Sunday, September 16, 2012

காய்கறிக்காக கொல்லைப் புறம் சென்ற அண்ணா....

வீடு சின்னதாய் இருக்கிறதென்று எல்லாரும் ஆண்டார் வீதி, மணிவாசகம் ஸ்டோர் வீட்டை விட்டு மறுபடியும் கிராமத்திற்குப் போனோம்..1969 ல் குழந்தைகள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற ஆசையில் கிராமத்திலிருந்து  நகரத்துக்கு குடி பெயர்ந்து சரியாக இருபத்திஒன்பது வருடம் கழித்து, அதாவது 1988ம் வருடம் ..மறுபடியும் கிராம வாழ்க்கை!
         நெருப்புப் பெட்டி போன்ற ஸ்டோர் வாழ்க்கையில்  எங்களின் அந்த நீண்ட வருடங்கள் மிக மிக ரம்யமானவை..’யாவரும் ஓர் குலம் ..யாவரும் ஓர் குடி’ என்ற ’பாரதவிலாஸ்’ வாழ்க்கை..எங்களைப் பார்த்து இமானுவலும் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். வாசலில் உள்ள அந்த பொதுக் கிணறு
அருகில், ’எல்லாம் மாயை தானா?’ என்று புருஷோத்தமன் ஸார் அந்த கால தேவதாஸ் பாடல்களை ..உடைந்து போன காதலை..அப்படியே உள் வாங்கி  உணர்ச்சி வசப் பட்டு பாடுவார்.
         கல்லூரி படிப்பு முடித்த நாங்கள் கொஞ்ச நாட்கள் அந்த கிணறு இருக்கும்இடத்திற்கு கொஞ்சம் தள்ளி  வாலிபால் விளையாடினோம்.
           நான்  கிரி, ராமமூர்த்தி சார்,இம்மான், பாபு, சுரேஷ் என்று எல்லாரும்
கூடி ஊர்க்கதை பேசும் இடம்!
            வினுவிற்கு மகா பாரத கதைகள் சொன்ன இடம்..
            காதிற்கு வெகு அருகாமையில் ட்ரான்ஸிஸ்டர் வைத்துக் கொண்டு, கவாஸ்கர் ,பிரிஜேஷ் படேல் பார்ட்னர்ஷிப் ஸ்கொயர் ட்ரைவ் அடிக்கையில் எதற்கடா அந்த ஹிந்திக் காரன் ’அக்லிகேம்’ என்று சொல்கிறான் என்று நாங்கள் அலுத்துக் கொண்ட இடம் ..
           அந்த கிணறுக்கு வாயிருந்தால் ( சாரி..வாய் தான் அவ்வளவு அகலத்திற்கு இருக்கிறதே)  பேசும் சக்தி இருந்தால், பேசும்!
 என்னுடைய ஒன்பதாம் வகுப்பில் நகரத்துக்குச் சென்ற நாங்கள், நான் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து, வேலைக்கும் சேர்ந்து ,ஆறு வருடம் அதில் சர்வீஸும் ஆகி, என் கல்யாணம் ஆகி அடுத்த வருடம், மறுபடியும் கிராமத்தின் மீது படை எடுப்பு!
             இந்த முறை நாங்கள் சென்றது ஆங்கரை அல்ல!
             கீழ வாளாடி அக்ரஹாரம்!
             அந்த காலத்தில் நானூறு ரூபாய் வாடகை கொடுத்தவர்கள் நாங்கள் தானாம்..பட்டணத்திலிருந்து வந்தவர்கள் இங்கு வாடகையை ஏத்தி விட்டார்கள் என்றொரு முணுமுணுப்பு அப்போது இருந்ததாம்..
              கீழ வாளாடி ரயில்வே ஸ்டேஷன் ஒரு அற்புதமான இடம்.அங்கு தான் நானும், சீனுவும் AICWA FINAL பேப்பர்களுக்கு படித்துக் கொண்டு இருப்போம்.
வேர்க்கடலை..பட்டணம் பக்கோடா என்று படிக்கும் பொழுது அருமையாகப் போகும்..ஜிலுஜிலுவென தென்றல் காற்று வீசும் ....தூக்கம் அப்படியே கண்ணை சுழட்டும்!
              அங்கு மார்கழி மாதம் விடியலில் எழுந்து பஜனைக்குப் போவோம்..சுடச் சுட வெண்பொங்கல்..பாடிய ஆண்டாள் பாசுரமெல்லாம் அடியோடு  மறந்து விட்டது..ராதா கல்யாணம்..சீதா கல்யாணம் என்று அமர்க்களப் படும்!
                பொங்கலன்று பாவை விழா என்று அக்ரஹார நடுத் தெருவில் ஸ்டேஜ் போட்டு சிறு பிள்ளைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.. நான் கூட எஸ்.வி.சேகர் பாணியில் பத்து பதினைந்து நகைச்சுவை தோரணங்களை ஒன்று சேர்த்து, ஒரு மேடை நாடகம் எழுதி கொடுத்தேன்!
                ஒரு தடவை சென்னையிலிருந்து, சித்தப்பா பையன் தம்பு வந்திருந்தான்..
                 “ வாடா தம்பு வா..இன்னிக்கு நீ வருவேன்னு சூப்பர் சமையல் ..தோ காய்கறி எடுத்துண்டு வரேன்...”  உற்சாகமாய் அண்ணா!
                 “ இதென்ன புது கூத்து..எல்லாரும் காய்கறி வாங்க, வாசலுக்குத் தானே போவா..இந்த பெரியப்பா கொல்லைப் பக்கம் போறாளே” - என்றான் தம்பு.
       அவன் சொன்னது வாஸ்தவம் தான்..
       வீட்டின் கொல்லைப் புறம் போன அண்ணா, தளதளவென வெள்ளரிப் பிஞ்சுகள்...முருங்கைக் காய்கள்..புடல்..என்று  கை கொள்ளாத காய்கறிகளுடன் !
        அத்தனையும் தோட்டத்தில் அண்ணா வளர்த்த காய்கறிகள்!
        அன்று அம்மா பண்ணின அந்த அரைச்சு  விட்ட முருங்கைக் காய்
சாம்பார் ........
          இன்றும் மணம் வீசுகிறது மனமெல்லாம்!

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

இன்றும் மணம் வீசுகிறது மனமெல்லாம்!



மணக்க்கும் மலரும் நினைவுகள்..

எல் கே said...

மனத்தைக் கிளரும் பழைய நினைவுகள்

ரிஷபன் said...

அன்று அம்மா பண்ணின அந்த அரைச்சு விட்ட முருங்கைக் காய்
சாம்பார் ........
இன்றும் மணம் வீசுகிறது மனமெல்லாம்!

அதற்கு ஈடு இணை உண்டோ..

ரிஷபன் said...

வினுவிற்கு மகா பாரத கதைகள் சொன்ன இடம்.

வினுவின் குழந்தைச் சிரிப்பு மறக்கவே முடியாது :)

ரிஷபன் said...

கீழ வாளாடி ரயிவே ஸ்டேஷன் ஒரு அற்புதமான இடம்.அங்கு தான் நானும், சீனுவும் AICWA FINAL பேப்பர்களுக்கு படித்துக் கொண்டு இருப்போம்.

நுங்கு சாப்பிட்டு மறுநாள் தேர்வுக்கு வராமல் டிமிக்கி கொடுத்து அந்த அதிர்ச்சியில் சீனுவும் பெயில் ஆன கதையை ஏன் சொல்லல..

dlakshmibaskaran said...

அடடா...அப்படியே காட்சியாய் விரிகிறது உங்கள் கிராமத்து வாழ்க்கை...! நானும் கிட்டத்தட்ட ஏன் நீங்கள் சொன்ன சூழலைவிட அம்சமான கிராமத்து வீட்டில் இருந்திருக்கிறேன். கொல்லைப்புறம் சமையலுக்கு வேண்டிய அதனை காய்களையும் அப்பப்போ பறிச்சுக்குவோம். விதவிதமா வண்ண வண்ணப் பூச்செடிகள். வீட்ல,மாடு கோழி,கிளி ,புறா, முயல், நாய் ன்னு அத்தனை அன்பு வர்க்கங்களுக்கு இடையே பழகிட்டு, படிச்சு வேலை கெடச்ச பாவத்துக்காக சிட்டி ல ஒரு ஒட்டாத வாழ்க்கை...அப்பா ரொம்ப அன்பும் தோழமை உணர்வும் கொண்டவர். எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்னு கேட்டப்போ நிலம்நீச்சு ட்ராக்டர் சகிதம் உள்ள விவசாயம் மட்டுமே தெரிந்த ஒரு பட்டதாரி மாப்பிள்ளைதான் வேணும்னு சொல்லிருகேன்னா பாருங்க. அப்பா பின்னாளில் விதி வலியது மா ன்னு அர்த்தபுஷ்டியோடு சிரிச்சு சமாளிப்பார். என் பெண் தனக்கு சாப்ட்வேர் இஞ்சினீயர் தான் மாப்பிள்ளையா வரணும்னு ஆசைப்படறா.ம்ம்ம்...அந்த கிராமத்து வாழ்க்கைக்கு நிகர் வேறெதுவும் இல்ல சார்...= dhanalakshmi

Rasan said...

மலரும் நினைவுகள் அருமை பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

Rekha raghavan said...

அருமையான மலரும் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.

ரேகா ராகவன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான நினைவுகள்.... எங்கள் நெய்வெலி தோட்டத்து கீரை பறித்து அம்மா வைத்த கூட்டு நினைவுக்கு வந்தது!

மனோ சாமிநாதன் said...

சும்மாவே மலரும் நினைவுகள் நினைக்கும்போதெல்லாம் மணக்கும்! அதுவும் கிராமத்து வாழ்க்கை என்றால் கேட்கவா வேன்டும்? உங்களின் பேனா வ‌ழியே எங்கள் இதயத்துக்கும் அந்த மணம் வந்து கமழ்கிறது!!

ஸ்ரீராம். said...

அக்லிகேம் = அக்லிகேந்த்!
கொல்லைப்புறக் காய்கறி நினைவுகள் எல்லோரையும் போலவே எனக்கும் உண்டு! எதிரில் எங்கள் தோட்டம் என்று தனியாக, படல் போட்டு கயிறில் கட்டிப் பாதுகாத்த தோட்டமும்! :)))

நிலாமகள் said...

வாசிப்ப‌வ‌ர்க‌ளையும் பின்னோக்கிப் ப‌ய‌ணிக்க‌ச் செய்துவிட்ட‌து ப‌திவின் சுக‌ந்த‌ம்.
அரைத்து விட்ட‌ முருங்கைக்காய் சாம்பாராய் ருசியும் கூட‌ தூக்க‌ல் தான்.

ADHI VENKAT said...

கிராமத்து நினைவுகள் அருமையாய் இருந்தது. அரைச்சு விட்ட சாம்பாரின் மணம் எங்களையும் அழைத்துக் கொண்டு சென்றது....

கிருஷ்ணப்ரியா said...

நம் வீட்டில் விளைந்த காய்கறிகளை அவ்வப்போது பறித்து சமைப்பதில் இருக்கும் ருசியும் பெருமையும் அனுபவிப்பவர்களுக்கே புரியும்.
ரெண்டு ரூபா கொடுத்தா மார்க்கெட்டில கிடைக்கிற வாழைத்தண்டுக்காக, இல்லாத வேலையெல்லாம் பார்த்து, அப்புறம் கை வலின்னு சொல்லாதேன்னு திட்டுவார் என் கணவர்- நான் மாங்கு மாங்கென்று வாழை மரத்தை வெட்டி சாய்க்கையில்.... கை வலித்தாலும், வெட்டிய தண்டை அண்டை அயலாருக்கு ஒவ்வொரு துண்டு கொடுக்கும் போது கிடைக்கிற சந்தோஷம் மார்க்கெட்டில் கஷ்டமில்லாம கிடைக்கிற பொருளுக்கு இருக்கா என்ன...?
இடமில்லாட்டியும், தொட்டியிலாவது செடி வளர்க்கத் துடிக்கும் மனசு....

RVS said...

அரைச்சுவிட்ட சாம்பார் மனசை இன்னும் அரைக்குதோ! அற்புதமான பதிவு மூவார் சார்! :-)