Monday, December 24, 2012

எனக்கிணையாக தர்பாரில்......

லாலாக்கடை பூந்தியை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல் மொய்த்துக் கொண்டிருந்தார்கள், ஸபா காரர்கள் ..
   எல்லார் முகத்திலும் ஏமாற்றம் அப்பிக் கிடந்தது ..
  " கொஞ்சம் CONSIDER பண்ணுங்கோ சார்.."
 " அடுத்த வருஷம் அந்த முடிவை எடுங்கோ !"
 " உங்க ரஸிகாளை இப்படி ஏமாத்தக் கூடாது !"
 "அவா அவா மதுரை, திருநெல்வேலிலேர்ந்தெல்லாம் வரா .."
 " அவங்கவங்க ஆயிரம், ரெண்டாயிரம் செலவழிச்சுண்டு உங்க கச்சேரி கேட்க
வராங்க .."
  “க்ளீவ் லேண்டிலிருந்து ரசிகாள்ளாம் வராளாம் ஒங்க கச்சேரி கேட்க”
  எதற்கும் மசியவில்லை தண்டபாணி !
 அவன் சொன்னால் சொன்னது தான் ..யாருக்காகவும் எதையும் மாற்றிக் கொள்ள மாட்டான் ! அவனுடைய இந்த முரட்டு பிடிவாதத்தை,  அவனுடைய வித்வத் ஒன்றுக்காகவே எல்லாரும் சகித்துக் கொண்டிருந்தனர். 
   "அப்ப இந்த ’சீஸன்’ ல அண்ணாவோட தர்பாரைக் கேட்க முடியாது ..இப்படியே போனா, OUT OF SIGHT OUT OF MIND  னு ஆயிடப் போறது ...
அவ்ளவ் தான் சொல்லிட்டேன் ."
   " போனாப் போகட்டும் "
     தலையை சிலுப்பிக் கொண்டு சொன்னான் தண்டபாணி அலட்சியமாய் !.  
     "... உன்னோட சங்கீதம் அப்படி எல்லாரையும் கட்டிப் போட்டிருக்குங்கிற
மமதையில்  பேசறே ..எப்பேர்பட்ட ஆளெல்லாம் எங்கேயோ போய்ட்டான் ...நீ
 சுண்டைக்காய் ..சான்ஸ் கிடைச்சா ஒன்னை நசுக்கிப் போட்டுட மாட்டேன் நசுக்கி " என்று அவனிடம் கச்சேரி சான்சுக்காக வந்த அத்தனை சபா செகரட்டரிகளும் மனத்துள்  கறுவியபடி சென்றனர் .
    " அப்ப நாங்க "
    " உங்களுக்கும் அதே பதில் தான் ..நீங்க மற்ற வித்வான்களுக்கு வாசியுங்கோளேன் ."
    "என்ன இருந்தாலும்   தண்டபாணிக்கு வாசிக்கிறா மாதிரி ஆகுமா" என்று இழுத்தார் வயலின்  வித்வான்.
     வேணு வீணா வயலின் கான்சர்டுகளுக்கு ஒரு ரெண்டு வருஷமாக இவர் தான் அவனுக்கு வயலின் ஜோடி ...அந்த ரெண்டு வருஷங்களும் அவர் காலட்சேபம் நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது.அந்த விசுவாசம்!
     சுபாவத்தில் முரடனாகத் தோன்றினாலும் பக்க வாத்தியக் காரர்களுக்கு மிகவும் பிடித்த வித்வான் தண்டபாணி ..'தனி'க்கு சான்ஸ் தருவான் ..அவர்களை அரவணைத்துச் செல்வான் ..முக்கிய தருணங்களில் இவர்கள் வாசிப்பிற்கு ஆடியன்சை அப்ளாஸ் செய்யச் சொல்வான் ..சம்பாவனைகளையும் மனசுக்குத் திருப்தியாய் வாங்கித் தருவான். ஆகவே பக்க வாத்தியக் காரர்களுக்கு இவனை ரொம்பவே பிடிக்கும் .
      அவனுடைய நவரசக் கன்னடாவில் அமைந்த "நானொரு விளையாட்டுப் பொம்மையா" வும், ஹிந்தோளத்தில் அமைந்த " மா ரமண" வும், கேட்க கேட்க திகட்டாது .அவனுடைய  ககன குதூகலத்தையும் , ரவிச்சந்திரிகாவையும்
அவ்வளவு  லேசில் மறக்க முடியாது ..
      மதுரை மணி ஐயரே மறுபடியும் பிறந்து  வந்து 'மா ஜானகி'யை  ப்ளூட்டில் வாசிக்கிறாரோ என்று நினைக்கும் படி இருக்கிறது என்று எல்லா வித்வான்களையும் கிழி கிழியெனக்    கிழிக்கும் பிரபல சங்கீத விமர்சகர் போன வார ஜன ரஞ்சக பத்திரிகை ஒன்றில் விமர்சனம் எழுதினார்.      
       ராகம் தானம் பல்லவியை யார் இப்போதெல்லாம்  விஸ்தாரமாய் பாடுகிறார்கள், தண்டபாணியைத் தவிர!
        அதுவும் ‘யோஜனா” என்று ஆரம்பித்தானென்றால் ஒத்தை கொட்டு அப்ளாஸ் .... .மூன்று நொடி சைலன்ஸ்..அதற்கு  அப்புறம் ஆரம்பித்தானால்  முழுசாய் ஒரு மணி நேரம் ஓடி விடும். தர்பார் தண்டபாணி என்று அவனுக்கு பெயரைக் கொடுத்த கீர்த்தனை அல்லவா அது!  
      எல்லாவற்றையும் விட அவன் செய்த காரியம் ‘கிளாசிக்கல் ம்யூசிக்’ என்பது ‘எலைட்’ மனிதர்களுக்கு மட்டும் தான் என்கிற சித்தாந்தத்தை உடைத்து, பாமரனும் அந்த சங்கீதத்தை ரசிக்கும் படியாக கொண்டு செல்லும்  ரசவாதம் தெரிந்தவன் இன்றைய கால கட்டத்தில் அவன் ஒருவனாகத் தான் இருக்க முடியும்!
       அவன் கச்சேரி கேட்க வந்தவர்கள் நடுவில் எழுந்து போக முடியாது.  ஆட்டோவைக் கூப்பிட்டால் ‘என்ன அவசரம், தண்டபாணி ஃப்ளூட் முடிச்சுட்டு
வரேன்’ என்பார்கள் அத்தனை ஆட்டோக் காரர்களும் சொல்லி வைத்தாற் போல்!
     ( இதன் தொடர்ச்சி வருகிற ஞாயிறு 06.01.13 அன்று வெளி வரும்)  
 

Wednesday, December 5, 2012

ப்ளஸ் டூ பைங்கிளியும் நானும் !

              ரிடய்ர்டான பிறகு என்ன பண்ணப் போகிறோமோ   என்று பயந்து
கொண்டிருந்தேன். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால்
ரிடயர்ட் ஆவதற்கு ஆறு மாதம் முன்னாலிருந்து ரிடயர்ட் ஆகும் மாதம் வரை தொடர்ச்சியாக மாதம் இருமுறை லேடீஸ் காலேஜ்களில் GUEST
LECTURES  என்று அழைப்புகள் வந்து அது வேறு ஒரு விதமான சோகத்தால்  என்னைப்  பிழிந்து எடுத்துக்  கொண்டு இருந்தது.
          நான் பயந்து கொண்டிருந்த அந்த ரிடயர்ட்மென்ட் நாளும்  வந்தே விட்டது ஒரு நாள் !
        இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் எனக்குத் தான் ரிடயர்ட்மென்ட்டே  தவிர , என் சகதர்மிணிக்கு அல்ல !
     அவளுக்கு   இன்னும் ஐந்து வருடம் சர்வீஸ் இருக்கிறது .  வீட்டு வாசல்
வரை வரும் வேனில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து ஆபிஸ் போய் விடுவாள் .
பத்து மணிக்கு கிளம்பினால், மாலை ஆறு மணிக்குத்  தான் வருவாள். அது வரை இந்த வீட்டை புதையலைக் காக்கும் பூதம் போல் நான்  தான்
பாதுகாக்க வேண்டும் !
     அந்த எரிச்சல் வேறு !
     எப்படித் தான் பொழுதுப் போகப் போகிறதோ !     ஆனால் நடந்ததென்னவோ நான் பயந்ததிற்கு 'உல்டாவா'கப் போய் விட்டது!
இப்போதெல்லாம் மனது அவங்களுக்கு இன்னும் அஞ்சு வருடம்  EXTENSION
கிடைத்தால் கூடத்  தேவலை என்று எண்ண ஆரம்பித்து விட்டது என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள் !    
   
ஆபீஸ் போவது போல குளித்து விட்டு  சக தர்மிணியுடன் டைனிங் டேபிளில் டிபன்
சாப்பிட வேண்டியது ..பிறகு வாசல் வரை வந்து டாடா காண்பித்து
வழி அனுப்பி விட்டு கிடுகிடுவென
மாடிக்கு ஓட வேண்டியது ..அங்கு இருக்கும் சிஸ்டத்தில், 'நெட்' டை மேய
வேண்டியது..
     இது தான் என் நித்ய கர்மானுஷ்டகம்!
      காலையில் ட்விட்டர் .....நடுப்பகல் பேஸ் புக் ...மாலையில் ..பிளாக் ..
என்று மண்டலம் மண்டலமாக பொழுதும்   ஜாலியாகப் போய்க்
கொண்டிருந்தது.
      அப்படித் தான்  ஒரு நாள் நான் நெட்டில்  மேய்ந்து கொண்டிருக்கும் போது கீழே, வீட்டு வாசல் கதவை பூனை ஒன்று பிறாண்டுகிறார்  போல ஒரு சத்தம் !
      கதவைத் திறந்தால் .....      ஒரு அழகான பெண் .....   எதிர்த்த வீடு ...
     "அங்க்கிள் ...நான் ஷகிலா  ..ப்ளஸ் டூ போகப் போறேன் ..நீங்க CHEMISTRY PROFESSOR னு எங்கம்மா சொன்னா .. நான்   CHEMISTRYல வீக் ...இப்ப இந்த ANNUAL LEAVE ல எனக்கு கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா ... "
 "  அதுக்கென்ன பேஷா சொல்லித் தரேனே .. சும்மாத் தான்  இருக்கேன்..பத்தரைக்கு   DAILY
வந்துடு...ஒரு மணி வரை சொல்லித் தரேன் "
       இப்படியாகத் தானே எங்கள் நட்பு தொடர்ந்தது ..
        அந்த ஷகிலாவின்  அப்பாவும் அம்மாவும் OFFICE GOERS.
அதைத்  தவிர என்னுடைய ஏழரை கழுதை வயசு எனக்கு ஒரு பெரிய
ப்ளஸ் பாயிண்ட் !   
வயதானால் என்ன ஒரு செளகர்யம்!
      
அந்த பெண் என்னிடம்  CHEMISRTY கற்றுக்கொள்ளத் தான் வந்து
கொண்டிருக்கிறாள் என்று நான் சொன்னால்  அதை அப்படியே  நம்பி விட நீங்கள் என்ன  சின்ன பாப்பாவா ?.

"பாவை உந்தன்
கடைக் கண்
 பார்வையில்,
சாவை  எதிர் 
கொள்பவனும்,
சட்டென எழுவான் !'

   என்று புதுக்கவிதை ஒன்றை ஒரு நாள் நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது  யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டது .
    ஆத்திரத்துடன் கதவை     படாரென்று திறந்தால் ... ....
    சாட்சாத் என் சகதர்மிணி !
    "என்ன நடக்கிறது இங்கே ?"
    பயத்தில் என்னுடைய ....பல் செட் கழண்டு விழ, ஷகிலாவிற்குத்   தெரியாமல் அதை எடுக்க நான் முயல , படபடப்பில்  தலையில் இருந்த 'விக்'கும்  திடீரென  கீழே விழுந்து தொலைக்க, அந்த
குழந்தை திக்ப்ரமையுடன் என்னைப் பார்த்து லுக் விட..விக்...திக்...லுக்...மிக்ஸ் ஆகி, சட்டென்று  அந்த ஷகிலா  சிரித்து வைக்க,
ஆண்களுக்கு விக்கும், பல்செட்டும் பறி போனால், பெண்களுக்கு 'வஸ்த்ராபரணம்' என்கிற  அவமானத்தை விட, எத்தகைய   அவமானம் ?
     அதுவும் வேன் ரிப்பேர் ஆனதால் ஆபீசுக்கு லீவ் போட்டு விட்டு, வீட்டுக்கு வந்து   பத்ரகாளி போஸில் சகதர்மிணி எதிர்த்தாற்  போல் வேறு நிற்கும் போது   ! 
இது நாள் வரை அந்த ப்ளஸ் டூ பைங்கிளியிடம்  நான் பில்டப் பண்ணி வைத்திருந்த  CHEMISTRY போய் விட  ....
       அதாவது தேவலை என்றாகி விட்டது .....
       அதற்குப் பின் நடந்த
       அடுக்கடுக்கான துயரச் சம்பவங்கள் ... .
       எனக்கும், சகதர்மிணிக்கும் நடந்த உரையாடல்களும் ..
அதனைத்  தொடர்ந்து நடந்த விஷயங்களும்  அவ்வளவு சுவாரஸ்யமாய்   எழுத்தில் வடிக்க இயலாமல் போய் விட   ................
      வேண்டாம் பாஸ்   கிளறாதீங்க ....
      அதற்குப் பிறகு என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
      1.  வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு வந்து விட்டாள், என் சகதர்மிணி !
      2.  வீட்டிலிருந்த  இன்டர்நெட் கனெக்ஷனும் போய் விட்டது !!