Thursday, August 14, 2014

இதம் தரும் சுதந்திரம்!

(ஒரு சின்ன Portrait)
ஆடுவோமே....பள்ளு பாடுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லால்குடி புது தெரு அக்ரஹாரம்...1947 ம் வருஷம்..ஆகஸ்ட் 15..
கீழக்கோடியிலிருந்து உப்பிலி ஓடி வந்து கொண்டிருந்தான்...
அவனுக்கு தபால் ஆபீசில் 'ரன்னர்' உத்யோகம்!
109 ஆம் நெ. அஹம் ராம சர்மா தன் வலது கையை புருவங்களுக்கு
மேல் வைத்துக் கொண்டு கேட்டார்.சாளேஸ்வரம் அவருக்கு!
"என்னடா உப்பிலி, எதையோ பறி கொடுத்தவன் மாதிரி ஓடி வரே?"
"பறி கொடுக்கலை தாத்தா, கிடைச்சாச்சு"
"எது?"
"சுதந்திரம்....நமக்கெல்லாம் விடுதலை"
அரை குறையாக கேட்டுக் கொண்டே வந்தாள் காமாக்ஷி
"அந்த கட்டேல போறவன்ட்டேர்ந்து அலமுக்கு விடுதலை கிடைச்சாச்சா?"
"அலமுக்கு மட்டும் இல்லே...நம்ம எல்லார்க்கும் விடுதலை"
"என்னடா உப்பிலி சொல்றே?"
அப்போது கிட்டாவையர் வந்தார்..
"பட்டணம் திமிலோகப் படறதாமே"
"நம்ம திருச்சிராப்பள்ளி கோட்டையை எடுத்துக்கும்.....போலீஸ்காராளும்....உத்யோக
காராளும், அங்க இங்க ஓடிண்டு..."
"ஓய் பஞ்சுவையரே வாரும்...இந்த அம்பி சொல்றதை கேட்டேளா?"
"ஆமாண்ணா..நிஜம்மாவே சுதந்திரம் கிடைச்சுடுத்து...இப்பவும் இந்த மௌண்ட் பேட்டன்
இழுக்க விட்டுடுவானோன்னு எனக்கு உள்ளூர பயம்..."
"ஆனா, காந்தி தான் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரே"
"காந்தி யாருண்ணா....நம்ம ரயிலடிக்கு ஒர்த்தர் வந்தாரே....நீங்க எல்லாரும் விழுந்து விழுந்து போய் சேவிச்சேளே....அப்பக் கூட அக்ரஹாரத்துல திருடன் புகுந்து..."
"ஆமாம்...மன்னி....அந்த மஹானுபாவர் தான்"
புருஷாளுக்கு சமதையா தன் சம்சாரம் பேசுவது என்னவோ போல இருந்தது, ராம
சர்மாவிற்கு.
"காமு, போடி....போய் எல்லாருக்கும் காஃபி கொண்டு வா...சுதந்திரத்தை நாம
எல்லாரும் காஃபி குடிச்சுண்டே கொண்டாடுவோம்!"
"ஹூக்கும்"
கனைத்துக் கொண்டு முகவாய் கட்டையை தோள் பட்டையில் இடித்துக் கொண்டு
காஃபி போட சென்றாள் காமாக்ஷி.
"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல!"



10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா

கோமதி அரசு said...

காஃபி போட சென்றாள் காமாக்ஷி.
"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல!"//
அருமை.

இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல!"//


முடியும் வரி முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

1947 ஆம் வருடத்து லால்குடிக்கே அழைத்து சென்று விட்டீர்கள்! கடைசியில் காபியில் கலந்த நகைச்சுவை அந்த காலத்து ”ராமா கபே”யின் பித்தளை டபரா செட் காபி போல் சுவைத்தது.

உங்களின் இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். நேற்று ஆதிகுடியில் வாங்கிய உங்களது ஆரண்ய நிவாஸ் நூலை இப்போதுதான் படித்து முடித்தேன். நேற்று அவர்கள் ஓட்டலில் சாப்பிட்ட அசோகா அல்வாவைப் போல உங்கள் சிறுகதைகளும் நல்ல ருசி.

எனது உளங்கனிந்த 68 ஆவது இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாருங்கள் இளங்கோ சார்...ஒரே சஸ்பென்ஸ் போங்கள்...ஆதிகிடியிலிருந்து போன்..."உங்க friend யாரோ தஞ்சாவூரிலிருந்து வந்து உங்கள் புஸ்தகங்களை வாங்கிக் கொண்டு போனார்" என்று. தஞ்சையில் நம் friend யாராக இருக்கும் என்ற ஆவல்...பிறகு, நம்ம வெங்கட் blogல் தங்கள் கமெண்ட் கண்டு தெரிந்து கொண்டேன்..மேலும் நம் வை கோ சாரிடம் போன் பண்ணி confirm செய்து கொண்டேன்...தங்களால் சிறுகதை வெளியீடு விழாவிற்கு வர இயலாத தகவலை சொன்னார்...
முன்னொரு காலத்தில் வை கோ சார் blog ல் தாங்கள் எழுதுவதைப் பார்த்து தங்களை சந்திக்க வேண்டும் என்கிற என் ஆவல் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்து விட்டது!

தி.தமிழ் இளங்கோ said...

அய்யா அவர்களுக்கு நன்றி! நான் தஞ்சாவூர் சென்று இருந்த போது, நந்தி பதிப்பகத்தில் தங்களுடைய நூல்கள் இல்லை என்றவுடன், திருச்சி ஆதிகுடியில் நூலின் நான்கு பிரதிகளை
(ஒன்று எனக்கு; மற்ற மூன்று நண்பர்களுக்கு ) என்று வாங்கினேன். உங்களை தொந்தரவு பண்ணக் கூடாது மற்றும் புத்தகம் வாங்கிய பிறகு தங்களோடு தொடர்பு கொள்ளலாம் என்பதாலும் அப்படியே இருந்து விட்டேன். தங்கள் அன்பிற்கு நன்றி!

நேற்று இரவு உங்களது நூலினைப் பற்றிய எனது “ஆரண்ய நிவாஸ் – ஒரு இலக்கிய அனுபவம் “ என்ற பதிவினை எழுதி இருக்கிறேன். http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post_15.html

G.M Balasubramaniam said...


எது சுதந்திரம் யாருக்கு சுதந்திரம் வித்தியாசமான கண்ணோட்டம் வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

ஹ்ம்ம்ம்.. நீங்களோ?

சிவகுமாரன் said...

அருமை. இறுதியில் நச் .

மணவை said...

அன்புள்ள அய்யா,
திரு.ராமமூர்த்தி,
கதை நன்றாக இருக்கிறது. நடை அருமை. சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சி அழகாக வெளிப்படுத்தி இருந்தது பாராட்டும்படியாக இருந்தது.
இன்னும் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை...இட ஒதுக்கீடு உட்பட... சொன்னது இனிமை.
வாழ்த்துகள்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in