
அந்த ’பத்துக்கு ஆறு’சைஸ் ரூமில் அவர்..சாரி..’அது’ அந்த மரக்கட்டிலில் மல்லாந்து கிடக்க, பக்கத்து டேபிளில் ஒரு பேப்பர் காற்றினால் படபடத்துக் கொண்டிருந்தது. விடுதி காப்பாளர் வந்த பின்பு அந்த பேப்பரை எடுக்கலாம் என்று பிச்சுவையர் சொல்லவே, அங்கு கூடியிருந்த எல்லோரும், விடுதி காப்பாளருக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
* * * *
"அங்கார..இங்கார நாமம் சார்த்தி,
அனுதினமும்..அனுதினமும் கரம் கூப்பி,
சிங்கார தேவனே சீனிவாஸா...
சீரங்கத்துப் பெருமாள..சேவிக்கப் போறோம்..போறோம்..அங்கார..
’போறோம் அங்கார..’என்பதில் ஒரு ஜெர்க் கொடுத்து, அந்த மரக்குதிரையை ரங்க சுந்தரம் ஆட்ட, குழந்தை ஸ்ரீதர் மழலையில் ’போதோம்..அங்காத..’என்று பாடினான்.
வண்ணாரப் பேட்டையில் ரங்கசுந்தரம் வீடு என்றால் சிறு குழந்தை கூட அடையாளம் காட்டும்,தன் கண்களை அகல விரித்துக் கொண்டு!பாகம் பிரித்து அவருக்கு வந்த வகை பணம்,அது தவிர கொஞ்சம் கடனும் வாங்கி ரங்கசுந்தரம் அந்த பழைய வீட்டை வாங்கினார்.அவர் அதிர்ஷ்டம் அந்த உத்திரத்து தேக்கின் மதிப்பு விற்பவனுக்குத் தெரியவில்லை!
’நமக்குத் தான் குழந்தை இல்லையே, எதுக்குங்க, இவ்வளவு பெரிய வீடு’ என்ற பார்வதியை சமாதானப் படுத்தினார்.அவர் நினைத்தது போலவே, அடுத்த ஐந்தாவது வருடம் பிசினசில் நல்ல லாபம்..வீட்டை கானாடுகாத்தான் நாட்டுக் கோட்டை செட்டியார் வீடு போல் ஆக்க, அடுத்த இரண்டாவது வருடம் ஸ்ரீதர் பிறந்தான்!
பெரிய குடை கவிழ்ந்தார்போன்ற கும்மிருட்டை ஒரு சிறு அகல் விரட்டுவதைப் போல் வீட்டின் அமைதியை தன் மழலையால் விரட்டி விட்டது குழந்தை சட்டென்று!
மத்தியானம் சாப்பிட வரும் போது ஒரு அரை மணி நேரம் அவனுடன் விளையாடி விட்டுத் தான் சாப்பிட அமர்வார்.வாராது வந்த மாமணி ஆதலால் அவனுக்கு அப்பாவும் செல்லம்..அம்மாவும் செல்லம்!
’அப்பா..அப்பா ஆததிச்சா..அம்மா அதிச்சா..எப்டீ அதிச்சா..பல்தி அதிச்சா’ என்று குட்டிக் கரணம் போட்டு குதூகலம் உண்டாக்குவான், சமயத்திலே!
* * * *
”வந்தாச்சு...சார் வந்தாச்சு வழி விடுங்க..”
வார்டன் வந்தார்.
“என்னாச்சு?”
“ ஒண்ணும் தெரியலே! போன வாரம் தான் வந்தார். வரும்போதே கண்ல சோகம் தெரிந்தது..’இது என்ன சந்தேகம்,எல்லார் வீட்லையும் போல், இவரும் புள்ள, மருமகளுக்கும் ஒத்துக்காமத் தான் இங்க வராருன்னு’ நினைச்சோம். ஆனா, நேத்து நைட்டு வாய் விட்டு அழுத சத்தம் கேட்டது..போய் பாக்கலாம்னா, உடம்பு இடம் கொடுக்கல..கார்த்தால பார்ப்போம்னு படுத்துண்டுட்டேன். கார்த்தாலப் பார்த்தா..இப்படி..”
“தற்கொலையா இருக்குமோ? போலீஸ்க்கு இன்ஃப்ர்ம் பண்ணனுமா?”
”அதெல்லாம் இல்ல..மாஸிவ் ஹார்ட் அட்டாக் டாக்டர் கன்ஃப்ர்ம் பண்ணினார்”
” உறவுக்காரங்க..யாராவது?”
”ஒருத்தரும் இல்லைன்னு தான் சொன்னார்..அந்த டேபிள் மேல் ஒரு காயிதம் இருக்கு..உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கோம்”
“கொண்டாங்க”
அதனை உரத்தக் குரலில் படிக்க ஆரம்பித்தார், வார்டன்.
* * * * * *
(இதன் தொடர்ச்சி அடுத்த 01.07.2011 அன்று வெளியிடப்படும்)