Sunday, September 22, 2013

ஆயிரமாயிரமாய் துப்பும் மெஷின்.....(AATM)


அவர்களின் பெண் அவர்கள் நினைத்தது மாதிரியே, கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்ஜினீயர் ஆகி விட்டாள்..ஆகி கொஞ்ச நாட்களிலேயே, அவர்கள் விரும்பிய அந்த கம்பெனியில் வேலையும்  கிடைத்து விட்டது..அவர்கள் எண்ணம் போல கை நிறைய சம்பளம்!
   இனி என்ன, அவளுடைய ஜாதகக் கட்டை தூக்க வேண்டியது தான்!
  வந்த அத்தனை வரன்களை ஜோஸியரிடம் பார்த்ததில் இரண்டு தான் பொருத்தமாய் இருந்தது..
  முதல் வரன் இவளை மாதிரியே ஐ.டி.கம்பெனியில் வேலை ..வயசு இவளை விட நான்கு மாதம் தான் பெரியவன்.......அடுத்த ஐந்து மாதங்களில் யு.எஸ். பறக்கப் போகிறவன்..ஒரே பையன் ..அப்பா ரிட்டயர்ட் கவர்ன்மெண்ட் ஆஃபிசர்..அம்மா ரிடய்ர்ட் பாங்க் ஆஃபீசர்..லக்சுரி ப்ளாட்..கார்..என்று அவர்கள் இருக்க, பையன் பெங்களூரில்..
    அடுத்த வரன் சற்று நெருடல்!
    அதை அவளிடம் காண்பிக்க வேண்டாம் என்று தான் அவர்கள் நினைத்தார்கள்..இருந்தாலும் இதை நாம் எடுத்துக் கொண்டது போல அவளும் வேடிக்கையாக எடுத்துக் கொள்வாள் என்று அந்த வரனைப் பற்றியும் சொன்னார்கள்...
    ரொம்ப அசுவாரசியமாய் தான் அவளும் கேட்டுக் கொண்டிருந்தாள்..
    “என்னம்மா சொல்றே?..எப்படி எல்லாம் மனுஷனுக்கு ஆசையைப் பாரேன்..ஏதோ அந்த காலத்துல தான் இப்படி எல்லாம் நடந்தது என்றால், இப்பவும் அப்படியே எதிர்பார்க்கறாங்களே..”
    “ஏங்க, நம்ம ரெண்டு பேருக்குக் கூட வித்யாசம் ஒரு  வருஷம் தானே”
    “ஆமாம்...அதுக்கே, எங்க அப்பா குதிச்சார்....”
    ” ஒரு ஒத்துமை பார்த்தியா. நம்ம கல்யாணம் முடிஞ்சதும், உங்க அப்பா அந்த காஞ்சிபுரம் வீடு வாங்கினார்.. நாமளும், அதே மாதிரி, நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சப்புறம் மைலாப்பூர்ல FLAT வாங்கப் போறோம்..”
    “ அப்ப EMI க்கு பென்ஷனா?”
    “ நீ வேற...புதுசா ஒரு ASSIGNMENT கிடைச்சிருக்கு..இவ கல்யாணத்திற்கு பிறகு ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்...அதுல வர்ர பணம் EMI க்கு அட்ஜஸ்ட் ஆயிடும்..”
     “ நாமளும் வெளில..வாசல்ல போய் நாளாச்சு..இவ கலியாணம் முடிஞ்சதும் அப்படியே ஸ்விஸ் போலாம்னு..”
    “ என்ன, செகண்ட் இன்னிங்க்ஸா..”
    “ அது சரி.. நாம பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கோம்...உன் பொண்ணு கல்யாணத்தைப் பார்ப்போம், முதல்ல..என்னம்மா சொல்றே?
அந்த ஐ.டி.கம்பெனி வரனைப் பார்ப்போமா?”
“வேண்டாம்பா”
“என்னம்மா இது..கல்யாணமே வேண்டாமா? என்ன சொல்றே, நீ?”
“அப்பா..அந்த ரெண்டாவது வரன்..”
“என்னது” - இருவரும் அதிர்ந்து போய் கேட்டனர்..
சமாளித்துக் கொண்டு அவர் சொன்னார்:
“அம்மா, வரனுக்கு வயசு ஐம்பத்தைந்து”
“தெரியும்”
“VRS வாங்கினவர்”
“சரி”
“WIDOWER"
"தெரியும்"
“சின்ன..சின்னதாஇரண்டு பெண் குழந்தைகள்....”
“அப்புறம்?”
“கல்யாணம் ஆனதும் பெண் வேலைக்குப் போகக் கூடாது”
“ரொம்ப சரி”
” நீ அந்த வீட்டுக்கு ஆயாவா போகப் போறே”
“தெரியும்”
“என்னம்மா ...உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..”
“இல்லப்பா..தெளிஞ்சிருக்கு... நீங்க ரெண்டு பேருமே OFFICE GOERS.ஒரு சராசரி குழந்தைக்கு வேண்டிய அன்பு எனக்கு கிடைக்கல...மாறா, ரேஸ் குதிரைக்கு செய்யறாப்பல தான் எனக்கு எல்லாம் செஞ்சீங்க..அந்த ரேஸ்குதிரையும் நீங்க நினைக்கற மாதிரி,ரேஸுக்கு ரெடியாயிடுச்சு..இன்னொரு குதிரையும் அதோட கட்டி விட்டா அதுங்க மாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் என்று தான் உங்கள் நினைப்பு..ஆசை..ஆனா, எனக்கு கிடைக்காத.. நான் இழந்த  அந்த அன்பை, அந்த பாசத்தை அந்த குழந்தைகளுக்கு நான் கொடுக்கலாம்னு இருக்கேன்.....வாய்க்கு ருசியா அவருக்கு சமைத்துப் போட போகிறேன்...அவருக்கு மனைவியா பணிவிடை செய்யப் போகிறேன்...மொத்தத்திலே ஒரு மனுஷியா வாழலாம்னு ஆசைப் படறேன்..
BREAK FAST ஐ உட்கார்ந்து கொண்டு கூட சாப்பிட முடியாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்பா..என்னையும் ஒங்கள மாதிரி’ஆயிரமாயிரமாய் துப்புற மெஷினா ஆக்காதீங்க ப்ளீஸ்”
    அவள் சொல்லிக் கொண்டே போக, விக்கித்து நின்றனர், அந்த ரிடையர்ட் ஐ.ஐ.டி. ப்ரபொசரும்....அவரின் மனைவியான அந்த ரிடய்ர்ட் பப்ளிக் செக்டார் ஜெனரல் மேனேஜரும்!

6 comments:

கோமதி அரசு said...

அதை அவளிடம் காண்பிக்க வேண்டாம் என்று தான் அவர்கள் நினைத்தார்கள்..இருந்தாலும் இதை நாம் எடுத்துக் கொண்டது போல அவளும் வேடிக்கையாக எடுத்துக் கொள்வாள் என்று அந்த வரனைப் பற்றியும் சொன்னார்கள்...//

மூன்றாவது வரனை ஏற்றுக் கொள்வாள் பெண் என்று எதிர்ப்பார்த்தேன். அது நடந்தது. ஆனால் வரன் இப்படி இருப்பார் என நினைக்க வில்லை.
ஆயிரமாயிரம் துப்பும் மெஷினாக இருக்க பிரியப்படவில்லை, நிம்மதியான வாழக்கை வேண்டும் நினைப்பது அந்த பெண்ணை பொறுத்த வரை சரிதான் போலும்.
அன்புக்காக ஏங்கும் குழந்தையாகப் பார்க்க முடிகிறது.

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமாய் முடிவெடுக்கத் தெரிந்த புத்திசாலிப் பெண்..
பாராட்டுக்கள்..~

வை.கோபாலகிருஷ்ணன் said...

//BREAK FAST ஐ உட்கார்ந்து கொண்டு கூட சாப்பிட முடியாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்பா..என்னையும் ஒங்கள மாதிரி’ ஆயிரமாயிரமாய் துப்புற மெஷினா ஆக்காதீங்க ப்ளீஸ்”//

இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ;)

இதிலெல்லாம் மிகுந்த அனுபவஸ்தரான நம் திரு. இராமமூர்த்தி அவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் எழுத முடியும். ;)

பாராட்டுக்கள்.

நிலாமகள் said...

அவளுக்கு இழந்த சொர்க்கம்; அவள் பெற்றோருக்கு தக்க தண்டனை!

AATM விரிவு ரொம்பப் பொருத்தம்.

ரிஷபன் said...

கதைக்கு.. வாசிக்க.. அருமை.
உள்ளீடாய் சொல்லிய கருத்து எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும்

G.M Balasubramaniam said...

நானும் ரிஷபனை வழி மொழிகிறேன்