Friday, March 2, 2012

திருடா...திருடா........!!



இந்த என்க்கெளண்டர் சமாசாரம் எல்லாம் இப்பத் தானே..அந்த காலத்துல நடந்த விஷயங்கள்...
நான் கேள்விப் பட்ட அந்த இரண்டு திருட்டுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
ஒன்று செவிவழிச் செய்தியாய் கேள்விப் பட்டது..அடுத்தது எங்கள் தாத்தா, அவர் பிறப்பதற்கு முன்னால் நடந்ததாம்..(அவர் பிறந்தது 1902ல்) சொன்னது....
முதலில் ‘செவி’க்கு வருவோம்!
ஆங்கரை கிராமத்து அக்கிரஹாரத்தில் ஒரு வயசான பாட்டி..அந்த பாட்டியின் பிள்ளைகளும்..பேரன், பேத்திகளும்..மும்பை, கல்கத்தா என்று சம்பாதித்து, பாட்டிக்கு அவர்களை வளர்த்த பாசத்திற்கு ஒரு அடையாளமாய், பணம் அனுப்பிக் கொண்டு இருக்க..பாட்டி அந்த பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்துக் கொண்டு..பாட்டிக்கு அந்த காலத்திலேயே கை நிறைய பென்ஷன்..இந்த பணம் உபரி வருமானமாய் சேர்ந்து கொள்ள..
இதை நோட்டம் போட்டான், ஒரு திருடன்.. நைசாய் ஒரு அமாவாசை அன்று,’தேட்டை’ போட தீர்மானித்து..சமையல் அறை வெளிச் சுவரில், கன்னக் கோலால் ஓட்டைப் போட்டான்..
அந்த நிசப்தத்தில் டொக் டொக் கென்று இரவு பன்னிரெண்டு மணி சப்தம் பாட்டியை எழுப்பி விட்டது..பாட்டிக்கு பாம்பு செவி..அரிக்கேன் லாந்தரை எடுத்து, அடுப்பை பற்ற வைத்தாள்..அது விறகடுப்பு..அந்த அடுப்பின் வாசலில், இலுப்பக் கரண்டியை சுட வைத்தாள்..திருடன்..கன்னம் போட்டு,..அதாவது சுவரில் தலையை நுழையும் அளவு ஓட்டை போட்டு..மெள்ள தலையை நுழைக்க..
சுரீரென்று கழுத்தின் மேல்..பக்கவாடு..கீழ் இங்கெல்லாம் நெருப்புக் கங்குகள் பட்டது போன்ற உணர்வு..
என்ன நடந்தது?
சுட்ட இலுப்பக் கரண்டியால், பாட்டி அவன் கழுத்துப் பகுதியில் மோஹன ராக வர்ணத்தை ..வரவீணா ம்ருது பாலி என்று ‘பிடில்’ வாசிக்க..
எதிர்பாராத இந்த தாக்குதலால், நிலை குலைந்த அவன் போட்ட கூச்சலில் அவனே மாட்டிக் கொள்ள.. ஊரே விழித்துக் கொண்டு அவனைப் பிடித்து ..போலீஸில் குடுக்க..
பாட்டியின் சமயோசித செயலுக்கு போலீஸ் மெடலுடன், ரொக்கமும் பரிசாகக் கிடைத்ததாம்!
அது சரி..பணம் பணத்தோடு தானே சேரும்!
அடுத்த செய்தி..எங்கள் தாத்தா சொன்னது, இது..
எங்கள் வம்சத்தில்..அதாவது தண்டவாள சுப்ரமணிய ஐயர்..இவர் எங்கள் பெரிய தாத்தா..அவரின் அத்தை ராத்திரி ஒரு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு கொல்லைப் புறம் செல்ல..அங்கு ஒரு திருடன் எங்கள் அத்தை பாட்டிxபாட்டிxபாட்டியை மிரட்ட, அவர் ’அட..கட்டேலப் போறவனே’ என்று அலாக்காக அவனை தூக்கி வீட்டு உள் தூணில் கட்டி வைத்து ..சும்மா ரெண்டு தட்டு தட்ட..
மூன்றாவது தட்டுக்கு அந்த திருடன் இல்லையாம்!
பரலோகம் போய் விட்டானாம்!!
அந்த தோஷம் போக இவர்கள் ஏதோ யாகம் செய்தார்களாம்!
1896ல் இது நடந்ததாய் கேள்வி!
விண்ணை முட்டும் நிலையில் விலவாசி பறந்து கொண்டிருக்க, நாம் சம்பாத்தித்த பணம் எல்லாமே, வைசியருக்கும்...வைத்தியருக்கும்..அரசுக்கு வரியாகவும் போய்க் கொண்டிருக்கும் இந்த நாளில், திருடனுக்கு கொடுக்க என்ன இருக்கப் போகிறது..
துப்பாக்கி ரவைகள் தவிர...
பாவம் திருடர்கள்!!!

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டு நிகழ்வுகளுமே அருமையோ அருமை.

வீரமும் விவேகமும் நிறைந்த பாட்டிகள் நம் ஆங்கரை என்னும் புண்ணிய பூமியில் அவதரித்து வாழ்ந்ததால் தான், ஆங்கரையில் சில காலம் வாழ்ந்த இராமமூர்த்தி இந்தக் கதையை பிரவசனம் செய்ய மற்றொரு ஆங்கரை பூர்வீகமானவனான அடியேன் அதைப் படித்து மகிழ முடிகிறது.

ஆங்கரையைப் பற்றிய நல்ல செய்திகளில் அக்கறை உள்ளது, நம் இருவருக்குமே.

பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk

அப்பாதுரை said...

ஆஹா..

வெங்கட் நாகராஜ் said...

பலே பாட்டிகளாக இருந்திருக்கிறார்களே.... :)

ரசித்தேன்....

ரிஷபன் said...

என்றைக்குமே பெண்கள் வீராங்கனைகள்தான்.

ஸ்ரீராம். said...

'அட' என்று வியக்க வைத்தன இரு சம்பவங்களுமே....!

கௌதமன் said...

அந்தக் காலத்தில், தன கழுத்தில் இருந்த செயினைக் களவாட வந்தவனிடம் எதிர்த்துப் போராடிய, என் மாமியாரின் வீரத்தை, கோர்ட்டில், திருடனே சிலாகித்து கூறினான் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்!

ADHI VENKAT said...

சூப்பர் பாட்டிகள் தான்....என்னே தைரியமும் ,சமயோசித புத்தியும்......

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஜோர்.ஜோர்.

RAMA RAVI (RAMVI) said...

பணம் பணத்தோடதான் சேரும்.அதிர்ஷடகார பாட்டி.
அந்த காலத்து பாட்டியெல்லாம் ரொம்ப தைரியசாலிகள்.

மனோ சாமிநாதன் said...

அந்த காலத்து பெண்களின் மன வலிமைக்கும் உடல் வலிமைக்கும் சிற‌ந்த உதாரணங்களைத்தான் காட்டியிருக்கிறீர்கள்!!