே சுதந்திரம் கிடைச்சுடுத்து...இப்பவும் இந்த மௌண்ட் பேட்டன்
இழுக்க விட்டுடுவானோன்னு எனக்கு உள்ளூர பயம்..."
"ஆனா, காந்தி தான் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரே"
"காந்தி யாருண்ணா....நம்ம ரயிலடிக்கு ஒர்த்தர் வந்தாரே....நீங்க எல்லாரும் விழுந்து விழுந்து போய் சேவிச்சேளே....அப்பக் கூட அக்ரஹாரத்துல திருடன் புகுந்து..."
"ஆமாம்...மன்னி....அந்த மஹானுபாவர் தான்"
புருஷாளுக்கு சமதையா தன் சம்சாரம் பேசுவது என்னவோ போல இருந்தது, ராம
சர்மாவிற்கு.
"காமு, போடி....போய் எல்லாருக்கும் காஃபி கொண்டு வா...சுதந்திரத்தை நாம
எல்லாரும் காஃபி குடிச்சுண்டே கொண்டாடுவோம்!"
"ஹூக்கும்"
கனைத்துக் கொண்டு முகவாய் கட்டையை தோள் பட்டையில் இடித்துக் கொண்டு
காஃபி போட சென்றாள் காமாக்ஷி.
"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல!"



Monday, August 4, 2014

சிறுகதை வெளியீட்டு விழா .......



  "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்னுள்" என்று விகசிக்கத் தோன்றுகிறது.... நண்பர்கள் வை.கோவும், ரிஷபனும் தம் தம் வலைச்சரத்தில் ஆரண்ய நிவாஸ் சிறுகதை வெளியீட்டு விழா பற்றிய நினைவலைகளை மீண்டும்
மீட்டும் போது....
 
     சும்மா இருக்கவும் முடியவில்லை....
    என்ன செய்வது என்றறியா திகைப்பில்............
    அதுவும் அணிந்துரை பிரபல பதிவர் மோகன்ஜி !
    என்னவென்று சொல்வேனம்மா........
                                               அணிந்துரை

கையிலே பூங்கொத்தாய் அன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்களின் சிறுகதை தொகுதி.... கண்ணுள்ளே அவரின் சிரித்த முகம்.... மனதிலோ சிறுகதையாவது எது எனும் எண்ண ஓட்டம்.... சுகமாய்த்தான் இருக்கிறது.

சிறுகதை இலக்கியத்தின் முக்கிய வகையா? அல்லது சிறுகதை இலக்கியத்தின் ஆறாம் விரலா? வடிவக்குறுக்கத்தால் தான் ஒரு படைப்பு சிறுகதை ஆகிறதா? இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

படைப்பாளியின் மனம் உள்வாங்கிய ஒரு கணத்தின் நிகழ்வை,
தன் புனைவின் மூலம் காட்சிப்படுத்தி சிறுகதையாய் வாசகனுக்கு படைத்தளிக்கிறான். அவன் சொன்னதை விடவும், சொல்லாமல் விட்டவையையே வாசகன் மனதில் சிறுகதையாய் தன் புரிதலுக்கு ஏற்ப எழுதிக் கொள்கிறான். ஆக,ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் பற்பல சிறுகதைகளாய் வாசிக்கும் பலராலும் எழுதிக் கொள்ளப் படுகிறது என்பதே என் துணிபு. மிகச்சிறந்த சிறுகதையோ ஒரு வாசகனுக்குள்ளேயே பலவாறாய் படிக்குந்தோறும் உருக்கொள்கிறது. அதிலும் திருப்தியுறாமல் விடுபட்டுப் போன வெளிச்சத்தை மீண்டும் மீண்டும் மனது தேடிக் கொண்டே இருக்கிறது.

இன்றைய வாசகனுக்கு நேரமில்லைதான்...முகநூலும்,ட்விட்டர் கொரிப்பும் நேரத்தை தின்றபின் வாசிப்புக்கு மிச்சம் ஏது? வரும் நாட்களில் தொழில் நுட்பத்தாக்கம் இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடக் கூடும். இன்று, இயல் இ
சை, நாடகம் என்ற மூன்று கூறுகளில் நாடகம் என்பது சினிமாவாகி,குறும்படமாகி, யூடியூபின் இரு நிமிட சலனமாய் மாறியபடி.... எல்லாமும் மாற்றத்துக்கு உட்பட்டவையே என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

இலக்கிய வாசிப்பின் அதிகபட்ச இருப்பாய் சிறுகதை வடிவம் உருப்பெறுமோ? (இன்றைய நாவலின் இடம் போல..) காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எப்படியோ... சிறுகதை தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும். சிறுகதையை ஒரு பக்கக் கதை என்று மூளி செய்வோமோ? நாலு வரி நச் கதை என்று நறுக்கி வைப்போமோ அறியேன்... ஐந்து நாள் கிரிக்கெட் அரைநாளில் காட்டடி மாட்டடி என்று மாறியதைப் போல ரசனைகள்  மாறலாம். அதிலும் சிறந்த படைப்புகள் கூட சாத்தியமாகலாம்.... சட்டென்று கவிக்கோ அப்துல் ரகுமானின் ஒருவரிக் கவிதை ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.
கவிதைத் தலைப்பு : திருக்குறள்
ஒரு வரிக் கவிதை: மும்முலைத்தாய்.

திரு இராமமூர்த்தியின் கதை தொகுப்புக்கு வருவோம்... இந்தக் கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன் தோன்றுவது ஒன்றே. இயல்பான கதையோட்டம், ததும்பி வழியும் காருண்யம்.,கச்சிதமான பாத்திரப் படைப்பு... நெருடாத கதைக் களன். கதைகள் முடிச்சுகள் போடப்பட்டு ,அவிழ்த்து புரிந்து கொள்ளும் தடுமாற்றம் ஏதும் இதில் இல்லை.. கதை மாந்தர்கள் அன்னியமில்லாமல் நம் அருகாமையிலேயே நடமாடுகிறார்கள்.

இதன் ஆசிரியரின் பெயரின் ஒரு பகுதியான ஆரண்யநிவாஸ் தான் முதல்கதையின் தலைப்பு. யாரோ முதியவர்க்கு கோவிந்தா கொள்ளி போட்டுவிட்டு அவர் வளர்த்த வாழைக் கன்றின் வழித் தோன்றலின்கண் பழுத்த நேத்தம்பழத்தை நண்பருக்கு தருகிறார் கதாநாயகன்.. இந்த விவரிப்பின்  நெகிழ்வுக்கு அழுத்தம் சேர்க்க அப்போதே ரிடையரான மனசஞ்சலம் வேறு.. பேர்பெற்ற சிறுகதையாளர்களின் கதைத்தொகுதிகளில் இப்படியோர் நெகிழ்வுக்கதை இருக்கும். சம்பிரதாயம் மாறாமல் நம் எழுத்தாளரின் தொகுப்பிலும்  வாழையடி வாழையாக இந்த முத்திரைக் கதை. நன்று.

ஒரு சாப்பாட்டுபிரியரின் அறிமுகமும், அவ்வப்போது தம் செலவில் அவர் சாப்பிடுவது பொறுக்காமல் கதையின் நான் அவரை உதாசீனப் படுத்துவதும்,பின்னர் அங்கலாய்ப்பதும் தேர்ந்த கதை வனைவு சார்வாள் சிறுகதையில்.

இழக்கக் கூடாதது கதையில் மனைவி கணவனுக்கு எழுதும் ஒரு வித்தியாசமான கடிதம் நம்மையும் அலைகழிக்கிறது. தேர்ந்த காட்சிப்படுத்தல் கைகூடியிருக்கிறது.

பாலகிருஷ்ணன் வீடு மற்றுமொரு நல்ல படைப்பு. திருச்சியின் ஸ்டோர் குடியிருப்பின் விவரணைகள் மனதை அள்ளுகிறது. ஒரு ஸ்டோரின் அன்றாட நிகழ்வுகள்.. அங்கிருக்கும் மனிதர்கள், புதிதாய் அங்கு குடியேறி, அசூயை ஏற்படுத்தி, ஆட்டி வைக்கும் அவள்... படித்துதான் பாருங்களேன்..

ராகவபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து செல்லும்போது பழைய நினைவுகளில் மனம் அலைபாய.. குழந்தை இல்லாத தம்பதியினரின் வெறுமை நம்மை சட்டெனத் தாக்குகிறது.

சிறகு முளைக்கும்கதையின் மாலதியும்,’ பிரமோஷன் கதையின் சந்தரும் தேர்ந்த பாத்திரங்கள். பிரமோஷன் கதை மேலாண்மை கூறுகளில் கூர்தீட்டிக் கொண்ட நல்ல படைப்பு.

சாராத்து அம்பி உதவியேற்க வேண்டாமென மாத்தூர் ஸ்டேஷனில் இறங்கும் போது, நாமும் அவனுடன் கூடவே இறங்கி விடுகிறோம்.

மானுடம் கதையின் சாமண்ணா நீரில் மூழ்கி மீண்டபோது வேறொருவனாய்...மனவிகாரங்கள் கழுவப்பட்டவனாய் புதியவனாய் ஞான ஸ்நானம் பெற்று மீளும் உன்னதம்... சபாஷ்!

கருப்பு நிறத்தில் ஒரு பலூன் உயரத்தில் பறக்கவும் முடியும் என்று கதாசிரியர் எழுதும்போது, அது உயரஉயர பறக்கத்தான் வேண்டும் என்று உடன்சேர்ந்து குரலெழுப்பத் தோன்றுகிறது.

குத்துசண்டையில் கொடிகட்டிப் பறந்த உஸ்தாத் சாஹிபு முதுமையில் வாழ்க்கையுடன் செய்யும் குஸ்தியும் ஊடே செல்வியின் வாழ்க்கையும் விளக்குகள் அணையும் போது கதையில் சிறப்பாக விவரிக்கப் பட்டிருக்கிறது.

சொல்லாமலேயே சாந்தாவின் உதாரகுணத்துக்கு பரிசாய் டிரான்ஸ்வர்.... ஈகைத் திருநாள் தூய முஸ்லிம் அமிர்பாய்க்கு கிடைக்கும் ஹஜ் வாய்ப்பு, மேதைகளும் பேதைகளும்கதையில் அரவிந்தன் தன் பெண்ணுக்கு சங்கீதம் கற்றுத் தரும் முயற்சி.. அனைத்தும் அழுத்தமாய் சொல்லப் பட்டிருக்கின்றன.

காயத்ரி கதையில் நானாவை பீடித்த சந்திராகிரகணம் விடும் தருணம் அழகான தருணம்.

அஸ்வத்தாமா அதஹ குஞ்சரஹ கதை மூலம் மகாபாரத காப்பியத்தில் ஒரு புதுகதையை கதாசிரியர் சேர்க்க முயன்றிருக்கிறார். வேதவியாசன் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

அற்பாயுசில் போன ராமநாதனின் அபரகார்யத்தை பண்ணி வைக்க வேண்டிய கட்டாயம் மகாதேவகனபாடிகளுக்கு. வார்த்தைகள் போடும் வேலிகளை வாழ்க்கை பிய்த்துதான் போட்டு விடுகிறது என்பதை சிறப்பாக இந்தக்கதை சொல்கிறது. இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாய் இதையே சொல்வேன்.  
  
 போக்கிடம் இன்றி கணவனின் சின்னவீடு பற்றி கண்டும் காணாமல் போகவேண்டிய துயரம் மைதிலிக்கு சபாஷ்! சரியான ஜோடிகதையில். கதை சொல்லப்படும் விதத்தில் ஆதங்கம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

நியாயம் கதையில் பெண்ஜென்மத்தின் வேதனைகள் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

குழந்தைகளின் பிரச்னைகளை பூதாகாரமாய் பெரிது படுத்தும் பெற்றோரின் இயல்பை முளைச்சு மூணு இலை விடறதுக்குள்ளே கதையில்  லாவகமாய் கையாண்டிருக்கிறார் கதாசிரியர். மீண்டும் சபாஷ்!

இந்த தொகுதியின் ஓரிரு கதைகளை முன்பே படித்திருந்தாலும்,அனைத்தையும் படிக்கும் வாய்ப்பு இப்போதே அமைந்தது.  இந்தத்தொகுதி ஒரு சீரியமுயற்சி என்றே சொல்வேன்.. அன்பர் திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களின் ஓவியங்கள் கதைகளை மேலும் மெருகூட்டுகின்றன. நாணா போன்ற கேரக்டர்களை வெளிப்படுத்தியிருக்கும் அழகு.. அவருக்கு என் பாராட்டுகள்.

 இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்.. இயல்பிலேயே திரு ராமமூர்த்தி அவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரின் ஹாஸ்ய ரசனையும், அங்கதத்தையும், சடுதியில் செய்யும் பகடியையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரின் அடுத்த தொகுதி  நகைச்சுவை மிளிரும் படைப்புகளோடு வெளிவர வேண்டும் என்று கோருகிறேன்.. கோரிக்கை எதற்கு? நண்பருக்கு அன்புக் கட்டளை இடுகிறேன்.

வாய்ப்புக்கு நன்றியும் அன்பும்...

மோகன்ஜி
வானவில் மனிதன்
mohanji.ab@gmail.com