Friday, December 31, 2010

வரவேற்போம்...புத்தாண்டை!!!!!!!!!



இல்லாமை இல்லாத நிலை பெற வேண்டும்
இறைவனே இன்று ஒரு வரம் தர வேண்டும்

கல்லாத மக்களுக்கு கற்பித்தல் வேண்டும்
எல்லார்க்கும் வேலை கிடைத்திடல் வேண்டும்

பொல்லாத சாதி சண்டை ஒழிந்திட வேண்டும்
பொறுமை எனும் குணம் இங்கு பொங்கிட வேண்டும்

தள்ளாடும் பாரதத்தை நிமிர்த்திடல் வேண்டும்
தரணியில் நம் புகழ் சுடர் விட வேண்டும்


மறுகி மயங்கியது போய், கருக வேண்டும் கீழ்மை, அருகி நின்ற நற்குணம் யாவும் மலர, வருக,வருக என வரவேற்போம்,புத்தாண்டை!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Thursday, December 30, 2010

தினந்தோறும் ஒரு ஓடல்!

வைத்ததை எடுக்கப்
போவது போல்,
தினம்..தினம்..
ஓடல்..
பின்,
களைத்துப் போய்..
வீடு திரும்பல்...
மறுபடியும்,
ஓடல்..
இப்படியாகத்
தான்
போய்க் கொண்டிருக்கிறது,
வாழ்க்கை!
இளைப்பாறுதலுக்குப்
பிறகு,
ப்ரிய ஸகியைக் கூட்டிக்
கொண்டு,
காசி,ராமேஸ்வரம் செல்லும்
எண்ணம்
எனக்கு
இல்லை!!
ஒவ்வொரு வருடமும்,
ஒவ்வொரு மாதம்,,
ஒவ்வொரு கண்டம்..
முதல் வருடம் ஐரோப்பா,
பின் அமெரிக்கா,
அதன் பின்,
ஆஸ்திரேலியா...
என்று உலகம் சுற்றப் போகிறேன், ஸகியோடு!
அந்த பரவச
நினைப்பே என்னுள்,
ஆக்ஸிஜனைத் தூவ,
துள்ளலுடன் என்
ஓடல் தொடர்கிறது,
ஆஃபீசுக்கு!

Saturday, December 25, 2010

சாதகம் செய்பவரைக் கண்டால்......????

இது சங்கீத சீசன். நம் பங்கிற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற தார்மீகப் பொறுப்பு நம் தலை மேல் விழுந்ததால் எழுதுகிறோம்!
பொதுவாக, ஸபாக் கச்சேரிகள் என்றால் எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு! சங்கீதப் பிரியர்கள் புதிது, புதிதாய் துக்கடாக்கள் கேட்கலாமே என்கிற ஆர்வம்..சாப்பாட்டுப் பிரியர்களுக்கு சபாக் கேண்டீன் பக்கோடாக்கள் மீது ப்ரேமை.. நாகரீக யுவதிகளுக்கு பாடகிகள் போட்டுக் கொண்டு வரும் லேட்ட்ஸ்ட் ஸாரி..புதுப் புது மோஸ்தரில்
நகைகள் என்று ஆர்வம்..பாடகிகளுக்கோ ஆரபிக்கு ஆரஞ்சு கலர்...சிந்து பைரவிக்கு சிகப்பு..ஸாவேரிக்கு சாக்லேட் கலர் என்று விதம்,விதமாய் பட்டுப் புடவை கட்டி அசத்த வேண்டும் என்கிற கட்டுக்கு அடங்காத ஆசை..
அந்த காலத்தில், தலை நிறைய மல்லிகைப் பூச் சூடி,மலைக்கோட்டை தாம் செல்ல, அகத்துக் காரர்கள், இங்கே ஆண்டார்வீதி மொட்டை மாடியில் நின்று கொண்டு,தம்தம் மூக்கை வான் நோக்கி காட்டி அந்த மல்லிகைப் பூ ஸ்வாசத்தை ஊக்கத்துடன் வாங்க வேண்டுமே என்கிற கவலையில், ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் பத்தினிப் பெண்டிர் போல,பணத்தை கொள்ளை..கொள்ளையாய் கொட்டிக் கொடுக்கும் NRI களுக்கு தாம் சபாக் கச்சேரிகளில் பண்ணும் தர்பார்களை...அங்க சேஷ்டைகளை..கொனஷ்டைகளை.. நம் அமெரிக்க நண்பர்கள் அங்கே,SKEPE ல் காண வேண்டுமே என்கிற கவலை..
சபா செக்ரட்டரிகளுக்கோ, கல்லா கட்டியாக வேண்டுமே என்கிற படபடப்பு...
இப்படியாகத் தானே இங்கு சங்கீதங்கள் தழைத்துக் கொண்டிருக்கின்றன!
நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..புதிது..புதிதாக ஆட்கள் தான் வருகிறார்கள்..
பாடுவதற்கும் சரி..கேட்பதற்கும் சரி..ஆனால், சங்கதிகள் என்னவோ அரதப் பழசு தான்..அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்! . ஒரு மோஹனம்..பைரவி..தோடி..சஹானா..ஷண்முகப்ரியா மட்டும் இல்லையென்றால் இங்கே பாதிப் பேர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும்..
இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்..வித்வான்களுக்கும்,சங்கீத கலா ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக ஸபாக்கள் இருந்த காலம் போய்..இப்போதெல்லாம் யார்யாரோ வருகிறார்கள்..யார்யாரோ பாடுகிறார்கள்..மொத்தத்தில் ஒரு சினிமா தியெட்டர் போல ஆகி விட்டது சங்கீத சபாக்கள்!
ஒரு பிரபல சபாவில் மாலி கச்சேரி..சொதப்பிக் கொண்டிருந்தார்..அவர் கச்சேரி என்றால் அந்த காலத்திலேயே நூறு ரூபாய் எண்ட்ரன்ஸ் ஃபீஸ்! சொதப்பிய சொதப்பலில்
ஒரு கிழவர் எழுந்தார். எழுந்தவர் எரிச்சலுடன் கத்தினார்..”கட்டேலப் போறவனே வள்ளிசா,
நூறு ரூபாய் கொடுத்து உன் கச்சேரி கேட்க வந்தேன் பாரு..என்னை ஜோட்டால அடிக்கணும்..”
எல்லாருக்கும் பயம்! மாலிக்கு கோபம் ஜாஸ்தி..விருட்டென்று ஃப்ளூட்டை கடாசி விட்டு போய் விடப் போகிறாரோ என்று, ஆத்திரத்தில் அந்த கிழவரைப் பார்க்க..ஒரு நிமிடம் மெளனம்.. ஒரு நிமிடம் தான்..
பிறகு அங்கு கோலோச்சியதோ கர்ணாமிர்த ஸாகரம்!
” என்ன சொல்றேள்?” என்று மாலி அந்த கிழவரைப் பார்க்க “ அப்பா நீ ஸ்ரேயஸா இருக்கணும்”னு ஆசிர்வதித்தாராம் அந்த கிழவர்..
அந்த மாதிரி ரசிகாளுக்கும்..பாடகனுக்கும் உள்ள ஒரு அன்யோன்யம் இப்பல்லாம்
கிடையாது..
மாலி மாதிரியெல்லாம் சோபிக்கணும்னா அதுக்கு அசுர சாதகம் பண்ணனும்..வித்தை கை கூடி வர்ரது என்பது பகவத் ஸங்கல்பம்..எல்லாருக்கும் அவ்வளவு இலகுவில் வந்து விடாது..அது!
இப்படியாகத் தானே என் பக்கத்து வீட்டுக் காரருக்கு சங்கீதப் பைத்தியம் பிடிக்கப் போய்..
அர்த்த ராத்திரியில் அவர் அபாரமாய் சாதகம் பண்ண..அடியேனுக்கு அது பாரமாய் போய்..
நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே..அப்பப்பா....
அதற்காக ‘சாதகம் செய்பவரைக் கண்டால்..பயம் கொள்ளலாகாது பாப்பா..மோதி மிதித்து விடு பாப்பா..’ என்று அந்த முண்டாசு கவிஞனைப் போல் பாடவா முடியும்?
இராத்தூக்கம் போய் கண்கள் வீக்கியது தான் மிச்சம்!

Wednesday, December 22, 2010

இனி ஒரு விதி செய்வோம்!!!!

நாடு அவல நிலையை நோக்கிப்
போய்க் கொண்டிருக்கிறது...
காரணம் யார்?
ஆளும் கட்சியா...
காவல் துறையா...
அராஜகக் கும்பலா...
சமூக விரோத சக்திகளா...
பிஸினஸ் முதலைகளா...
கட்டைப் பஞ்சாயத்தா..
எதிர் கட்சிகளா.....
யோசித்துப் பார்த்தேன்...
யாரும் இல்லை..
பின்,
யார் காரணம்?
நான் !!!!!!!
நானா????????
ஆம், நான் தான் !!!
நான் என்ன ஒழுங்கா,
பிறரை விமர்சனம் செய்ய?
பட்டியலிட்டேன்.
காலையில்,
இரண்டு ஊழியர்களைப்
புறம் தள்ளி,
கால் மிதித்து,
பஸ்ஸில் ‘சீட்’டைக்
கைப்பற்றினேன்..
ஆஃபீஸ் டைம் அரை மணி
எடுத்துக் கொண்டேன்,
டிஃபன் சாப்பிட!
முக்கால் மணி நேரம்,
ஆஃபீஸ் ஃபோனில்,
வீட்டிற்குப் பேசினேன்..
ஆஃபீஸ் பேப்பரில்,
பசங்கள் ஸ்கூல் புஸ்தகங்களுக்கு,
ஆஃபீஸ் நேரத்தில்,
அட்டை போட்டேன்..
எனக்கு என்ன தகுதி
இருக்கிறது,
பிறரை குறை சொல்ல?
இனி,
நாம்...
இல்லையில்லை...
நான்
நேர்மையாய் இருக்க...
முயற்சி செய்வேன்..
இப்படி,
நம்மில் ஒத்த
கருத்துடைய ஒவ்வொருவரும்,
இருப்போம்..
யார் எப்படிப் போனால் என்ன..
நாம் இருப்போம்,
நேர்மையாய்...
ஆத்திரக்காரன் தான்,
சுடு சோற்றில்,
நடுவில் கை வைப்பான்...
நாம்,
மெதுவாய்,
பக்கவாட்டில் சாதம்,
ஆறிய பிறகு,
எடுப்பது போல்,
ஜீவாதாரமான,
கிராமங்களுக்குச்
செல்வோம்....
ஒவ்வொருவரும்
தம்தம் நடத்தையை
வைத்து,
மற்றொருவரை,
பின் தொடர வைப்போம்..
ஒரு பொது நலத்திற்கு,
மிலியனாய்க் குவிவோம்!
கதவுகள் இல்லா,
வீடுகள் சமைப்போம்!!!
ராணுவம் இல்லா,
நாட்டினை அமைப்போம்...
அகில உலகுக்கும்,
நம் இனிய பாரதமே,
தலைமையாய்.........

Wednesday, December 15, 2010

நூல் அறிமுகம்!!


எமக்கு ’அம்மா..உன் உலகம்’ என்கிற கவிதை தொகுப்பு வந்தது.திருமதி தனலட்சுமி பாஸ்கரன் என்ற கவிதாயினியின் கவிதைச் சொட்டுகள்.அப்பப்பா..என்னதொரு சொற்கட்டு..
வீரியமான வார்த்தைகள் அதனதன் பீடத்தில் அற்புதமாய் அமர்ந்து கொண்டு..
ஒரு அற்புதமான இரட்டை வட சங்கிலிக்கு நடுவில் பதித்த மாணிக்கக் கல் போல, நெய்வேலி பாரதிக்குமாரின் முன்னுரை வெகு நேர்த்தியாய்...
வாருங்களேன், கொஞ்சம் என்னுடன்!!
*
ஒன்றிரண்டு மாதுளை முத்துக்களை சுவைப்போமா.......?

# தலைப்பு : புதுமைப் பெண்
கவிதை :
”ஆகவே
பதட்டத்தோடு
அச்சந்தவிர்த்து
வீர நடை போடு பெண்ணே!”
பலத்த கைத்தட்டலுடன்
பேச்சை முடித்தபின்
பரபரக்கிறாள் இரவுக்குள் வீட்டையடைய....
# தலைப்பு: பொங்கல் சீருடை
கவிதை :
சீருடையே புத்தாடைகளாயின
சேரி சிறுவர்களுக்கு...
# தலைப்பு: க(நே)ச சதுர்த்தி
கவிதை :
கரைக்க மனமில்லை
வீடு திரும்பிய பிள்ளையார்
வணங்கியது பக்தனை!
# தலைப்பு: மனிதம்
கவிதை :
ஜன நெரிசல் மிக்க
சாலையின் நடுவில் குருதி வெள்ளத்தில்..
பிரசவித்த பிச்சைக்காரியைச்
சூழ்ந்து மறைத்த பெண்கள்..


*
நச் நச்சென்று கவிதைகள்..சொல்லிக் கொண்டே போகலாம். ஈரோடு தமிழன்பன் கூறியது போல ‘ பசையான வரிகள் படிப்பவரை இழுத்தணைத்துக் கட்டிக் கொள்ளும்’
ஆனால் ஒன்று..
இந்த கவிதைப் புத்தகம் உங்களிடம் இருந்தால்.....
1. பெரிய மாமரத்து நிழலில் போட்ட பெஞ்ச்.
2. கூச்சலிடும் தேன் சிட்டுகள்.
3. ஒரு டேப் ரிகார்டர்.அதிலிருந்து காற்றில் கசிந்து வரும்
பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு..
4. ஒத்த கருத்துடைய மூன்று இலக்கிய நண்பர்கள்..
5. கொறிக்க கொஞ்சம் முந்திரி பக்கோடா..
6. ப்ளாஸ்க் நிறைய கள்ளிச் சொட்டு காஃபி.
நேரம் வெகு ஸ்வாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கும்..
ஒரு பிரபல இலக்கிய வாதி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
...இந்த ஜனசமுத்திரத்தில் நான் ஒரு துளி.எம் எழுத்து மாபெரும் அலை..
அந்த அலை போல வளர வாழ்த்துக்கள்

புத்தகம் கிடைக்கும் இடம்:
உலா பதிப்பகம்,
30/23,ஜெ.எம். வளாகம்,
சின்னக் கடை வீதி,
திருச்சி-620 002.
விலை : ரூபாய் 50/-

Tuesday, December 7, 2010

மாதா,பிதா,குரு,கிரி!

ஆங்கரை ஷண்முகா பாடசாலையில், தேவசகாயம் வாத்யார், எங்களுக்கு மூணாம்ப்புக்கு.
விட்டார்னா, செவுனி ’ங்கோய்’னு அரை மணி நேரம் கேட்கும். வாய்பாடு தெரியாட்டா,
அப்படியே, அலாக்கா தூக்கி ஐயன் வாய்க்காலில் போட்டுடுவார்.ஆனா, ரொம்ப நல்ல வாத்யார். நல்லா
படிக்கிற பசங்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
நாலாப்பு, செருப்பாலூர்..அஞ்சாப்பு கோதையாறு லோயர் கேம்ப் மிடில் ஸ்கூல்!
ஆறாம்ப்பு...மறுபடியும் ஆங்கரை!
இந்த ஸ்கூல் ஆங்கரையில் இல்ல..லால்குடி போர்டு ஐஸ்கூல். இரண்டு,மூன்று கிலோ
மீட்டர் நடந்து போகணும்.
எங்க ஊர் பசங்க எல்லாம் சேர்ந்து போவோம்.அப்ப அலுமினிய டிபன் பாக்ஸ் தான்.பாவம்,கிரி தேமேன்னு அதில டிபனை (டிபன் என்ன..தயிர்சாதம்,வடுமாங்கா தான்)எடுத்துண்டு வர,நான் அடம் பிடிச்சு,பார்சல் கட்டச் சொல்லி, அண்ணா பார்சல் கட்டித் தருவா..!ஊர்ல நிறைய பேருக்கு விதம்,விதமா பேரு..ஒருத்தம் பேரு சாம்பார் அம்பி..பட்டம்பி.. நான் டெய்லி பொட்டலம் கட்டிண்டு வரதுன்னால, எம் பேரு பொட்டலம் அம்பி!
எங்க சாப்பிடுவோம் தெரியுமா?
லால்குடி ஸ்கூல் போற வழியில சந்தைப் பேட்டை வரும்..அப்புறம் செருதூர்.
செருதூர் அக்ரஹாரத்தில டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் கோபால கிருஷ்ண மாமா வீடு!
அங்க தான், வரிசையா ஆங்கரை பசங்க எல்லாம் டிபன் பாக்ஸ் வைச்சிருப்போம்.
சாப்பிட்டுவிட்டு எச்சலிடுவது போல பாவ்லா பண்ணுவோம்.’ஆங்கரை குழந்தைகள் இவ்வளவு சமர்த்தா?’ என்று அந்த தாடிக் கார கோபாலகிருஷ்ண மாமா ஆச்சர்யப் படுவார்.
ஆங்கரையிலிருந்து எங்க ஸ்கூலுக்கு வர பஸ்ஸில் பத்து காசு தான். அந்த காசை மிச்சம்
பண்ணி,லால்குடி பூங்காவனத்துல சினிமா பார்ப்போம்..
’அம்மா..அம்மா சினிமா போய்ட்டு வரோம்மா.. ’
‘ பரிட்சை வந்தாச்சு..சினிமால்லாம் போகக் கூடாது..’
‘ அம்மா..வந்து படிக்கிறோம்மா..’
துணைக்கு தாத்தா வருவார்.’குழந்தைகள் தான் போய்ட்டு வரட்டுமேம்மா..ஒரு
ரிலாக்சேஷன் வேண்டாமா’ என்று சொல்ல, நான் கிரி சினிமாக்கு ஜுட்..சிவாஜி படம்
பேர் தெரியலே..ஆனா, அதில ஒரு பாட்டு வரும் ‘ யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா, போங்க..என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க..’
ரோடில சிரிச்சு பேசிண்டே போவோம்..அப்ப சிண்டிகேட், இண்டிகேட் வந்த புதிசு.
சினிமாக்கு போகவேண்டாம்னு சொன்ன அம்மா...இந்திரா காந்தி..பர்மிஷன் கொடுத்த தாத்தா மொரார்ஜி தேசாய் !!
இப்படித்தான் அபூர்வமா ’லட்சுமி கல்யாணம்’ சினிமா போக பர்மிஷன் கிடைச்சது.ஆனா, மழை கொட்டப் போறா மாதிரி இருந்தது.
நானும், கிரியும் விபூதியை குழைச்சு இட்டுண்டு ஸ்வாமி படம் முன்னால..
‘ததோயுத்த பரிஸ்ராந்தம்’னு ஆதித்ய ஹ்ருதயம் ஆரம்பித்தோம். அந்த ஸ்தோத்ரம் சொன்னா
மழை போய் வெயில் வந்துடும்னு நம்பிக்கை! அண்ணா எங்களுக்கு கோதையாறுல சொல்லிக் கொடுத்த ஸ்லோகம். அது ஒண்ணு தான் எனக்கு தெரியும், இன்னிக்கும்!
108 நெ. வீட்டுக்கு எதிர்த்தாற்போல், கண்ணன் என்று ஒரு ஆள்..எங்க சித்தப்பா வயசு இருக்கும்.எப்ப பார்த்தாலும் ‘டைட்ஸ்’பேண்ட் தான்! அதனால,அவருக்கு
ஒட்டடை குச்சி டைட்ஸ்னு பேர் வைச்சோம்.
அவங்க அப்பா, இப்ப போட்டுக்கிறா மாதிரி ஒரு முக்கால் ட்ராயர்ல் காட்சி தருவார்!
ரொம்ப நாள் பம்பாயில் இருந்துட்டு, இங்க வந்திருக்கா..அவங்க எங்கள வினோதமாய்
பார்க்கிறா மாதிரி நாங்களூம் அவங்களைப் பார்ப்போம்!மிருக காட்சி சாலைல,குரங்கு நம்மளப்
பார்க்குமே அது போல நாங்க பார்ப்போம், டைட்ஸை!
லீவ்ல குரு வருவான்..அதான் எங்க கிட்டு சித்தப்பா பையன். அவன் வந்தா ஜாலி தான்..கிரியை விட ஒரு வயசு சின்னவன்..
எங்க ஃபேமிலிக்கே மூத்த பேரன் நான் தான்.. நான் தான் முத்தண்ணா..
மூத்தவனாப் பொறந்த பாவத்தினால, இந்த கிரி,குரு,சசி,ரமா எல்லாரையும் ஊஞ்சல்ல
உட்கார்த்தி வைச்சு, நான் தான் காலம் பூரா ஊஞ்சலை ஆட்டிண்டு இருப்பேன்!
பெரிய மர டேபிள்..டிராயருக்கு கீழே, சாமான் வைக்கிறதுக்கு பெரிசா இடம் இருக்கும்..
அதே மாதிரி அந்த பக்கமும்!
எங்களுக்கு நாகர்கோவிலுக்கு ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ்ல போன ஞாபகம் வந்து விடும்..
நான்,கிரி,குரு எல்லாரும் அதில உட்கார்ந்துண்டு, ’டோரை’ சாத்தி விடுவோம்.
பஸ் போற மாதிரி சவுண்ட் விடுவான் கிரி..அந்த சவுண்ட் நின்னா, மதுரை வந்தாச்சுன்னுஅர்த்தம். அப்புறம் டின்னவேலி, நாங்குனேரி, நாகர்கோவில்னு வண்டி போகும்.
கடம்பூர் வந்தா போளி சாப்பிடறதா பாவ்லா !மதுரையில டிஃபன்!
பக்கத்து அகம் பாட்டி எங்க எல்லார் மேலும் ரொம்ப ப்ரியம்! வாய் அலுக்காம எப்ப
பார்த்தாலும்,கிரி ராஜா, குரு நாதா என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்..எங்கள் மீது
அவ்வளவு பாசம்..
நானும்,கிரியும் நவராத்திரி கொலுவுக்கு எல்லார் வீட்டிலும் போய் அழைப்போம்..ராம, லெக்‌ஷ்மண வேஷம் போட்டுக் கொண்டு அக்ரஹாரத்தில் நடந்தால்,அடையாளம் தெரியாமல் தெரு நாய் கூட குரைக்கும்!
அவ்வளவு தத்ரூபமாய் இருக்கும் வேஷம்!
லீவு வந்தால் ஜாலி தான்.
லவா..லவா..லக்கி ப்ரைஸ்!
பெரிய கார்ட்போர்டை எடுத்துக் கொள்வோம்.அதில் இரண்டாகப் பிரித்து, மேல் பாகத்தில்
கார் பொம்மை, பலூன்,ஒவ்ரங் உடாங் ஊசி பட்டாசு வெடிப்பது போன்ற படம், கரடி பொம்மை..எல்லாம் ஒட்டியிருக்கும். கீழ் பக்கம் பேப்பரை சுருட்டி ஒட்டி இருப்போம்.
ஒவ்வொன்றிலும் ஒரு நம்பர். ஒரு பேப்பர் கிழிக்க ஐந்து பைசா. அந்தந்த நம்பர் கிடைத்தால்,
அந்தந்த நம்பர்களுக்கு உரிய பரிசுப் பொருள் கிடைக்கும்!
ஆனால் எல்லா நம்பருக்கும் ஆரஞ்சு மிட்டாய் தான் போட்டிருக்கும் விஷயம் ஸ்ரீதராகிய
எனக்கும், கிரிக்கும் மட்டும் தான் தெரியும்!
எல்லாமே...போ..............................ச் !!!!!!!!!!!!!!!

Saturday, December 4, 2010

பெண்ணே.......!!!


பெண்ணே!
என் அன்பை,
நீ நிராகரித்து விட்டாய்...
பரவாயில்லை..
ஒரு வேளை..
என்னை,
ஏற்றுக் கொண்டிருந்தால்,
நம்,
காதல் நிறைவேறி,
கடிமணம் புரிந்து,
இல்லறம் நடத்தி,
பிள்ளைகள் பெற்று,
வளர்த்து ஆளாக்கி,
அவையும் ஆளாகி,
ஒவ்வொன்றும்,
ஒரு திசைக்குப்
பறந்து..
எனக்கு அப்பா..
உனக்கு அம்மா..
என்று,
முதுமையில்,
நம்மைப்
பிரித்து விடுமே!
அதற்கு இது,
எவ்வளவோ..
பரவாயில்லை...
புத்திக் கொள் முதல்,
தாடியோடு போகட்டும்!!!!

Friday, December 3, 2010

சிவன்!


” சிவன் என்ன பண்றீங்க?”
” சிவன் ஒரு நிமிஷம் வந்துட்டுப் போங்களேன்”
” மிஸ்டர் சிவன்..இதை எப்படிங்க போஸ்ட் பண்றது?”
அது ஒரு மத்திய அரசு அலுவலகம்...
சென்னை..
எதிர்த்தாற் போல் ஜிலுஜிலுவென கடல் காற்று வீசும் சூழல்.
நார்த் பீச் ரோடு!
அத்தனை பேரும் சிவன் சிவன் என்று அழைக்க, அந்த மனிதரோ ’சிவனே’ என்று இராமல்..கொஞ்சம் கூட கோபப் படாமல், பம்பரமாய் சுழன்று கொண்டு...அவர்கள் அனைவருக்கும்.. ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார்.
கட்டையாய்..மா நிறத்துக்கும் சற்று மாற்று கம்மியாய்..எல்லாரிடமும் வாஞ்சையாய்..
பரிவுடன்... பாசத்தை பொழிந்து...
அது தான், சிவன்!
நான் என் சகோதரருடன், ஒரு பத்து,பதினைந்து வருடத்திற்கு முன்னால் அங்கு சென்ற போது நடந்தது .....

“ சார் யாரு?”
“ என் ப்ரதர், சிவன்”
“ சாருக்கு திருநெல்வேலி பக்கமா?”
“ எப்படி சார் கண்டுபுடிச்சீங்க?”
வெள்ளந்தியாய் சிரித்தார், சிவன். கறுத்த அவர் உதடுகள் ஊடே, பளிச்சென்ற வெண்பற்கள்!
“ அந்த ஊர் பக்கத்தில தான், இப்படி சிவன்னு பெயர் வைப்பாங்க. லால்குடில ஸ்ரீமதி
கன்யாகுமரில தாணுன்னு..”
என்னோட மேதா விலாஸத்தை நான் காண்பிக்க..
”சார்..உங்க பிரதர் ரொம்ப இண்ட்ரஸ்டிங்”
”சிவன் வாங்க நேரமாச்சு!”
“ ஒரு நிமிஷம் இருங்க, சார். சாருக்கு ’ஹானரோரியம்’ கொடுத்துட்டு
வந்துடறேன்..”
” நாங்க குடுக்க மாட்டோமா?”
”இனிமே.. நீங்க தானே கொடுக்கப் போறீங்க”
சிரித்தார்,சிவன்.
“ சிவன்..சார் கூப்பிடறாருங்க..எல்லாரும் வந்தாச்சு!”
“ தோ..வரேன்..”
“ என்ன சார்..பார்ட்டி.. ட்ரான்ஸ்வரா?”
“ ஈஸ்வரா..இன்னிக்கு நான் ரிடையர்ட்ஆறேன், சார்”
அடுத்த நாளும் அந்த ஆஃபீஸ் சென்றேன்.
ஆனால், அந்த ஆஃபீஸில் “ஜீவன்” இல்லை!!!!!