Wednesday, February 20, 2013

குடியைக் கொடுத்த குடி !

"ம்மா அப்பா வருது !"
ஐயோ ..ஒண்ணும் இல்லையே ..அந்த எளவெடுத்தவன் வந்து அடிக்கப் போறானே என்கிற பயத்தில் கத்தினாள் மாரி !
"...ஏல மகேசு ஓடிப் போடா உங்கப்பன் வரதுக்குள்ள .."
"யம்மா நீ !"
"போடா சனியனே !  ..குடிச்சு ...குடிச்சு உங்கப்பன்
ஒடம்புல சத்தே இல்ல...அடி வலிக்காது ..நான் சமாளிச்சுக்குவேன்..நீ பச்ச மண்ணு ..ஓடிப் போ அப்பாலே !" - எரிச்சலுடன் கத்தினாள் மாரி.
   தண்ணி வண்டி வருவது போல் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தான்
மருதை ...
   அவனுக்கு சரக்கடிக்க  காசு வேணும் ..அது தீர்ந்து போனா வீடு நியாபகம்
வந்துடும் ..இங்கன வந்து மாரியை  மிரட்டி..அடித்து .காசு வாங்கிக் கொண்டு
போவான் ..இப்போது சில நாட்களாக வீட்டிலும் பணம் பெயருவதில்லை ..
   எப்படி பெயரும் ?
   குந்து மணி தங்கத்தையும் வைத்து குடித்தாகி விட்டது ..முன்னெல்லாம்
மாரி வயல் வேலைக்குப் போய்க் கொண்டு தான் இருந்தாள்...கொஞ்ச நாளா அவளுக்கும் உடம்பு முடியவில்லை ..காசு எங்கிருந்து கிடைக்கும் ?
    போன தடவை வந்த போது மகேஸ்  கையில அரிசி வாங்க கொடுத்து வைத்த காசைப பிடிங்கிக் கொண்டு போய்  குடித்தான்....இந்த தடவை என்ன கிடைக்கப் போகுது ...
     நினைப்பு தந்த வெறுப்பில் தள்ளாட்டம் கொஞ்சம் கூடவே ஆனது ..
    "காசு தாடீ"
    "எங்கன இருக்கு?"
    வந்த ஆத்திரத்தில் பாத்திரங்களை காலால் உதைத்தான் அவள் தலைமயிரைப்  பிடித்துக் கொண்டு ஒரு  எத்து எத்தப் பார்ப்பதற்குள் ....
   "யப்பா அம்மாவை வுடு !"
    காட்டுக் கத்தலாக கத்தின மகேஸ் அப்பனைத் தள்ளினான் ...
    சுதாரித்து அவன் எழுவதற்குள் அவன் கையில் காசைத் திணித்தான் ..
    "போ...குடி...இங்ஙன வராதே"
     பணத்தைக் கண்டவுடன் மாரியை மறந்தான் ..மகனையும் மறந்தான் ...
ஓடிப் போய் விட்டான் குடிக்க ...
    அந்த வெறி அடங்கியவுடன் தான் அவனுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிக்க ..பையனிடம் அவ்ளாவ் பணம் ஏது எனக் கேட்கத் தோன்றியிருக்க வேண்டும் !
     திருடியிருப்பானோ ..என்று பயமாக இருந்தது மருதைக்கு.
 அடுத்த நாள் ..
" மகேசு எங்கே ?"
" இன்னாத்துக்கு ?"
"ஏன் புள்ள அவன்  இசுக்கூலுக்குப் போல?"
"இனிமே அவன் அங்ஙனப் போக  மாட்டான்"
"ஏம் புள்ள .." மருதைக்கு லேசான கலக்கம் ..பய புள்ள திருடிட்டு
தாணாக் காரன் கிட்ட மாட்டிக் கிட்டானோ !
  "என் உடம்புல முன்ன மாதிரி வலு இல்ல..ஒனக்கு குடிக்க காசு வேணும்
அவன் என்ன பண்ணுவான் ?மாடு மேய்க்கப்   போய்ட்டான்யா....நேத்து அவன் உனக்கு காசு கொடுத்தானே அது அவன் புஸ்தகத்தை வித்த பணம் "
   குலுங்கி குலுங்கி அழுதாள் மாரி.
   மருதையும் தான்!
   இப்போதெல்லாம் .அந்த எளிய குடிசையில் அடுப்பங்கரையில் பூனை தூங்குவதில்லை ...மாரி காலையில் சமையலை ஆரம்பிக்க ..பையன் படித்து விட்டு இசுக்கூலுக்குப் போக மருதையும்  ரொம்பவே மாறி விட்டான் ..காலையில் போனால் சாயந்திரம் தான் வருகிறான் .. உடம்பிலும் அந்த பழைய தள்ளாட்டம் இல்லை ..ஏனென்றால் அவன் இப்போதெல்லாம் குடிப்பதில்லை .
    அவன் மனம் திருந்தி வேலைக்கும்  போக ஆரம்பித்து விட்டான்.
    எங்கே என்று கேட்கிறீர்களா  ?
    டாஸ்மாக்கில் !

   

                             

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிய குடிசை - இதனால் இந்த நல்ல மாற்றம்...

பல பேர் இந்த மன நோயிலிருந்து விடுபடுவதில்லை...

G.M Balasubramaniam said...


குடியால் விளையும் தீமைகள்,குடிப்பவர் திருந்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக எழுந்த கதை... வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

குடியைக் கெடுத்த குடி யே இப்போது
"குடியைக் கொடுத்த குடி !"யாக மாறியது மகிழ்ச்சியா ..!

பல குடிகளைக் கெடுக்குமே..

மீண்டும் .. மீண்டும் ....

நிலாமகள் said...

கதையிலாவது வரட்டும் சுபமான முடிவு!

கோமதி அரசு said...

குடியைகெடுத்தக்குடியிலிருந்து குடும்பதலைவன் திருந்தியது மகிழ்ச்சி ,ஆனால் வேறு எங்காவது வேலைப்பார்த்து குடும்பத்தை காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் உறுதியான உள்ளம் தெரிகிறது.
மதுபான விற்பனை நிலையத்தில் வேலைப்பார்த்தாலும் குடியை குடிக்காமல் இருப்பதற்கு பாராட்ட வேண்டும்.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல திருப்பம்.

ADHI VENKAT said...

குடியினால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து போகின்றன...:(

G.M Balasubramaniam said...


இன்று ஒரு சிறுகதை பதிவிட்டு இருக்கிறேன். படித்துக் கருத்து சொன்னால் மகிழ்வேன். நன்றி.

manichudar blogspot.com said...

கதைகளில் மட்டுமே கற்பனையாய் நினைத்துப் பார்க்கமுடியும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காலையில் போனால் சாயந்திரம் தான் வருகிறான் .. உடம்பிலும் அந்த பழைய தள்ளாட்டம் இல்லை ..ஏனென்றால் அவன் இப்போதெல்லாம் குடிப்பதில்லை .

அவன் மனம் திருந்தி வேலைக்கும் போக ஆரம்பித்து விட்டான்.

எங்கே என்று கேட்கிறீர்களா ?

டாஸ்மாக்கில் !//

அருமையாக உள்ளது, ஸ்வாமீ.

இதைத்தான் திருடன் கையில் சாவியை ஒப்படைத்தல் என்கிறார்களோ? !!!!!

இனி அவன் குடிக்க மாட்டான். பிறர் குடிப்பதைப்பார்த்தே ’கிக்’ அடைவான்.
வாழ்க!