Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டே வருக..!!


நாம் சிறுவர்களாய் இருந்த காலத்தில், தமிழ் புது வருஷப் பிறப்பு என்றாலே கொண்டாட்டம் தான். காலையில் எழுந்தவுடன் பூஜை ரூமில் கண்ணாடி, அதன் பக்கத்தில் ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா,திராட்சை,பேரீச்சை என்று விதம்,விதமாய் பழங்களும்,நூறு ரூபாய் நோட்டுகளும் தட்டில் வைத்துப் பார்க்கச் சொல்வார்கள். ஸ்வாமி படத்தின் அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, கொஞ்ச நேரம் அப்படியும்,இப்படியுமாய் பொழுது போய் விடும்.
வாசல் திண்ணைக்கு வந்து நம்மோடத்த நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லுவோம். டூ விட்ட நண்பர்களுக்குக் கூட வாழ்த்துச் சொல்லி, நட்பைப் புதுப்பிப்போம்.
அதற்குள் வாசலில் ஒரு அறிவிப்பு வரும். பெருமாள் கோவிலில் இத்தனை மணிக்கு பஞ்சாங்கம் படிக்கப் போகிறார்கள் என்று. அங்கு போனால், பானகம்,நீர் மோர், வெள்ளரிப் பிஞ்சு என்று விதம்,விதமாய் தருவார்கள். ஏக குஷி தான்!
அப்புறம் சாப்பாடு. நிச்சயம் வேப்பம்பூ பச்சடி இருக்கும். அதை தவிர பழப் பச்சடி. யாராவது உறவுக் காரர்கள் வீட்டுக்கு வருவார்கள். வீடே ஜே ஜே என்று இருக்கும். என்ன ஒரு கஷ்டம் என்றால், குழந்தைகளாகிய எங்களை சீக்கிரம் குளி சீக்கிரம் குளி என்று உயிரை எடுப்பார்கள். மற்றபடி எல்லாமே ஜாலி தான்.
ஆனால் இன்று....
ஒரு நாள் தான் லீவ். மெல்ல சோம்பல் முறித்து எழும்பல். பல் தேய்த்து காஃபி குடிக்கும் போது தான் கண்ணாடியில் பழங்கள் பார்க்க வேண்டும் என்ற ஞாபகம் வரும். அதை செய்யலாம் என்று நினைக்கும் போது, தொலைக் காட்சியில் ஒரு interesting ஆன ப்ரோக்ராம். அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால், பொழுது போயே போய் விடும்!
ஊரில் இருந்து அப்பா, அம்மா வாழ்த்து சொல்லும் போது தான் ஆஹா.. இன்று பண்டிகை என்று ஞாபகம் வரும். அதற்குள் கொஞ்சம் வீட்டு வேலைகள் செய்வோம். பெரும்பாலும் டி.வி.யில் advertisement வரும் போது தான் வேலைகள் செய்வோம். பிள்ளைகள் நமக்கு மேல். தொலைக் காட்சி நிறுவனங்கள் நிறைய நிகழ்ச்சிகள் வைத்து நம் நேரம் எல்லாவற்றையும் விழுங்கி விடுவார்கள்.
அதற்குள் சாயங்காலம் வந்து விடும். எதாவது கோவில் போக வேண்டும் என்று தீர்மானம் செய்து, அதை செயல் பட ஆரம்பிக்கும் போது, இன்னொரு programme வந்து நம்மை மறக்கடிக்கச் செய்து விடும். இப்போது blog என்று ஒரு புதுப் பழக்கம் வேறு!
யாராவது தப்பித் தவறி வீட்டுக்கு வந்தால் கூட, வா என்று ஒரு ஒற்றைச் சொல்லை உதிர்த்து விட்டு, டி.வி. பார்க்க ஆரம்பித்து விடுவோம்! அதையும் அவர்களும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு நாம் போனாலும் இது தான் நடக்கும் என்பது எங்கள் இருவர்களுக்கும் தெரியும்!
புத்தாண்டே புதுப் புடவை கட்டிக் கொண்டு, நம் வீட்டுக்கு வந்தாலும், அதற்கும் நம் முகத்தை டி.வி. யிலிருந்து சற்றே முகம் திருப்பி வா என்கிற ஒற்றைச் சொல் தான்!
இரவு எல்லாரும் தம்தம் முகங்களை முழுவதும் தொலைத்து விட்டு, ஒரு வெறுமை பரவ, 'ஆஹா.. வீட்டில் கட்டா..கட்டையாய் பெரியவர்கள் இருந்தால் எவ்வளவு ரம்யமாய் இந்த பண்டிகையை நாம் கொண்டாடியிருப்போம் 'என்ற ஏக்கம் மனதினை கவ்வும். அதற்குள் அடுத்த நாள் ஆஃபீஸ் போக வேண்டியதற்கான ஆயத்தங்கள்
மனதினை அழுத்த அதுவும் மறந்து போய்...
இன்றைய பண்டிகைப் பொழுது இப்படி கழிந்து விட்டது.
இப்போதே இப்படி போய் விட்டது!
நாளை எப்படியோ!!!!

15 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Chitra said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. எங்க வீட்டில் நடப்பது போலவே. இங்க சிங்கப்பூரில் எனக்கு அலுவலகம் வந்ததுதான் தெரியும் இன்று தமிழ்ப் புத்தாண்டு என்று. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Paleo God said...

முட்டாள் பெட்டியை பகுத்து அறிந்த விதம் அருமை.

:))
--

பத்மா said...

கரெக்டா சொல்லிருக்கீங்க

V.S.SUNIL KUMAR PILLAI said...

நல்ல கருத்து.

ரிஷபன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
புத்தாண்டே புதுப் புடவை கட்டிக் கொண்டு..
ஏன் பேண்ட் போட்டுக் கொண்டு வராதா..

Aba said...

எலேய்.... இது தமிழ் புத்தாண்டு இல்லையாம்லே.... ஏதோ இந்துப் புத்தாண்டாம்லே.... தலவர் கலைஞர் மாமா தான் சொன்னாருப்பா.......

Muruganandan M.K. said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஏதோ எங்கள் அனுபவம் போன்ற இனிமையான உணர்வையே உங்கள் பதிவு ாருகிறது.

வசந்தமுல்லை said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ஏன் உள்ளதை அப்படியே சொல்கிறீர்கள்? அதுவும் இப்போதெல்லாம் உண்மைகள் எல்லோருக்கும் வேப்பம பூ போல் கசப்பதில்லை.....
எனிவே! சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள். உள்ளதை உள்ளபடியே சொன்ன விதம் அருமை.

வெங்கட் நாகராஜ்

வை.கோபாலகிருஷ்ணன் said...

போலி டாக்டர்கள், போலி சாமியார்கள், போலி ரூபாய் நோட்டுக்கள், போலி ஓட்டுக்கள், போலி மருந்து மாத்திரைகள் என்பது போல அன்று மிகச் சிறப்பாக கொண்டாடிய பண்டிகைகளும், விருந்தோம்பலும் இன்று போலியாகவே கொண்டாடப்படுகின்றன என்பதை மிகவும் அருமையாக விளக்கிவிட்டீர்கள் ஐயா! இருப்பினும் எனக்கு ஒரு குறை. அன்று பண்டிகை நாட்களில் வடை போளி என்று செய்வார்கள். அந்த வெல்லம்+தேங்காய் போட்டு செய்த போளியை சுடச்சுட குறைந்த பக்ஷம் ஒரு ஆறு எடுத்து, வடக்கு ஆண்டார் தெரு பழனி விலாஸில் வாங்கிய நல்ல நெய்யை உருக்கி ஊற்றி சாப்பிட்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்பதைப்பற்றி நீங்கள் எழுதாதது ஒரு பெரும் குறை தான். என்றோ என் தாயார் 35 வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்த அந்த சுடச்சுட போளியும் உருக்கிய நல்ல நெய்யும் இப்போது நினைத்தாலும் நாக்கில் ஜலம் ஊறுகிறது உடம்பில் சுகர் ஏறுகிறது ..... ஐயா. அந்த நாளும் வந்திடாதோ ?

cheena (சீனா) said...

அன்பின் ஆரன்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி

மாம்பழம் ரெடியா - வாங்கிட்டுப் போக வரலாமா

புத்தாண்டு வாழ்த்துகள் ( ஒண்றரை மாசம் கழிச்சு )

நல்லா கொசுவத்தி சுத்தி இருக்கீக

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Asiya Omar said...

வலைச்சரம் மூலம் வந்தேன்,வாழ்த்துக்கள்.அருமை சார்.சித்ரா நன்றி.