Tuesday, March 20, 2012

பாரம்பரியம்!!


நூற்றி இருபது வருட பாரம்பரிய மிக்க ஜவுளிக்கடை கல்லாவில் அமர்ந்திருந்தார், முதலாளி தணிகாசலம்.
மூட்டைப் பூச்சி கடித்தது கையில்! தட்டினார்..தப்பி விட்டது..கை எரிச்சலில் டேபிளில் கையை தேய்த்தார்..எரிச்சல் அடங்க வில்லை..அதை விட கண்களில் எரிச்சல்..
நேற்று ஒரு சாதாரண ப்ளவுஸ் மேட்சிங் கடை போட்டவன், ஷர்ட்..பிட்டு என ஆரம்பித்து இரண்டு பக்கத்து பக்கத்து கடைகளை வாங்கிப் போடும் அளவிற்கு வளர்ந்து விட்டான்.. ..அந்த எரிச்சல் தான்!
“ஏலே..கல்லாவை பார்த்துகலே..தோ வா..ரே...ன்”
வீட்டுக்கு ஓடினார்..முகம் கொள்ளுமளவு உள்ள மீசையை மழித்தார்..ஒரு சிவப்பு காசித் துண்டை முண்டாசு போல கட்டி,முகத்தை முக்கால் வாசி மறைத்துக் கொண்டு சடாரென எதிர்க் கடையில் நுழைந்தார்..
செம கூட்டம்..அந்த ஜனத்திரளிலும் அவரை வரவேற்றான் ஒரு பையன்..
” ... வாங்க அப்பூ..என்ன வாங்கறீக..டேய் சாருக்கு சேர் போடு”
இவர் கடையில் ஒருவனிடம் ஐந்து கஸ்டமர்ஸ் வியாபாரம் செய்தால்,பக்கத்துப் பையன் தேமேனென்று நின்று கொண்டிருப்பான்..க்ரைம் நடந்தாலும் நம்ம ஜூரிஸ்டிக்‌ஷன்ல வராத போலீஸ் ஸ்டேஷன் போல்!
தணிகாசலத்திற்கு வியர்த்துக் கொட்டியது..பய புள்ளக்கி நம்மள தெரிஞ்சிடுத்தோ..
” உங்களைத் தெரியாதா ஐயா...உங்க தலைப்பா காட்டிக் கொடுத்துடுச்சே.. நீங்க நம்ம திருநெல்வேலி பக்கம்னு.. நாம் கூட அம்பாசமுத்திரம் தான்”
“அப்பாடா..” பெருமூச்சு விட்டார் தணிகாசலம்.
தாகத்திற்கு ஜில்லென்று ஐஸ் வாட்டர்..
கனிவான உபசரிப்பு..
நூறு ரூபாய்க்கு வாங்கலாம் என திட்டம் போட்டவர் பட்ஜெட் அந்த கடைக் காரனின் உபசரிப்பில் ஐநூறாக எகிறியது..
போதாதிற்கு கட்டை பை ..இவர் பார்த்த பார்வையில், இவரின் விருப்பமறிந்து இன்னொரு கட்டைப் பை வேறு!
இவர் கடையில் ஆயிரம் ரூபாய்க்குத் தான் அந்த கட்டைப் பை..அதுவும் கஸ்டமர் கேட்டால் தான் தருவார்கள்!
விஷயம் புரிந்து விட்டது!
எதிர்க் கடைக் காரனுடன் மல்லுக்கு நின்று தன் எனர்ஜியை வீணடிக்க விரும்பவில்லை..
மூட்டைப் பூச்சியைத் தவிர்க்க வீட்டை மாற்றுவது போல்,அடுத்த ஐந்தாம் நாளே, நூற்றி இருபது வருட பாரம்பரிய மிக்க ஜவுளிக்கடையை அடுத்த சந்திற்கு மாற்றி விட்டார்.

9 comments:

மோ.சி. பாலன் said...

150 வருடப் பாரம்பரியம் மிக்க கடையை மாற்றுவதை விட.. பயலுககளை மாற்றிவிட்டு..process improvements-ம் கொண்டுவந்திருக்கலாம்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கதை. கஸ்டமரைத் திருப்தி படுத்தி உபசரிக்கும் ஊழியர்கள் அமைந்து விட்டால் போதுமே. வியாபாரம் சக்கைபோடு போடுமே.

ஆசையுடன் வளர்த்த மீசையை மழித்து விட்டாலும், தொழில் இரகசியம் கற்றுக்கொள்ள முடிந்ததே.

மீசை இன்று போனால் நாளை வளர்ந்துவிடும், அவரின் புதிதாகத் திறக்க இருக்கும் கடைபோலவே.

பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை.....

middleclassmadhavi said...

Kadaiyai idam mattum matramal pazhakkathaiyum mattrinal vetri!

Rasiththa kathai!

ரிஷபன் said...

புது இடத்துலயாச்சும் கஸ்டமர் மனசறிஞ்சு கடை நடத்தி வியாபாரம் கொழிக்கட்டும்!

ADHI VENKAT said...

கஸ்டமர்ஸின் மனம் கோணாமல் அவர்களை உபசரித்து வியாபாரத்தையும் நல்ல படியாக நடத்தினால் நல்லது தானே....

மனோ சாமிநாதன் said...

நல்ல சிறுகதை!

எந்தவொரு வியாபாரமும் கஸ்டமரை ஈர்க்கும் உத்திகளும் கனிவான விசாரிப்பும் இல்லாமல் ஜெயிக்க முடியாது. அதிஅ ரொம்பவே அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!

RVS said...

உபசாரம் முக்கியம் அமைச்சரே! :-)

selva said...

பாடம் கற்றுக்கொள்வதற்கு
நூற்றைம்பது ஆண்டு
பாரம்பர்யம் தேவையில்லை.....
தெரிந்து கொள்வதற்கும்
தன்னை மாற்றிக்கொள்வதற்கும்
மாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கும்
மனம்தேவை.....