Thursday, April 1, 2010

சிறகு முளைக்கும்.....


என்னமோ எனக்குள் மாலதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல்.
பார்த்து ஒரு நான்கைந்து வருடங்கள் இருக்குமா? கண்டிப்பாக இருக்கும். என் தம்பி கல்யாணத்துக்கு மதுரை வந்திருந்த போது பார்த்தது. தனியாகத் தான் வந்திருந்தாள். சுண்டி இழுக்கும் படியான, கருத்து செறிவுள்ள கவர்ச்சி கரமான பேச்சு...மறுபடியும் பார்க்கத் தூண்டும் அழகு என்று எல்லாவற்றையும் இழந்து, புயலில் சிக்கிய பூங்கொடி போல களைத்துப் போய் இருந்தவளை அவளுடைய சிரிப்பு தான் எனக்கு அடையாளம் காட்டியது.
"என்னடி இது?"
" என்னவோ போ.."- அலுப்புடன் அதற்கும் ஒரு சிரிப்பு.
எப்படி இருந்த பெண் அவள்! கலகலப்பான சுபாவம்! படிப்பில் கெட்டிக்காரி. 'பாரதி கண்ட புதுமைப் பெண் இவளோ' என்று ஆச்சர்யப் பட வைக்கும் பேச்சு...
பணியில் இருக்கும் போது, அவள் தந்தை இறந்து விட, 'இறந்த ஊழியரின் வாரிசுக்கு வேலை' என்ற அடிப்படையில் மின் வாரியத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது என்ற அளவுக்குத் தெரியும். ஆனால், இப்படி உருமாறிப் போவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை.
என்ன வந்து விட்டது இவளுக்கு?
' சின்னா பின்னமாகக் கிடந்த குடும்பத்தைத் தூக்கி நிறுத்தியதை, இரண்டு தம்பிகளை படிக்க வைத்து, வேலை வாங்கித் தந்ததை, தங்கைக்குத் திருமணம் செய்து வைத்ததை ... அப்பாவின் மறைவிற்குப் பிறகு, அந்த குடும்பத்திற்காகத் தான் பாடுபட்டதை...' என்று ஒன்று விடாமல் சொன்னவளை இடை மறித்து நான் கேட்டேன்.
' அது சரி..பொறுப்பெல்லாம் தான் முடிஞ்சுப் போச்சே...நீ ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது?'
' கல்யாணமா எனக்கா?'
சிரித்தாள். அந்த சிரிப்பில் ஒரு வெறுமை தெறித்தது.
' என்னை யார் பண்ணிப்பாங்க? என் இளமையை...பணத்தை...உழைப்பை..என்று எல்லாத்தையும் இந்த வீட்டுக்காக அர்ப்பணிச்சாச்சு..என்னைப் பற்றிக் கவலைப் பட யார் இருக்காங்க?'
'ஏன் அம்மா இல்லியா?'
' அம்மாவா....நல்லா சொன்னே போ!'
'பி.ஃப்.லிருந்து எல்லாத்தையும் வழிச்சு எடுத்தாச்சு... கட்டோ கடைசியா ஒரே ஒரு பத்தாயிரம் மட்டும் இருந்தது. அம்மா கேட்டாள்னு அதையும் எடுத்துக் கொடுத்துட்டேன்'
' அம்மாக்கு எதுக்காம் பத்தாயிரம்?'
' எல்லாம் ஒரு தற்காப்புக்குத் தான். நாளைக்கே எனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா, அவங்களை யாரு கவனிச்சுப்பாங்க..ஏதாவது கையில..காலில பொட்டுத் தங்கம் இருந்தால் தானே கடைசி காலத்துல கஞ்சியாவது ஊத்துவாங்கன்னு சொல்லி, நாலு பவுன்ல வளையல் செஞ்சிப் போட்டுக்கிட்டாங்க..'
' அப்ப உனக்கு?'
' அப்பாவோட வேலைதான். இதைச் சொல்லி சொல்லியே,ஆளை ஒரு வழியா காலி பண்ணிட்டாங்க..இவ்வளவு செஞ்சும் எல்லாருக்கும் கழுத்தளவு குறை இருக்கு'
' இன்னும் என்ன குறை?'
' எனக்கு நல்ல மனசு கிடையாதாம். 'இன்வால்வ்மெண்டோட' செஞ்சா இன்னும் நல்லா செஞ்சிருப்பேனாம்'
' கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாம ...எல்லாரும் ஏன் இப்படி மாறிட்டாங்க?'
' யாரும் மாறலை, சுகன்யா. காலம் தான் மாத்திடுச்சு..'
விரக்தியுடன் சிரித்தாள், மாலதி.
அதற்குப் பிறகு மாலதியைப் பார்க்க முடியாமல் போய் விட்டது.
இத்தனை நாள் கழித்து, மாலதியை திடீரென்று ஏன் பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். சில நேரங்களில் அத்யாவசியமான உறவுகள் கூட அன்னியமாகப் போய் விடும். வேறு சில நேரங்களில், ஆயிரக் கணக்கான மைல் தள்ளி இருப்பவர்களைக் கூட உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றும்.
என்னவருக்குத் திடீரென்று திருநெல்வேலிக்கு ஆபீஸ் வேலையாகப் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவே, மாலதிக்குப் பிடித்த ரவாலாடு செய்து கொடுத்து அனுப்பினேன். எனக்கும் அவருடன் போகவேண்டும் என்று தான் ஆவல். குழந்தைகளுக்குப் பரிட்சை சமயமாதலால் என்னால் போக முடியவில்லை.
இப்போது எப்படி இருப்பாள், மாலதி?
இன்னமும் வீட்டுக்காக உழைத்து ஓடாகத் தேய்ந்து கொண்டிருப்பாளோ.. இல்லாவிட்டால், அவளால் பயன் பெற்றவர்கள் அவளுக்குப் பிற்காலத்தில் பாதுகாப்பிற்காக திருமணம் செய்து வைத்திருப்பார்களோ...இல்லாவிட்டால், தங்களுடைய சுயநலத்திற்காக, என்னுடைய அழகிய தோழியின் முகத் தோலை உரித்து, எலும்புக் கூடாக ஆக்கி விடுவார்களோ?
பாவம். மாலதியைப் பற்றி நினைத்தாலே, மனம் வெறுமையாகி விடும் அளவிற்கு அவளுடைய தாக்கம் என்னுள் பரவியது. இப்போது எப்படி இருப்பாள்?
அவளை ஒரு வாரம் லீவ் போடச் சொல்லி, அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து, அவளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று என்னுள் ஒரு ஆசை. என்னவரிடமும் சொல்லி இருக்கிறேன் 'முடிந்தால் அவளை லீவ் எடுத்துக் கொண்டு, கையோடு கூட்டி வாருங்கள் என்று'
என்ன செய்வாரோ?
அவளுக்கும் லீவ் கிடைக்க வேண்டும். அவர் வரும் வரை ரொம்பவும் தவிப்பாகவே இருந்தது, எனக்கு.
மாலதிக்குப் பிடித்ததெல்லாம் பட்டியலிட்டுப் பார்த்தேன்.
உருளைக் கிழங்கு பால் கூட்டு... அறைத்து விட்ட வெங்காய சாம்பார்...அடை....அருநெல்லிக்காய்.... பாலச்சந்தர்...கமல் படங்கள்...பொன்னியின் செல்வன்....ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், எஸ்.வி.சேகர் ட்ராமா...
ஒவ்வொரு நாளும் அவளுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என மனத்துக்குள் ஒரு சந்தோஷம் என்னுள்ளும்!
குடும்பத்துக்காக ரொம்பவும் பாடுபட்டு விட்டாள், பாவம்!
அவர் வந்ததும், வராததுமாய் பிடித்துக் கொண்டேன்.
' என்ன பொண்ணு போ! நீதான் கிடந்து உருகுறே. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம, உன் ஃப்ரண்ட் பண்ணின காரியத்தைப் பார்! பாசமுள்ள தம்பி..தங்கைங்க..வயசான அம்மா..இப்படி எல்லாரையும் பரிதவிக்க விட்டுட்டு, யாரோ ஆபீஸ்ல வேலைப் பார்க்கறவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு எங்கேயோ ட்ரான்ஸ்வர் வாங்கிட்டுப் போய்ட்டாளாம்!..'
அவர் சொல்ல..சொல்ல..என்னுள் ஏதோ ஒன்று ஜிவ்வென்று கிளம்பி..ஒரு கூட்டுப் புழு கூட்டை உடைத்துக் கொண்டு, சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய் கிளம்பி....
அவள் இங்கு வந்திருந்தாள் கூட இவ்வளவு சந்தோஷம் நான் பட்டிருப்பேனோ..தெரியாது!!
ஆனால், இது என்னவருக்குப் புரிய நியாயமில்லை!!!!!
*
என்னுரை: இந்த சிறுகதை 9.8.2000 தேவி வார
இதழில் வந்தது.

8 comments:

Chitra said...

அருமை. வாழ்த்துக்கள்!

ரிஷபன் said...

அவள் இங்கு வந்திருந்தா கூட இவ்வளவு சந்தோஷம் நான் பட்டிருப்பேனோ..
உண்மை.. அருமை..

Nithya.R.Iyer said...

மிகவும் அருமையான பதிவு.....
தங்கள் இலக்கிய பணி தொடர வாழ்த்துக்கள்.......

பத்மா said...

please read the comments in my recent post

Priya said...

Nice one... congrats!!!

aarvie88 said...

The ending was gr8!!!!

http://learnersreference.com said...

its wonderful

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கதை. சரியான முடிவு. மாலதி எங்கிருந்தாலும், யாருடன் இருந்தாலும், அவள் வாழ்க!