Friday, March 18, 2011

நான் அவனில்லை.....!

அந்த வழியாய் தான் எப்போதும் புருஷோத்தமன் ஆஃபீஸ் விட்டு வருவது வழக்கம். இன்றும் அவன் இருக்கிறானா என்று பார்த்தான். அனிச்சையாய் கை இடது பேண்ட் பாக்கெட்டில் சென்றது.நல்ல வேளை பேண்ட் பாக்கெட்டில் ஐந்து ரூபாய் ‘காயின்’ இருந்தது.
புருஷோத்தமனுக்கு பொதுவாக பிச்சைக் காரர்களைப் பிடிக்காது. அப்படியே ரொம்பவும் கெஞ்சினால்,ஒரு எட்டணா காசை தட்டில் போட்டு விட்டு அவன் திட்டும் திட்டு காதில் விழுவதற்குள் ஓடி விடுவான். இப்போது எட்டணாவும் இல்லை..பிச்சைக் காரர்களும் அவ்வளவாய் கண்ணில் படக் காணோம்.
..ஐந்து ரூபாய்...சும்மாவா..எவன் போடுவான்? ’சாமி தர்மதுரை நீங்க நல்லா இருக்கணும்’னு வாழ்த்தத் தான் போறான்....
’காயினை’ப் போட்டு விட்டு, புருஷோத்தமன் நகர,
”ஸார்”
.. அந்த கால எட்டணாவுக்கு உள்ள மதிப்பு தானா இப்ப் உள்ள ஐந்து ரூபாய் காயினுக்கு? திட்டப் போறானோ?
புருஷோத்தமனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.
“ என்னப்பா?”
“ ஸார் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. நான் தரை வியாபாரிங்க..சினிமா பாட்டுப் புத்தகம் வியாபாரம் பண்றேன்..அந்த கால ’ப’ சீரீஸ் பாட்டுப் புத்தகங்கள் இருக்கு..
கண்ணதாசன்..மருத காசி எதாவது வேணாப் பாருங்க, சார்”
அப்போது தான் கவனித்தான். அவனைச் சுற்றி பாட்டுப் புத்தகங்கள்..அட.. நாம தான்
தப்பா புரிஞ்சிக்கிட்டோம்..இருந்தாலும் கொடுத்த காசை..
“ எனக்கு பாட்டுப் புத்தகமெல்லாம் வேண்டாம்..அதை டீ குடிக்க வைச்சுக்கப்பா”
“ சார்..மன்னிக்கணும்...இந்தாங்க”
காசை அவன் திருப்பிக் கொடுக்கவே, பொடனியில் பொளேரென்று அடித்தது போல் இருந்தது, புருஷோத்தமனுக்கு!!

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமை.

படித்து முடித்ததும் என் பொடனியிலும் பொளேரென்று யாரோ அடித்தது போல இருந்தது.

RVS said...

இந்த மாதிரி நச்சுன்னு சுருக்கமா எனக்கு எழுத வரலை சார்! அற்புதம்.. ;-))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பாத்திரமறிந்து பிச்சையிடாவிட்டால் புருஷோத்தமனோ பரந்தாமனோ பாரபட்சமில்லாமல் பொடனியில் பளார்தான்.( எல்லாமே ப ஸீரிஸ்ல எழுதணும்னா அது இவ்வளவு கஷ்டமா?)

vasan said...

ஒரு பாட்டுப் புத்த‌க‌த்த‌ வாங்கிட்டு நிலைமையைச் சமாளித்திருக்க‌லாம் ந‌ம்ம‌ புருஷோத்த‌ம‌ன்.

வெங்கட் நாகராஜ் said...

அரை பக்கக் கதை! ஒரு பாராவில் கூட உங்கள் கதை சொல்லும் திறன் ஒளிர்கிறது ஆர்.ஆர்.ஆர். சார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோ.வி்ற்கு,

அச்சச்சோ...அப்படியா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுருக்கமா எழுதலாம்..சுருக்னு தான் எழுதக் கூடாது, இல்லையா, RVS?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுந்தர்ஜி..சாதாரண விஷயம் தான்..எப்படி எல்லாம் போகிறது, பார்த்தீர்களா? ஏழைகள் நம் மாதிரி நடுத்தர வர்க்க மனிதர்களைக் காட்டிலும் சுய மரியாதை மிக்கவர்கள்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு பாட்டுப் புத்தகத்தை நம்ம புருஷோத்தமன் வாங்கிட்டு போயிருக்கலாம் தான் வாசன் சார்..ஆனா, நமக்கு இந்த கதை கிடைத்திருக்காதே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு பாராவில கதை எழுதறது, நம்மால முடியாது, வெங்கட்.. நம்ம பா.ரா.தான் இதில எக்ஸ்பர்ட்!

ரிஷபன் said...

பொடனி அடி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்படியா?