Monday, September 27, 2010

நச்.. !..நச்...!...நச்...!!!.....

*
பள்ளிக்குச்
செல்லும்
செல்லப்
பிள்ளைகளே!
அரசிடம்,
மட்டும்
வாங்குங்கள் !
ஆசிரியரிடம்,
வாங்காதீர்கள் !!
முட்டைகளை!!!

**
ஒரு அவசரச் சட்டம்
போட்டு,
ஊழலையும்..
விளையாட்டாக்குவோம்!
காமன் வெல்த் கேம்ஸில்,
அதிகத்
தங்கப் பதக்கங்கள்,
நமக்குத் தான்!!
***
தனிப்பட்ட ஒருவருக்கு
சொந்தமான,
டாடா குழும..
குடும்ப கம்பெனிகளை
நிர்வகிக்க
வெளியிலிருந்து..
கைகள்..
நம் எல்லாருக்கும்
சொந்தமான
நாடோ ?
குறிப்பிட்ட
குடும்பங்களின்
கைகளில் !!!

Saturday, September 25, 2010

வளிக்கு ஒரு வந்தனம்!


மரங்களின் அசைவை,
காற்று தான்
தீர்மானிக்கிறது,
என்றான் மா.சே.துங்.
மரங்களின் அசைவை,
மட்டுமல்ல..
மனிதர்களின் அசைவையும்,
ப்ராணனாக,
அபாணனாக..
உபாணனாக...
காற்று தான்,
தீர்மானிக்கிறது.
இனிமையாய்,
அது,
நம்மைத்
தீண்டும் போது
தென்றல்...
புரட்டிப் போடும்
போது புயல்..
கவர்ச்சிகரமான
பெயரில்
அலைக்கழிக்கும் போது,
அதன் பெயர்,
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வளியே,
உன்னை,
வணங்குகிறேன்..
என்னை
இது வரை,
வாழ வைத்ததிற்கு..
மட்டுமல்ல...
இனி,
வாழ வைப்பதற்க்கும் !!!!!

Wednesday, September 22, 2010

நான் கடவுள்...!!!!!!!


எல்லாம் கர்ம
வினைப்படி..
விதிப்படித்
தான் நடக்கும்....
நடக்கிறது.....
நியூட்டனின்
மூன்றாவது விதிக்
கோட்பாடின் படி,
தான்
உலகமே
சுழல்கிறது...
பின்
கடவுள் இங்கு
எங்கு வந்தான்
என்றான்,
பகுத்தறிவாளன்
ஒருவன்!
அட ..ஆமாம்...
போல இருக்கே
என்று,
நான் நினைக்கையில்,
வயோதிகன் ஒருவன்
பெரிய மரத்தை,
இழுக்க முடியாமல்..
இழுத்துக் கொண்டும்,
உஸ் உஸ்ஸென்று
பெரு மூச்சு விட்டுக் கொண்டும்,
'அடக் கடவுளே' என்று,
புலம்பிக் கொண்டும்
ஆற்றுப் பாதையில்
வர...
இது இவனுக்கு
இடப் பட்ட விதி..
இங்கு
கடவுள் எங்கு
வருவான் என்று
நான் யோசித்தேன்....
திடீரென்று ஒரு
பெரு மழை பெய்து...
வெள்ளமாய் பெருகி,
மரம் இழுக்கும்
அவன் வேலையை,
அது..
மிக மிகச்
சுலபமாக்க...
' நான் கடவுள்'
என்றது மழைத்துளி,
அப்போது,
சிறிதும் கர்வமின்றி!!!

Monday, September 20, 2010

ஆட வரலாம்.....


' ஆடவரெல்லாம்..ஆட வரலாம்....'
ஏதோ ஒரு அரதப் பழசான சினிமாவில, ஏதோ ஒரு கவர்ச்சி நடிகை , ஏதோ ஒரு சீனில், ஏதோ ஒரு ஆட்டம் போட்டது, எல்லாருக்கும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ..ஆனால், பின்னணி பாடிய அந்த கவர்ச்சி கரமான குரலுக்குச் சொந்தக் காரரான எல்.ஆர்.ஈஸ்வரியை அத்தனை பேருக்கும் ஞாபகம் இருக்கும் என்பதே அழுத்தமான உண்மை!
எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்துக்களில் வாழ்கிறார்கள் என்று சொன்னால் அதை யாரும் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அத்தனையும் கப்ஸா! சுத்த ஹம்பக்!!
உதாரணத்திற்கு , இந்த பாட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன். உயிரைக் கொடுத்து ஒருவர் பாடல் எழுதுகிறார்..உயிரைக் கொடுத்து ம்யூசிக் டைரக்டர் ஒருவர் அதற்கு மெட்டு போடுகிறார். குறைந்தது, ஆறிலிருந்து பத்து பேராவது அந்த பாட்டிற்கு இசைக் கருவிகளில் உயிரைக் கொடுத்து, இனிய இசை எழுப்புகிறார்கள். உயிரைக் கொடுத்து, ஒருவர் அத்தனையையும் படம் எடுக்கிறார். உயிரைக் கொடுத்து நீங்களும் இதை படித்துத் தொலைக்கிறீர்கள்!
ஆனால், எட்டே நிமிடத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பெயரைத் தட்டிக் கொண்டு செல்கிறார்.
அது போலத் தான், பிள்ளையார் சதுர்த்தி இருக்கும் வரை பிள்ளையார் இருப்பார். பிள்ளையார் இருக்கும் வரை சீர்காழி கோவிந்தராஜனும் ஏதோ ஒரு 'லவுட் ஸ்பீக்கரில்'
'வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தார்' போன்ற தன் கணீரென்ற குரலில் வாழ்ந்து கொண்டிருப்பார்!
மற்றபடி..பாடல் பாடியவர்..மெட்டுப் போட்டவர்..வாத்ய கோஷ்டி..அத்தனை பேரும் அம்பேல்!
எதற்கு இத்தனையும் சொல்கிறேன் என்றால், நல்ல குரல் வளம் உள்ளவர்கள் நாளும் வாழ்கிறார்கள், அவர்களது இனிமையான குரலால்!
அந்த குரலுக்கு எது தேவை?
அந்த 'லிங்க்' இந்த கட்டுரையின் கடைசியில் !
அது இருக்கட்டும்.
விட்ட ஆட்டத்திற்கு வருவோம். யாராவது ஆடினால் பார்க்க குஷியாகத் தான் இருக்கிறது. சர்க்கஸில் 'பாரில்' ஆடிகிறார்கள். கழைக் கூத்தாடி ஆடுகிறான். கவர்ச்சி நடிகைகள் ஆடுகிறார்கள்....பரத நாட்டியம்.. ரத்ன சபையில் அந்த ஞானக் கூத்தன் ஆடுகிறான். கண் குளிர தரிசிக்கிறோம். ரசிக்கிறோம்..ஆனந்தப் படுகிறோம் !
ஆனால், இத்தனை ஆட்டங்களும் வெளியில் தான்.
உள்ளே ????
உதாரணத்திற்கு பல் ஒன்று ஆடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதுவும் கடைவாய் பல்.. கழைக் கூத்தாடி போல்...சிற்சபேசன் போல் ....அழகாய்த் தான் ஆட்டம் போடுகிறது.ஆனால் அதை ரசிக்க முடிகிறதா?
வலி ப்ராணன் போகிறது.
சூயிங்கம் போட்டு அதற்கு விடுதலை கொடுக்கலாமென்றால், புத்திர சிகாமணி அதை தடுக்கிறான்.
' அப்பா..டாக்டர்ட்ட போ..அப்பத் தான் ஆணி வேரோட எடுக்க முடியும். அதுவும் கடவாய் பல்லுங்கறே '
எனக்கு பயம்!
ஆனால், பயத்தை வலி ஜெயிச்சது!
விளைவு. சகல விதமான ஆயுதங்கள் புடை சூழ நின்ற ஒருபல் டாக்டர்
அவர் முன்னால் நிராயுதபாணியாய் நான்!
' என்ன செய்யுது?'
பல்லைக் காட்டினேன். அது விவஸ்தை இல்லாமல்..ஆபத்து எதிரில் இருப்பது தெரியாமல் ஆட்டம் போட்டது!
'கவலைப் படாதீர்கள், ஸார். மரத்துப் போவதற்கு ஒரு ஊசி போடறேன்'.
ஊசியும் போட்டார்!
உஸ்...ஸென்று ஜிவ்வென்று என்னுள் புகுந்து கொள்ள...
ரொம்பவும் சந்தோஷமாய்..நம நமவென்று...
'அட சுத்தமா வலிக்கலியே! ஐந்து ரூபாய் சைஸ் உச்சந்தலை வழுக்கை..குழி விழுந்த கண்கள்..ஒடுங்கிய கன்னம்..முகத்தையே திருகி வேறோரு அழகான முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுடலாம்
போல் இருக்கே'
கற்பனை குதிரை தறி கெட்டு ஓடும் போது டாக்டரின் குரல் கடிவாளமாய்...
குறடுடன் அவர்!
பல்லுடன் நான்!!
ஒரு நொடி..
ஒரு நொடி தான். இரண்டுமே இடம்
மாறி விட்டன!
இப்போது....
எண்பது ரூபாய் டாக்டருக்கும், நூற்றி இருபது ரூபாய் மருந்துக்காகவும் மாசக் கடைசியில் என் பர்ஸிலிருந்து பிடுங்கப் பட்டது!
நீங்களே சொல்லுங்கள்.
உள்ளே ஆடும் ஆட்டம் அவ்வளவு சுவாரஸ்யமானதா, என்ன?

Wednesday, September 15, 2010

ஒரு மனைவியின் மறு பக்கம் !


வழக்கம் போல் 'ஹிண்டு'வை ஒரு ''க்ளான்ஸ்' புரட்டி விட்டு சாப்பிட உட்கார்ந்தான்,தியாகு. சாப்பிடும் போது தான் இருவருக்கும் குருக்ஷேத்திரம் நடக்கும். மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட சாப்பாடு ஒட்டும் என்று அவளும் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டாள்.
" ஏண்டி, புருஷனுக்கு இருக்கிற ரோஷம் போறும்னுட்டு தீர்மானம் பண்ணிட்டியா?'
காட்டுக் கத்தலாகக் கத்தினான், தியாகு.
"என்ன ஆச்சு..ஏன் இப்படி கத்தறீங்க?"
" ஆமாம்..நான் அலர்றது மட்டும் தெரியுதாக்கும். சாம்பார்ல, உப்பே போடல்லே"
" உப்பு இல்லாட்டி போடறேன். அதுக்கு இப்படி கத்தணுமா? அண்டை அசல்லே மனுஷங்க இருக்காங்க..மெதுவாத் தான் பேசுங்களேன், ப்ளீஸ் !"
இதையும் அவள் பயந்து கொண்டு தான் சொன்னாள்.
அவளை ஒரு முறை முறைத்தான், தியாகு.
" சம்பாதிக்கிற திமிர்டி, உனக்கு. பேச மாட்டே நீ ? இருக்கிற இடத்தில உன்னை வைச்சிருந்தா தெரியும்?"
" எல்லாம் இருக்கிற இடத்தில தான் இருக்கேன்"
மெல்ல முணுமுணுத்தாள். அவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும்.
" சமைக்க வக்கு இல்லாத கழுதைக்கு பேச்சு வேறயா.....?"
ஆத்திரத்துடன் சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்தான். கத்தரிக்காய் 'தான்'கள் மொசைக் தரையில் சிதறிக் கொண்டு ஓடின. எரிச்சலுடன் குழம்பு பாத்திரத்தை எட்டி ஒரு உதை விட்டான்.
.... எங்கிருந்து தான் நமக்குன்னு இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கோ.. சனியன்..இத்தனை அண்ணன்,தம்பி,தங்கைகளோடு பிறந்தாளே..அவளை யாரும் 'டீ' போட்டுப் பேசியதே கிடையாது.
விக்கித்து நின்றாள், மாலதி. ஒரு வினாடி நேரம் தான். பிறகு என்ன தோன்றியதோ..கண்களை புறங்கையால் துடைத்து விட்டு, பொங்கி எழுந்த விசும்பலையும் அடக்கிக் கொண்டு ஒரு வித வீராப்புடன் பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி வைத்தாள்.
" என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு? கேள்வி கேட்கிறவன் என்ன மடையனா? வேலையை 'ரிசைன்' பண்ணிட்டு ஒழுங்கா வீட்டு வேலையைப் பாரு. நீ சம்பாதிச்சு குப்பைக் கொட்டினது போதும்"- தியாகு வெடித்தான்.
"இரண்டு பேர் சம்பாதிக்கும் போதே, கஷ்டமா இருக்கு. வேலைலேர்ந்து நின்னா இன்னும் கஷ்டப் படுவோம்."
" ஏதாவது எதிர்த்துப் பேசினே, பல்லை உடைச்சுடுவேன், ராஸ்கல்" கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.
" கலர் டிவி.,ஃப்ரிட்ஜ்,ஃப்ளாட் இதுக்குத் தவணை கட்டத் தான் உங்க சம்பளம் வரும். சாப்பாட்டுக்கு திருவோடு ஏந்திகிட்டுப் போக வேண்டியது தான்"
யதார்த்தமாய் சொன்னாள், மாலதி.
" சரி தான் வாயை மூடுடி..உள்ள சம்பளத்துல குடித்தனம் பண்றதுக்கு வக்கில்லே. உனக்கு பேச்சு ஒரு கேடு?"
உறுமியவாறு ஆஃபீசுக்குக் கிளம்பி விட்டான், தியாகு.

லஞ்ச் அவர்!
சக அலுவலர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான், தியாகு.திடீரென்று அவனை 'பாஸ்' கூப்பிட்டதால் சற்றே கலந்தது அந்த அரட்டைக்குழு.
தயங்கியவாறே ரூம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான், தியாகு.
" எஸ். கம். இன்.."
சேரில் பட்டும், படாமலும் உட்கார்ந்தான், தியாகு.
" அந்த விஜய் அண்ட் கம்பெனி லெட்டரை "டைப்" பண்ணிட்டீங்களா, மிஸ்டர் தியாகு?"
" இல்ல..."
" இன்னும் பண்ணலியா? நாளைக்குப் போயாகணும், மிஸ்டர். முதல்ல அதைப் பாருங்க."
மெள்ள எழுந்து கொள்ள எத்தனித்தான்.
" பொறுங்க..அந்த பாட்லிபாய் காண்ட்ராக்டர் பில்லைப் 'பாஸ்' பண்ணியாச்சா?"
" பண்ணிடறேன்.."
சொல்லும் போதே குரல் பிசிறியது, தியாகுவிற்கு.
" சரி..அந்த விவேக் கம்பெனி டெண்டர் டாக்குமெண்ட்ஸை ஃபோட்டோ காப்பியாவது எடுத்தாச்சா? மூன்று நாள் முன்னால சொன்னது, அது ?"
இயலாமையுடன் பார்த்தான், தியாகு.
" என்ன மேன், பார்க்கறீங்க? வெட்டிப் பொழுதைப் போக்கிட்டு, வெத்திலையைப் போட்டுக்க ஆஃபீஸில சம்பளம் தரல்லே..இன்னிக்குள்ள இந்த மூணு வேலைகளும் முடிச்சாகணும். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. அப்புறம் எம்மேல வருத்தப் பட்டுப் பிரயோசனமில்ல.."
பொரிந்து தள்ளினாள், மாலதி. அவன் ஹவுஸ் பாஸ் !
" எஸ் மேடம் "
வெளிறிய முகத்துடன், வெளியே வந்து விழுந்தான், தியாகு !!

பின் குறிப்பு: அச்சில் வெளிவந்த என் இரண்டாவது கதை இது.03.02.1985 தாய் இதழில் வெளி வந்தது.

Monday, September 13, 2010

தாழ்ந்தது தட்டு!!


(போஜ ராஜனின் அரசவை.எல்லாரும் அவரவர் ஆசனத்தில் வீற்றிருக்க..வாசலில் சிறு சலசலப்பு)
அவர் :மன்னவனைப் பார்க்க வேண்டும்நான்
காவலன்: தாங்கள் யார்?
( போஜராஜனின் அரண்மனையில் சாதாரண காவல் காரனுக்குக் கூட மரியாதை தெரிந்திருக்கிறது)
அவர் : சொன்னால் தான் விடுவீர்களோ?
காவலன் : ஆம்..தாங்கள் யாரோ?
அவர் : பார் புகழும் பவபூதி வந்திருக்கிறேன்
என்று போய் சொல், உன்
மன்னவனிடம்.
(காவலன் செல்கிறான்..சொல்கிறான்)
போஜன் : வரச் சொல்!
காவலன் : தங்களை வரச் சொல்கிறார், எம்
மா மன்னர்.
போஜன் : (எழுந்து நின்று) வாருங்கள்
ஆசனத்தில் அமருங்கள்..
பவபூதி : மன்னவனும் நீயோ..?
வள நாடும் உனதோ?
அமர வரவில்லை மன்னா,
சமர்புரிய வந்திருக்கிறேன்
சொற்போர் புரிய உம் அரசவையில்
ஆள் இருந்தால் எம்மிடம் சொல்
அதன் பின் அமர்வோம் யான்!!

(போஜனுக்கு வியப்பு! அதனினும் வியப்பு
அவையோர்க்கு!! அந்த அவையில் இது வரை யாரும் இவ்வளவு அநாகரீகமாய் நடந்து கொண்டதில்லை. வந்தவன் விருந்தாளி என்பதால் மன்னவனும் பொறுத்துக் கொள்கிறான்)
(மிஹிரன்...பாணன்...ஆர்ய பட்டன்..மகுடத்தில் சூடிய மாமணி போல் காளிதாஸன்..போஜராஜன் அவையில் ஒவ்வொருவரும் மஹா ரத்னங்கள்.எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். முடிவில் அனைவரும் காளி தாஸனைப் பார்க்கிறார்கள். மன்னனும் 'என்ன சொல்கிறாய்?' என்பது போல் காளி தாஸனைப் பார்க்க, அவன் ஆசனத்திலிருந்து எழுந்து கொள்கிறான்.)
காளிதாஸன் : மன்னனின் ஆக்ஞை அவ்வாறு
இருப்பின் நான் வருகிறேன்
வாதிற்கு.
பவபூதி : எப்போது?
போஜன் : சற்று பொறுங்கள் புலவரே!
அமருங்கள் ஆசனத்தில்!
(வருகின்ற சித்ரா பௌர்ணமி அன்று வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப் படுகிறது)
************************
அன்று சித்ரா பௌர்ணமி! ஆவலுடன் அரசவை கூடுகிறது. எல்லார் முகங்களில் ஆவல் கொப்பளிக்கிறது.
பவபூதி: நான் தான் முதலில் ஆரம்பிப்பேன்.
அரசன்: மெத்த சரி.
பவபூதி கவிதை பாட ஆரம்பிக்கிறான். அப்படியே பொழிகிறது. அம்மன் மேல் ஒவ்வொரு சர்க்கமாக அத்தனையும் கேட்பவர் காதுகளில் சர்க்கரையாய்..தேனாய்...தீம் பழமாய்...கற்கண்டாய்....
சரக்கு இருப்பதினால் தான் இவ்வளவு செருக்கு என்று மனம் தெளிகின்றனர், அவையோர்.
அடுத்து காளிதாஸன்...
அனைவரின் பார்வையும் காளிதாஸன் மேல் குத்திட்டு நிற்கிறது.
ஒரு சிறிய மௌனம்..
மன்னவன் பயந்தான்.எங்கே நம் சபை அவமானப் பட்டு விடுமோ என்று அல்ல!
காளிதாஸனால் முடியுமா என்கிற சஞ்சலம் அவனுள்.
மன்னவனின் கணிப்பு தவிடுபொடியாவது போல கணீரென்று காளிதாஸன் வாயிலிருந்து வந்தன வார்த்தைகள்..
கவி எழுத காளிதாஸனுக்குச் சொல்லியா தர வேண்டும்?
மடகு திறந்து வெள்ளம் வருவது போல் ப்ரவஹித்து விழுந்த வார்த்தைகள்..
அதில் உள்ள கவி நயம்!!
இருந்தாலும் எது உயர்வு எது தாழ்வு என்று அறுதி யிட்டுக் கூற முடியவில்லை, அரசனால்! அவையோரால்!!
'முடிவு நாளை, சபை கலையலாம்'
அப்போதைக்கு தப்பித்துக் கொண்டான், போஜன்!

மன்னவனுக்கு ஒரே சஞ்சலம்! 'எப்படியடா இதைத் தீர்த்து வைக்கப் போகிறேன்' என்கிற மனக்கவலை !!
உறக்கமும் வரவில்லை.
" தேவி நீயே துணை"
மனத்துள் ஒரு பீடம் வைத்து,அதில் தேவியை ஆவாஹனம் செய்து, காலில் விழுந்தான்!
தேவி அவன் கனவில் வந்தாள் !!
************************
விடிந்தது.
மன்னனின் ஆணைகள் எல்லாமே விசித்திரமாய் இருந்தது.
' கூட்டம் அரண்மனையில் வேண்டாம். எல்லாரும் உஜ்ஜயினி காளி கோவிலுக்கு வாருங்கள்'
' யாரங்கே?'
' மன்னவா?'
' ஒரு தராசு கொண்டு வரச் சொல்!'
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
தராசும் வந்தது!
மன்னன் தராசை உஜ்ஜயினி காளி தேவி முன்பு நிமிர்த்திப் பிடித்துக் கொண்டான்.
' பவபூதி எழுதிய பாட்டின் ஓலைச் சுவடிகளை வலது தட்டில் வை'
'காளி தாஸன் ஓலைச் சுவடிகளை
இடது தட்டில் வை'
இரண்டு ஓலைச் சுவடிகளும் வைக்கப் பட்டன.
அப்போது காளி தாஸன் தட்டுத் தாழ்ந்தது.
பிரமிப்புடன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு அதிசயம்!
ஒரு கணம்!
ஒரு கணம் தான்!!
தேவி தனது வலது சுண்டு விரலால், வலது காதில் சூட்டப்பட்ட செங்குவளை மலரின் தேன் துளி எடுத்து, பவபூதி தட்டில் வைக்க, சட்டென்று காளிதாஸன் தட்டுக்கு சமமாயிற்று, அது!
பவபூதிக்கு உடம்பு அதிர்ச்சியினால் தூக்கிப் போட்டது!
" தெய்வமே!!!"
காளி தாஸன் காலில், தன் கர்வம் பங்கப் பட்டுப் போய், நெடுஞ்சாண்கிடையாய் அஸக்தனாய் விழ,
காளி தாஸனுக்கு ஒன்றும் தெரியவில்லை,
பாவம்!
கைகள் இரண்டையும் மேல் தூக்கி ஒரு பித்தனைப் போல் தேவி மீது கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தான் !
***************

Tuesday, September 7, 2010

யாம் பெற்ற இன்பம் .......



.... ஸார்..மேடம்...
ஒரு நிமிஷம் ப்ளீஸ்..
உங்கள் கையில் நாற்பது ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்யலாம் அதை வைத்து?

ஒரு மசால் தோசை ஆர்டர் பண்ணலாம். அதன் தாக்கம் சில மணித்துளிகள்!

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் போய் பெரிய கோவில் பார்த்து விட்டு ஒரு இரண்டு மணி நேரத்தில் திருச்சி திரும்பலாம்.

அதன் தாக்கம் கொஞ்ச நாட்கள் !!

நான் நாற்பது ரூபாய் கொடுத்து இந்த புஸ்தகம் வாங்கினேன். வாவ்...
என்ன ஒரு கருத்துக் களஞ்சியம்!!

இதன் தாக்கம் ரொம்ப நாள் இருக்கும் !!!

இதற்கு தலைமைப் புரவலர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார். குறிஞ்சிப் பாடியிலிருந்து
வெளி வருகிறது. மொழியாக்கக் காலாண்டிதழ்.
ஆசிரியர் குறிஞ்சி வேலன்.
என்ன ஒரு வருத்தம் என்றால் இதற்கு அவ்வளவாய் patronage இல்லையாம். என்ன கொடுமை சரவணா இது?
புத்தகத்தின் முதல் பக்கமே கன ஜோராய்.... ......
" .......இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் தலையாய இடம் ஒரு தமிழனுக்குத் தான். ஆர்.கே. நாராயணின் படைப்பு உலகம் கடலளவு...ஏழு கடலளவு. இவரது மால்குடி ஒரு தனி உலகம். அதில் நீங்களும் உண்டு.நானும் உண்டு. அதோ இருக்கிறாரே அவரும் உண்டு. சிந்தனையிலே செம்மை உண்டானால் சொல்லிலே செம்மை இருக்கும் என்பார்களே.அதைப் போல வாழ்க்கையின் மிக உன்னதமான நிகழ்ச்சிகளை எல்லாம் மிக அற்புதமாகப் படமெடுத்து " பாமரனுக்கும் புரிய வேண்டும் கவிதை" என்று சொன்ன பாரதியின் வழியிலே மிக எளிமையான ஆங்கிலத்திலே எழுதி இருப்பது சிலாகித்துப் பேசத் தக்கது.
.......... ராஜ்ஜா "

NATIONAL BOOK TRUST போல ஒரு ரிச்சான லே அவுட். உள்ளே புதையல், உண்மையிலேயே!!!
சென்றிடுவீர் எட்டு திக்கும் என்று பாடினானே அவன் இன்று இருந்தால் மிகவும் சந்தோஷப் படுவான்.

குஷ்வந்த் சிங் தெரியும்? எப்படி எழுதுவார்
என்பதும் தெரியும். விஷ்ணு பாதம் என்கிற ஒரு குணச் சித்திரக் கதை எழுதியிருக்கிறார். படித்து முடித்தவுடன் பிரமிப்பு என்னுள்! தமிழில் ரா.ரகு என்பவரின் மொழிபெயர்ப்பில் அருமை !!
கவினுறு கவிதைகளும் உண்டு. 'மத்திய தரைக் கடல் குட்டித் தூக்கம்' என்ற தலைப்பிட்ட கவிதை மனதை கொள்ளைக் கொண்டது.
இதன் அடுத்த இதழ் ஸ்கேண்டி நேவியன் இலக்கியச் சிறப்பிதழாம்! பலே !!
திரு 'இமயவன்' என்ற நம் இலக்கிய நண்பரின் அனுபவம் இது.


Subject: THISAI ETTUM EXCELLS
To: thisaiettum@yahoo.co.in
Date: Thursday, 28 January, 2010, 10:06 AM

Excellent firms dont believe in Excellence...
...Only in constant improvement and constant change
-Tom Peter

Dear Sir,

You have a rupee and I have one.We exchange it with each other.We still have a rupee each.This is transaction.
I have an idea and you have an idea,we exchange the idea between us.Now both of us have two ideas.This is transformation.
On this basis THISAI ETTUM is evolving transactional oppurtunities into transformational opportunities through translations.
Now we are blessed with numerous literary thoughts of various languages because of the valuable twenty five measured steps of THISAI ETTUM..
Twentyfifth issue of Thisai Ettum is Hundred percent memorable one.
The novel idea of Introduction of supplementary issue is highly appreciable.
When THISAI ETTUM is honoring the great poet who gave us this title to this literary world why not we honor
Sri Kurunjivelan and his team who gave us THISAI ETTUM to our Tami Literary world?
I was geratly impressed by the exemplary translation of Dr.P. Raja which is in perfect matching of the great poet.
From the first to the last I have enjoyed all the pages of THISAI ETTUM.
May God bless everyone connected with this publication and I pay my Obesiance to the THISAI ETTUM team.

Lovingly yours,
S.RAVI( Imayavan)

என் குறிப்பு
*************
இது விளம்பரமல்ல. என் சுஹானுபவத்தை என் பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே!!
பிரயாணத்திலும் இனிமையான,
பிற மொழி இலக்கியம் படிப்போம் !
பேணி பொக்கிஷமாய் அதை காப்போம்!!
பிரிய நண்பர்க்கும் பரிசளிப்போம் !!!
அது சரி, வெந்ததைத் தின்று விதி வந்தால் மாளும் வாழ்வா நம்முடையது?

என்றென்றும்,
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.