Thursday, August 16, 2012

ஆண்டார் வீதியும் நானும்!

வடக்கு ஆண்டார் வீதி மணிவாசகம் ஸ்டோர் வாசம் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம்..
    ஏற்கனவே சொன்னது போல், சின்னஞ்சிறு வீடுகள்..’காமன்’ கிணறு..’காமன்’ குழாய்..அண்ணா ஒருத்தர் தான் சம்பளம் நாங்கள் குழந்தைகள் ஐந்து பேர்..அண்ணா, அம்மாவைச் சேர்த்து ஏழு பேர்.எங்கள் ஐந்து பேரை வைத்து பெற்றோர்கள் குடும்பம் நடத்தினார்கள்.. எங்கள் ஐவரில், ஒருவர் கூட அப்பா,அம்மாவை வைத்துக் கொள்ள முடியவில்லை..சொன்னால் வெட்கக் கேடு..மாசக் கடைசியில் கை மாற்றாக அண்ணா பென்ஷன் பணத்திலிருந்து HANDLOAN வாங்கித் தான் நாங்கள் காலட்சேபம் பண்ணுகிறோம்..”என்னடா, ரெண்டு பேர் சம்பாதிக்கிறீங்க..என்ன கஷ்டம் உனக்கு?” என்று அண்ணாவும் பணம் கொடுக்கும் போது கேட்டதில்லை..வாழும் வாழ்க்கையே நாயர் புலி வாலை பிடித்தகதை போல் இருக்கிறது..இதில் என்னத்தை சொல்ல?
    ஏப்ரல், மே காலங்களில் அந்த கால கட்டத்தில் ‘படி எட்டணா பால்’ என்று கூவி கூவி விற்பார்கள்..பால் ஜோராய் ’திக்’காக இருக்கும். ஜோசப் காலேஜ் ஹாஸ்டல் லீவ் என்பதால், பால் தாராளமாய் கிடைத்த காலம் அது!
   சாயங்காலம் ஏழு,எட்டு மணிக்கு இப்போழுதெல்லாம் நெட்டில் உட்கார்ந்து உடம்பையும், மனசையும் கெடுத்துக் கொள்கிறார் போல் அப்போழுது கிடையாது.. நேஷனல் காலேஜ் க்ரெள்ண்டில் தூப்புல், கீரன் கதைகள் நடக்கும்..ராதா கல்யாணம்...கும்பகோணம் சங்கர் பஜனை எல்லாம் நடக்கும்..
மனசு ரொம்பவும் சந்தோஷமாய் இருந்த கால கட்டம் அது!
    “இத்தனைக் கஷ்டங்களுக்கும் யார் காரணம் நாரதா?”
     “இந்திரா?”
     “என்னது?”
     “ நான் இந்திரனைச் சொன்னேன்!”
        கீரன் ஏற்ற, இறக்கத்தோடு சொல்லும் போது, பயங்கரமான கைதட்டல்!
அப்போது எமர்ஜென்ஸி வந்த புதிது..இந்திரா என்று நாங்கள் இந்திரா காந்தியை நினைக்கப் போக, அவர் தேவர்கள் தலைவன் இந்திரனை சொல்வதாக பேசுவது சூப்பர்!
   எப்போதாவது சினிமா போவோம்..அதுவும் எதிர்த்த அஹம்..பக்கத்து அஹம் என்று கூட்டம் சேர்த்து கொண்டு போவோம்..கோடை சமயத்தில் பிஷப் ஹீபரில் எக்ஸிபிஷன் நடக்கும்..அந்த பஞ்சு மிட்டாய்..டெல்லி அப்பளம்..மிளகாய் பஜ்ஜி..குடை ராட்டினம் என்று சண்டை நடக்கும்!
   வீட்டில் அவ்வப்போது வறுமை அழையா விருந்தாளியாய் வந்து எட்டி,எட்டிப் பார்த்தாலும், நாங்கள் அதை ’கேர்’ பண்ணினால் தானே? இருப்பதை வைத்து ரொம்ப சந்தோஷமாகவே காலம் தள்ளினோம்..
அந்த கஷ்டத்திலும் அலெக்ஸில் சீட்டு கட்டினோம்..ஒரு காஃபி பில்டர் கிடைத்தது கணிசமான விலையில்!
      ஒரு தலைகாணிக்கு இரண்டு, மூன்று குழந்தைகள் சண்டை போட்டுக் கொள்வோம்..வலு குறைந்தவனிடமிருந்து வலுக்கட்டாயமாய் தலைகாணி பிடுங்கப் படும்..ஆனால், பாதி ராத்திரியில் அந்த குழந்தை இவனிடமிருந்து தலைகாணியை நைசாய் எடுத்து, தன் தலையில் வைத்துக் கொள்வான்!
      வெள்ளிக்கிழமை ஆண்டார்வீதியிலிருந்து, மலைக் கோட்டை ..திருவானைக் காவல் என்றெல்லாம் நடந்து போயிருக்கிறோம்..இன்று பக்கத்தில் உள்ள கோவிலுக்குக் கூட போக முடியாமல் நெட்டில் புதைந்து போய் இருக்கிறோம்...
     டபுள் பெட்ரூம்..ட்ரிபில் பெட் ரூம் என்று இன்றைய கால கட்டத்தில் எல்லாருமே (அண்ணா, அம்மா உட்பட) வசதியாகத் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..
     ஆனால், ஒரு தலைகாணிக்கு நாங்கள் ஐந்து பேர் அடித்துக் கொண்ட ஆனந்தம் ..அந்த சந்தோஷம்..வருமா இனி?
      போனது..போனது தான்!!
  

11 comments:

ரிஷபன் said...

”இந்திரா காமராஜர் ஜெயித்துவிட்டார்” என்று கீரன் டைமிங்காய் பேசினதைக் கேட்டிருக்கிறேன்.
மணிவாசகம் ஸ்டோர் இப்போதும் இருக்கிறதா..
காமன் கிணறு.. காமன் குழாய்.. என்று தெரிந்து சொன்னீர்களோ ..தெரியாமல் சொன்னீர்களோ.. அங்குதான் அந்த நாள் காதல் முளை விட்டு அரங்கேறியது..

sury siva said...

நீங்களும் ஆண்டார் வீதியா ? எனக்குத் தெரிந்த நாள் முதல்1942 முதல், 1962 வரை நானும்அதே ஆண்டார் தெரு, ராம்ஜி அன்ட்
கோ வுக்கு எதிர்த்த வக்கீல் வீடு எங்கள் வீடு. ராமாஸ் கஃபே, அடுத்தது ஒரு சோப் கடை. அடுத்தது இரு வீடுகள்
ஒட்டினாற்போல். அதில் இரண்டாவது வீட்டில் என் தந்தை தாய், நாங்கள் அஞ்சும் மூணும் எட்டு பேர். அவர்அட்வகேட்.
எப்ப பார்தாலும் கோர்ட், க்க்ஷிக்காரர் என்று இருப்பார். நானும் ஈ.ஆர்.ஹை ஸ்கூல் மாணவன்.
பிறகு 1957 முதல் 1961 வரை செயின்ட் ஜோசப் கல்லூரி. 1962 வருடம் மதுரைக்கு வேலையில் சேரும் வரை அந்த‌
வீடு தான் என் இருப்பிடம்.

நீங்கள் சொல்லிய வாறு நானும் அந்த தேசீய கல்லூரியில் கீரன் பேச்சை கேட்டு இருக்கிறேன்.

1988 வரை அந்த நாகனாத ஸ்வாமி கோவிலுக்குச் சொந்தமான வீட்டில் என் தங்கை குடும்பம் இருந்தது.
வீடு ரிபேர் செய்ய முடியாத அளவுக்கு இடிந்து போய் விட்டதால் என் தங்கை அந்த வீட்டை காலி செய்து
விட்டு சென்னை வந்தாள்.

திருச்சி ஆண்டார் தெரு வீட்டுடன் என் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகள் பின்னி கிடந்தது உங்கள் பதிவுக்கு
வந்ததும் நினைவு படுத்திக்கொண்டேன்.

நாராயண ஸ்டோர், முதலியார் ஸ்டோர், மணிவாசகம் ஸ்டோர் என்பது வக்கீல் ஹாலாஸ்யம் அவர்கள்
வீட்டுக்கு பக்கத்தில் இருக்குமே அதுவா ?

சுப்பு ரத்தினம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால், ஒரு தலைகாணிக்கு நாங்கள் ஐந்து பேர் அடித்துக் கொண்ட ஆனந்தம் ..அந்த சந்தோஷம்..வருமா இனி?
போனது..போனது தான்!!//

சரியாகச் சொன்னீர்கள்.

இருப்பினும் இன்று வசதிகளை அதிகரித்துக் கொண்டு பழகிவிட்ட நம்மால், அந்த பழைய வாழ்க்கைக்குத் திரும்பவே முடியாது, ஸ்வமீ.

இன்றோ AC ROOM, CELL PHONE, COMPUTER, LAPTOP, NETWORK, VEHICLES, T.V போன்ற எதுவுமே இல்லாமல் நம்மால் ஒரே ஒரு நாள்கூட் இருக்க முடியாமல் தவித்துப் போகிறோமே!

நல்ல பதிவு. பாராட்டுக்கள். vgk

unknown said...

இளமை ஊஞ்சல் ஆடுகின்றது உங்கள் எழுத்தில்
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஆனந்தம் .. சந்தோஷம்..வருமா இனி?
போனது..போனது தான்!! நிரந்தரமாக !!

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

மனோ சாமிநாதன் said...

//ஆனால், ஒரு தலைகாணிக்கு நாங்கள் ஐந்து பேர் அடித்துக் கொண்ட ஆனந்தம் ..அந்த சந்தோஷம்..வருமா இனி?
போனது..போனது தான்!!//

அருமையான வரிகள்! சுகமான நினைவலைகள்!!
‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ பாட்டு தான் நினைவில் வருகிறது!
சிறப்பான பதிவு!

அப்பாதுரை said...

கீரன் சிலது நானும் கேட்டிருக்கிறேன். டேப்/சிடியாக வந்திருக்கிறதா தெரியவில்லை.
தலையணைச் சண்டை காலம் இனி வராது சார்.

தி.தமிழ் இளங்கோ said...

// .அந்த சந்தோஷம்..வருமா இனி?
போனது..போனது தான்!! //
அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் எல்லோருக்கும் பெருமூச்சுதான். இத்தனை நாட்கள் எப்படி உங்கள் வலைப் பக்கம் நான் வராமல் போனேன் என்று தெரியவில்லை. இப்போது உங்கள் கட்டுரைகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்.



ADHI VENKAT said...

அன்புடையீர்,

வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/5.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களது பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.