Friday, April 6, 2012

உஷ்! பேசாதே!!



பேசாதே என்று சொன்னால், அதைக் கேட்பவனுக்கு எவ்வளவு ஆத்திரமும், கோபமும் வரும் என்று தெரியுமா, உங்களுக்கு?
எனக்குத் தெரியும்.
அதுவும் நன்றாகவேத் தெரியும்..
இன்னொன்றும் தெரியும்....
எவ்வளவுக்கு எவ்வளவு பேசாமல் இருக்கிறோமோ..அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு மதிப்பு என்பது!
நம்மை புத்திசாலி என்றும்..அதிமேதாவி என்றும் ’ஸ்காலர்’ என்றும் ஒரேடியாய் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நாம் பேசப் பேச, தம் அபிப்ராயத்தை கொஞ்சம்..கொஞ்சமாய் மாற்றிக் கொண்டு வருவார்கள் என்பதையும் அறிவோம்..
பேசாமல் இருக்க முடிகிறதா?
தவளைகளைப் பாருங்கள்!!
மழை பெய்தால்..தவளகளுக்கு ஏக குஷி! கொர்..கொர்..என்று கத்தி தீர்த்து விடும், அது எப்படி என்றால், பின்னால் பதுங்கியிருக்கும் பாம்பின் டிஃபன் பிரச்னையை நாம் தான் தீர்த்து வைக்கப் போகிறோம் என்று தெரிந்தோ..தெரியாமலோ, கடைசி வரை கத்தி..கத்தியே உயிரை விடும்..
அதனால் தான் என்னவோ, அதை மண்டூகம் என்று அழைக்கிறார்கள்?
இருந்தாலும், எங்கே பேசாமல் இருக்க முடிகிறது?
பேசுவதற்கு பேசித் தானே ஆக வேண்டும்?
அதுவும்,, நம்மை மதித்து பேசக் கூப்பிட்டு..ஒரு மைக் செட்..கேட்பதற்கு நாற்பது, ஐம்பது ஆட்கள் ...... பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை அப்ளாஸ் .....
என்ன செய்வீர்கள்?
இப்படித் தான் ஒரு முறை என்னை ஒரு கூட்டத்திற்கு பேசக் கூப்பிட்டார்கள்..
நானும் போயிருந்தேன்..
மழைக்கு கத்தும் தவளைகளைப் போல் ஆனந்தமாய் பேசினேன்..’பாம்பு’ வெகு அருகில் இருக்கிறது என்பது அறியாமலேயே.
ஆம்..
யார் பேச்சை நான் ஆயுளுக்கும் கேட்டுக் கொண்டிருப்பேனோ, அந்த நபர் அன்று என் பேச்சைக் கேட்க வந்ததை விதி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
இரவு சாப்பட்டிற்குப் பின்...
“ நீங்க அபப்டி பேசியிருக்கக் கூடாது..”
“ எப்படி பேசுவது?”
“ நீங்க பேசினது தப்பு?”
“ அது எப்படி?”
விவகாரம் நீ..............ண்..........................டு............. கொண்டே போய்,
கடைசியில் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
சுனாமி ஒன்று சுற்றி..சுற்றி...சுழற்றி..சுழற்றி அடித்தது!!
***********************************************************************************
பொழுது புலர்ந்தது...
யார்..யாரோ செய்த தவத்தால்..
பெரு மழை பெய்து ஓய்ந்தது போன்ற அமைதி!
அமைதியை குலைக்க வந்து சேர்ந்தார், நாராயண ராவ்!
ஓசிப் பேப்பர் வாங்க மட்டும் அவர் வரவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்..
நேற்று இரவு அவருக்கு ‘அவல்’ கிடைத்திருக்கிறது..விடுவாரா, அவர்!
யார் வென்றார்கள் என்பதைக் கண்டறிய ஆவல்!
ஹாலில் இருந்தாள், என் பெண்.
இதோ.. இதோ...
நாராயண ராவ் வந்து விட்டார்..வந்தே விட்டார்...
“ அம்மா...அப்பா இல்லையா?”
“ இந்தாங்க அங்க்கிள், பேப்பர் ”
எப்படி கேட்பது என்று ஒரு நிமிஷம் யோசித்தார்....
இங்கு என் பெண் பற்றி சொல்ல வேண்டும்..விஷயங்களை கசிய விடமாட்டாள்.. நம் ராணுவ தளபதி வி.கே. சிங்கிற்கு அவள் எவ்வளவோ தேவலை..
கடைசியில் கேட்டே விட்டார்...
“ நீங்க மதுரையா.?...சிதம்பரமா..?”
“திருவானைக்காவல்”

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. வெகு அருமை.

தாங்கள் 04.12.2009 அன்று இரவு திருச்சி அன்னதான ஸமாஜம் திருமண மண்டபத்திற்கு வந்து அழகாக நகைச்சுவையாகச் சொற்பொழிவு ஆற்றினீர்கள். அதை என்னால் என்றும் மறக்க முடியாது.

ஆனால் அன்று முக்கியமாக தங்கள் பேச்சைக் கேட்க வேண்டியவர்கள் கேட்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இன்னும் உள்ளது.

அந்த கேஸட் என்னிடம் தான் பத்திரமாக உள்ளது, ஸ்வாமி.

நாராயண ராவே தேவலாம் என்று முணுமுணுப்பது என் காதில் விழுகிறது.

நல்ல நகைச்சுவையான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

//கடைசியில் கேட்டே விட்டார்?

நீங்க சிதம்பரமா? மதுரையா?

திருவானைக்காவல்...//

ஒவ்வொரு வரியும் ரசித்தேன்....

நல்ல நகைச்சுவையான பகிர்வு!

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா.சுவாரஸ்யம். என்ன பேசினீர்கள்னு சொல்ல வில்லையே!!

middleclassmadhavi said...

:-))

கே. பி. ஜனா... said...

உம்! (பேச்சைக் குறைக்கிறேனாக்கும்! )

raji said...

நகைச்சுவை கலந்து கூறி இருக்கிறீர்கள்.மிகவும் ரசித்தேன்

vasan said...

ந‌ம‌து இராணுவ‌ ஜென‌ர‌ல் ர‌க‌சிய‌ங்க‌ள் எதையும் க‌சிய‌ச் செய்ய‌வில்லை.
நிர்வாணிக‌ளின் இடையே கோம‌ண‌ம் க‌ட்டிய‌வ‌ராய் அவர் இருப்ப‌து ப‌ல‌ருக்கு(ஆட்சி + இராணுவ‌ம்) பிடிக்காத‌தால் ந‌ட‌க்கும் மிக‌ப் பெரிய‌ மோச‌டிக‌ளில் இதுவும் ஒன்று. சிற‌ப்பான, பொறுப்பான‌ த‌ங்க‌ளின் ப‌திவில் மேலோட்ட‌மாக்கூட‌ த‌வ‌றான த‌க‌வ‌ல் வ‌ந்துவிட‌க் கூட‌தெனவே இந்த‌ப் பின்னோட்ட‌ம் திரு ஆர் ஆர் ஆர் சார்.

அப்பாதுரை said...

ha ha!

ADHI VENKAT said...

மிகவும் ரசித்தேன் சார்.....