Saturday, September 2, 2017

'நாக்' அவுட்!


இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா..
அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு!
நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா,
எமப்பட்டணத்தை நெருங்க எட்டு கிலோமீட்டர் தான் பாக்கி இருக்குன்னு 
நம்மாளுங்களுக்குத் தெரியுமா?
'கடப்பாவை கண்டுபிடிச்சவன் கடவுளுக்கு சமமாம்..  பட்டணம் பகோடா மட்டும் இல்லாட்டி 
இங்க பாதி பேர் உசிரை விட்டுடுவானாம்....ஹையோ...ஹையோ..
நினைத்தாலே (நாக்கை) நனைக்கும் அந்த வெங்காய தூள் பஜ்ஜி...
எம்.கே.தியாக ராஜ பாகவதர் ஸ்டைலில் மாயா மாள கௌளத்துல 
மஸால் தோசைக்கு மயங்காதவர் மண்ணில் 
உண்டோ...' இங்ஙன பெருசுங்க பண்ற அலம்பல்...
என்னய்யா இதெல்லாம்?
இப்படி  நாக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே, எப்பப் பார்த்தாலும் எட்டாம் மாசம் மாதிரி 
extra large  தொப்பை எல்லாருக்கும் வந்தாச்சு!
முடி நீளமான பெண்ணை கனவில் கண்டு, அது முடியாமல் போக, அட்லீஸ்ட் ஏதோ ஒண்ணு 
நீளமா இருந்தா போதும்னு மனசை சமாதானப்படுத்திண்டு நாக்கு நீளமான பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு, 
நாப்பது பர்செண்ட்க்கு மேல  ஆம்பளைங்க கஷ்டப்படறாங்கன்னு ....நான் சொல்லலை
ஒரு Statistics சொல்லுது! 
நாக்கு ரொம்ப முக்கியம் ...அதனால் தான் முப்பத்திரண்டு பல்லுக்கு முன்னால வைக்காம,
முப்பத்திரண்டு பல்லுக்கு பின்னால நாக்கை வச்சான் அந்த கடவுள்!
மூக்கை விட முக்யத்வம் வாய்ந்த இந்த நாக்கை எவன் CARE பண்றான்?
நம்மாளுங்க நாக்குக்கு போதிய இடம் கொடுக்கலை .....
எப்பேர்பட்ட விசயம்!
வூட்டுக்கு ஆம்புலன்ஸை வரவழைக்கிற சக்தி உள்ள இந்த நாக்குக்கு ஐம்புலன்ஸில 
இடம் இல்லைங்கிறது எவ்ளவ் வருத்தம்!
அத்த விட வருத்தம் நம்ம நாட்டில நாக்கு ஸ்பெஷலிஸ்டுன்னு ஒரு நாதாரியும்  இல்லாமல் போனது தான்!!!    
                                          ---------

கடுக்கன் வருங்கால்?

இந்த கொனஷ்டை ஸ்கூல் படிக்கிற காலத்திலேர்ந்தே வந்தாச்சு....ஸ்கூல் பக்கம் விக்கற எலந்த வடை,கொடுக்கா புளி,அருநெல்லிக்காய் இதெல்லாம் அன்ஹைஜீனிக் என்பதனால்,கொடுக்கற பாக்கெட் மினியை(மணி எங்கே தராங்க,எல்லாம் சில்லறை காசுகள் தான்) சேர்த்து வச்சு, எங்க க்ரூப்ல, ஒரு குட்டி பணக்காரனா இருந்தேன்...என்னை சுத்தி,எப்பவுமே அஞ்சு பேர் இருப்பாங்க..(பணக்காரனை சுத்தி பத்து பேர் மாதிரி!) 
அல்லாரும் கசமுசன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க...என்னடான்னு பார்த்தா, எங்களுக்கு காது இரண்டிலும் கடுக்கன் போட்ட கோபால் ஐயா தான் தமிழுக்கு வராராம்....கொஞ்சம்..என்ன நிறையவே கண்டிப்பு...அவர் பேசறத விட அவர் கையில் உள்ள பிரம்பு தான் நிறைய பேசுமாம்....
நான் ஏதோ, சொல்ல வந்ததை மசால் வடையை மோப்பம் பிடிக்கிற மௌஸ் மாதிரி ஒருத்தன் சொன்னான்...'டேய், நம்ம ஶ்ரீதர் ஏதோ சொல்ல வராண்டா"
நான் தொண்டையை செருமிக் கொண்டேன்..அவ்ளவ் கூட்டமும் என் பக்கம் இருப்பதை கன்பர்ம் செய்து கொண்டு வாயைத் திறந்தேன்...
"கடுக்கன் வருங்கால் நகுக!"
பொதுவா நாம ஏதாவது ஜோக்(நாம ஜோக்னு நினைக்கறது!) சொன்னா,நாம சிரிக்காம இருந்தா தான் ஆடியன்ஸ் சிரிப்பாங்கன்னு தெரிஞ்சு வச்சிருந்தேன்...
ஆனா, அன்னிக்கு நான் சிரிக்கிறது நினைச்சிருந்தாலும் சிரிக்க முடியாது!
காரணம்,
எம் பின்னால, அந்த 'கடுக்கன்' நின்று கொண்டு இருந்தார்,அப்போது!