Tuesday, October 25, 2011

தீபாவளி அகராதி!


அழைப்பு: தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போகத் திட்டம் போட்டிருக்கும் மாப்பிள்ளைகள் இதை எதிர்பார்த்துத் தபால் காரனைத் தேடி தினம் வேட்டையாடுவது சகஜம்.
அமாவாசை: இருட்டுக்குப் பெயர் போனது.இது தீபாவளியைச் சூழ்ந்து கொள்வதால் தான் நாம் வாணங்கள்,மத்தாப்புக்கள் எல்லாவற்றையும் கொளுத்தி அதை விரட்டுகிறோம்.
ஆடம்பரம்: மாப்பிள்ளைகள் மாமனார்,மாமியாரைப் பம்பரம் மாதிரி சுற்றி வைக்க உபயோகிக்கும் தந்திரம்.
ஆகாச வாணம்: ஆகாயத்துக்கு அஞ்சி அடுப்பங்கரையிலேயே தன் கை வரிசையைக் காட்டும் ஒரு வித வாணம்.
ஊசிவெடி: சமயம் தெரியாமல் வந்து எட்டிப் பார்க்கும் மச்சினனை ‘நைசாக’ வெளியே அனுப்ப மாப்பிள்ளை இதில் ஒரு கட்டை உதிர்த்து அவன் கையில் கொடுத்துப் பார்க்கலாம்.
எண்ணெய்: தீபாவளியன்று எல்லார் முகத்திலும் வழியும் ஒரு திரவப் பதார்த்தம்.
ஏமாற்றம்: எவ்வளவு கட்டிக் கொண்டு வந்தாலும்,மாப்பிள்ளையின் தாயாருக்கு ஏற்படும் ஒரு உணர்ச்சி.
கங்காஸ்னானம்: தீபாவளி அன்று எல்லாராலும் சொல்லப் படும் ஒரு பொய் வார்த்தை.
காப்பி: ஒரு வகை ‘டானிக்’ தலைதீபாவளிக்குப் போகும் மாப்பிள்ளைக்கு அவர் மனைவியைத் தவிர வேறு யாரும் கொடுக்கக் கூடாது.
சம்பந்தி: பெண்வீட்டாருக்கும்,பிள்ளை வீட்டாருக்கும் பெயர் விஷயத்தில் இருக்கும் ஒரு மகத்தான ஒற்றுமை.
தலைதீபாவளி: இது வந்து விட்டால்,பெண் வீட்டாரின் தலைகள் பிள்ளை வீட்டில் கிடந்து உருளத் தான் வேண்டி இருக்கும்.
தீபாவளி: காசியிலிருக்கும் கங்கையை ஒரு பைசா செலவில்லாமல் நம்மிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சுபதினம்.
தூற்றல் : 1. தீபாவளிக் குழப்பம்.
2. பட்டாசின் பரம விரோதி.
பட்சணங்கள் : மங்கள ஸ்னானம் முடிந்ததும்,சாப்பிடப் படும் லேகியத்திற்கு சரியான வேலை கொடுக்க இவை அவசியமாகின்றன.
புஸ்வாணம் : மாப்பிள்ளையின் கோபம்!
மச்சினன்: மாப்பிள்ளைகளின் தலைதீபாவளி நாடகத்தின் சூத்ரதாரி.
மாப்பிள்ளை: இந்த பெயரைச் சொல்லி ஒரு துரும்பை கீழே போட்டாலும் அது துள்ளிக் குதிக்கும்.
மாமனார்: சதா மாப்பிளை எதிரில் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கும் ஒரு ஆத்மா.இவரை மாப்பிள்ளைகளின் கஜானா என்றும் சொல்லலாம்.
மோதிரம்: தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்குப் போய் வந்ததற்கு அடையாளமாய்ப் போடப் படும் ஒரு முத்திரை.
லேகியம்: பட்சணத்தை ஒரு ‘பார்வை’ பார்க்கவும்.
வில் வண்டி: மாப்பிள்ளையை சட்புட்டென்று ஊருக்கு அனுப்ப மாமனார் அடிக்கடி வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு சாதனம்.
(பின்குறிப்பு: இதை எழுதி கிட்டத் தட்ட அறுபத்தியேழு வருடங்கள் ஆகி விட்டன. இன்னமும் அப்படியே அச்சு, அச்சாகப் பொருந்துகிறது பாருங்கள்.
எழுதியவர் : “கோபு”
பிரசுரம் : 1944 ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலர்.
தலை தீபாவளிக்கு பம்பரம் போல் ஆட்டி வைக்கும் மாப்பிள்ளை வீட்டார்களும், நொந்து நூடில்ஸாகிப் போன பெண் வீட்டுக் காரர்களும் அடியேனை மன்னிப்பார்களாக...)

11 comments:

ரிஷபன் said...

இதை எழுதி கிட்டத் தட்ட அறுபத்தியேழு வருடங்கள் ஆகி விட்டன. இன்னமும் அப்படியே அச்சு, அச்சாகப் பொருந்துகிறது பாருங்கள்.
எழுதியவர் : “கோபு”
பிரசுரம் : 1944 ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலர்.

அந்த நாள் விகடன் மலர் ஒரு பொக்கிஷம் அல்லவா..
கேலிச்சித்திரங்கள்.. சில்பி ஓவியங்கள்.. கதைகள்.. கட்டுரைகள்..
ம்ம்.. வாசிப்பு ரசனைக்கு அந்த மலர்கள் வாசம் கூட்டிய அற்புதம் மீண்டும் நிகழவே சான்ஸ் இல்லை..

settaikkaran said...

//சம்பந்தி: பெண்வீட்டாருக்கும்,பிள்ளை வீட்டாருக்கும் பெயர் விஷயத்தில் இருக்கும் ஒரு மகத்தான ஒற்றுமை.//

அசத்தல்! எப்போதோ கோபு அவர்கள் எழுதியதை எல்லார்க்கும் தீபாவளி மிட்டாயாக வழங்கியிருக்கிறீர்கள்! :-)

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

Rathnavel Natarajan said...

அருமை.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இன்னமும் அப்படியே பொருந்தி வருகிறதே....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

தில்லியிலிருந்து

வெங்கட்.... :)))

Rekha raghavan said...

அட ஆமா அப்படியே பொருந்துகிறதே இப்பவும்!

ஸ்ரீராம். said...

வில்வண்டி தவிர மற்ற அனைத்தும் இந்தக் காலத்துக்கும் நன்றாகவே பொருந்துகின்றன. ஒவ்வொரு வார்த்தையையும் இன்னும் ஸ்பேஸ் விட்டு பதிவிட்டிருக்கலாம். படிக்க எளிதாகி சுவாரஸ்யம் கூடியிருக்கும்!

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இப்போதும் கூட அருமையாகப் பொருந்துவதாக உள்ள பழைய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

sury siva said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.

அப்பாதுரை said...

இதை எங்கிருந்து பிடிச்சீங்க?! அருமை!
வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

அசத்தல் சார். அனுபவிக்க முடிகிறது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எல்லாமும் இம்மியளவும் பிசகாமல் இருப்பது நம் வரமா சாபமா?

ஆனாலும் ஒன்று ஆர்.ஆர்.ஆர். சார். இப்படி காலத்துக்கும் பொருந்துகிற விஷயங்களைச் சரியாக அனுமானித்து எழுதுவது லேசுப்பட்ட சாமர்த்தியம் அல்ல.எழுதிய கோபுவுக்கும் நினைவுபடுத்திய உங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.