Wednesday, May 17, 2017

"நம்ம வேணுவோட அப்பாவா போயிட்டார்....அடப்பாவமே!"
"ஆமாம்....கொஞ்ச நாளா படுத்த படுக்கையாக இருந்தார்.."
"இப்படி ஒரு க்ரூஷியல் டயத்திலேயா போகணும்.."
"அவன் ஒரு கஞ்சப் பிசினாறி..நல்ல டாக்டர்ட்ட அப்பாவை காமிக்கலாமில்லையா?"
"எதுக்கு..நம்ம கம்பெனி ஆஸ்பத்திரி தான் இருக்கே?"
"நான் அதுக்கு சொல்லலைப்பா..நல்ல 'ரிச்'சா ட்ரீட்மென்ட் கொடுத்தா,ஒரு பத்து பதினைஞ்சு
நாளாவது தாங்குவாரோன்னோ..அதுக்குத் தான் சொன்னேன்"
"கேட்டேனே..மெடிகல் இன்ஸ்யூரன்ஸ் அப்பாக்கு எடுத்திருக்கானாம்..நம்பர்  ஒன் ஆஸ்பிடல்ல
தான் ட்ரீட்மென்ட் பண்ணினாம்..நல்லாத் தான் கவனிச்சிண்டாங்களாம்.."
"பாவம்..அவனுக்கு தான் கொடுத்து வைக்கலை!"
"ஐயையோ..இந்த விஷயத்தை அவனிட்ட சொல்லிட்டியா, நீயி?"
"டேய்..அவனே ஹார்டு பேஷண்ட்..ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா.."
"அவ்ளவ் மடையனாடா, நான்? பக்குவமாத் தான் சொன்னேன்.....'டேய் வேணு..அதிர்ச்சி அடையக்கூடாது..மனசை திடப்படுத்திக்கோ..நம்ம எல்லார்லியும் உன் ஒருத்தனுக்கு மட்டும் தான் இப்படி ஆகணுமான்னு
நாங்க எல்லாரும் ரொம்பவே வருத்தப்பட்டோம்னு ரொம்ப பீடிகை போட்டுண்டு  தான் அவன்ட்ட இந்த விஷயத்தை  பக்குவமா சொன்னேன்.."
"அதுக்கு அவனோட ரிஆக்‌ஷன் எப்டி இருந்தது?"
"'ஆண்டவனே..நான் ஒருத்தன் மட்டும் என்ன பாவம் பண்ணினேன்..இந்த ஒலகத்திலேயே எனக்கு மட்டும் ஏன்  இப்படி அடி மேல அடியா துக்கம் வரணும்னு' அவன் சொல்லிண்டே இருக்கும் போது கரகரன்னு அவன் கண்ணிலேர்ந்து தண்ணி..பக்கத்துல இருக்கறவா கூட 'அவன் அப்பா போனதுக்குக் கூட இப்படி வருத்தப்பட படலே..என்ன விஷயம் சொன்னேள்னு என்னை பிலுபிலுன்னு பிடிக்க ஆரம்பிச்சுட்டா..அவாள்ட்டேயும் அதை சொன்னவுடனே, 'அட துரதிர்ஷ்டம் பிடிச்சவனே!'ன்னு அவனை பரிதாபமா பார்த்தா எல்லாருமே!"
"சரி..சரி..இந்த மாதிரி சமயத்திலியா அவன் அப்பா போணும்?பாவம்டா அவன்!"
"நாங்கள்ளாம் காலைல வரோம்னு சொன்னியா?"
"சொல்லிட்டேன்...ஜாஸ்தி பேசாம நீங்க எல்லாருமே ரொம்ப ஜாக்ரதையா அவன் அப்பா போன துக்கம் மட்டும், கேட்டுட்டு வந்துடுங்கோ!"
"ஆமாமா.. மறுபடியும் இதை  அவன்ட்ட சொல்லி அவன் வேதனையை யாரும் கிளற வேண்டாம்.. அவன் அதிர்ஷ்டம் .பத்து நாள் உயிரை கைல பிடிச்சுண்டாவது அவன் அப்பா இருந்திருக்கலாம்..என்ன பண்றது?
நம்ம வேணு கொடுத்து வச்சது அவ்ளவ் தான்!
நம்ம மேனேஜர் பத்து நாள் மும்பைக்கு டூர் போன சமயத்திலா அவன் அப்பாவும் இப்படி உயிரை விடணும்?"

.......

Tuesday, May 9, 2017

என்சைகிளைபிடிஐயா!

என்னை என்றுமே சைக்கிள் ஈர்த்ததில்லை ...
கையில் கொஞ்சம் காசு கிடைத்தால்,(அதாவது ஆங்கரை கிராமத்திலிருந்து செருதூரில் உள்ள LBHS செல்ல, பஸ்ஸிற்கு கொடுக்கும் பத்து காசு..நாங்கள் நடந்தே ஸ்கூல் போய் சேமிக்கும் பத்து பத்து காசுகள்!) அதை வாடகை சைக்கிள் காரனிடம் குடுத்து முட்டியை பெயர்த்து கொள்ளும் ஆசையெல்லாம் எனக்கு எப்பவுமே  கிடையாது..அந்த காசுகளை சேர்த்து, கிராமத்தில் ஒரு வீட்டு திண்ணையில் நண்பர்களுடன் கடை பரப்புவோம்..சாக்பீஸ் துண்டுகளை சம்பளமாக கொடுத்து சின்ன பசங்களை 'லவா லவா லக்கி ப்ரைஸ்' என்று கூவ செய்வோம்..
ஒரு பெரிய கார்டு போர்ட்..அதில் பாதி ஏரியாவுக்கு window display!
அதாவது, ஒரு ஸிம்பன்சி வால் பேப்பர்...ஒரு ஜீப்...கலர் சாக்பீஸ்..கொக்கு குண்டு (கோலி குண்டின் பெரியம்மா!)என்று பரிசு பொருட்கள் அலங்கரிக்க,மறு பாதியில் கலர் பேப்பர் எட்டு துண்டுகளாக மடிக்க வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பைசா குடுத்து ஒரு பேப்பர் எடுக்கலாம்..பிரித்து பார்த்தால் முக்கால் வாசி மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் NP ( no prize) என்று எழுதி இருப்போம்..ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவர்களுக்கு ஆரஞ்சு பெப்பர்மெண்ட் வேண்டுமானால் கிடைக்கலாம்..அடுத்த சான்ஸ்க்கு இன்னொரு ஐந்து பைசா கொடுத்து தம்தம் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்த்துக்  கொள்ளலாம்...
எங்களிடம் ஏமாந்த எங்கள் கிராமத்தை சேர்ந்த சீமாச்சு என்கிற ஶ்ரீநிவாசன் ஐ ஐ டி யில் படித்து அமெரிக்காவில் வேலை கிடைத்து, க்ரீன் கார்ட் வாங்கி, லாஸ் வேகஸ் காஸினோகளில் ஏமாந்திருக்கிறான் என்பது நான் உங்களுக்கு அளிக்கும் உபரி தகவல்!
     சேமித்து வைத்த காசுகள் இந்த முறையில் recycle ஆகுமேதவிர, மற்றபடி எனக்கும் சைக்கிளுக்கும் வேறு எந்த விதமான ஸ்நானப்ராப்தியும்   கிடையாது!
எதற்கு இவ்வளவு பில்டப் என்கிறீர்களா?
   ஏதோ சைக்கிளை பற்றி எழுத வேண்டுமென தோன்றிற்று!