Thursday, November 4, 2010

விடிந்தால் தீபாவளி!

அவிங்க இருக்கிற இருப்புக்கு, அவிங்க ஆத்தா, அப்பன் அவிங்களுக்கு வைச்ச பேரு கொஞ்சம் ஓவர் தான். ஏளாம் பொருத்தம்! ஆனா, ரொம்ப, ரொம்ப சந்தோசமாவே இருக்காங்க. எப்படீங்கிறீங்களா?
இதோ சாட்சியா ரெண்டு புள்ளைங்க...
ஆறாம்ப்பூ படிக்கும் வள்ளி,
நாலாப்பூ படிக்கும் ராசு...குஞ்சு,குளுவாங்களாக!
இந்த வருசம் தீபாளிக்கும் போனசு கிடையாதுனுட்டாங்க...போன வருசம் பட்ட
பாடு நியாபகம் வந்துச்சு..இந்த வாட்டி கொஞ்சம் சுதாரிப்பா இருந்துட்டான்,ரத்தினம்.
பய, புள்ளங்களுக்கு முன்னாடியே துணி வாங்கி தைக்கக் கொடுத்துட்டான். அதுவும் ரெடி!
வள்ளி புள்ள கொஞ்சம் விவரம் தெரிஞ்சதுனால 'சரி'ன்னுடுச்சு. இந்த ராசுப் பய மட்டும் 'ங்கொய், ங்கொய்' ன்னுட்டு இருந்தான். இன்னொரு சொக்கா வேணுமாம்.
பட்டாசு ஒரு நூறு ரூபாய்க்கு வாங்கி கொடுத்து அவனையும் சமாளிச்சுட்டான். மாணிக்கத்துக்கும் புடவை இருக்கு. அவனுக்கும் வேட்டி, துண்டு முதலாளி குடுத்துட்டாக..
இனி என்ன கவலை. ஜோரா தீவிளி கொண்டாட வேண்டியது தான்!
இருந்தாலும்....
அவனுக்கு அவசரமாய் ஒரு இரு நூறு ரூபாய் தேவையாயிருந்தது. தீவிளி சமயத்தில் யாரிடம் போய்க் கேட்பது? அவன் சேக்காளிகளும் அவனைப் போல சம்சாரிங்க தான்.
என்ன செய்யலாம்?
யோசித்துக் கொண்டிருந்த ரத்தினத்துக்கு
திடீரென்று அழைப்பு.
'ரத்னம், கேஷியர் உன்னைக் கூப்பிடறாருய்யா?'
பதட்டத்துடன் ஓடினான்.
'எதுக்காக கூப்பிடறாக? சம்பளம் கூடப் போச்சுன்னு எதாவது புடிச்சுத் தொலைக்கப் போறாங்களோ பண்டிகை சமயத்துல ?'
'இந்தாப்பா, ரத்னம். இதுல ஒரு கை எளுத்துப் போடு'
' எதுக்குங்க ஐயா?'
' போடச் சொன்னா, போடுய்யா' - சிரித்துக் கொண்டே சொன்னான் பக்கத்து ஆள்.
'என்னமோ, ஏதோ தெரியலேயே, சாமி நீ தான் காப்பாத்தணும்'
கையெளுத்துப் போட்டான், ரத்னம்.
சர சரவென்று நான்கு புத்தம் புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகளை நீட்டினார்.
' எதுக்குங்க, ஐயா?'
' போன வாரம் ரத்தம் கொடுத்தேயில்ல.
அதுக்கு ஒரு நாள் 'வேஜ்' சாங்க்ஷன்' ஆயிருக்கு'
சுத்தமாய் மறந்தே விட்டான். மில்லில் ரத்த தானம் செய்பவருக்கு ஒரு நாள் கூலியும், ஹார்லிக்ஸ், ஆரஞ்சு என்று தருவார்கள். அந்த பணம் இது. சரியான சமயத்தில் வந்திருக்கு.
ரத்தினத்துக்கு கால் தரையில் பாவவில்லை. எப்படா சங்கு ஊதும் என்று காத்திருந்தான்.
சங்கு ஊதியதும் கிளம்பி விட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் கடைத் தெருவில் நின்றது, அவன் சைக்கிள்!
பணம் கிடைச்சாச்சு. ஆனா, பொருள் கிடைக்கணுமே. ஒரு வாரம் முன்னால, அந்த வெலை சொன்னான். இன்னிக்கு அந்த விலைக்கு கொடுப்பானா? அது இத்தன நா விக்காம வேற இருக்கணும். கடவுளே....
ரத்தனத்துக்கு அதிஷ்டம் இருக்கு.
அவன் எதிர்பார்த்த வெலையிலேயே அது சொன்னான். டொக்குனு, பையில வாங்கிட்டு,
ஒரே அழுத்து தான். ஒரே மிதி தான்!
அவன் குடிசை வந்தாச்சு!
புள்ளங்க காணலே..பக்கத்து வூட்ல வெளையாடப் போயிருக்கும். இந்த மாணிக்கத்தை எங்கே காணோம்?
" மாணிக்கம்..மாணிக்கம் "
ஊஹூம்...எங்கே போனாளா?
'ச்சே..சமயத்தில் இருக்க மாட்டா'
அலுத்துக் கொண்டே டீ போடும் போது, மாணிக்கம் வந்தாள், வாயெல்லாம் பல்லாக..
' மச்சான்..என்ட்ட வித்யாசமா எதாவது தெரியுதா?'
'தெரியலேயே, தாயீ'
' நல்லா கைய உத்துப் பாரு, மச்சான்'
ரத்தனத்துக்கு அவ்வளவு தான் பொறுமை!
'அது கிடக்கட்டும், களுதை, இந்தா இத எடுத்துக்கோ'
வெகு ஆசையாய் அந்த அட்டை பெட்டியை நீட்டினான்.
திறந்து பார்த்தவளுக்கு ஆச்சர்யம்!
' அடி, ஆத்தி. காசுக்கு என்ன பண்ணினே மச்சான். கடன் கூட வாங்க மாட்டியே நீ ?'
' முன்னாடி இத களுத்தில மாட்டிக்க'
' ஊஹும்...நீ சொன்னா தான் '
' அது ஒண்ணும் இல்ல புள்ள. அன்னிக்கு கடை வீதில நீ இந்த செயினை வாங்க ஆசைப் பட்ட இல்லியா? எப்படியும் தீவிளிக்குள்ள உன் களுத்துக்கு இது வந்துடணும்னு எனக்கு வெறி?'
' இந்த கதையெல்லாம் வாணாம்..காசுக்கு என்ன பண்ணினே சொல்லு. போனசு போட்டுட்டாங்களா?'
' நல்லா போடுவாங்களே..போனவாரம் ரத்த தானம் செஞ்சேனில்ல.... சுத்தமா மறந்து போச்சு. அதுக்கு ஒரு நா சம்பளம் குடுத்தாங்க..ஒரே ஓட்டம் தான். அந்த செயினு கடையில தான்
ஐயா நின்னாரு...அது சரி, நீ என்னமோ சொன்னியே, இன்னாது'
' கையப் பாரு'
' அடங்கொப்புறானே...வாச்சு..ஆம்பள வாச்சு போல கீது? '
' உனக்குத் தான் மச்சான், அது. அன்னிக்கு ஒரு தபா பேசும் போது கைல வாச்சு இருந்தா நல்லா இருக்குன்னியே..அதுக்குத் தான்..இந்தா கட்டிக்கோ'
' பணத்துக்கு என்ன பண்ணினே புள்ளே? '
' நம்ம ராசுவோட இசுக்கூல்ல படிக்கிறானே அந்த பெரிய வீட்டுப் பக்கம் போயிருந்தேன். அந்த அம்மா ரொம்ப நல்லவங்க..செடியெல்லாம் காயுது பாருன்னு வருத்தப்பட்டாங்க..ரெண்டு குடம் தண்ணி ஊத்தினேன்..கஸ்டமே இல்ல மச்சான்..ரொம்ப சுளுவாத் தான் இருந்தது. அவங்க தான் நூறு ரூபாய் கொடுத்தாங்க...'
' காசு வாங்கினியா? ' - வேதனையுடன் கேட்டான், ரத்தனம்.
' உம் பொஞ்சாதி மச்சான் நா. கூலி எல்லாம் கொடுத்து கேவலப் படுத்தாதீங்க.. ன்னுட்டேன்..பட்டுனு..ஆனா, அவிங்க விடலியே?'
' என்ன சொன்னாக?'
' அசடே, உனக்கு யாரு இங்க கூலி கொடுத்தா..தீபாவளி செலவுக்கு அக்கா கொடுக்கிறதா வைச்சுக்கோன்னுட்டாங்க..அதான்....'
' .... புள்ள.. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்..நாலு குடம் தூக்கினா, கை வலிக்குமேம்மா உனக்கு?'
' அடப் போ மச்சான் எனக்கு ரத்தத்தை
வித்துல்ல நகை வாங்கியிருக்கே நீ.....'
குலுங்கி..குலுங்கி அழுதாள், மாணிக்கம்!
' அளுவாத புள்ளே '
ரத்தனமும் அழுதான்.
வீட்டுக்கு ஓடி வந்த புள்ளைங்க இவங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க,
இப்போது மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தார்கள் பொஞ்சாதி, புருசன் ரெண்டு
பேருமே!!

(பின் குறிப்பு: ஓ.ஹென்றியின் 'THE GIFT OF MAGI' படித்ததின் பாதிப்பு இச்சிறுகதை)

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஏழையின் சிரிப்பினில் இறைவனைக்காண வைத்த உமக்கு என் மனமார்ந்த நன்றியும் தீபாவளி வாழ்த்துக்களும்.

R. Gopi said...

ஓ ஹென்றி கதையின் உல்டா மாதிரி இருக்கே! நல்லாத்தான் இருக்கு இதுவும்!

ரிஷபன் said...

சேக்காளிக்கு தீபாவளி நல் வாழ்த்துகள்

கே. பி. ஜனா... said...

ஒ நல்லாருக்கு!

பத்மநாபன் said...

அன்புக்கு அன்பு பரிசாக அருமையான கதை....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

November 5, 2010 6:11 AM

வெங்கட் நாகராஜ் said...

தீபத் திருநாளில் அன்பை போதித்த ஒரு சிறுகதை. பகிர்வுக்கு நன்றி சார்.

அப்பாதுரை said...

அருமை!
தீபாவளி வாழ்த்துக்கள்.