Tuesday, November 30, 2010

தளிர்கள், வேர்களையும் பார்க்கும்!

”வனஜா”
” சொல்லுங்க”
” சொன்னா, கோச்சுக்க மாட்டியே..”
“ என்ன பீடிகை பலமா இருக்கு?”
“ நான் கேட்டதற்கு முதல்ல பதில் சொல்லு”
“ கோச்சுக்க மாட்டேன், சும்மா சொல்லுங்க..”
” உடனே வேண்டாம். நிதானமா யோசிச்சு பதில் சொன்னாப் போறும் “
“என்னங்க சொல்லப் போறீங்க?”
ஆர்வத்துடன், கேட்டாள், வனஜா.
”அது வந்து..அது வந்து..”
“ அட, சும்மா சொல்லுங்க”
கிரிக்கு பிரளயம் நடக்குமோ என்று ஒரு பயம்.அந்த பயத்தை பாசம் வென்றது!
“ வனஜா.. நீ இப்ப இருக்கிற நிலையில, யாராவது பெரியவங்க வீட்ல இருந்தா
நல்லா இருக்குமில்ல..அதான்..எங்க அப்பா,அம்மாவை மறுபடியும் வீட்டுக்குக்
கூட்டிகிட்டு வரலாமான்னு தான்..கொஞ்ச நாளைக்கு மட்டும் ”
கிரியின் குரல் தழுதழுத்தது.
வனஜா செல்லமாக வள்ர்ந்த பெண்..அவன் அம்மாவிற்கும்,அவளுக்கும் ஒத்து
வராததினால், திருமணம் ஆன ஆறாவது மாசமே, அவள் ஆஃபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர்
மூலம் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டாள்.
அதற்குத் தான் கிரிக்கு இத்தனை தயக்கம்!
” வாவ்.. ”
துள்ளிக் குதித்தாள், வனஜா..
”பார்த்து..பார்த்து...குழந்தை..”- பதறினான், கிரி.
” நானே உங்க கிட்ட சொல்லணுன்னு நினைச்சேன்..குட்டிப் பாப்பாக்கு கதை சொல்ல
தாத்தா, பாட்டி இருந்தாத் தானே நல்லா இருக்கும்..அவங்க இனிமே எங்கேயும் போக வேண்டாம்..இனிமே அவங்க எப்ப்வும் இங்க தான் இருப்பாங்க..”
“எதனால இந்த திடீர் மாற்றம்?”
கெமிஸ்ட்ரி புரியாமல்,முழித்தான், கிரி.
“...இந்த ஆம்பளைங்களையே.. நம்ப முடியாது. நேற்று வந்த பொண்டாட்டி பேச்சக் கேட்டு பெத்தவங்களையே, முதியோர் இல்லம் அனுப்பிச்ச ஆளு தானே, நீங்க..? நாளைக்கு
உங்க புள்ளையும் இப்படி செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்? அதுக்குத் தான் ஒரு கூட்டுக் குடும்ப சூழலில் அவனை வளர்க்கப் போறேன்”
செல்லமாக அவன் குமட்டில் வனஜா குத்த, மயங்கி விழுந்தான், கிரி!

வேர்கள்..தளிர்களையும் பார்க்கும்!!!

Thursday, November 25, 2010

யாதும் ஊரே...யாவரும் கேளிர்...

யாதும் ஊரே..
யாவரும் கேளிர்!
நீங்களும்...கரட்டாம்பட்டி..
நானும் கரட்டாம்பட்டி..
நீங்க படிச்சது
ஷண்முகா பாடசாலை..
நான் படிச்சதும்
ஷண்முகா பாடசாலை
நீங்க என் சித்தப்பா பிள்ளை..
நான் உங்க பெரியப்பா பிள்ளை...
அப்ப, பையைத் திறந்து,
பிஸ்கெட்டைக் கொடுங்க..
நம்பி சாப்பிடலாம்..!
( தொலை தூர ரயில் வண்டி பிரயாணத்தில் இருவரின் உரையாடல்)

Tuesday, November 23, 2010

விரல் நுனியில்...


" ஐயையோ...என் பர்ஸ்"
" பிக் பாக்கெட்"
" விடாதே.."
" பிடி"
" குத்துங்கடா எல்லாரும்."
பிடிபட்டேன், நான்.
அதுவும் முதல் தடவையாய்!
ஆளாளுக்கு நொக்கி எடுக்கிறார்கள். எவனிடமோ, திருட்டு கொடுத்தவனெல்லாம்
என்னிடம் வந்து பழி தீர்த்துக் கொள்கிறான் போல....
அடித்த அடியில் மயக்கம் வருகிறது....
.. விட மாட்டான்கள் போல இருக்கிறதே!
கண்கள் சொருகிக் கொண்டே போக...
தண்ணீ...தண்ணீ...
வாய் முணுமுணுக்க....
நான் மட்டும் ஏன் இப்படி?
என்ன செய்வது? பாழும் பசி, தேவை மேலும் சூழ்நிலை.. அடுத்தடுத்து இறந்த பெற்றோர்...எங்கே பாரமாய் ஒட்டி கொண்டு விடுவானோ என்ற உறவுகளின் உதாசீனம்.....

இப்படி இருக்கிறேனே..அந்த நாளில் நாங்கள் விளையாடும் விளையாட்டே..'திருடன் போலீஸ் அதில் நான் தான் போலீஸ் . பாக்கி பசங்க எல்லாம் திருடன். ஒவ்வொருத்தனையும் கப்பு..கப்புன்னு பிடிப்பேன். அதிலும் அந்த ராஜேஷை சொல்லி வைச்சு புடிப்பேன்..எல்லா விளையாட்டிலுன் நான் போலீஸ்..அவன் திருடன்.

மணி..வெங்கிட்டு...பாலு...எல்லா திருட்டுப் பசங்களையும் (விளையாட்டுல தான்)பார்த்தாச்சு. எல்லாப் பசங்களும் கௌரவமாய் இருக்க, நான் மட்டும் அவலமாய்...சமூகத்தின் கிழிசலாய்......
ஐயோ..ஆண்டவன் என்ன மட்டும் ஏன் இப்படி படைச்சான்?
போன வாரம் கூட ரகு கண்ணில் பட்டான். .ப்ரொஃபஸராய் இருக்கிறானாம்.
"நீ.......?" - என்றான்....
"விரல் நுனி வித்தகன் "
" அப்டீன்னா?"
முழிப்பு வந்து விட்டது.
தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்திருப்பார்களோ?
திருட்டுப் பயலுக்கு மரியாதை? எவன் தருவான்?
கைகளில் சிராய்ப்பு....ரத்த கசிவு..உதடு கிழிந்து...சட்டை..கைலி ...டர்.....ர்....ராகி
பிறாண்டி இருக்கிறார்களே!
அட ...இதென்ன.. B 2 போலீஸ் ஸ்டேஷனா?....எஸ். ஐ. வளையாபதி... ஒரு கொலைகார பாவி ஆச்சே..
கொன்னு போட்டுவானே...அட கடவுளே!
கண்களை சிரமப் பட்டு திறக்கிறேன்...
வெளிராய்..
எதிரில்....
.வளையாபதி இல்லை..
அப்ப இது யாரு...
புது ஆளா?...
கண்களை மீண்டும் சிரமப் பட்டு, அகலமாய் விரிக்க...
... ராஜேஷ் ?

Saturday, November 20, 2010

என்னுள் எழுந்த ஏன்கள்????



( கற்றறிந்த பெரியவர்களின் விளக்கத்திற்காக...... )

* மலையை ‘அவனா’கவும், நதியை ‘அவளா’கவும் கூறல் மரபு.பின்
அந்த நதிக்கு மட்டும் பிரம்மபுத்ரா என்கிற பெயர். ஏன்?
* பொய்யான இவ் யாக்கையை மெய் என்று கூறுகிறார்களே, அது ஏன்??
* ’ஐயம் இட்டு உண்’ என்பது முது மொழி. அவ்விடத்தில் ’இட்டு’ என்பது
சற்றே இழி நிலையைக் குறிப்பதல்லவா? ‘ விருந்தினர் போற்றுதும்..’
’அதிதி தேவோ பவ..’ என்று விருந்தினர்களை உயர்வாய் மதிக்கும் போது
அந்த ‘இட்டு’ இங்கு ஏன்???
* ‘ கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்கிறான் கம்பன். அனுமனின்
வாயிலாக ‘கண்டேன் சீதையை’ என்று சுருக்கமான சொன்ன அந்த
’சொல்லின் செல்வன்’ ’கண்டனன்...கண்களால்’ என்கிறானே. கண்களின்
வரவு அங்கு தேவை இல்லையே? அது ஏன்????

Friday, November 19, 2010

சாரல்.....


வற்றாத காவிரியைப்
பார்க்கையிலே பரவசம் போல்,
நற்றாமரைக் குளத்தில்,
நறுமணமும் பூத்தது போல்,
கற்றாரைக் காண்கையிலே...
புலமை நம்முள் புகுந்தது போல்,
உற்றாரை உவகைக் கொள்ளும்,
உதவி செய்யும் பாங்கினைப் போல்,
குற்றால அருவி தனில்,
குளிக்குமந்த பரவசத்தை...
முற்றாத தமிழினிலே,
முயலுகின்றேன்...முடியவில்லை !!!!

Friday, November 12, 2010

மசால் தோசையும்...'மைசூர் கேஃப்'பும்...........

ஏற்கனவே கோதையாறு லோயர் கேம்ப் பற்றி
சொல்லி இருக்கிறேன். நாகர் கோவிலில் இருந்து அம்பாடி எஸ்டேட் வழியாகப் போக வேண்டும். 'கர்ரூஸ்' மாதிரி வீடுகள்..ஒரு அடுக்கில் ஐந்து வீடுகள்..அதற்குப் பிறகு பத்து
படி மேல் ஏறினால், அடுத்த அடுக்கு. இப்படியே
போய்க் கொண்டிருக்கும்.
கொஞ்சம் மேலே சென்றால், அங்கு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷெட். மேலே புகை போக்கியில் இருந்து எப்போதும் புகை வந்து கொண்டிருக்கும்.விடாமல் பாட்டு தான்.
அப்போது ஃபேமஸாய் இருந்த 'முத்துச்
சிப்பி மெல்ல, மெல்ல நடந்து வரும் ' என்ற
சினிமா பாட்டு..அது விட்டால் ஒரு கிறிஸ்டியன் கரோல்..' ஸர்வ லோகாதிப நமஸ்காரம்..' என்று..அதை விட்டால் ' தேவாதி தேவனே வா..கார்த்திகேயனே வா..எந்தன் உள்ளம் அழைக்குதிங்கு வாராய்' என்ற பாடல்..
அது தான் எங்கள் மைசூர் கேஃப் !
அண்ணா முதல் தடவையாய் அங்கு எங்களுக்கு டிஃபன் வாங்கி தந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அண்ணா ப்ராஜக்ட்டில் அட்மினிஸ்ட்ரேஷன் பார்த்ததினால் ஏக மரியாதை!
" ஸார்...உங்க பசங்களா? "
" தம்பி என்ன படிக்கிறீங்க.."
" தம்பி நீங்க.."
என்று பொடியன்களான எங்களுக்கும்
மரியாதை. ஆலையில்லா ஊருக்கு அது ஒன்று தான் இலுப்பப் பூ என்பதால் எப்போது பார்த்தாலும் செம கூட்டம் இருக்கும்.
அந்த சமயத்தில் தான், நாங்கள் ராணி படிக்க ஆரம்பித்தோம்..தினத்தந்தியில் 'கன்னித் தீவு' படிக்க ஆரம்பித்தோம். ராணியில் உள்ள
படங்களைப் பார்த்து, படம் வரைய பழகினோம். இன்னமும் ராணியில் வந்த அந்த 'குரங்கு குசலா'
கார்ட்டூன் ஞாபகம் இருக்கிறது.
ஆஹா..அந்த மைசூர் கேஃப் ஐ அம்போ என்று விட்டு விட்டோமா? இல்லை..இல்லை..இதோ, விஷயத்துக்கு வருகிறேன்
அந்த ப்ராஜக்டின் ஹெட் ஒரு 'எக்ஸிக் யூட்டிவ் எஞ்சினீர்'. அவர் ஒரு நாள் 'ரவுண்ட்ஸ்'
போகும் போது, பசித்தது போல இருந்தது. ' வாய்யா' என்று அண்ணாவையும் கூப்பிட்டுக் கொண்டு 'மைசூர் கேஃப்' சென்றார்.
சூடாக மசால் தோசை ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, அந்த 'எக்ஸிக் யூட்டிவ் எஞ்சினீர்' வினோதமாய் ஒரு காரியம் செய்தார். அவர் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் போண்டா வைத்திருந்த பேப்பரை யாரும் பார்க்காத போது 'லபக்' செய்தார். அண்ணா பார்த்தவுடன் 'உஸ்'என்று சைகை காண்பித்து, 'ஆஃபீசுக்கு வா சொல்றேன்' என்றார் மெதுவாக.
அண்ணாவிற்கு ஒரே குழப்பம்!
ஆஃபீஸ் போனதும் முதல் வேலையாய்
அந்த EE , ப்யூனைக் கூப்பிட்டு STORE KEEPER ட்ட, நான் கேட்டதா இந்த STORE RECEIPT VOUCHER ஐ வாங்கிண்டு வா' என்றவர், அண்ணாவைப் பார்த்து 'இப்ப கூத்தை பாரு' என்று சிரித்தார்.
கொஞ்ச நேரத்தில அந்த 'எஸ்.கே' 'துண்டைக் காணோம்..துணியைக் காணோம்'
என்று ஓடி வந்தார்.
' ஸார்..அந்த வவுச்சர் இல்லியே ஸார்..உங்க கிட்ட கையெழுத்துக்கு வைச்சிருக்கேனோ'
' எனக்கு பார்த்த ஞாபகம் இல்லியே,
நீயே பாரு என் டேபிள்ள..'
' ஸார்...இல்லியே..ஸார்..'
' எங்கே போச்சு, அது?'
'எஸ்.கே' யின் முகம் பரிதாபமாக இருந்தது.
கொஞ்ச நேரம் அவரை தவிக்க விட்டு, அந்த EE 'இதுவா, பாரு' என்று பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர் எடுத்தார்.
அது மைசூர் கேஃபில் பக்கத்து நபர் போண்டா சாப்பிட்டு போட்ட பேப்பர்..
அந்த SRV !
' என்னய்யா ஆஃபீஸ் நடத்திறீங்க..இதோ இப்பவே உனக்கு ஒரு 'மெமோ' கொடுக்கப் போறேன்..'
ஒரு 'மெமோ'வில் ஆரம்பித்து கொஞ்சம் அடங்கி, ஒரு 'வார்னிங் லெட்டர்' குடுக்கலாம்னு, தீர்மானிச்சு, கடைசியில ஒரு காட்டுக் கத்தலோட விஷயம் முடிஞ்சது!
அன்னி ராத்திரி அண்ணா இந்த விஷயம் சொல்லிட்டு ஒன்று சொன்னது, இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
' ஆஃபீஸர்ங்கிறவன் சீறலாம்..ஆனா கடிக்கக் கூடாது ! '

Tuesday, November 9, 2010

கருந்தேள்...!!!!!!


வாயகன்ற பாத்திரத்தில் வைத்திடலாம், மூடி
திறக்கின் முகம் காட்டும் - கவிழ்த்திட்டால்,
கொட்டும்; நல் மருந்துக்குமாகும்,ஆதலினால்,
கருந்தேளைக் கவின் தேனெனக் காண்!

Thursday, November 4, 2010

விடிந்தால் தீபாவளி!

அவிங்க இருக்கிற இருப்புக்கு, அவிங்க ஆத்தா, அப்பன் அவிங்களுக்கு வைச்ச பேரு கொஞ்சம் ஓவர் தான். ஏளாம் பொருத்தம்! ஆனா, ரொம்ப, ரொம்ப சந்தோசமாவே இருக்காங்க. எப்படீங்கிறீங்களா?
இதோ சாட்சியா ரெண்டு புள்ளைங்க...
ஆறாம்ப்பூ படிக்கும் வள்ளி,
நாலாப்பூ படிக்கும் ராசு...குஞ்சு,குளுவாங்களாக!
இந்த வருசம் தீபாளிக்கும் போனசு கிடையாதுனுட்டாங்க...போன வருசம் பட்ட
பாடு நியாபகம் வந்துச்சு..இந்த வாட்டி கொஞ்சம் சுதாரிப்பா இருந்துட்டான்,ரத்தினம்.
பய, புள்ளங்களுக்கு முன்னாடியே துணி வாங்கி தைக்கக் கொடுத்துட்டான். அதுவும் ரெடி!
வள்ளி புள்ள கொஞ்சம் விவரம் தெரிஞ்சதுனால 'சரி'ன்னுடுச்சு. இந்த ராசுப் பய மட்டும் 'ங்கொய், ங்கொய்' ன்னுட்டு இருந்தான். இன்னொரு சொக்கா வேணுமாம்.
பட்டாசு ஒரு நூறு ரூபாய்க்கு வாங்கி கொடுத்து அவனையும் சமாளிச்சுட்டான். மாணிக்கத்துக்கும் புடவை இருக்கு. அவனுக்கும் வேட்டி, துண்டு முதலாளி குடுத்துட்டாக..
இனி என்ன கவலை. ஜோரா தீவிளி கொண்டாட வேண்டியது தான்!
இருந்தாலும்....
அவனுக்கு அவசரமாய் ஒரு இரு நூறு ரூபாய் தேவையாயிருந்தது. தீவிளி சமயத்தில் யாரிடம் போய்க் கேட்பது? அவன் சேக்காளிகளும் அவனைப் போல சம்சாரிங்க தான்.
என்ன செய்யலாம்?
யோசித்துக் கொண்டிருந்த ரத்தினத்துக்கு
திடீரென்று அழைப்பு.
'ரத்னம், கேஷியர் உன்னைக் கூப்பிடறாருய்யா?'
பதட்டத்துடன் ஓடினான்.
'எதுக்காக கூப்பிடறாக? சம்பளம் கூடப் போச்சுன்னு எதாவது புடிச்சுத் தொலைக்கப் போறாங்களோ பண்டிகை சமயத்துல ?'
'இந்தாப்பா, ரத்னம். இதுல ஒரு கை எளுத்துப் போடு'
' எதுக்குங்க ஐயா?'
' போடச் சொன்னா, போடுய்யா' - சிரித்துக் கொண்டே சொன்னான் பக்கத்து ஆள்.
'என்னமோ, ஏதோ தெரியலேயே, சாமி நீ தான் காப்பாத்தணும்'
கையெளுத்துப் போட்டான், ரத்னம்.
சர சரவென்று நான்கு புத்தம் புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகளை நீட்டினார்.
' எதுக்குங்க, ஐயா?'
' போன வாரம் ரத்தம் கொடுத்தேயில்ல.
அதுக்கு ஒரு நாள் 'வேஜ்' சாங்க்ஷன்' ஆயிருக்கு'
சுத்தமாய் மறந்தே விட்டான். மில்லில் ரத்த தானம் செய்பவருக்கு ஒரு நாள் கூலியும், ஹார்லிக்ஸ், ஆரஞ்சு என்று தருவார்கள். அந்த பணம் இது. சரியான சமயத்தில் வந்திருக்கு.
ரத்தினத்துக்கு கால் தரையில் பாவவில்லை. எப்படா சங்கு ஊதும் என்று காத்திருந்தான்.
சங்கு ஊதியதும் கிளம்பி விட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் கடைத் தெருவில் நின்றது, அவன் சைக்கிள்!
பணம் கிடைச்சாச்சு. ஆனா, பொருள் கிடைக்கணுமே. ஒரு வாரம் முன்னால, அந்த வெலை சொன்னான். இன்னிக்கு அந்த விலைக்கு கொடுப்பானா? அது இத்தன நா விக்காம வேற இருக்கணும். கடவுளே....
ரத்தனத்துக்கு அதிஷ்டம் இருக்கு.
அவன் எதிர்பார்த்த வெலையிலேயே அது சொன்னான். டொக்குனு, பையில வாங்கிட்டு,
ஒரே அழுத்து தான். ஒரே மிதி தான்!
அவன் குடிசை வந்தாச்சு!
புள்ளங்க காணலே..பக்கத்து வூட்ல வெளையாடப் போயிருக்கும். இந்த மாணிக்கத்தை எங்கே காணோம்?
" மாணிக்கம்..மாணிக்கம் "
ஊஹூம்...எங்கே போனாளா?
'ச்சே..சமயத்தில் இருக்க மாட்டா'
அலுத்துக் கொண்டே டீ போடும் போது, மாணிக்கம் வந்தாள், வாயெல்லாம் பல்லாக..
' மச்சான்..என்ட்ட வித்யாசமா எதாவது தெரியுதா?'
'தெரியலேயே, தாயீ'
' நல்லா கைய உத்துப் பாரு, மச்சான்'
ரத்தனத்துக்கு அவ்வளவு தான் பொறுமை!
'அது கிடக்கட்டும், களுதை, இந்தா இத எடுத்துக்கோ'
வெகு ஆசையாய் அந்த அட்டை பெட்டியை நீட்டினான்.
திறந்து பார்த்தவளுக்கு ஆச்சர்யம்!
' அடி, ஆத்தி. காசுக்கு என்ன பண்ணினே மச்சான். கடன் கூட வாங்க மாட்டியே நீ ?'
' முன்னாடி இத களுத்தில மாட்டிக்க'
' ஊஹும்...நீ சொன்னா தான் '
' அது ஒண்ணும் இல்ல புள்ள. அன்னிக்கு கடை வீதில நீ இந்த செயினை வாங்க ஆசைப் பட்ட இல்லியா? எப்படியும் தீவிளிக்குள்ள உன் களுத்துக்கு இது வந்துடணும்னு எனக்கு வெறி?'
' இந்த கதையெல்லாம் வாணாம்..காசுக்கு என்ன பண்ணினே சொல்லு. போனசு போட்டுட்டாங்களா?'
' நல்லா போடுவாங்களே..போனவாரம் ரத்த தானம் செஞ்சேனில்ல.... சுத்தமா மறந்து போச்சு. அதுக்கு ஒரு நா சம்பளம் குடுத்தாங்க..ஒரே ஓட்டம் தான். அந்த செயினு கடையில தான்
ஐயா நின்னாரு...அது சரி, நீ என்னமோ சொன்னியே, இன்னாது'
' கையப் பாரு'
' அடங்கொப்புறானே...வாச்சு..ஆம்பள வாச்சு போல கீது? '
' உனக்குத் தான் மச்சான், அது. அன்னிக்கு ஒரு தபா பேசும் போது கைல வாச்சு இருந்தா நல்லா இருக்குன்னியே..அதுக்குத் தான்..இந்தா கட்டிக்கோ'
' பணத்துக்கு என்ன பண்ணினே புள்ளே? '
' நம்ம ராசுவோட இசுக்கூல்ல படிக்கிறானே அந்த பெரிய வீட்டுப் பக்கம் போயிருந்தேன். அந்த அம்மா ரொம்ப நல்லவங்க..செடியெல்லாம் காயுது பாருன்னு வருத்தப்பட்டாங்க..ரெண்டு குடம் தண்ணி ஊத்தினேன்..கஸ்டமே இல்ல மச்சான்..ரொம்ப சுளுவாத் தான் இருந்தது. அவங்க தான் நூறு ரூபாய் கொடுத்தாங்க...'
' காசு வாங்கினியா? ' - வேதனையுடன் கேட்டான், ரத்தனம்.
' உம் பொஞ்சாதி மச்சான் நா. கூலி எல்லாம் கொடுத்து கேவலப் படுத்தாதீங்க.. ன்னுட்டேன்..பட்டுனு..ஆனா, அவிங்க விடலியே?'
' என்ன சொன்னாக?'
' அசடே, உனக்கு யாரு இங்க கூலி கொடுத்தா..தீபாவளி செலவுக்கு அக்கா கொடுக்கிறதா வைச்சுக்கோன்னுட்டாங்க..அதான்....'
' .... புள்ள.. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்..நாலு குடம் தூக்கினா, கை வலிக்குமேம்மா உனக்கு?'
' அடப் போ மச்சான் எனக்கு ரத்தத்தை
வித்துல்ல நகை வாங்கியிருக்கே நீ.....'
குலுங்கி..குலுங்கி அழுதாள், மாணிக்கம்!
' அளுவாத புள்ளே '
ரத்தனமும் அழுதான்.
வீட்டுக்கு ஓடி வந்த புள்ளைங்க இவங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க,
இப்போது மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தார்கள் பொஞ்சாதி, புருசன் ரெண்டு
பேருமே!!

(பின் குறிப்பு: ஓ.ஹென்றியின் 'THE GIFT OF MAGI' படித்ததின் பாதிப்பு இச்சிறுகதை)