
ஏதாவது பிரச்னை என்றால், நாம் எல்லாருமே,யாரையாவது குறை சொல்வதிலேயே நம் பொழுதை...காலத்தை..விரயம் செய்து கொண்டு இருக்கிறோம்!..பாருங்களேன்..இன்றைய CURRENT TOPIC ‘மின்வெட்டு’ இது சம்பந்தமாய் நாம், ’நமக்குள்’ என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
நேற்று மைத்துனர் வீட்டில் ஒரு விசேஷம்..அங்கு நான் சென்றிருந்தேன்.அவர் பையன் ..அரவிந்த் பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு தயார் செய்து கொண்டு இருக்கும் மாணவன்..என்னுடன் பேசிக் கொண்டு இருந்தான்..’கொஞ்ச நேரம் வெளியில் காற்று வருகிறது ..அங்கு போகலாமா’ என்று நான் கேட்டதிற்கு, ‘போகலாமே’ என்றவன், ஃபேன்,லைட் எல்லாவற்றையும் அணைத்தான்.இதே மாதிரி, அங்கு வெயில் என்றவுடன், ரூமுக்கு வர,உடனே சுவிட்ச் ஆன் செய்தான்.பிறகு, சாப்பிட போகும் போது, மறக்காமல், எல்லாவற்றையும் அணைத்தான்..செய்வதில் ஒரு நளினம்....அதுவும்.. விருந்தினர் மனம் புண்படாத மாதிரி செய்ததில் ஒரு நேர்த்தி.. கெட்டிக் காரன்! இதே நிலையில் என்னை கம்பேர் செய்து பார்த்தேன்..அந்த இடை வெளியில் நான் கரெண்ட் ஆஃப் செய்வதில்லை..இதில் என்ன பிரமாதமாய் வந்து விடப் போகிறது என்கிற எண்ணம்....மேலும் எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளி முன் நான் இதையெல்லாம் லட்சியம் செய்வதில்லை என்பதைக் காட்டிக் கொள்வதில் ஒரு ஆடம்பரம்..! கணக்கிட்டுப் பார்த்தேன், நாங்கள் அந்த ரூமில் இல்லாத நேரம் அரை மணி நேரம்! அந்த கெட்டிக் காரப்பிள்ளை, ஒரு அரை மணி நேர மின்சாரத்தை சேமித்தான், யாரும் சொல்லி கொடுக்காமலேயே!..
இப்படி நாம் எல்லாருமே, ஒரு நாளில் ஒரு அரை மணி நேரம் மின்சாரம் சேமித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது..இன்றிலிருந்து நானும் அதை கடைப் பிடிக்க ஆரம்பித்து விட்டேன்....
ஒரு பகலில் நம்மால் கரெண்ட் இல்லாமல் இருக்க முடியாதா..என்று என்னுள் ஒரு உந்தல்!
காஞ்சிப் பெரியவர் சொன்ன பிடி அரிசி திட்டம் போல் நாமும், தினம் ஒரு அரை மணி நேரம் மின்சாரம் சேமித்தால் என்ன என்று தோன்றியது..
எவ்வளவு வந்து விடப் போகிறது என்பவர்களுக்கு ஒரு வார்த்தை!
ஒரு ரூபாய் தானே என்று அலட்சியம் செய்யாதீர்கள்....ரூ 99,99,999/- வைத்துள்ள ஒரு லட்சாதிபதியை கோடீஸ்வரனாக்கும் சக்தி அந்த ஒரு ரூபாய்க்கு உண்டு!
ஏதோ, சமூகப் பிரக்ஞை கொண்டு எழுதும் எழுத்தாளன் என்று என்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக எழுதவில்லை இந்த பதிவு! ஒரு சின்னப் பையனிடம் நான் கற்றுக் கொண்ட பாடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவே!
ஷேக்ஸ்பியர் எழுதிய MACBETH என்கிற காவியத்தில், ஆயிரக் கணக்கான பேர் ஒரு மரத்துண்டு எடுத்துக் கொண்டு சென்றது, ஒரு காடு நகர்வது போல இருந்ததாம்..
அது போல், நாமும் ஒரு சிறிய மரத்துண்டை கையில் எடுத்துக் கொள்வோம்..பெரிய பெரிய காடுகளை நகர்த்திக் காட்டுவோம்!
என்ன வருகிறீர்களா?
இன்று முதல் அட்லீஸ்ட் ஒரு வாரம் தலா அரை மணி நேர மின்சாரத்தை சேமிக்கலாமா? விருப்பமுள்ளவர்கள் ’வருகிறேன்’என்று பின்னோட்டம் போட்டால், மிக்க மகிழ்ச்சி!!