Saturday, September 2, 2017

'நாக்' அவுட்!


இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா..
அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு!
நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா,
எமப்பட்டணத்தை நெருங்க எட்டு கிலோமீட்டர் தான் பாக்கி இருக்குன்னு 
நம்மாளுங்களுக்குத் தெரியுமா?
'கடப்பாவை கண்டுபிடிச்சவன் கடவுளுக்கு சமமாம்..  பட்டணம் பகோடா மட்டும் இல்லாட்டி 
இங்க பாதி பேர் உசிரை விட்டுடுவானாம்....ஹையோ...ஹையோ..
நினைத்தாலே (நாக்கை) நனைக்கும் அந்த வெங்காய தூள் பஜ்ஜி...
எம்.கே.தியாக ராஜ பாகவதர் ஸ்டைலில் மாயா மாள கௌளத்துல 
மஸால் தோசைக்கு மயங்காதவர் மண்ணில் 
உண்டோ...' இங்ஙன பெருசுங்க பண்ற அலம்பல்...
என்னய்யா இதெல்லாம்?
இப்படி  நாக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே, எப்பப் பார்த்தாலும் எட்டாம் மாசம் மாதிரி 
extra large  தொப்பை எல்லாருக்கும் வந்தாச்சு!
முடி நீளமான பெண்ணை கனவில் கண்டு, அது முடியாமல் போக, அட்லீஸ்ட் ஏதோ ஒண்ணு 
நீளமா இருந்தா போதும்னு மனசை சமாதானப்படுத்திண்டு நாக்கு நீளமான பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு, 
நாப்பது பர்செண்ட்க்கு மேல  ஆம்பளைங்க கஷ்டப்படறாங்கன்னு ....நான் சொல்லலை
ஒரு Statistics சொல்லுது! 
நாக்கு ரொம்ப முக்கியம் ...அதனால் தான் முப்பத்திரண்டு பல்லுக்கு முன்னால வைக்காம,
முப்பத்திரண்டு பல்லுக்கு பின்னால நாக்கை வச்சான் அந்த கடவுள்!
மூக்கை விட முக்யத்வம் வாய்ந்த இந்த நாக்கை எவன் CARE பண்றான்?
நம்மாளுங்க நாக்குக்கு போதிய இடம் கொடுக்கலை .....
எப்பேர்பட்ட விசயம்!
வூட்டுக்கு ஆம்புலன்ஸை வரவழைக்கிற சக்தி உள்ள இந்த நாக்குக்கு ஐம்புலன்ஸில 
இடம் இல்லைங்கிறது எவ்ளவ் வருத்தம்!
அத்த விட வருத்தம் நம்ம நாட்டில நாக்கு ஸ்பெஷலிஸ்டுன்னு ஒரு நாதாரியும்  இல்லாமல் போனது தான்!!!    
                                          ---------

கடுக்கன் வருங்கால்?

இந்த கொனஷ்டை ஸ்கூல் படிக்கிற காலத்திலேர்ந்தே வந்தாச்சு....ஸ்கூல் பக்கம் விக்கற எலந்த வடை,கொடுக்கா புளி,அருநெல்லிக்காய் இதெல்லாம் அன்ஹைஜீனிக் என்பதனால்,கொடுக்கற பாக்கெட் மினியை(மணி எங்கே தராங்க,எல்லாம் சில்லறை காசுகள் தான்) சேர்த்து வச்சு, எங்க க்ரூப்ல, ஒரு குட்டி பணக்காரனா இருந்தேன்...என்னை சுத்தி,எப்பவுமே அஞ்சு பேர் இருப்பாங்க..(பணக்காரனை சுத்தி பத்து பேர் மாதிரி!) 
அல்லாரும் கசமுசன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க...என்னடான்னு பார்த்தா, எங்களுக்கு காது இரண்டிலும் கடுக்கன் போட்ட கோபால் ஐயா தான் தமிழுக்கு வராராம்....கொஞ்சம்..என்ன நிறையவே கண்டிப்பு...அவர் பேசறத விட அவர் கையில் உள்ள பிரம்பு தான் நிறைய பேசுமாம்....
நான் ஏதோ, சொல்ல வந்ததை மசால் வடையை மோப்பம் பிடிக்கிற மௌஸ் மாதிரி ஒருத்தன் சொன்னான்...'டேய், நம்ம ஶ்ரீதர் ஏதோ சொல்ல வராண்டா"
நான் தொண்டையை செருமிக் கொண்டேன்..அவ்ளவ் கூட்டமும் என் பக்கம் இருப்பதை கன்பர்ம் செய்து கொண்டு வாயைத் திறந்தேன்...
"கடுக்கன் வருங்கால் நகுக!"
பொதுவா நாம ஏதாவது ஜோக்(நாம ஜோக்னு நினைக்கறது!) சொன்னா,நாம சிரிக்காம இருந்தா தான் ஆடியன்ஸ் சிரிப்பாங்கன்னு தெரிஞ்சு வச்சிருந்தேன்...
ஆனா, அன்னிக்கு நான் சிரிக்கிறது நினைச்சிருந்தாலும் சிரிக்க முடியாது!
காரணம்,
எம் பின்னால, அந்த 'கடுக்கன்' நின்று கொண்டு இருந்தார்,அப்போது!

Tuesday, August 29, 2017

நடந்தது ஒன்று! புரிந்தது ஒன்று!!


வேறு எதையும் வளர்க்கப் பிடிக்காமல் வெறும் தாடி மட்டுமே வளர்த்துக் கொண்டு,வெட்டியாகப் பொழுதை கழிக்கும் கணவனை ஏவினாள்,மனைவி. 
"த்தா....சும்மாத் தானே தின்னூட்டுக் கீறே...அப்பால மளிகை கடைக்குப் போயி, கொஞ்சம் பெருங்காயம் வாங்கியா!"
கணவனும் வெகு சிரத்தையாய் பெருங்காயம் வாங்கி வந்தான்...
ஆனால், என்ன ஒரு பரிதாபம்....துளிக்கூட பெருங்காய வாசனையே அந்த பாலீதீன் பையிலிருந்து வரவில்லை..அத்துணை கலப்படம்!
"த்த்த்த்தூ....இன்னா மனுஷன்யா,நீயி! இதுவாடா பெருங்காயம் ...யீ!"
முகத்தில் பெருங் காயம் ஏற்படுத்துமளவிற்கு வீசி எறியப்பட்ட அந்த பாலீதீன் பையுடன் மறுபடியும் அந்த கடைக்கு ஓடினான், அந்த ஆசிர்வதிக்கப்பட்ட கணவன்!
கடைக்கார கபோதியை பார்த்ததும்,அவன் வாய் அநிச்சையாய் சத்தம் போட்டது...
       காயமே இது பொய்யடா!
       வெறும் காற்றடைத்த பையடா!!
இந்த வார்த்தைகள் இன்னொரு வேலை வெட்டி இல்லாத தாடி காதில் விழுந்தது!
        ஆஹா......இந்த நிலை இல்லாத உடம்பை பற்றி என்ன ஒரு ஞான அலசல்!
      "யாக்கையைத் தானே கூறுகிறீர்கள்,சாமி!"
       இவனுக்கு, வெந்த புண்ணில் விரட்டி விரட்டி கொத்தும் மனைவி என்கிற அந்த கார்க்கோடக காக்கை ஞாபகம் வரவே, ஆமென பரிதாபமாக தலை அசைக்க...
       "நிலையாமையைப் பற்றி அரை நிமிட நேர மட்டில் அலசின ஞானத் தங்கமே ..  " என அவன் ஆர்ப்பரிக்க,
          சித்த நேரத்தில் சித்தனானான், இவன்!

Monday, August 28, 2017

வருமான வலி!

"....சார் வாங்க..”
“இங்க காம்போதி கனக சபைங்கிறது..”
“கனக சபை நான் தான்.மற்றபடி காம்போதி ராகம் கொஞ்சம் சுமாரா வாசிப்பேன்..அதனால கூப்பிடறாங்களோ ...என்னவோ..”
“ இல்ல சார்..போன மாசம் நாரத கான சபாவில நீங்க காம்போதியை பிச்சு உதறி காயப் போட்டீங்கன்னு கேள்விப் பட்டேன்..”
“அதெல்லாம் சும்மா..யாரோ பொறாமையில சொல்வாங்க..”
”அப்படி இல்ல சார்..தோடி ராஜரத்னம் பிள்ளைக்கு அடுத்தது ராகத்தோட வித்வானைக்கூப்பிடறது உங்களத் தான்னு ஊரே சொல்லுதே..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..எனக்கு புகழ்ச்சி பிடிக்காது..யாராவது என்னை புகழ்ந்தாங்கன்னா..’டேய் சபே, நீ நிஜம்மாலும் அவ்ளவோ பெரிய ஆளான்னு..”தனியா ரூம்ல உட்கார்ந்து அழுவேன்..சார் நான்”
”ஓ!"
"திருச்சி வன்னி மரத்தடி வினாயகர் கோவில்ல கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க..ரொம்ப ஜோரா  போச்சுல்ல அது..அங்க வாசிச்ச தேனுகா ரொம்ப சூப்பர்... பேசின தொகைக்கு மேல பத்தாயிரம் கூட கொடுத்தாங்க..அவங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு ரொம்ப கஷ்டப் பட்டு வாங்கினேன் அத..”
“சபால எல்லாம் எவ்ளவ் தருவாங்க..”
“சார்..சும்மா சொல்லக் கூடாது..அறுபதாயிரத்துக்கு குறைஞ்சு எங்கேயும் ஒத்துக்கிறது இல்ல..கல்யாண கச்சேரிக்கு எல்லாம் போறதுல்ல..உங்கள மாதிரி வேண்டப் பட்டவங்க கூப்பிட்டாத் தான் ஒத்துப்பேன்..
அய்யலூர் ஜமீந்தார் பேத்தி கல்யாணத்துல நான் வாசிச்ச பைரவிக்கு ஒரு ரத்ன ஹாரமே சபைல போட்டு கெளரவிச்சார்..”
” அப்ப நான் வரேன்..’
“ என்ன சார் திடீர்னு போறீங்க.. கச்சேரி பேச வல்லியா ஆமா நீங்க யாரு?”
“இன்கம்டாக்ஸ் ஆஃபீஸர்!”
“ சார்..சார்..சும்மா சொன்னேன் சார்...ஒருத்தனும் தேங்கா மூடி கூட கொடுக்கிறதில்ல.. நீங்க ஏதாவது வரி ..கிரி ..போட்டீங்கன்னா, கடன் வாங்கித் தான் சார் கட்டணும்..சார்...சார்...”

Sunday, August 27, 2017

காலம் மாறலாம்..கௌரவம் மாறுமோ? நெவர்!

"என்னை என்ன 'ஹென் பெக்டு'ன்னு  நினைச்சியா?ஒன் லாக் பென்ஷன் வாங்கறவன்டா, நான்..ஒன் லாக் பென்ஷன் இங்க ஒங்கப்பனைத் தவிர எவனுக்கு  வர்றது?"
ப்ரஸ்டீஜ் பத்மனாப ஐயருக்கு இன்னொரு பெயர் துர்வாசர்..எதற்கெடுத்தாலும் முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும்..அதுவும் இந்த முதுமையில் ...அதுவும் .சாவித்ரியை அக்னிக்கு காவு கொடுத்த பின்,தன் இருப்பை காண்பிக்க  அவருக்கு இந்த கோபம்  மிக மிக தேவையாக இருந்தது.
"அப்பா,என்ன சொல்லிட்டேன்னு இப்டி கோச்சுக்கறேள்..ஒங்க நல்லதுக்குத் தானே.."
"என்னடா,எனக்கு நல்லது?பொண்டுகள் புழங்கற இடத்துல, தாழ்ப்பாள் போடாம குளிக்கச் சொல்றே? அறிவிருக்காடா நோக்கு?"
"அப்பா ப்ளீஸ் கத்தாதேள்...இந்த பாத்ரூம் ப்ளோர ஒட்டின கடங்காரன் சொல்ல சொல்ல கேட்காம, வழவழன்னு டைல்ஸ் பதிச்சுட்டான்..வழுக்கி விழுந்துடப் போறேள்னு தான்...தவிர, பாத்ரூம் பக்கத்து ரூமுக்கு யாரும் வர மாட்டா..அதனால தான்.."
"அப்ப நான் பாத்ரூம்ல வழுக்கி விழணுங்கறது தானே  நீ எதிர்பார்க்கிற?"
கிழட்டு சிங்கம் கர்ஜித்தது.
"ஐயோ..அப்பா..எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுக்காதேள்..ப்ளீஸ் .."
"போடா Fool!"
"தாத்தா,அப்பாவை முட்டாள்னு சொல்லாதேங்கோ?"
"ஆமா...பெர்ரீய மனுஷன் அப்பனுக்கு வக்காலத்துக்கு வந்துட்டான்..எனக்கு முன்னாடி ஒனக்கு ஒங்கப்பனை தெரியுமாடா?"
"ஆமாம்...ஒங்களுக்கு முன்னாடி,எனக்கு எங்கப்பாவைத் தெரியும்..என் முன்னாடி,எங்க அப்பாவை  நீங்க ஒண்ணும் சொல்லக் கூடாத்"
"ஓ!"
அந்த 'ஓ' வில் இப்போது இளக்காரம் இல்லை..கோபம் சட்டென பஸ்பமாகி,அன்பு அங்கு விஸ்வரூபமெடுத்து, பெரியவரின் விழிக்கற்றைகளில் கண்ணீர் துளிகளாய்  இறங்க....
இதற்கான என் குறள்:
....................................
அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்,மற்றெல்லா
பண்பிற்கும் அதுவே தலை!
(என் குறள்; என் கதை யிலிருந்து ....)


.........

Friday, August 25, 2017

ஆசை...தோசை....


"நம்மள மாதிரி, கிச்சன் எங்கேன்னா, எதிர்த்த வூட்லேர்ந்து, கிச்சன்ங்கற பையனை கூட்டிண்டு வர ஒரு ஆளு அசந்தர்ப்பமா தோசை வார்க்க ஆரம்பிச்சான்..."
"அட......startinங்கே சூப்பரா இருக்கே...சொல்லு"
"கேஸ் அடுப்பை பத்த வச்சான்...பத்த வச்சானா..."
"அதான் பத்த வச்சுட்டானே..மேல சொல்லு"
"மாவை நல்லா கலக்கி...ச்ச்சொய்ய்ங்ங்னு தோசை கல்லில் ஊத்தினான்.."
"அப்றம்?"
"அப்றமென்ன...face bookல ஒரு status போட்டுட்டு,அடுப்பை பார்த்தா.."
"பார்த்தா?"
"தோசை எடுக்க வரலை...புதுசா கல்யாணமான பொண்ணு பொறந்த வீட்டுக்குப் போனா மாதிரி,
தோசை, கல்லுல பச்ச்சக்க்னு ஒட்டிண்டு, எடுத்தா கல்லும் கரண்டியோட வரது..."
"அடேடே....அப்றம்?"
"அப்றமென்ன...கல்லு மேல மூடி ஒண்ணு போட்டு மூடினான்..."
"அப்றம்?"
"பெருமாள் கோவில்ல சடாரி வச்சா எப்டி இருக்கும்? நமக்கு மனசு குளிரும்...ஆனா, மாவுக்கு 
மனசு குளிரல...இப்ப தோசை கரண்டிய தூக்கினா.."
"தூக்கினா?"
"கரண்டி அடுப்பையே தூக்கிண்டு வரது!"
"அப்றம்?"
"இதை பார்த்துண்டு இருந்த தேவதை ஒண்ணு,அவன் கிட்டேர்ந்து கரண்டியை வாங்கி தோசை வார்க்க ஆரம்பிக்க..."
"பலே...கேட்கவே ஜோரா இருக்கே...மேல சொல்லு.."
"தேவதை நம்ம ஆஞ்சலினா ஜூலி மாதிரி வெள்ளை வெளேரென்று ஒரு தோசை வார்த்து,அவனுக்கு கொடுத்தது.."
"அவன் என்ன பண்ணினான்?"
"நம்மாளு ஒரு கர்ட்டஸிக்கு  கூட தேங்க்ஸ் சொல்லாம, கம்னு அந்த தோசையை வாங்கி, ஹாட் பேக்ல போட்டான்"
"ம்ம்....அப்றம்?"
"தேவதை பொறுமையா இரண்டாவது தோசையையும் வார்த்து அவனிடம் கொடுத்தது...இது கொஞ்சம் ஸில்க் ஸ்மிதா மாதிரி கருகின கலர்ல இருந்தது.,"
"நம்மாளு என்ன பண்ணினான்?"
"இந்த தோசையையும் எடுத்து ஹாட் பேக்ல போட்டான்!"
"அப்றம்?"
"அப்புறமென்ன?தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் மாதிரி, அந்த தேவதை நம்ம ஜெயமாலினி மாதிரி ஒரு உப்பின தோசையை வார்த்து இப்ப கொடுத்தது.."
"அதையும் அவன் வழக்கம் போல,ஹாட் பேக்ல வச்சிட்டு, நாலாவது தோசைக்காக காத்துகிட்டு இருந்திருப்பானே?"
"ஆமாம்...ஆனா, அந்த தேவதை நாலாவது தோசை வார்க்க வில்லை.,அது கடுப்பாகி கேஸ் சிலிண்டரை தூக்கிண்டு பறந்து போயிடுத்து...இதுலேர்ந்து உனக்கு என்ன தெரியறது?"
"ஆபத்து காலத்துல, நாம கஷ்டத்துல இருக்கும் போது, நமக்கு வாலண்டியரா வந்து ஹெல்ப் பண்றவங்களுக்கு வாய் நிறைய நன்றி சொல்லணும்...அப்டி சொல்லாட்டி..."
"சொல்லாட்டி?"
"இருக்கிற ஹாட் பேக்கும் பறந்து போயிடும்.....மூணு தோசைகளோட!"
...

Thursday, August 24, 2017

நேத்து ராத்திரி சும்மா!

"நேத்து ராத்திரி சரியா பன்னிரெண்டு மணிக்கு,எங்க பெட்ரூம் கர்ட்டனுக்கு அந்தப்புறம்.."
"அந்தப்புறம்?"
"வெள்ளையா நர்ஸ் மாதிரி ட்ரஸ் போட்டுகிட்டு,ஒரு உருவம்.."
"ம்"
"முதல்ல எம்பொண்டாட்டி தான் அத்தை நோட் பண்ணினா?"
"பண்ணி?"
"பலமா குறட்டை விட்டு தூங்கிகிட்டிருந்த என்னைய எழுப்பினா.."
"எழுப்பி?"
"அந்த வெண்ணிற ஆடை உருவத்தை காமிச்சா?"
"காமிச்சு?"
"காது கிட்ட முணுமுணுன்னு மந்திரம் ஓதினா?"
"ஓதி?"
"அந்த தேவதை காலில் இருக்கிறா மாதிரி கொலுசு வேணும்னா..."
"அச்சச்சோ,நீ என்ன பண்ணே?"
"அதிர்ச்சியில், மயங்கி விழுந்தேன் .."
"ஏன்?"
"நேத்தி ஈவ்னிங்  தான் அவளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கொலுசு வாங்கி கொடுத்தேன்..மறுபடியுமாங்கற அதிர்ச்சி தான் !"

Saturday, July 1, 2017

ம.ம.ச.

அந்த காலனியில் ப்ரதி இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை நாலரையிருந்து ஆறு ரகசியமாக ஒரு மீட்டிங் நடைபெறுகிறது. அந்த மீட்டிங்கில் எல்லாருக்கும் அனுமதியில்லை.ரொம்பவும் ஸ்க்ரீன் செய்து அவர்களுக்கு நம்பகமான ஆள் என்று எல்லாருக்கும் ஒட்டு மொத்தமாக தோன்றினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
மிக மிக ரகசியமாக நடைபெற்றது அந்த கூட்டம்...பாதுகாப்பான இடத்தில் ...எப்படி என்றால் பக்கத்தில் 3 கி.மீ அருகில் உள்ள B2 போலீஸ் ஸ்டேஷனுக்கே தெரியாது இப்படி இங்கு ஒரு பயங்கரமான கூட்டம் நடைபெறுகிறதென்று!
       அந்த கூட்டத்தில் விறுவிறுப்பாக பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருந்தாலும் கனல் தெறிக்குமாறு ஒருவன் பேசுவது ரொம்பவும் வீராவேசமாக இருக்கும். அவனுடைய பேச்சிற்கு அடிக்கடி கரகோஷம் கிடைக்கும்..கழுத்து பச்சை நரம்புகள் துடிக்குமாறு அவன் பேசுவதை கேட்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அவன் எது சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்...தீப்பொறி திருநாவுக்கரசு என்பது அவன் பெயர்.
        இப்படியாக ஒரு கொழுத்த ராகு காலத்தில் அந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.வழக்கம் போல் அனைவரின் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுக் கொண்டிருந்தான் தீப்பொறி திருநாவுக்கரசு!
             திடீரென்று ஒரு சலசலப்பு....திமுதிமுவென கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலில் நிறைய  பெண்கள் ஆக்ரோஷத்துடன் பாய கூட்டத்தில் இருந்தவர்கள் தம் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஒரு சில நொடிகளில் கூட்டம் சிட்டாகப் பறந்து விட...
              அத்தனை அமர்க்களத்திலும் துளிக்கூட அசையாமல் மைக்கை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கூட பதட்டப் படாமல் ஒருக்களித்து  ஸ்டைலாக சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தான் நம் தீப்பொறி திருநாவுக்கரசு....
               " ஹா......இவ்ளவ் தைரியமா?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை எல்லாரும் நெருங்க முன்னணியில் சென்றாள், அவன் மனைவி, மல்லிகா கையில் பூரி கட்டையோடு!
                'அடுத்து என்ன நடக்குமோ?' என்று ஒரு வித த்ரில்லோடு அனைத்து மனைவி மார்களும் 
கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க...
                அருகில் சென்றவுடன் தான் தெரிந்தது, பயத்தில் அப்படியே மயக்கமாகி விட்டான், அந்த 'மனைவியிடம் மருள்வோர் சங்க தீப்பொறி பேச்சாளன்' என்று!
          .......

திரும்பி பார்!

திரும்பி பார்க்கிறேன்..
*******************
போன வருடம் இந்த நாட்களில் US ல் இருந்தேன்..
பெண் வீடு!
எனக்கும்,சகதர்மணிக்கும் ஒரு ரூம்..எங்கள் சம்பந்திக்கு இன்னொரு ரூம்..
காலையில் ஆறரை மணி டு ஏழரை மணி வாக்கில் எழுந்திருக்க வேண்டியது..மாப்பிள்ளை ஐந்தரை மணிக்கே ஆபீஸ் போய் விடுவார்...பல் தேய்த்து காபி குடித்து விட்டு, நானும் எங்கள் சம்பந்தி சார் திரு Ramachandra Nagarajaan (He is my relative மட்டுமல்ல...ஒரு நல்ல நண்பரும் கூட!)
இருவரும் ஒரு ப்ரிஸ்க் வாக்கிங்..அந்த pleasant valley avenue வை இரண்டு தடவை சுற்றி வருவதற்குள்,அரை மணி நேரம் ஆகி விடும்...
பிறகு பெண் ஆபீஸ் கிளம்பல்...நாங்கள் டிபன் சாப்பிடுவது எல்லாம் முடிந்து டி.வி.யில் பழைய எம்.ஜி.ஆர்..சிவாஜி ..ரவிசந்திரன்..ஜெய் படம் என்று பார்க்க வேண்டியது..
ஒரு மூன்று மணி நேரம் ஓடி விடும்..பிறகு சாப்பாடு..
சின்னதாய் ஒரு தூக்கம்...மறுபடியும் காபி..சாயந்திரம் மாப்பிள்ளை ஐந்து ஐந்தரைக்கு வந்து விடுவார்...அரை மணி நேரம் கழித்து பெண் வருவாள்..அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு மறுபடியும் வாக்கிங்...இப்போது நானும் சகதர்மணியும்...அவர்களிருவருமாக வாக்கிங்..எங்கள் அகத்துக்கு பக்கத்திலேயே ஒரு பார்க்..அதில் நாங்கள் நாலு பேரும் கொஞ்சம் ரெஸ்ட்...பிறகு வீடு திரும்பல்..நியூஸ் பார்த்தல் ..டின்னர்..
அங்குள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது..களை புடுங்குவது..என்ற அசைன்மெண்ட் 
சில நாட்களில்..
US ல் நிறையவே நடந்தோம்..
பொழுதும்  படு ஜாலியாக ஓடிக் கொண்டிருந்தது..
ஒரு நாள் கண் விழித்ததும் வழக்கம் போல ப்ரஷ் செய்ய பார்க்கிறேன்...முடியவில்லை..
ஏதோ unusual ஆக....
பற்களை தேடுகிறேன்...கிடைக்கவில்லை...
பதட்டத்துடன் கண்ணாடியில் பார்க்கிறேன்..
ஹா...என்ன ஒரு கோரம்..
முகம் தன் symmetrical stage லிருந்து கொஞ்சம்...(கொஞ்சமா?) விலகியிருந்தது..வலது கண்ணும்,வலது உதடும் கொஞ்சம் மேல்நோக்கி சென்றுபார்க்கவே விகாரமாக இருக்க..
பயத்துடன் கட்டிலுக்கு வந்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன்..
'..கடவுளே..கடவுளே..இது  கனவாக இருக்கக்கூடாதா?' என்கிற அசட்டு  நம்பிக்கையுடன் கண்ணாடியில் முகம் பார்க்க, முகம் மறுபடியும் அதே கோணலுடன் தான் இருந்தது..
வெட்கம் பிடுங்கி திங்க, ரூமுக்குள் அடைந்து கிடக்க..அப்புறம் எல்லோரும் வந்து பார்த்து தைர்யம் சொல்ல..
உடனே, பெண்ணும் மாப்பிள்ளையும் கார் எடுத்து டாக்டரைப் பார்க்கப் போனோம்..அதற்குள் மாப்பிள்ளை கூகுளில் சர்ச் செய்து வந்தது Bell's palsy என்று கண்டுபிடித்து விட்டார்..குளிரினாலோ..அல்லது ஏதாவது stress னாலோ அது வருமாம்...
'வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டு அனைவருக்கும் கஷ்டம் கொடுக்கிறோமே' என்கிற சங்கடம் எனக்குள்..
டாக்டர் கொடுத்த மரத்திரை, கண்ணுக்கு சொட்டு மருந்து,சின்ன சின்ன எக்ஸர்ஸைஸ் எல்லாம் செய்து முப்பது நாளில் சரியாகி விட்டது..
அந்த சமயம் முகவிகாரம் தெரியாமல் இருக்க நான் வளர்த்த தாடி!
அந்த முப்பது நாட்கள் ..
என் அனுபவம்..
உறவுகளின் அனுசரனை..எனக்கும் 'பாதுகாப்பாக நம் மனிதர்களுடன் இருக்கிறோம்' என்கிற ஜாக்கிரதை உணர்வு..
'உறவு என்பது ஒரு சுகமான அனுபவம்' என்று நீல பத்மனாபன் தான் எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்?
எவ்வளவு சத்தியமான வார்த்தை?
குழந்தைகளின் ப்ரெண்ட்ஸ்களின் அன்பான  விசாரிப்பு..
டல்லாஸில் இருந்து அடிக்கடி வந்த இளைய மகள்..
மூன்று மாத லீவ் முடிந்ததால், நான் திருச்சிக்கு வர..
இங்குள்ளவர்களுக்கு ' சும்மா பல் வலி ..முகம் வீக்கம்..' என்று சமாளித்து, ஆபீஸ் வருகிறேன்..
அங்கு பெற்றோர்களையும்,உற்றோர்களையும் பல் வீக்கம் என்று சொன்னது இங்கு எடுபடவில்லை..
என்னைப் பார்த்தவுடன் கொல்லென்று என்னை சூழ்ந்து கொண்ட தோழமைகள்..
சும்மாவா...
எங்களுடையது, ஒரு முப்பத்தாறு வருட நெடிய ரயில் பயணமல்லவா?
ஆளாளுக்கு அக்கறையுடன் என்னை விசாரிக்க..
'எனக்கு இப்படித்தான் இருந்தது..ஒரு சின்ன எக்சர்சைஸ்..நம்ம ஆஸ்பிடல்ல மசாஜ் செஞ்சுக்கோ..சரியாயிடும் ..'
' இதெல்லாம் சகஜமா வரது தான்.....'
'பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லையப்பா..'
' நம்ம அர்ஷத் நிச்சயத்துக்கு நாம எர்ணாகுளம் போறோம்..உனக்கும் சேர்த்து ரிசர்வ் பண்ணியாச்சு..'
நண்பர்களின் கனிவான விசாரிப்பு...
தென்னை மரம் ஏறும் போது,சறுக்கி, மாரில் தோல் வயண்டு போக,அதனால் ஏற்படும் எரிச்சலுக்கு, விளக்கெண்ணெய் தோய்த்து மயில் பீலியால் வருடும் சுகம் போல இருந்த ஆபீஸ் நண்பர்களின் அக்கறை..
அடாடா..
அன்பு சூழ் உலகு ஐயா, இது 
உண்மையிலேயே,
அன்பு சூழ் உலகு தான்!
...........



Friday, June 30, 2017

போன வருட தியாகராஜ ஆராதனை விழாவில்....

"சார்..ஒங்களுக்கு, ஒரு பையன், இரண்டு பொண்ணுங்க!" என்றார் பக்கத்தில் இருந்தவர்..
"ம்"
"கையை திறக்காதீங்க..நல்ல செல்வாக்கான கை இது!"
"ம்"
கிண்டல் பண்ணுகிறேனோ என்ற சம்சயத்தோடு பார்த்தார்.என் பேஸ்து அடித்த முகத்தை வைத்து அவரால் ஒரு மண்ணும் கண்டு பிடிக்க முடியவில்லை..
"நீங்க எஜுகேஷன் லைன்"
கால்களை நன்றாக நீட்டிக்கொண்டேன்..ஆற்று மணலில் கைகளை பின்னால் விஸ்ராந்தியாக வைத்துக் கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு இருப்பது பரம சுகம்..
"நான் திண்டுக்கல்,நீங்க?"
 "திருக்கோடிக்காவல்"
"திருவானைக்காவலா?"
'ஐயோ'என்று வாய் வரை வந்த வார்த்தையை ஒரு பயத்துடன் கொட்டாவியாய்  கன்வர்ட் பண்ணினேன்...
பக்கத்தில் உள்ள ஒரு பாகவத சிரோன்மணி 'தரன்னா' என்று இழுத்தார்..
நான் அந்த பக்கம் திரும்பி 'ஹம்ஸத்வனி தானே!' என்றேன்...
"ஆமாம்..அதுல தான் நிஷாதம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.."
இந்த பக்கம் திண்டுக்கல் என்னை விடுகிறார் போல இல்லை.
எல்லா பக்கமும் மக்கள் தப்பு தப்பாய் தாளம் போட்டுக் கொண்டு இருந்தார்கள்...
" சார்..நீங்க கோபக்காரர்...இப்ப கையை விரிங்கோ..இந்த சாலமன் ரேகை இருந்தா நீங்க எஜுகேஷன் லைன்...அதோ அந்த ரேகை ஒங்க குழந்தைகளைப் பற்றிய டிடேய்ல்ஸ் சொல்லும்."
தரன்னா தன் பங்கிற்கு யாரும் கேட்காமலேயே ஶ்ரீ யை மத்யமாவதி என்றும் மத்யமாவதியை ஶ்ரீ என்றும்  சொல்லிக் கொண்டிருந்தார்..
"சார்..ஒவ்வொருத்தர் கச்சேரி சோபிக்கறதுன்னா,அவர் அதுல அசுர சாதகம் பண்ணியிருக்கார்னு அர்த்தம்...ஒரு வர்ணம் சூப்பரா வரணும்னா, அதை பாடறவர் அதை லட்சம் தடவை சாதகம் பண்ணியிருக்காராக்கும்..........நாம அதை லட்சத்து ஒண்ணாம் தடவை கேட்கிறோம்...ஆஹா....இந்த எடுப்புக்கு பத்மஶ்ரீயே குடுக்கலாம்!"
"பக்கத்து வீட்டுகாரருக்கு பத்மபூஷனே குடுக்கலாம்" என்றேன் நான் 'ஏதோ நாங்கள் இரண்டு பேர் மட்டும் அந்த பத்ம விருதுகளை டிஸைட் பண்ணுகிற கமிட்டியில் இருக்கிறார் போல்!'
"எதுக்கு?"
"அந்த மஹானுபவர் தானே இந்த கண்றாவியை லட்சம் தடவை கேட்டது!"
திண்டுக்கல் டர்ன் இப்ப..
"அதென்ன....பேரு கத்ரின்னு"
"கத்ரிங்கறது பேர் இல்ல.....மங்களூர் பக்கத்தில் இருக்கற ஒரு ஊர்" 
"சார்...2001ல திண்டுக்கல் போர்ட் ஹைஸ்கூல் ஹெச் எம் மா இருந்து ரிடையர்ட் ஆனேன்..ப்ரானிக் ஹீலிங் ப்ராக்டீஸ் பண்றேன்..வாஸ்துவும் தெரியும்..." என்றார், திண்டுக்கல் மறுபடியும்.
"ம்"
"ரெய்கி வேற....ப்ரானிக் ஹீலிங் வேற....தெரியுமா?"
"தெரியும்,"
நடு நடுவே, கச்சேரிகளும் கேட்டுக் கொண்டிருந்தோம்..
ஓ.....சொல்ல மறந்துட்டேனே...இந்த சம்பாஷணைகள் எல்லாம் நடந்த இடம், தியாகையர் ஆராதனை மண்டபம் ....சுகமான காவேரி  ஆற்று மணல் படுகை, திருவையாறு!

Monday, June 5, 2017

விமர்சனம்...

விமர்சனம்...
----------
விமர்சனம் என்று தலைப்பிட்டாலும்,இது விமர்சனமல்ல...ஒரு அறிமுகம்...
அறிமுகம் என்றாலும் அது நமது நண்பர் திரு மோகன்ஜிக்கான அறிமுகம்
அல்ல..அவர் எழுதிய 'பொன் வீதி' என்கிற இந்த சிறுகதை தொகுப்பிற்கு!
சரி விமர்சனத்துக்கு வருவோமா?
ஒரு சிறுகதையின் பலமே,அது முடிந்தது என்று தெரிந்தும் இந்த
மடமனது,ஆவலுடன் அடுத்த பக்கத்தில் ஏதோ ஒரு ஆர்வத்தில் தேடும்,ஏதாவது
பாக்கி இருக்கிறதா,என்று?
இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அப்படிப் பட்டவை..
'சமர்ப்பணம் ஜெயகாந்தனுக்கு' என்று போடும் போதே நினைத்தேன்.
ஆசிரியர்,என்னை ஏமாற்றவில்லை!
அவருடைய 'வானவில் மனிதன்' என்கிற ப்லாக்கில் வந்த சிறுகதைகள் தான் இவை!
இருந்தாலும் படிக்க படிக்க வாசிப்பவனை தூண்டுமாறு அமைந்த சிறுகதைகள்..
காதல் என்பது ஒரு மெல்லிய, நுண்ணிய சிக்கல் சிறிதுமிலா ஒரு
உணர்விழை...அந்த இழை அறுந்து விடாமல் வெகு ஜாக்கிரதையாக
கையாளப்பட்டிருக்கிறது, இவர் கதைகளில்.
எல்லா உறவுகளும் நீர்த்துப் போய் விட்ட பரபரப்பான இந்நாளில் பவித்தரமான
காதலும் தேய்ந்து கட்டெறும்பாகத் தான் போய் விட்டது..உணர்வுகளின்
சங்கமமாய் இருந்த காதல் கடிமணமானது, தேவைகள் என்று அளவிற்கு
சுருங்கி,இப்போது பேராசை எனும் மாய சிலந்தி வலைக்குள் சிக்கி, Usha of
HCL weds Ramesh of TCS என்று ஒரு business merger என்கிற அளவிற்கு
விகாரப்பட்டுத் தான் போய். விட்டது.இருந்தாலும், நல்ல வேளையாக இந்த
தொகுதியில் உள்ள சிறுகதைகள் எல்லாமே இக்காலகட்டத்திற்கு முற்பட்டவை
என்பது ஒரு ஆறுதலான விஷயம்...
இருபத்தொன்று சிறுகதைகள் ஒவ்வொன்றையும் விமர்சிக்க ஆரம்பித்தால்,
வாசகனின் சிரத்தை குறைந்து விடும்,என்பது என் பயம்..அதனால் தான் இந்த
பொதுவான விமர்சனம்..
திரு மோகன்ஜியிடம் ஒரு விண்ணப்பம்..இந்த சிறுகதை தொகுதியின் தலைப்பு
கதையான இந்த 'பொன் வீதியை' ஒரு கதை சொல்லியாக என் வீடியோ க்ளிப்பிங்கில்
கொண்டு செல்ல ஆசை...அனுமதி தருவீர்களா ஜீ?
'நம்மிடம் பிரிந்து செல்லும் பணத்தை விட கிடைக்கும் பொருளின் மதிப்பு
அதிகமாக இருக்க வேண்டும்' என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு வாசகனையும்
,நாம் செலவு செய்யும் 125 ரூபாய்க்கு இந்த சிறுகதை தொகுதி ஏமாற்றவில்லை
என்று அடித்து சொல்லுமாறு மனிதர் வெகு அழகாக கையாண்டிருக்கிறார்!
அந்த ஒரு 'ரிச்னஸ்'காகவே,என் இலக்கிய நண்பர்களுக்கு இதை பரிசாக
அளிக்கலாமென்றிருக்கிறேன்..
எழுதியவர் வேறு எங்கும் இல்லை..
உங்கள் விரல் நுனி mohanji.ab@gmail.com என்று அடிக்கும் தூரத்தில் தான்
இருக்கிறார்...
கடைசியாக ஒன்று..
கமாஸ் என்றொரு ராகம்..ஆலாபனைக்கு முன் உங்களை 'சுகமா..சுகமா' என்று
கேட்டு கொண்டு தான் ஆரம்பிக்குமாம்..அது போல, இந்த புத்தகத்தை தொடுவதற்கு
முன், ஏதாவது வேலை இருந்தால், அதை முடித்து விட்டு மனதை ரிலாக்ஸ்டா ஆக
வைத்து விட்டு படிக்க ஆரம்பியுங்கள்,ப்ளீஸ்.
ஏனென்றால்,பாதியிலேயே நிர்கதியாய் இதை விட்டு விட்டு வேறு வேலை பார்க்க
உங்களால் இயலாது...படிக்க ஆரம்பித்து விட்டால் இதை முடித்து விட்டு தான்
மறு வேலை பார்க்கும்படியாக இருக்கும்..
ஆம்,

என் அனுபவம் அப்படி!

Wednesday, May 17, 2017

"நம்ம வேணுவோட அப்பாவா போயிட்டார்....அடப்பாவமே!"
"ஆமாம்....கொஞ்ச நாளா படுத்த படுக்கையாக இருந்தார்.."
"இப்படி ஒரு க்ரூஷியல் டயத்திலேயா போகணும்.."
"அவன் ஒரு கஞ்சப் பிசினாறி..நல்ல டாக்டர்ட்ட அப்பாவை காமிக்கலாமில்லையா?"
"எதுக்கு..நம்ம கம்பெனி ஆஸ்பத்திரி தான் இருக்கே?"
"நான் அதுக்கு சொல்லலைப்பா..நல்ல 'ரிச்'சா ட்ரீட்மென்ட் கொடுத்தா,ஒரு பத்து பதினைஞ்சு
நாளாவது தாங்குவாரோன்னோ..அதுக்குத் தான் சொன்னேன்"
"கேட்டேனே..மெடிகல் இன்ஸ்யூரன்ஸ் அப்பாக்கு எடுத்திருக்கானாம்..நம்பர்  ஒன் ஆஸ்பிடல்ல
தான் ட்ரீட்மென்ட் பண்ணினாம்..நல்லாத் தான் கவனிச்சிண்டாங்களாம்.."
"பாவம்..அவனுக்கு தான் கொடுத்து வைக்கலை!"
"ஐயையோ..இந்த விஷயத்தை அவனிட்ட சொல்லிட்டியா, நீயி?"
"டேய்..அவனே ஹார்டு பேஷண்ட்..ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா.."
"அவ்ளவ் மடையனாடா, நான்? பக்குவமாத் தான் சொன்னேன்.....'டேய் வேணு..அதிர்ச்சி அடையக்கூடாது..மனசை திடப்படுத்திக்கோ..நம்ம எல்லார்லியும் உன் ஒருத்தனுக்கு மட்டும் தான் இப்படி ஆகணுமான்னு
நாங்க எல்லாரும் ரொம்பவே வருத்தப்பட்டோம்னு ரொம்ப பீடிகை போட்டுண்டு  தான் அவன்ட்ட இந்த விஷயத்தை  பக்குவமா சொன்னேன்.."
"அதுக்கு அவனோட ரிஆக்‌ஷன் எப்டி இருந்தது?"
"'ஆண்டவனே..நான் ஒருத்தன் மட்டும் என்ன பாவம் பண்ணினேன்..இந்த ஒலகத்திலேயே எனக்கு மட்டும் ஏன்  இப்படி அடி மேல அடியா துக்கம் வரணும்னு' அவன் சொல்லிண்டே இருக்கும் போது கரகரன்னு அவன் கண்ணிலேர்ந்து தண்ணி..பக்கத்துல இருக்கறவா கூட 'அவன் அப்பா போனதுக்குக் கூட இப்படி வருத்தப்பட படலே..என்ன விஷயம் சொன்னேள்னு என்னை பிலுபிலுன்னு பிடிக்க ஆரம்பிச்சுட்டா..அவாள்ட்டேயும் அதை சொன்னவுடனே, 'அட துரதிர்ஷ்டம் பிடிச்சவனே!'ன்னு அவனை பரிதாபமா பார்த்தா எல்லாருமே!"
"சரி..சரி..இந்த மாதிரி சமயத்திலியா அவன் அப்பா போணும்?பாவம்டா அவன்!"
"நாங்கள்ளாம் காலைல வரோம்னு சொன்னியா?"
"சொல்லிட்டேன்...ஜாஸ்தி பேசாம நீங்க எல்லாருமே ரொம்ப ஜாக்ரதையா அவன் அப்பா போன துக்கம் மட்டும், கேட்டுட்டு வந்துடுங்கோ!"
"ஆமாமா.. மறுபடியும் இதை  அவன்ட்ட சொல்லி அவன் வேதனையை யாரும் கிளற வேண்டாம்.. அவன் அதிர்ஷ்டம் .பத்து நாள் உயிரை கைல பிடிச்சுண்டாவது அவன் அப்பா இருந்திருக்கலாம்..என்ன பண்றது?
நம்ம வேணு கொடுத்து வச்சது அவ்ளவ் தான்!
நம்ம மேனேஜர் பத்து நாள் மும்பைக்கு டூர் போன சமயத்திலா அவன் அப்பாவும் இப்படி உயிரை விடணும்?"

.......

Tuesday, May 9, 2017

என்சைகிளைபிடிஐயா!

என்னை என்றுமே சைக்கிள் ஈர்த்ததில்லை ...
கையில் கொஞ்சம் காசு கிடைத்தால்,(அதாவது ஆங்கரை கிராமத்திலிருந்து செருதூரில் உள்ள LBHS செல்ல, பஸ்ஸிற்கு கொடுக்கும் பத்து காசு..நாங்கள் நடந்தே ஸ்கூல் போய் சேமிக்கும் பத்து பத்து காசுகள்!) அதை வாடகை சைக்கிள் காரனிடம் குடுத்து முட்டியை பெயர்த்து கொள்ளும் ஆசையெல்லாம் எனக்கு எப்பவுமே  கிடையாது..அந்த காசுகளை சேர்த்து, கிராமத்தில் ஒரு வீட்டு திண்ணையில் நண்பர்களுடன் கடை பரப்புவோம்..சாக்பீஸ் துண்டுகளை சம்பளமாக கொடுத்து சின்ன பசங்களை 'லவா லவா லக்கி ப்ரைஸ்' என்று கூவ செய்வோம்..
ஒரு பெரிய கார்டு போர்ட்..அதில் பாதி ஏரியாவுக்கு window display!
அதாவது, ஒரு ஸிம்பன்சி வால் பேப்பர்...ஒரு ஜீப்...கலர் சாக்பீஸ்..கொக்கு குண்டு (கோலி குண்டின் பெரியம்மா!)என்று பரிசு பொருட்கள் அலங்கரிக்க,மறு பாதியில் கலர் பேப்பர் எட்டு துண்டுகளாக மடிக்க வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பைசா குடுத்து ஒரு பேப்பர் எடுக்கலாம்..பிரித்து பார்த்தால் முக்கால் வாசி மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் NP ( no prize) என்று எழுதி இருப்போம்..ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவர்களுக்கு ஆரஞ்சு பெப்பர்மெண்ட் வேண்டுமானால் கிடைக்கலாம்..அடுத்த சான்ஸ்க்கு இன்னொரு ஐந்து பைசா கொடுத்து தம்தம் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்த்துக்  கொள்ளலாம்...
எங்களிடம் ஏமாந்த எங்கள் கிராமத்தை சேர்ந்த சீமாச்சு என்கிற ஶ்ரீநிவாசன் ஐ ஐ டி யில் படித்து அமெரிக்காவில் வேலை கிடைத்து, க்ரீன் கார்ட் வாங்கி, லாஸ் வேகஸ் காஸினோகளில் ஏமாந்திருக்கிறான் என்பது நான் உங்களுக்கு அளிக்கும் உபரி தகவல்!
     சேமித்து வைத்த காசுகள் இந்த முறையில் recycle ஆகுமேதவிர, மற்றபடி எனக்கும் சைக்கிளுக்கும் வேறு எந்த விதமான ஸ்நானப்ராப்தியும்   கிடையாது!
எதற்கு இவ்வளவு பில்டப் என்கிறீர்களா?
   ஏதோ சைக்கிளை பற்றி எழுத வேண்டுமென தோன்றிற்று!

Thursday, April 13, 2017

டிக்...டிக்.....டிக்.....
 எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி கடிகாரம் செவ்வனே தன் கடமையை செய்து
கொண்டிருந்தது.
 குழுமியிருந்த யாரும் பேசவில்லை.
 ஒரு மெல்லிய சோகம் எல்லார் முகங்களிலும்!
 ஆழ்மௌனத்தை கலைத்தான் ஒருவன்.
  "இன்னும் இரண்டு மணி நேரம் தாங்கினாலே ஜாஸ்தி"
 கட்டிலைப் பார்த்தோம். அவன் சொன்னது சரி. மூப்பு கொஞ்சம் கொஞ்சமாக
ஆக்கிரமித்து கொண்டிருக்க, அதனால், கொஞ்சம்,கொஞ்சமாக குறுகிக் கொண்டிருக்க....
  "எப்டி dispose பண்றது?"
   ச்சே ....என்ன மனுஷன் இவன்...
    " It will take it's own course"
    இன்னும் விடியவில்லை...
    நேரம் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருந்ததை எல்லாராலும் உணர முடிந்தது.
     கவிந்திருந்த சோகத்தை சட்டென்று புறம் தள்ளுவதைப் போல...      "க்வா....க்வா...."            அனிச்சையாய் ஒரு வித உற்சாகம்
     கவ்விக் கொள்ள......
     குரல் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓட...
      அதே சமயம்,
       "It will take it's own course" என்று
      சொன்னதிற்கு ஏற்றார் போல்.....
      கற்பூர கட்டி காற்றில் கரைவது மாதிரி....
       கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது துர்முகி!
       
          
       
        

     
      
    

Thursday, January 5, 2017

நெய்யாற்றங்கரையில் குடும்பம் இருந்தது. நாகர் கோவிலில் வேலை.வேப்பமூடில் ரூம் எடுத்து தங்கி இருந்தான்.அடிக்கடி, 'ட்ரவேண்டரம் போட் மெயிலி'ல்  பயணிப்பான்.க்யூ இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அந்த இரண்டாவது கவுண்டருக்குத் தான் வருவான்.அதிலும் ஒரு டசன் பேர்கள் பின்னாடி நின்றிருந்தாலும், அவர்கள் அத்தனை பேருக்கும் பெருந்தன்மையாய் வழி விட்டு, கடைசி ஆளாய் தான் டிக்கெட் வாங்குவான்.அதை அந்த கவுண்டரில் இருந்த அந்த பெண்ணும்  நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்.
அப்படித் தான்  அவன், ஒரு சாவதானமான புதன் கிழமை மதியம் நாகர் கோவில் ரயில்வே ஜங்ஷன் வந்த போது....
"நெய்யாற்றங்கரை தானே?"
"அட..எப்டீ கண்டுபிடிச்சீங்க?"
"அதான்,நெத்தீல எழுதி ஒட்டியிருக்கே.."
நெற்றியை பொய்யாய் தடவி பார்த்துக் கொண்டான். கவுண்டரில் இருந்த அந்த பெண்ணும் அதைப் பார்த்து சிரித்தாள்.
"சரி..ஊரை சொல்லிட்டீங்க...ஒங்க பேரு?"
"மேரி"
"........................."
"'வில் யு மேரி மீ'ன்னு ஒடனே, மனசுக்குள்ள மத்தாப்பு பறக்குமே?"
"அட...ஆமாங்க!"
"ஞானஸ்னானம் பண்ணிப்பீங்களா?"
"கங்காஸ்னானம் பண்ணுவேன்...அதுவும் தீபாவளிக்கு தீபாவளி தான்..என்னைப் போய்.."
"பயப்படாதீங்க....நாங்க முஸ்லிம்"
"நீங்க ஸ்லிம்மா இருக்கும் போதே தெரிஞ்சுகிட்டேன்..நாங்க மாப்ளாஸ்"
"அட!"
சந்தோஷத்தில் அவள் ஹம் செய்தாள்..
'உளறி கொட்டுகிறோமோ' என்று பயமாக இருந்தது.இருந்தாலும் தொடர்ந்தான்..
"ஏங்க...இது, பைரவி தானே?"
"எப்டீ கண்டுபிடிச்சீங்க?"
"கொஞ்சம் கொஞ்சம் க்ளாஸிகல் ம்யூஸிக் தெரியும்ங்க...நமக்கு அந்த பீல்டுல ப்ரெண்ட்ஸ்ங்க ஜாஸ்தி!"
"ஓ"
"ஒங்களுக்கு பைரவி நல்லா வருதுங்க!"
"நாலு பிஸ்கட்ட காசு குடுத்து, கடைல வாங்கி, நடுத்தெருல போட்டுப் பாருங்க..ஒங்களுக்கும் பைரவி வரும்!"
"கலாய்க்கறீங்களா?"
"ஊகூம்!"
"உண்மையை சொல்லுங்க..நீங்க?"
"நாங்க தேசிகர்ம்பாங்க.."
"அட...நாங்களும் தேசிகர் தாங்க...கேரளாக்கு புலம் பெயர்ந்துட்டோம்..தண்டபாணி தேசிகர் கூட எங்களுக்கு..."
"டிஸ்டண்ட் ரிலேட்டிவ் ம்பீங்களே,ஒடனே!"
"ஆமாங்க...ஒரு இருநூத்தைம்பது  கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ் .."
"ஹா...ஹா.."
"அது சரி, இந்த 'செவன்த் பே கமிஷன்'ல ஒங்களுக்கு நல்ல ஹைக் தானே!"
"இல்லீங்க, வேலைக்கு சேர்ந்து ஒண்ணரை வருஷம் தான் ஆறது..அப்பா திடீர்னு காலமாயிட்டாரு...அஞ்சாறு தம்பி தங்கைங்க..இந்த வேலை கூட 'கம்பாஸினேட் க்ரவுண்ட்'ல கிடைச்சது தான்..அம்மாக்கு அப்பாவோட பென்ஷன் வரதுனால, ஏதோ காலம் ஓடுது...நீங்க?"
"அதை ஏன் கேக்கறீங்க? எங்க வீட்ல எல்லாரும் செட்டில் ஆயிட்டாங்க..நான் ஒர்த்தன் தான் வீணா போயிட்டேன்..கால் டாக்ஸி ட்ரைவரா ஏதோ பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு!ஹூம்!"
       ஆழ் மௌனம், ஒன்று அநிச்சையாய் அவர்கள் இருவருக்கும் இடையே குறுக்கே புகுந்தது.
       மௌனத்தை கலைத்தான், அவன்.
       "வரேங்க!"
       "ம்"
.............................
      அடுத்த முறை ஜங்ஷன் வரும் போது, ஏனோ அவன்  அந்த இரண்டாவது கவுண்டர் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை!
       அவள் அதை எதிர்பார்க்கவும் இல்லை!!
 





............
    

"