Wednesday, March 27, 2013

ஆரண்ய நிவாஸம்.....

இனி ஓய்வு தான்... அதுவும் நிரந்தர ஓய்வு!
உனக்கு வயதாகி விட்டது, இனி நீ ஆஃபீஸ் வர வேண்டாம்..ரெஸ்ட் எடுத்துக் கொள் என்று ஆஃபீஸில் சொல்லி விட்டார்கள்....
பார்க்கப் போனால், ஞாயிற்றுக் கிழமை தான் ரிடய்ர்ட்மெண்ட் வர வேண்டும் எனக்கு! அன்று வார விடுமுறை என்பதால், சனிக் கிழமையே அவசர,அவசரமாய் ரிடய்ர்ட்மெண்ட் ஆக்கி விட்டார்கள்!
          ஆஃபீஸ் நண்பர்கள் வீட்டிற்கு வந்து, உபசாரத்திற்கு என்னை பார்ப்பதும், பதிலுக்கு  நான் அவர்களுக்கு டிஃபன், காஃபி என்று பிரதி உபசாரம் செய்வதுமாக  இரண்டு மூன்று நாள் பொழுது ஓடி விட்டது..
         இப்போது அவரவர்கள் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்..என் மனைவி கூட ஆஃபீஸ்க்கு கிளம்பி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
   
       தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, விஸ்ராந்தியாய் கொல்லைப் பக்கம் ஒரு குளியலும் போட்டு விட்டு ஸ்வாமிக்கு ஸ்லோகம் சொல்லி, டிஃபன் சாப்பிட்டு பேப்பர் படிக்கப் போகும் போது........,
      காலிங்பெல் அடிக்கும் சத்தம்!
      என் இலக்கிய நண்பர் வரதன்!
      பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது..எதேச்சையாய் இந்த பக்கம் வந்தாராம்..அப்படியே ஒரு எட்டு என்னைப் பார்த்து விட்டு போலாம் என்று வந்திருக்கிறார்..
     ஆஃபீஸ் இருக்குமே..போயிருப்பாரோ..இல்லாவிட்டால் ரிடையர்ட் ஆகியிருப்பாரோ என்ற சந்தேகம் எதுவும் துளிக்கூட இல்லாமல்..’என்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டதே..பார்த்தால் பேசி விட்டுப் போகலாம்’ என்று வந்திருக்கிறார்..ஆப்த நண்பர்!
     சுட்ட  ஏத்தம்பழம்  இரண்டு இருந்தது...ஒரு டீ கலந்து  குடுத்தேன்...
     ஏத்தம் பழமா...ஜோர்..ஜோர்...எனக்கு ரொம்பப் பிடிக்குமே” என்று ஆசையாக சாப்பிட்டார்...
    “வரதன் இந்த  ஏத்தன் பழத்துல ஒரு கதை ஒண்ணு இருக்கு.. நீங்க கிளம்பும் போது சொல்றேன்”
    “ சரி”
     “நிறைய விஷயங்கள் பேசினோம்...அவர் ஓய்வூதியம் வாங்க போராடிய
கதையை சொன்னார்..வாழும் வாழ்க்கையே ரொம்ப போராட்டமாகப் போய் விட்டது என்று ஏகத்துக்கு வருத்தப் பட்டார்...
       அவர் கவிதைத் தொகுப்பு ஒன்றை பரிசாகக் கொடுத்தார்..பையனுக்கு சரியாக வேலை அமையவில்லை என்று வருத்தப் பட்டார்..அவருடைய சிறு கதைத் தொகுப்பை M.A. க்கு வைத்துள்ளதைப் பற்றி சிறு  குழந்தை போல சந்தோஷப் பட்டார்.அவருடைய சிறுகதைகளை ஆராய்ச்சி செய்ய வந்த மாணவன் ஒருவன் ’டாக்டரேட்’ வாங்கியதை தன்னிடம் சொல்லவில்லை என்று ஏக்கப் பட்டார்...
      இரண்டு பேருக்கும் பேசுவதற்கு ‘சப்ஜெக்ட்’ இல்லாததினால் கொஞ்ச நேரம் மெளனம்..
      அவருடைய கவிதைத் தொகுப்பை வருடினேன்!
      அவருடைய கவிதைகளிலே எனக்குப் பிடித்த அம்சம் ஒரு அழகிய ஃபோட்டோவை எண்ணி நாலே   நாலு எளிமையான வரிகளில் கொண்டு வந்து விடுவது தான்!.
        உதாரணத்திற்கு....
       “.........கண்ணாடிக் குழல்களில்
       ஆரஞ்சு சாறு நிரப்பப் பட்டது
       போன்ற அழகிய விரல்கள்..”
       இதோ இன்னொரு கவிதை....
       அம்மா இனி இல்லை..அம்மா அன்போடு கொடுத்தனுப்பிய தயிர்சாதமும்,
வடு மாங்காயும் இனி கிடையாது என்பதை எவ்வளவு நாசுக்காய் வெளிப் படுத்துகிறார்!
       “ .........சுத்தமாய்த் தேய்த்து
          கழுவப் பட்ட
          அந்த கனமான
          எவர்சில்வர் டிஃபன் பாக்ஸ்
          வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது.....”
          ஒரு கவிஞரின் கவிதைகளை அவர் முன்னாலேயே படித்துக் கொண்டிருப்பது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம்!
        லேசாய் கனைத்தார் வரதன்!
      “அப்ப வரட்டுமா?”
      புத்தகத்தை மூடவே மனதில்லாமல் ’சரி’ என்று  ஆரண்ய நிவாஸத்தின் வாசல் கேட் வரை சென்று  வழி அனுப்பி விட்டு வந்தேன்.
        சற்று நேரத்தில் வாசலில் காலிங்பெல் அடித்தது!
        லாண்டரிக்கு துணி எடுக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்து கதவைத் திறந்தவனுக்கு ஆச்சர்யம்!
        மறுபடியும் வரதன்!
       “எதுக்கு வந்தேன் தெரியுமா?”
       “கண்ணாடி கூடு மறந்து போய் வைச்சிட்டீங்களா?”
       “ இல்லை..அந்த ஏத்தம் பழக் கதை?’’
       “ அட... நான் மறந்துட்டேன் இல்ல..”
        வாத்ஸல்யத்துடன் அவர் கையைப் பற்றிக்கொண்டு வாசலில் உள்ள
கார்டன் சேர்களில் அமர்ந்தோம்...அந்த உச்சி வெயிலிலும் பக்கத்தில் உள்ள
மாமரத்திலிருந்து ஜிலுஜிலுவெனக் காற்று வீசியது..
        ”ம் சொல்லுங்க”
        “சொல்றேன்”
          மனது பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது...அன்று நடந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கும்...யாரிடமும் இது வரை பகிர்ந்து கொணடதில்லை...வரதனிடம் சொல்லப் போகிறேன் என்று நினைக்கும் போது ஆழ்ந்த பெருமூச்சு வந்தது..
          ஆவலுடன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார், நண்பர்.
                (இதன் தொடர்ச்சி 01.04.13 அன்று வெளிவரும்)
   
   
 .
   

13 comments:

ஜீவி said...

நினைத்துக்..... ?

தொடர்ச்சி விட்டுப் போய்விட்டதோ ?..

மனோ சாமிநாதன் said...

ஓய்வு பெற்று தனிமையில் இருப்பதையும் உற்ற நண்பருடன் மகிழ்வாக அளவளாவியதையும் உள்ளார்ந்த மெல்லிய சோகத்துடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்!

பூந்தளிர் said...

ஏத்தன் பழக்கதைக்கு நாங்களும் ஆர்வமுடன் காத்துகிட்டு இருக்கோம். ரிடையர்மெண்ட் ஆனதும் கொஞ்ச நாட்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். போகப்போக பழகிடும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுவரை நடந்தவைகளை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

அந்த ஏத்தம் பழம் என்பது தான் என்னவென்றே புரியவில்லை.

அடுத்த பகுதியில் எல்லோரைய்ம் ஏப்ரல் ஃபூல் ஆக்கும் திட்டமிருக்குமோ என எனக்கு ஓர் சந்தேகம்.

ஏனெனில் அடுத்த வெளியீடு ஏப்ரல் ஒண்ணாம் தேதி என்று போட்டுள்ளீர்கள்.

இருந்தாலும் உங்களுக்கு ஏத்தம் மிகவும் ஜாஸ்தி தான். ;)

”தளிர் சுரேஷ்” said...

சஸ்பெண்சை கிளப்பி விட்டுட்டீங்க! தொடர்கிறேன்! நன்றி! உங்கள் ஓய்வு பொழுது சுகமாக கழிய வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...


ஆரண்ய நிவாசத்துக்கும் ஏத்தன் பழத்துக்கும் தொடர்பு உண்டோ.?

இராஜராஜேஸ்வரி said...

ஆவலுடன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார், நண்பர்.


மலரும் நினைவுகள் மலரட்டுமே..!

ரிஷபன் said...

.கண்ணாடிக் குழல்களில்
ஆரஞ்சு சாறு நிரப்பப் பட்டது
போன்ற அழகிய விரல்கள்..”


ஆகா ரசனை :)

ரிஷபன் said...

ஆவலுடன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார், நண்பர்.


நாங்களும்..

middleclassmadhavi said...

Interesting .. Ethampazha kathaikku aavaludan waiting!
Happy retired life!

அப்பாதுரை said...

கண்ணாடிக்குழல் ஆரஞ்சு.. நானும் ரசித்தேன்.
(ஏப்ரலா? இல்லை முட்டாள்தினமா?)

நிலாமகள் said...

உங்க வரதன திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜனா?! அவரது கவிதைத் தொகுப்புக்கு என் வலைப்பூவில் ஒரு பதிவு போட்டிருக்கேனே.. அடுத்த தடவை வரும்போது காட்டுங்களேன்.

சிவந்த பெண்ணின் விரல்களை பார்க்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வேன். என்னவொரு துல்லிய வர்ணனை என்று.

ஏத்தம் பழத்தை சுட்டு தான் சாப்பிடனுமா?

மலையாளத் தோழியொருவர் வீட்டு விருந்தில் அவித்த நேந்திரம் பழத்தை துண்டாக்கி நெய்யில் பொறித்து சர்க்கரை தூவி சாப்பிடத் தந்தது நினைவில்(நாவில்)

நிலாமகள் said...

http://nilaamagal.blogspot.in/2012/08/blog-post_23.html

(லிங்க் தேடும் சிரமத்தை குறைக்கும்படி.)