Thursday, January 14, 2016

நா நயம்! நாணயம்!!

டொக்....
ஒற்றை ரூபாய் நாணயமொன்று கண்டக்டரின் தோல் பையில் விழுந்தது.
பக்கத்தில் புத்தம் புதியதாய் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு!
'நாம யாரு....நம்ம ஜபர்தஸ்த் என்ன....இந்த தோசிப்பயல் நமக்கு பக்கத்துல சரிக்கு சரியா உட்கார்ந்திருக்கானே' என செம எரிச்சல் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டிற்கு!
அடுத்த ஐந்து நிமிஷத்தில் அந்த ஒற்றை ரூபாய் நாணயம் எடுக்கப் பட்டு விட்டது!
ஒரு வாரம் கழித்து அவை இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்ட போது....
"அண்ணே, எப்டீண்ணே இருக்கீங்க?"- ஒற்றை ரூபாய் நாணயம்..
"நல்லா இருக்கேன்..அங்கேர்ந்து, ஆபீஸ் கேஷ் செஸ்ட்டுக்கு போனேன்....அடுத்த நாளே பேங்குக்குப் போயாச்சு...ஏஸி ரூம் வாசம் தான், கொஞ்ச நாளா..." 
.....இந்த பன்னாடையையும் ஒரு ஆளா மதிச்சு கேட்க வேண்டியிருக்கிறது பாரு!
"ஆமா, நீ எப்டி இருக்க?"
"நாய் பொளப்புண்ணே நம்மளோடது.....ஒரு ஐம்பது  பேருகிட்டயாவது போயிருப்பேன்....அதுல ஒரு புறம்போக்கு ஒரு பிச்சைக் காரனுக்கு என்னைப் போட, அந்த பிச்சைக்காரப் பய என்னை தெருவுல தூக்கி எறிஞ்சுட்டாண்ணே"
குலுங்கி குலுங்கி அழுதது அந்த ஒற்றை ரூபாய் நாணயம்...
"கூல்.....கூல்....." என்று அதை சமாதானப் படுத்தியது, அந்த ஆயிரம் ரூபாய்நோட்டு.
அந்த சமயம், நாதஸ்வரக் குழலோசை, கேட்க கொட்டு மேளம் கொட்ட, மாங்கல்ய தாரணம் நடந்தேறியது...
"மொய் பணம் கொடுத்துட்டு சாப்பிட போலாமா?"
சட்டைப் பையிலிருந்து, ஆயிரம் ரூபாய் நோட்டு எடுக்கப் பட்டது.
"ஒரு ரூபாய் காயின் இருந்தா கொடுங்க....ஆயிரத்தோரு ரூபா கொடுத்தா தான் சபைல மருவாதி!"
மாரில் ஏற்பட்ட எரிச்சலுக்கு,மயிற்பீலியால் மருந்து தடவியது போல இருந்தது அந்த ஒற்றை ரூபாய் நாணயத்திற்கு!

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நா நயமான நாணயப்பதிவு அருமை.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல அனுபவம்.

G.M Balasubramaniam said...

எப்படி எல்லாம் கதைக்கிறீர்கள். ரசித்தேன்

தி.தமிழ் இளங்கோ said...

ஆயிரம் இருந்தாலும் அத்தோடு ஒன்றை சேர்த்தால்தான் மரியாதை போலிருக்கிறது.எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஜீவி said...

ஆயிரத்தையும் ஓராயிரம் என்று தான் குறிப்பிடுவார்கள்.